என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மத்திய அரசை கண்டித்து பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம்:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் இன்று (20-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய அரசை கண்டித்து தங்களது வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. சாலவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

    இதில் ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதே போல் காஞ்சீபுரத்தை அடுத்த சிறுவேடலில் எம்.பி. ஜி.செல்வம் தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கமலக் கண்ணன் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாபு, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், திருலோகசந்தர், ராமதாஸ், கருணாகரன், சுரேஷ், சீனு, அஜித் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் பூண்டி ஒன்றியம் நாராயணபுரம் கிராமத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கிளை செயலாளர் கே.வி.எஸ். குபேரன் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

    பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், அத்திப்பட்டு ஊராட்சி செயலாளர் எம்.டி.ஜி. கதிர்வேல், பழவேற்காட்டில் முகமது அலவி, மீஞ்சூரில் தமிழ் உதயன், வேம்பாக்கம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் சீனு, பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதையும் படியுங்கள்...கர்நாடக மாநிலத்தில் மோடி அலையால் மட்டும் பா.ஜனதா ஜெயிக்கவில்லை - எடியூரப்பா

    மாங்காடு அருகே கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த பட்டூர், புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பர்கித்பீவி (வயது30) இவருக்கும் பட்டூர் தீன் நகரை சேர்ந்த இதாயத் உசேன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சமீப காலமாக இதாயத் உசேன் அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனமுடைந்த பர்கித்பீவி கோபித்து கொண்டு சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை பர்கித்பீவியின் தாய் மரியம்பீவி (66) எழுந்து வெளியே வந்தார்.

    அப்போது கழிவுநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் இருந்தது. உள்ளே எட்டி பார்த்த போது அங்கு பர்கித்பீவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பர்கித்பீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்கித்பீவியின் கணவர் இதாயத் உசேனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன நிலையில் உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகி ஒரே ஆண்டில் கழிவுநீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
    உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    உள்ளாட்சி தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 044 - 2723 7425 மற்றும் 044- 2723 7690 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
    காஞ்சீபுரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களுடன் ஒரு நபர் மதுரைக்கு செல்ல இருப்பதாக சிவகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலையில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 பண்டல்களில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த நபரை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை, உசிலம்பட்டி தாலுகா சேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் (வயது 49) என்பதும் கஞ்சா பொட்டலங்களை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து மதுரைக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையொட்டி ஒச்சப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் இருந்து தாமல் நோக்கி ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலுசெட்டி சத்திரம் அருகே சென்ற போது, சென்னையில் இருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. 

    இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மகாத்மா காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.

    ஆறுமுகம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வீட்டில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவும் அவர் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    திருக்கழுக்குன்றம் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி வாலாஜாபாத் பகுதியில் உள்ள டெய்லரிங் பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

    இதற்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம் வாலாஜாபாத் அடுத்துள்ள சங்கராபுரத்தில் உள்ள தனது  அக்காள் முறையான  பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி பொன்னியின் கணவர் மோகன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு சிறுமியின் அக்காள் பொன்னியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் சாலவாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த பொன்னியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மோகனை தேடி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா நோயை தடுப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக நர்சுகள், தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

    இந்த கொரோனா தடுப்பூசியானது 100 சதவீதம் பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

    முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசி முகாமை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர்.
    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையம் அருகே உள்ள யாகசாலை மண்டபத் தெருவில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஊழியராக செல்வம் உள்ளார்.

    இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக அரசு வழங்கும் இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, உள்ளிட்ட பொருட்களை ரே‌ஷன் கடை விற்பனையாளர் வழங்குவதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி 6 மூட்டைகள் கடத்தப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றவரை பிடிக்க விரட்டி சென்றனர். பொதுமக்கள் துரத்துவதை கண்ட அரிசி கடத்தல்காரர் மூட்டைகளை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து ரே‌ஷன் கடையில் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது ரே‌ஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து ரே‌ஷன் கடை ஊழியர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு உத்தரவிட்டுள்ளார்.

    படப்பை அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும் என தெரிவித்து செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.விடம் சென்று புகார் தெரிவிக்க போவதாக தெரிவித்தனர்.

    உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.
    ஆலந்தூர்

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கவர்னர் மாளிகை செயலாளர் ஆனந்த் ராவ் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் அவரது காரில் அடையாறில் உள்ள வீட்டிற்கு சென்றார். உறவினர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார காலம் சென்னையில் தங்கி இருந்து 13-ந் தேதி புறப்பட்டு செல்கிறார்.
    ஒரகடம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் காவலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பட்டவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 60). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் பகுதியில் தங்கியிருந்து வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை பணி முடிந்து சைக்கிளில் வல்லம் அருகே ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியது.

    இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தர்மன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இறந்த தர்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×