என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த ஆற்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 52). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    விவசாயியான தனசேகரன் காஞ்சீபுரத்துக்கு மளிகை பொருட்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓரிக்கை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து தனசேகர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் தனசேகரன் நிலைத்தடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உத்திரமேரூர்-காஞ்சீபுரம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    அங்கு வந்த காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராஜ் (33). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கியிருந்து ஒரகடம் அடுத்த வல்லம் அருகே தனியார் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வல்லம் அருகே மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பிராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கள்ள ஓட்டாக போட்ட தனது ஓட்டை விட்டு விட்டு செல்லாமல் கைக்குழந்தையுடன் வந்து போராடி தனது ஜனநாயக கடமையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பார்வதியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
    வாலாஜாபாத் :

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடி வாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகள் பார்வதி (வயது 30). இவர் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமாரவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். பார்வதி தனது வாக்காளர் அடையாள அட்டையை பிறந்த ஊரான சிங்காடிவாக்கத்தில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றாமல் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தனது பிறந்த ஊரான சிங்காடி வாக்கத்தில் உள்ள தனது ஓட்டை செலுத்துவதற்காக கைக்குழந்தையுடன் வாக்குசாவடி மையத்திற்கு சென்றார். பார்வதி செல்வதற்கு முன்பே அவரது ஓட்டை கள்ள ஓட்டாக மற்றொருவர் பதிவு செய்து விட்டு சென்று விட்டார் என்பது தெரியவந்தது. இதை அறிந்த பார்வதி அதிர்ச்சி அடைந்து வாக்குப்பதிவு மைய அலுவலரிடமும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து பார்வதி, நடிகர் விஜய் நடித்த சர்க்கார் பட பாணியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சர்க்கார் படத்தில் விஜய் ஓட்டை செலுத்தியதை போல 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.

    கள்ள ஓட்டாக போட்ட தனது ஓட்டை விட்டு விட்டு செல்லாமல் கைக்குழந்தையுடன் வந்து போராடி தனது ஜனநாயக கடமையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பார்வதியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

    தமிழகத்தில் 54 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாற்றி மாற்றி ஆட்சி அமைத்தது போதும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது.

    பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் காஞ்சீபுரம் அடுத்த அவலூர் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-

    சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதால் எதுவும் ஆகபோவதில்லை அது வெறும் காகித பேப்பர் தான்.ஆனால் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயம் நிறைவேற்றியாக வேண்டும்.

    உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுகின்றது. பா.ம.க. கட்சி அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்காகவும், தி.மு.க. என்பதற்காகவும், உருவாக்கப்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி.

    அதற்கான நேரம் தான் இது. அனைவரும் ஆட்சிக்கு வந்துவிட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. பல ஆண்டுகளாக உழைத்த ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்துவிட்டார், ஸ்டாலினின் ஆசை நிறைவேறியது.

    முக ஸ்டாலின்

    அடுத்து ஆட்சி பா.ம.க. ஆட்சி தான் அதற்கான முன்னோட்டம் தான் இந்த தேர்தல்.

    10.5 சதவீத இட ஒதுக்கீடு, ஜாதி பிரச்சனையோ, ஓட்டு பிரச்சினையோ, அரசியல் பிரச்சினையும் இல்லை, இது சமூக நீதி பிரச்சனை.

    அ.தி.மு.க. ஒரு சட்டம் கொண்டு வந்தால் தி.மு.க. எதிர்க்கும், திமுக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்க்கும், ஆனால் இந்த சட்டத்திற்கு இரு கட்சிகளும் ஏற்று அமல்படுத்துவதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ்.

    மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிக்கான வெற்றி.

    54 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாற்றி மாற்றி ஆட்சி அமைத்தது போதும்.

    மேலும் கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் கட்சி, அரசியல், தேர்தல், எல்லாவற்றையும் விட உங்கள் உயிர் முக்கியம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் தடுப்பூசி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்...தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தினார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வெள்ளகுளத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

    இதில் இந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை என டாஸ்மாக் மேலாளர் பதில் அளித்ததால், இது குறித்தும் மாவட்ட கலெக்டருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தினார்.

    டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யும் நிலை உருவானதால் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு பீர் பாட்டிலுடன் கடையை மாத்தாதீங்க என கோரிக்கை முழக்கம் எழுப்பி கடையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 10 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்படி 200 போலீசார் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் "DISARMS OPERATION ” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை செய்தனர். இந்த வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.

    இந்த வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிமீறிய 1617 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விதிமீறல் குறித்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வரை இது போன்ற திடீர் வாகனசோதனையில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு ரவுடிகள் கைது செய்யப்படுவர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை போலீசார் உறுதி செய்வர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.

    யமஹா நிறுவனத்தின் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் முதற்கட்டமாக 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள யமஹா மோட்டார் என்.டி.டி.எப். பயிற்சி மையம் (ஒய்.என்.டி.சி.) தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இருந்து 27 மாணவர்கள் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதாக இந்தியா யமஹா மோட்டார் (ஐ.வை.எம்.) இன்று அறிவித்தது. ஒய்.என்.டி.சி. என்பது நாட்டின் முதல் ஜப்பான்-இந்தியா உற்பத்தி நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் ஜப்பானிய பாணி உற்பத்தி மற்றும் வேலைமுறைகளைப் பயிற்றுவிப்பதாகும்.

    இந்தியாவில் இளைஞர்களுக்கான தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வி அறக்கட்டளையான நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை (என்.டி.டி.எப்.) உடன் இணைந்து உற்பத்தி தொழில்நுட்பத்தில் ஒய்.என்.டி.சி. நான்கு ஆண்டு திட்டத்தை நடத்துகிறது.

    ஒய்.என்.டி.சி. மற்றும் என்.டி.டி.எப். வழங்கிய பாடத்திட்டம் தேசிய வேலைவாய்ப்பு மேம்பாட்டு மிஷனின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தனிநபர்களுக்கான வேலைவாய்ப்பு நடைமுறை பயிற்சி மூலம் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் அரசு திட்டமாகும்.

    ஒய்.என்.டி.சி. இன் முதல் தொகுதி 2017 ஆண்டில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களுடன் தொடங்கியது. 2020 முதல் தொற்றுநோய் நிலைமை போன்ற பல சிரமங்கள் இருந்தன, இருப்பினும், 27 மாணவர்கள் நான்கு ஆண்டு டிப்ளமோ திட்டத்தை முடிக்க முடிந்தது. 80 சதவிகித பாடத்திட்டம் யமஹா கடை மாடிகளில் பயிற்சி மூலம் வழங்கப்பட்டது, 20 சதவிகிதம் என்.டி.டி.எப். வகுப்பறையில் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்


    நிகழ்ச்சியில் பேசிய யமஹா மோட்டார் இந்தியா இயக்குநர் யுகிஹிகோ தடா, “இந்த இளம் திறமைகள் உற்பத்தித் துறைக்கு பங்களிக்க தயாராக இருப்பதை யமஹா கண்டு கொள்வது பெருமையான தருணம். திறன் இந்தியா மேம்பாட்டுத் திட்டத்தில் பங்களிப்பதற்காக ஒய்.என்.டி.சி. அமைக்கப்பட்டது. இன்று இந்த மாணவர்களின் வெற்றி, உற்பத்தித் தொழிலுக்கு பயிற்சி பெற்ற மனிதவளத்தை உருவாக்குவதற்கான எங்கள் பணியை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, ஜப்பானிய உற்பத்தி முறைகள் மற்றும் நுட்பங்களில் அவர்களின் அறிவையும் திறமையையும் மேம்படுத்துவதன் மூலம் நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என தெரிவித்தார்.
    உத்திரமேரூர் அருகே கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் பேரூராட்சி செங்குந்தர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோட்டம்மாள் (வயது 75). இவருக்கு சொந்தமான வீட்டில் அவர் தனியாக வசித்து வந்த நிலையில், வீடு வாடகைக்கு விடப்படும் என்று பலகை வைத்துள்ளார். நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் கோட்டம்மாளிடம் வீடு பார்க்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

    அதனை நம்பிய கோட்டம்மாள் வீட்டைகாண்பிக்க அவரைஉள்ளே அழைத்து சென்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த நபர் அவரிடம் இருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க வளையல் மற்றும் சங்கிலியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    உத்திரமேரூர் பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் கவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவரது மனைவி திவ்யா (28). நேற்று காலை 11 மணி அளவில் திவ்யா வீட்டில் இருந்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் திவ்யாவை பிடித்து கட்டிப்போட்டு அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் தாலி சரடு 4 பவுன் மற்றும் காதில் இருந்த 3 கிராம் கம்மலையும் கழற்றி கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    பின்பு திவ்யாவின் உறவினர்கள் அங்கு வந்து கட்டி போட்டு இருந்த அவரை விடுவித்தனர். இது பற்றி திவ்யா சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இதே போல், உத்திரமேரூர் பேரூராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (41). இவரது மனைவி செல்வமணி (38). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இருவரும், கடந்த புதன்கிழமை திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

    வீட்டின் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்து 5 பவுன் நகையும், ரூ.30 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    மேலும், உத்திரமேரூர் ஒன்றியம் பினாயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (49). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி (45). இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நிலையில், பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 4½ பவுன் நகையும், ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி கிருஷ்ணகுமார் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

    தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நேற்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி பேசினார்.

    இன்று காலை எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

    பின்னர் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள்.

    மு.க.ஸ்டாலின்

    எனவே தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்களை கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் அப்படி சொல்லவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்.

    எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும்.

    அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், காமராஜ், கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி, நிர்வாகிகள், எஸ்.எஸ்.சத்யா, தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சரோஜினி தெருவைச் சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 24). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஆனஸ்ட்ராஜ் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆனஸ்ட்ராஜை மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் இறந்துபோன ஆனஸ்ட்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆனஸ்ட்ராஜ் திருநீர்மலையை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்த பெண் சில நாட்களாக அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், மேலும் அவர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த காவலாளி சிக்கிச்சை பலனின்றி பரிதாமக உயிரிழந்தார்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு பகுதியில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு இவருடைய மகன் ஜானகிராமன் (வயது 43). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை கடக்கும் போது காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஜானகிராமன் மீது வேகமாக மோதியது.

    இதில் ஜானகிராமன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் படுகாயம் அடைந்த ஜானகிராமனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (வயது 43) என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (வயது 61) என்பவரும் போட்டியிடுகிறார்.

    ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சபாஷ் சரியான போட்டி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


    ×