என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர்.
    • சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வளையக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர். எந்த விழாவானாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். அவ்வப்போது இவர்களது மகன், மகள்கள் வந்து பார்த்து செல்வார்கள்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அன்னியப்பன் வீட்டில் இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதிலிருந்து அள்ளியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அன்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் வேதனை தாங்காமல் பாப்பம்மாள் கணவரின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் மாலை அன்னியப்பன் உடல் இறுதி சடங்கு செய்ய கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.

    இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்த பாப்பம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதிகள் சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களுக்கு பணம் வாங்குகின்றனர் என தவறாக புரிந்து கொள்கின்றனர். அப்படி அல்ல. பாட்டில் திரும்ப அளிக்கும்போது 10 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு லேபிள் ஒட்டுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பல டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெற்று வைப்பதற்கு இடம் இல்லாமல் சிரமம் உள்ளது. இது போன்ற சிரமங்கள் வருங்காலங்களில் தவிர்க்க இனி வரும் கடை கள் குறைந்தளவு 500 சதுர அடியில் கடை இருக்க வேண்டும் என கட்டாயமாக இருக்க வேண்டும் அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூட வேண்டும் என்பதால் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. எப்.எல் 2 கொடுக்க வேண்டுவது அரசின் விருப்பமோ, திட்டமோ அல்ல. டாஸ்மாக் கடைகள் இல்லாத இடத்தில் கள்ளச்சாராயம், வெளி மாநிலத்தில் இருந்து வரும் மது போன்ற தவறான இடத்திற்கு சென்று விடக்கூடாது என தடுப்பதற்காக தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்றது. மதுவை மறைமுகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். டாஸ்மாக் கடையை ஒரே நாளில் உத்தரவிட்டு மூட முடியும். ஆனால் அதற்கு பிறகு ஏற்படும் நிலை என்பது அனைவரும் அறிந்ததே. எனவே படிப்படியாக குறைத்து கொண்டு வருவது தான் அரசாங்கத்தின் முதல் நோக்கமாக உள்ளது.

    டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்துள்ளோம். இதற்கு தகுந்தாற்போல் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். சமாளிப்பதற்காக சொல்லவில்லை. மதுவை பழகிவிட்டனர். தவறாக சொல்லமுடியாது. அவர்களுக்கு குடும்ப சூழ்நிலையோ, பணிச்சுமையோ இப்படி சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

    இதனை சொன்னால் பலவிதமாக சித்தரிக்கின்றனர். விருப்பப்பட்டு மது வாங்க செலவழிப்பது அல்ல. அவர்களுக்கும் குடும்பம் குழந்தைகள் உள்ளது. சூழ்நிலை காரணமாக டாஸ்மாக் கடையில் தினமும் பணத்தை செலவிட்டு வருகின்றனர். இதனை மாற்றி கொண்டு வரவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது.

    தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகள் நிறுத்துவதற்காக மனுக்கள் வந்துள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    டெட்ரா பேக் நடை முறைப்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளது. டெட்ரா பேக் திட்டம் மது விற்பனையை பிரமோட் செய்வதற்கு அல்ல. அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கூறும் கருத்தை வைத்து தான் முடிவெடுக்க முடியும். எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது.

    பில்லிங் மெஷின் 12 ஆயிரம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எங்காவது மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெற்றிருந்தால் தனிப்பட்டவரின் தவறு. அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 451 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • . யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.

    ஈரோடு:

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி உலக யானையில் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    யானைகளின் சாணத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகள் காடுகளில் பரப்புகின்றன. சாணத்தில் உள்ள பலவகை பூச்சி இனங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. இவ்வாறு யானைகள் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.

    அதனால்தான் யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை மேகமலை, களக்காடு - முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

    இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள ஆய்வு இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் வாழக்கூடிய உகந்த இடமாக இந்த வனப்பகுதி உள்ளது. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை 720 -ல் இருந்து 780 ஆக உயர்ந்து உள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய வனப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் சூழலில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மட்டும் 25 சதவீதம் யானைகள் வசித்து வருகிறது.

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.

    மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் 780-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்தவரை யானை வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பின் அடிப்படையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என்றார். 

    • வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை உள்ளடக்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 95 அடியை கடந்ததால் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள சித்தன் குட்டை, கனரா மொக்கை, வால் கரடு மற்றும் ஜே ஜே நகர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

    7 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட கதளி, நேந்திரம் ரக வாழை, தற்போது குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் தற்போது பவானி நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியுள்ளது. இதனால் சிந்தன் குட்டை, ஜே.ஜே நகர், புதுக்காடு, கன்ரா மொக்கை பகுதிகளில் சுமார் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு லட்ச கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல வாழை மரங்களை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தொடர்ந்து நீரில் இருக்கும் வாழை மரங்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாழை மரத்தில் உள்ள வாழைத்தார்களை இன்று விவசாயிகள் பரிசல் மூலம் சென்று பறித்து வருகின்றனர்.

    • திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    திருவிழாவில் மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சந்தை பிரபலமாக உள்ளது. குறிப்பாக இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றது. சந்தைக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் இருந்தார். நேற்று இரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து வாளியின் மூலம் தண்ணீர் கொண்டு வைத்தார். வாளியில் யூரியா இருந்துள்ளதை கவனிக்காமல் தண்ணீர் எடுத்து வைத்ததில் 6 குதிரைகள் தண்ணீரை குடித்துள்ளது. யூரியா தண்ணீரை குடித்த 6 குதிரைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்தன. மற்ற குதிரைகள் வேறு வாளியில் இருந்த தண்ணீரை குடித்ததால் உயிர் தப்பியது.

    திருவிழாவை முன்னிட்டு சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட குதிரைகளில் 6 குதிரைகள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது.
    • கைத்தறி மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் போர்வை உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.

    கைத்தறி மூலம் பல்வேறு வடிவமைப்புடன் கூடிய போர்வைகள் தயாரிக்கப்படுகிறது. கைத்தறி மூலம் காந்தி, கிரிக்கெட் வீரர் டோனி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை போர்வையில் நெய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னிமலையின் பாரம்பரியத்தின் அடையாளமான கைத்தறி போர்வையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் படமும் இணைந்து கைத்தறி நெசவாளர் அப்புசாமி என்பவரால் நெய்யப்பட்டது.

    இந்த போர்வையை சென்னிமலை ஒன்றிய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் சார்பிலும், நெசவாளர்கள் அப்புசாமி இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கைத்தறி போர்வையை பரிசாக வழங்கினர். 

    • நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
    • செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகா நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.

    இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

    இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்று கூறி மேலும் பேச முற்பட்டபோது பிறகு பேசலாம் என கூறி நயினார் நாகேந்திரனை அண்ணாமலை அழைத்து சென்றார். 

    • தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
    • பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை புன்செய் பாசனத்துக்குட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

    நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, மசினகுடி, மாயாறு போன்ற பகுதிகளிலும், வட கேரள மாநிலத்தில் உள்ள முக்காலி, அகளி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் மேல் பவானி அருகே உற்பத்தியாகும் பவானி ஆற்று நீர் கேரளா வழியாக பாய்ந்து தமிழக- கேரள எல்லையில் உள்ள அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு பவானி ஆற்று நீர் வந்து சேருகிறது. தற்போது பில்லூர் அணையும் நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணையை வந்தடைகிறது.

    இதேபோல நீலகிரி மாவட்டத்தின் பைகாரா, கிளன்மார்க்கன், கூடலூர், சிங்காரா, மசினகுடி வழியாக பாயும் மாயாறு ஆற்று நீர் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. பவானி, மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது.

    எனவே பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.04 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தற்போது 28.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு சராசரியாக 4509 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 3600 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

    நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, நாளை 31ம் தேதி மாலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

    • போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல்.

    ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதில், தந்தை நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிப்பு, தாய் சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிப்பு, மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிப்பால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மூன்று பேரும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
    • இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 65). கிராம உதவியாளராக பணிபுரிந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சரோஜா பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் வீட்டின் அருகே சற்று தொலைவில் மயானத்தில் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயானத்தில் தேடிய போது அங்கு ஒரு பகுதியில் ஒருவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை விஜயகுமார் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தனது மனைவியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் இந்த விபரீத முடிவை எடுக்கப் போகிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.

    இதனை அடுத்து மயானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விஜயகுமார் என தெரிய வந்தது. மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    மனைவி இறந்த துக்கத்தில், உடல் நல்லடக்கம் செய்வதற்குள் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

    சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதேபோன்று, ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது.
    • வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் ருசிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று ஒன்று கடந்து சில நாட்களாக சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடுகளை ஏற்றி வரும் லாரியை வழிமறித்து கரும்புகளை ருசித்து வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஆசனூர் வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுதல் உள்ளதா என தேடியது. ஒவ்வொரு வாகனத்தையும் வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

    அப்போது அந்த வழியாக கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி தனது தும்பி கையால் கரும்பு கட்டிகளை கீழே போட்டு அந்த ஒற்றை யானை கரும்பை சுவைத்தது. ஒரு மணி நேரமாக சாலையில் நின்று கொண்டிருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. சமீப காலமாக ஆசனூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ×