என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இடைசெருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா (25). இவர்களுக்கு பிரதிஷா (2½) என்ற பெண் குழந்தை இருந்தது. பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.
பிரகாசுக்கும் அவரது மனைவி உஷாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ராஜ்கோட்டில் இருந்து சொந்த கிராமமான இடைசெருவாய்க்கு வந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இரவில் பிரகாஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் உஷா திடீரென கண்விழித்தார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறதே என நினைத்து அழுதார். பின்னர் உஷா வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
திடீரென்று எழுந்த பிரகாஷ், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு உஷா தற்கொலை செய்து கொண்டாரே என எண்ணி கதறி அழுதார். பின்னர் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி முதலில் தூங்கிக்கொண்டிருந்த மகள் பிரதிஷாவின் கையில் கத்தியால் அறுத்தார். ரத்தம் பீறிட்டு கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை பிரதிஷா பரிதாபமாக இறந்தது. பின்னர் தனது கையையும் பிரகாஷ் கத்தியால் அறுத்தார். அவரது கையில் இருந்து ரத்தம் ஆறாக ஓடியது. சிறிது நேரத்தில் பிரகாசும் இறந்தார்.
இன்று காலை வெகு நேரமாகியும் பிரகாசின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உஷா தூக்கில் தொங்கியவாறும், பிரகாஷ், குழந்தை பிரதிஷா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திட்டக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து பிரகாஷ், உஷா மற்றும் குழந்தை பிரதிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் எதற்காக குழந்தையை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசாருக்கு முழுமையாக தகவல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #ParentsSuicide #ChildMurder
மந்தாரகுப்பம்:
கடலூர் மாவட்டம் வடலூர் புத்தன் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 42). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு திருநாவுக்கரசு தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து திருநாவுக்கரசு அந்த பகுதிக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு 6 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து சீறி கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசு கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நவீன கருவி மூலம் லாவகமாக பாம்பை மடக்கி பிடித்தனர்.
பின்னர் பிடிப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஜோசப் மகள் சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது சத்தியமேரி பெற்றோர் வரதட்சணையாக மகிமைதாசுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். இருப்பினும் மகிமைதாசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி மனைவியிடம் மகிமைதாஸ் ரூ.1 லட்சம் கேட்டார். அவரும் தன்னுடைய பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி கொடுத்தார். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபடாமல், அந்த பணத்தையும் குடித்து செலவு செய்து வந்ததாக தெரிகிறது.
இது பற்றி சம்பவத்தன்று சத்தியமேரி மகிமைதாசிடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகிமைதாஸ் சத்தியமேரியை தாக்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சத்தியமேரி சற்று நேரத்தில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் அவரது தாய் ஆரோக்கியமேரி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த சத்தியமேரி உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இது பற்றி ஆரோக்கியமேரி தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்தும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பல்லவராயநத்தம் குயிலா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகள் சிவசங்கரி (வயது 17). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.பி.எம். படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சிவசங்கரிக்கும், சன்னியாசி பேட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேல் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அன்று முதல் 2 பேரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று பழகி வந்தனர்.
இருவரின் பெற்றோருக்கும் தெரியாமல் கடந்த டிசம்பர் மாதம் புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் சிவசங்கரியும், வடிவேலும் திருமணம் செய்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வழக்கம்போல் சிவசங்கரி கல்லூரிக்கு சென்று விட்டார். வடிவேல் வேலைக்கு சென்று வந்தார்.
பின்னர் அடிக்கடி அவர்கள் தனிமையில் வெளியூர் சென்று வந்தனர். அப்போது வடிவேல், சிவசங்கரியிடம், நமக்குதான் திருமணம் நடந்து விட்டதே. இனி யாருக்கும் பயப்படதேவையில்லை என்று கூறி பல முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடிவேல், சிவசங்கரியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சிவசங்கரி சன்னியாசிப் பேட்டைக்கு சென்று வடிவேலின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு இருந்த வடிவேலிடம், எதற்காக என்னிடம் போனில் பேசவில்லை. என்னையும் சந்திக்க வரவும் இல்லை என்று கேட்டார்.
உடனே வடிவேல், நீ வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் உன்னை எனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் பிரிந்து விடலாம். எனவே நான் ஏற்கனவே கட்டிய தாலியை கழற்றி என்னிடம் கொடுத்து விடு என்று கூறியுள்ளார்.
ஆனால், தாலியை கழற்றி கொடுக்க சிவசங்கரி மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், சிவசங்கரியை தகாதவார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக டாடா சுமோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது டாடா சுமோ டிரைவர் திடீரென்று மின்னல் வேகத்தில் அந்த காரை எடுத்து ஓட்டி சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் இருந்து பின்னால் போலீஸ் வாகனத்தில் காரை துரத்தி சென்றனர். சுமார் 25 கிலோ மீட்டர் விரட்டி சென்று கடலூர் ஆலப்பாக்கம் என்ற பகுதியில் அந்த டாடா சுமோ காரை மடக்கி பிடித்தனர்.
உடனே டாடா சுமோ டிரைவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து, டாடா சுமோ காரையும் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் டாடா சுமோவில் 5 அட்டைப் பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில் மற்றும் 102 அட்டை பெட்டியில் இருந்த 4 ஆயிரத்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும்.
மது பாட்டில் கடத்தி சென்ற நபரிடம் விசாரணை செய்ததில், அவர் கடலூர் சம்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 27) என்பது தெரியவந்தது.
இது குறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் நடராஜன். கொத்தனார். இவரது மகள் சத்தியபிரியா(வயது 25). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில். முதலாம் ஆண்டு படித்து வந்தார். சத்தியபிரியா தன்னுடம் படிக்கும் கடலூரை சேர்ந்த துரை மகள் சிவசங்கரி, செங்காடு பகுதியை சேர்ந்த ஜான் மகள் புனிதா ஆகியோருடன் சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்தூரில் உள்ள தோழி தவசெல்வியை பார்ப்பதற்காக சென்றார்.
இவர்கள் 4 பேரும் நேற்று மதியம் 2 மணியளவில் ஆயிப்பேட்டை வெள்ளாற்றில் குளிக்க சென்றனர். அப்போது கோனாத்து முடக்கு என்ற இடத்தில் சத்தியபிரியா மட்டும் ஆற்றுக்குள் இறங்கினார். அங்கு ஆழம் அதிகமாக இருந்ததால் அவர் நீரில் மூழ்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவசங்கரி, புனிதா, தவசெல்வி ஆகியோர் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய மாணவியை தேடினர். நீண்ட நேரத்துக்கு பின் சத்தியபிரியா பிணமாக மீட்கப்பட்டார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஒரத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சத்தியபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் துறைமுகம் சாலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 4 மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் புதுவை பாகூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி (21) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
கடலூர்:
புதுவை பாகூர் தாமரைக்குளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது55).தொழிலாளி. இவர் கடந்த 29-ந்தேதி சென்னைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏகாம்பரம் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏகாம்பரத்தின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இது குறித்து பாகூர் போலீசில் ஏகாம்பரத்தின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஏகாம்பரத்தை தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்:
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது40). இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு, மாலை வீட்டின் எதிரே உள்ள பட்டியில் அடைத்தார்.
அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் காரில் வந்த மர்மநபர்கள் ஆட்டுப்பட்டியில் இருந்த செம்மறி ஆடுகளை திருடி சென்றனர். அதைப்பார்த்து பழனிவேல் கூச்சலிட்டதும் மர்மநபர்கள் தப்பியோடினர். பின்னர் ஆட்டுப்பட்டியை சென்று பார்க்கையில் 5 செம்மறி ஆடுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபரிமலையில் பாரம்பரியமிக்க புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும், பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறை நீடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேவா சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் சபரிமலையில் பழைய நடைமுறை தொடர வேண்டி ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வேண்டினர். ஐயப்ப பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேப்போல் மந்தார குப்பத்தில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோவிலில் அகில இந்திய பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனைக்கு மந்தார குப்பம் கிளை தலைவர் குருசாமி நாகராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சபரிமலையின் புனிதம், தொன்மை மற்றும் விரதமுறைகள் குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த வருகிறது. வெள்ளசேதத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கடலூர் மாவட்ட மேலிட பொறுப்பாளரும் வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான ககன்தீப் சிங் பேடி கடலூருக்கு இன்று காலை வந்தார்.
பின்னர் கடலூர் பீமாராவ் நகர் மற்றும் சுத்துகுளம் ஆகிய பகுதியை ககன் தீப்சிங்பேடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். கடந்த 2015-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்புகள் மீண்டும் வராமல் இருப்பதற்கு தமிழக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை இன்று ஆய்வு செய்து மீண்டும் இதே இடங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளேன்.
இதில் கடலூர் பீமாராவ் நகர் பகுதியில் கடந்த மழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு படகு மூலமாக பொதுமக்கள் வெளியே கொண்டு வரும் சூழ்நிலை ஏற்பட்டது.
கடலூரில் தற்போது 80 சதவீதம் வெள்ள தடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் கெடிலம் ஆறு பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஏதேனும் குறைகள் மற்றும் பணிகள் நடைபெறாமல் இருந்தால் தங்கள் கருத்துகளை பொதுமக்கள் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் உடனடியாக அந்த பணிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தற்போது வெள்ளத்தடுப்பு பணிகளில் பல்வேறு துறைகள் அதிகாரிகள் பணிகள் செய்வதால் ஒற்றுமையுடன் பணிகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் நகராட்சியில் புயலால் ஏற்படக்கூடிய மழைநீர் நீரால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கடலூர் கடற்கரை சாலை, தலைமை தபால் நிலையம் பகுதி, கடலூர் வில்வநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உடனடியாக வெள்ள தடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகையால் வெள்ளத் தடுப்பு பணிகள் கடலூர் மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டது தற்போது இந்தப் பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு தற்போது கதவணைகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாய நிலங்கள் பாதிப்பில்லாமல் எப்படி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகள் வருகிற நவம்பர் 30-ந் தேதி வரை இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும். தமிழக அரசு சார்பில் அக்டோபர் 15-தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகையை விவசாயிகள் கட்டி முடித்தால் தற்போது ஏற்படக்கூடிய வடகிழக்கு பருவமழையினால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்கும்.
ஆகையால் விவசாயிகள் வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகையை கட்ட வேண்டும். கடந்த 2016-2017-ம் ஆண்டு இந்திய அளவில் அதிக பயிர் இழப்பீடு தொகை தமிழகத்துக்கு 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கிடைத்தது.
இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயன் அடைந்தனர். மேலும் அந்த சமயத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த இழப்பீடு தொகை கிடைத்து பயனடைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குறிஞ்சிப்பாடி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ககன்தீப் சிங்பேடி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அன்புச்செல்வன், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பாரை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சதீஷ் (20). இவருக்கும், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது.
அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பின்னர் மாணவியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ்-அப் வீடியோ அந்தபகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு பரவியது. இந்த நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ பற்றிய தகவல் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
உடனே இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் சிறையில் சதீஷ் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






