என் மலர்
செய்திகள்

காரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்- கடலூர் வாலிபர் கைது
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக டாடா சுமோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது டாடா சுமோ டிரைவர் திடீரென்று மின்னல் வேகத்தில் அந்த காரை எடுத்து ஓட்டி சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் இருந்து பின்னால் போலீஸ் வாகனத்தில் காரை துரத்தி சென்றனர். சுமார் 25 கிலோ மீட்டர் விரட்டி சென்று கடலூர் ஆலப்பாக்கம் என்ற பகுதியில் அந்த டாடா சுமோ காரை மடக்கி பிடித்தனர்.
உடனே டாடா சுமோ டிரைவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரையும் பிடித்து, டாடா சுமோ காரையும் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் டாடா சுமோவில் 5 அட்டைப் பெட்டிகளில் இருந்த பீர் பாட்டில் மற்றும் 102 அட்டை பெட்டியில் இருந்த 4 ஆயிரத்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும்.
மது பாட்டில் கடத்தி சென்ற நபரிடம் விசாரணை செய்ததில், அவர் கடலூர் சம்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 27) என்பது தெரியவந்தது.
இது குறித்து கடலூர் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.