என் மலர்tooltip icon

    கடலூர்

    • புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

    கடலூர்:

    புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி `இந்தியா' கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று (18-ந்தேதி) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகள் அடைக்கப்படும். மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை ஓடாது என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலம் அருகில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததால் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை 6 மணிக்குள் புதுச்சேரி வழியாக சென்றன.

    அதன் பிறகு இயக்கவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் விக்கிரவாண்டி வழியாக சென்றது.


    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாரை அணுகிய நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

    அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள் . இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்ன கங்கணாங்குப்பம் வரை கடலூர் மாவட்ட போலீசாரும், அதன் பிறகு புதுச்சேரி மாநில போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

    மேலும் சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்குவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து புதுச்சேரி மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்க ப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

    • நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
    • மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். ரெயில் மூலம் 13 சிதம்பரம் பக்தர்கள் நாளை சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் கனகராஜ் (வயது 61), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 24 பேரும், சீர்காழியை சேர்ந்த 2 பேரும் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா செல்ல கடந்த 1-ந் தேதி டெல்லிக்கு சென்றனர்.

    அப்போது அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த 2 பேரும், பெங்களூருவில் வேலைபார்க்கும் சிதம்பரத்தை சேர்ந்த 2 பேரும் ஆன்மிக பயணத்தில் இணைந்து கொண்டனர். பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் 3-ந் தேதி புறப்பட்டு இமயமலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடந்த 9-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் 30 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். பின்னர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், 30 பேரும் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 பேரும் நேற்று காலை 6 மணி அளவில் 2 வேன்களில் டெல்லிக்கு புறப்பட்டனர்.

    இதில் கோயம்புத்தூரை சேர்ந்த 2 பேர், பெங்களூரை சேர்ந்த 2 பேர் மற்றும் சிதம்பரத்தை சேர்ந்த 13 பேர் உள்ள மொத்தம் 17 பேர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    கோவை, பெங்களூரை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விமானத்தில் வந்த சிதம்பரம் பக்தர்கள் 13 பேர் சென்னையில் இருந்து 2 வேன்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    மற்ற 13 பேர் இன்று காலை டெல்லி நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    அவர்கள் நாளை (புதன்கிழமை) மதியம் சென்னை வந்தடைகிறார்கள். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்து செல்கிறார்.

    மீட்கப்பட்ட 13 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

    பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள்.

    • 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 29 பேரும், கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளராக பணியாற்றி வரும் கோமதி சிவராமன் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலா சுக்கு ஆன்மிக பயணம் செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி 29 பேர் கடந்த 1-ந் தேதி சிதம்பரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமை யில் சிதம்பரத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளர் கோமதி கோவை யில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.

    பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் இமயமலைக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சுற்றி பார்த்துவிட்டு, அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

    இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு வேன்களில் புறப்பட்டனர்.

    அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மழை வெள்ளத்தால் சாலையும் துண்டிக்கப்பட்டதால், 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்தனர்.

    பின்னர் அவர்கள் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தனர். இருப்பினும் அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாததால், உதவி கேட்டு செல்போன் மூலம் கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

    இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    அதன் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 30 பேரும் நேற்று காலை 11 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டது. பின்னர் 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் வேன் மூலம் டெல்லி புறப்பட்டனர். அவர்கள் சுமார் 550 கி.மீ. தூரம் பயணம் செய்து இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளனர்.

    இன்று நள்ளிரவு அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவர்கள் சென்னை வந்தடைவார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் சிதம்பரம் வந்தடைகிறார்கள்.

    நிலச்சரிவில் சிக்கிய 30 பேரும் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
    • பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வந்தது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நாளையுடன் ஆவணி மாதம் முடிந்து நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
    • சொந்த ஊருக்கு திரும்பமுடியாமலும் 30 பேரும் தவிப்பு.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது.

    இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

    குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. அதேபோல் ஆதி கைலாஷ் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜய

    லட்சுமி (62), வாசுகி (69), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் 30 பேரும் கடந்த 1-ந் தேதி சென்னை வந்து, அங்கிருந்து ரெயில் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து வேன் மூலம் அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

    இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழர்கள் 30 பேரும் ஆதிகைலாஷ் பகுதிக்கு வேனில் புறப்பட்டனர்.

    அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்ற போது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தமிழர்கள் 30 பேரும், ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களால் அங்கிருந்து திரும்பி வர முடியாத நிலை உருவாகி உள்ளது.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உத்தரகாண்ட் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தங்களின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.


    இதையடுத்து தமிழக அரசும் 30 தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசினார்.

    கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார், தமிழக அரசு சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்கு

    வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இன்று 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர்.

    இது குறித்து கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார் கூறியதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக யாத்திரை பயணமாக சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 30 பேரும் சிக்கிக்கொண்டனர்.

    இதில் ராணிப்பேட்டை, சீர்காழி, பெங்களூரை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர். மீதம் உள்ளவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அங்கு ஆசிரமம் அருகே உள்ள முகாமில் பாதுகாப்பாக உள்ளனர்.

    அவர்களை பத்திரமாக மீட்குமாறு பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். இன்று வானிலை சீராக இருந்தால் நிலச்சரிவில் சிக்கி உள்ள 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என அம்மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், 'சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாசுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி 30 பேரையும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    • சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றபோது விபத்து.
    • விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் வரும்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் பி.முட்லூர் கிராமம் அருகே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரியும் காரும் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கின. காரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவனைக்கு உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் தேடிவருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள் அபனான் (4), அராபத் நிஷா (27), யாசர் அராபத் (38), முகமது அன்வர் (55), ஷாகிதா பேகம் (60) எனத் தெரியவந்துள்ளது.

    • 123 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    என்.எல்.சி. 2-வது சுரங்கத்தை தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையில் ஈடுப்பட்டனர்.

    கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 3 சுரங்கள் உள்ளது. இதில் 2-வது சுரங்கம் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ளது.

    இந்த சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விட்டுள்ளது. இங்கு தனியார் நிறுவனம் சார்பில் 123 ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்

    இந்த தனியார் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இதனால் இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வரவேண்டாம் என தனியார் நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த தொழிலாளர்கள் இன்று 2-வது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    என்.எல்.சி. நிறுவனமே எங்களை ஒப்பந்த தொழிலாளர்களாக நியமிக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுடன் என்.எல்.சி. உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும்.
    • பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.

    பண்ருட்டி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பல்வேறு மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல் நிலைப்பள்ளி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

    முன்னதாக அவரை பண்ருட்டி நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜேப்பியார் ஸ்டீல்ஸ் ஜாகிர் உசேன்,பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆடிட்டர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்றனர்

    இதில் மாவட்ட, நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்தார். அப்போது பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடு முன்னேறும். எனவே பெண்கள் நன்கு கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும் அறிவுரைகளை வழங்கினார்.

    பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

    • 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
    • அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

    இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.

    அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.

    அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
    • நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.

    சிதம்பரம்:

    உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது.

    சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
    • ஆற்றங்கரை பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகர நல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.

    குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள், கால் கழுவச் செல்பவர்களை, முதலைகள் கடித்து இழுத்து செல்கின்றன. இதனை தடுக்கும் வகையில் முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள காட்டுக்கூடலூர் கிராம மக்களை பெரிய முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் ஆற்றின் கரையில் கால் கழுவ சிறுவன் சென்றான். அப்போது ஆற்றங் கரையில் பெரிய முதலை ஒன்று படுத்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டபடியே அலறி அடித்து ஓடினான்.

    தகவல் அறிந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கிருந்த சுமார் 400 கிலோ எடையும் 12 அடி நீளமும் கொண்ட முதலையின் கால்கள் மட்டும் வாயை கட்டினர். பின்னர் முதலையை தூக்கி மினி லாரியில் வைத்து எடுத்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    பொதுமக்கள் கொண்டு வந்து கொடுத்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

    கடலூர்:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் அவரது வீட்டின் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம், போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனது நண்பனை இந்த கொலை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும். அவனை விடுவிக்காவிட்டால் உங்கள் குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடிதத்தை எழுதியவர் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து செம்பியம் போலீசார், படுரில் இருந்த சதீஷை. பிடித்து நடத்திய விசாரணையில் சதீஷ் அப்பாவி என்பதும், தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் யார் என்று கூட தெரியாத படூரை சேர்ந்த சதீஷ் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது.

    அதில், செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தபோது அவரிடம் கடலூரை சேர்ந்த, தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண்ராஜ் பள்ளி அங்கீகாரம் தொடர்பாக மனு அளித்த போது, அதை ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர், அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில், தனது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக அருண் ராஜ் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ரோஸ் நிர்மலாவின் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக ஒட்டி வந்துள்ளார்.

    மேலும், ரோஸ் நிர்மலாவின் மகள் குறித்தும் அவரது வீடு, கடை ஆகிய பல்வேறு இடங்களிலும் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரோஸ் நிர்மலா அப்போதைய தாம்பரம் போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்ததை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் படூரை சேர்ந்த சதீஷ் தான் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சிகளை கலைக்கவும், மிரட்டவும் அருண்ராஜ் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், அருண்ராஜை பிடிக்க கேளம்பாக்கம் போலீசார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு அருண்ராஜை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×