என் மலர்
செங்கல்பட்டு
மதுராந்தகம் அடுத்த தேவாதூர் கிராமம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவர் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சேகர் வீட்டில் உள்ள மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு விஜயா என்ற மனைவியும் சாமிளா, சீலா என்ற மகள்களும், மணிபாரதி என்ற ஒரு மகனும் உள்ளனர்.
குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 25-ந் தேதி இரவு அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகளும், பஸ் டிரைவர், கண்டக்டருக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த மோதலில் சுங்கச்சாவடியில் இருந்த 12 பூத்துகளும் உடைத்து சூறையாடப்பட்டது. அங்கிருந்த பொருட்கள், கம்ப்யூட்டர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தன.
இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்கிருந்த ரூ18 லட்சம் மாயமானதாகவும் கூறப்பட்டது. பின்னர் அந்த பணம் மீட்கப்பட்டது.
தாக்குதல் நடந்த போது சுங்கச்சாவடி ஊழியர்கள் பணத்தை எடுத்து சென்றது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுங்கச்சாவடி முழுவதும் சேதம் அடைந்ததால் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக வாகனங்கள் சென்று வருகின்றன. இன்று 30-வது நாளாக வாகனங்கள் கட்டணமின்றி சென்றன.
சுங்கச் சாவடியை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துகளாக சரி செய்து கேபிள்களை பதித்து வருகிறார்கள். சுங்கச்சாவடி முழுமையாக பயன்பாட்டிற்கு வர இன்று 20 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் அருகே உள்ள பனங்காட்டுபாக்கம், எம்.ஜி.ஆர். நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நேற்று இரவு சாந்தி கொசு வர்த்தி சுருளை ஏற்றி வைத்துவிட்டு தூங்கினார். அப்போது அவரது சேலையில் கொசுவர்த்தி சுருளின் தீ பட்டது. இதில் புடவையில் தீ பற்றியது. உடல் கருகிய சாந்தி அலறி துடித்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளங்கோ மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் உடல் கருகினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இளங்கோ செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு நெல்லு மண்டி அருகே உள்ள பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன.
நேற்று இரவு இங்கு உள்ள கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்தனர்.
அப்போது 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது.
பூட்டுகள் உடைக்கப்பட்ட கடைகளில் ஒன்றில் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மற்ற கடைகளில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். ஒரே நாள் இரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் அப்பாத்துரை. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகள் ஊர்மிளா (23). சாட்வேர் என்ஜினீயர்.
நாவலூரில் இருக்கும் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ஊர்மிளாவுக்கு வேலை கிடைத்தது. சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி இருந்து அவர் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று மதியம் ஊர்மிளா அவரது கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு போன் வந்தது. அதில் வந்த தகவலை கேட்டு பதட்டம் அடைந்தார்.
இருக்கையில் இருந்து எழுந்த ஊர்மிளா கம்பெனியின் 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.
படுகாயம் அடைந்த ஊர்மிளா, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாழம்பூர் போலீசார் அங்கு சென்று பெண் என்ஜினீயர் ஊர்மிளா உடலை செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் ஊர்மிளாவுக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை பிடிக்கவில்லையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
கானாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன், சமையல் காண்டிராக்டர். நேற்று மாலை அவர் கூவத்தூர் அடுத்த கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் தள்ளிக்கொண்டு வந்த 2 வாலிபர்கள் தனசேகரனை நிறுத்தினர்.
அவர்கள் தனசேகரனிடம் ‘நாங்கள் வந்த பைக் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. வண்டியில் உள்ள பெட்ரோலை கொடுக்க வேண்டும் அல்லது பங்க் எங்கே உள்ளது என்று உடன் வந்து காட்ட வேண்டும்’ என்று மிரட்டும் வகையில் கூறினர்.
இதனால் தனசேகரனுக்கும் வாலிபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
உடனே 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத தனசேகரன் அந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தன சேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தினேஷ், சூர்யா என்பது தெரிந்தது.
தினேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எரிக்கப்பட்டது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும்.
இதுபற்றி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவர் தினேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சி வார்டுகள், 12 பேரூராட்சி வார்டுகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றி வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் வரைவு மறுவரையறை விவரங்கள் கடந்த 1-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கடந்த 8-ந்தேதி வரை மனுக்கள்பெறப்பட்டது. இக்கருத்துகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் வருகிற 15-ந் தேதி காலை 10 மணி அளவில் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழத்தில் நேற்று முன்தினம் மாலை எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்டனர்.
பட்டாக்கத்தி, துப்பாக்கியுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மாரிகார்த்திக், ஆதித்யன், மவுலானா அலி, ராகேஷ், விஷ்ணு, லலித்பிராத், ராஜீ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே மோதலின்போது மாணவர் ஒருவர் வைத்திருந்தது. கைத்துப்பாக்கி அல்ல அது ‘சிகரெட் லைட்டர்’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






