என் மலர்
கர்நாடகா தேர்தல்
- கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது நிகழ்வுகளை சந்தித்து வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கர்நாடகத்தில் முற்றுகையிட்டு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
இவ்வாறு வரும் அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன், அனல் பறக்கும் வார்த்தைகளால் சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்று நடந்துள்ளது. கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
கொரட்டகெரே தொகுதி யில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் போட்டியிடுகிறார். அவர் கொரட்டகெரே அருகே பைரேனஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் பிரசாரம் செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பரமேஸ்வருக்கு மாலை அணிவித்தும், பூக்களை தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஆதரவாளர்கள் பரமேஸ்வரை தோள்களில் தூக்கி வைத்து உற்சாகமாக நடனமாடியபடி இருந்தனர்.
அப்போது மர்மநபர்கள் பரமேஸ்வர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில் ஒரு கல் அவரது தலையை பதம் பார்த்தது. இதனால் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பரமேஸ்வர் தனது கையால் ரத்தம் வெளியேறிய பகுதியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார்.
பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை கீழே இறக்கி, அவரை அருகில் உள்ள அக்கிரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள சித்தார்த்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கொரட்டகெரே போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள், காங்கிரஸ் தொண்டர்களிடம் விசாரித்து தகவல்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காங்கிரஸ் வேட்பாளர் பரமேஸ்வர் மீது திட்டமிட்டே மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பைரேனஹள்ளி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது என்று தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஏற்கனவே, பரமேஸ்வர் கடந்த 19-ந்தேதி கொட்டகெரே தாலுகா அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகத்திற்குள் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொரட்டகெரே தாலுகா ரெட்டிஹள்ளி அருகே வெங்கடபுரா கிராமத்தை சேர்ந்த ரங்கதம்மய்யா என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 2-வது முறையாக நடந்த கல்வீச்சில் வேட்பாளர் பரமேஸ்வர் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
- தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வருகையை எதிர்பார்த்து பா.ஜ.க. வேட்பாளர்களும், தொண்டர்களும் உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி அமித்ஷா, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியின் வருகையை எதிர்பார்த்து பா.ஜ.க. வேட்பாளர்களும், தொண்டர்களும் உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்திற்காக பெங்களூருவுக்கு வர இருப்பதாகவும், அவர் பிரமாண்ட ரோடுஷோ (தெருமுனை பிரசாரம்) நடத்த உள்ளார்.
இன்று காலை பெங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள நைஸ் ரோடு சந்திப்பில் இருந்து சுங்கதகட்டே வரை திறந்த காரில் ஊர்வலமாக சென்று மக்களிடம் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
இன்று இரவு பெங்களூருவில் தங்கும் பிரதமர் மோடி, நாளை கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, மைசூரு மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார்.
பிரதமர் மோடியின் பிரசாரத்தால் கூடுதலாக 2 முதல் 5 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
- தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதையடுத்த பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குள் செல்லும் பஸ், கார், வேன் போன்ற அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வரு கிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதோடு வாகன எண், பெயர், முகவரி, என்ன காரணத்துக்காக வருகிறீர்கள் என்று கேட்டு குறித்து கொள்கிறார்கள். கர்நாடக மாநில தேர்தலையொட்டி விடிய, விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் பர்கூர்-கர்நாடக எல்லை யிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை.
- கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு.
பெங்களூரு :
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் எனது தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் ஆதரவை கேட்கிறேன். அதனால் என்னை மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு பிரதமர் மோடி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். நாட்டின் பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். காங்கிரஸ் கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை. முன்பு இருந்த அதிகார போதையில் இருப்பது போலவே இப்போதும் பேசுகிறார்கள். கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு. அனைவரையும் கன்னடர்கள் மதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்தாலும், மூத்த தலைவர்கள் என்பதால் அவரை நாங்கள் மதிக்கிறோம்.
ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இவ்வாறு தரக்குறைவாக பேசலாமா?. பா.ஜனதா வெற்றி பெறும் என்பதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியின் உள்துறை மந்திரி அமித்ஷா மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி என்ன நடைபெறுமோ அது நடக்கும். காங்கிரசாரின் புகாரில் உண்மை இல்லை. அந்த புகார் மனு நிராகரிக்கப்படும். காங்கிரஸ் கட்சி பண பலத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது. முன்பு எங்கள் கட்சி தொண்டர்கள் பலர் அடி-உதை வாங்கியுள்ளனர். அவ்வாறு தற்போது நடைபெறக்கூடாது என்பதால் நாங்கள் முன்எச்சரிக்கையாக கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.
எங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம். ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணியை ஆற்றும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10-ம் தேதி நடக்கிறது.
உப்பள்ளி
பா.ஜனதா மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் பா.ஜனதா சார்பில் தனக்கு டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை வீழ்த்த பா.ஜனதா தலைவர்கள் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். மேலும் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் துரோகி என்றும், எனது ரத்தத்தில் எழுதுகிறேன் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி அடைவார் என்றும் கூறியிருந்தார். இது பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.
இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டரான மஞ்சுநாத் என்.யந்துருவி, ஜெகதீஷ் ஷெட்டர் மீதான அபிமானத்தில் ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜெகதீஷ் ஷெட்டர் இந்த தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் வெற்றி பெறுவார் என ரத்தத்தில் எழுகிறேன். இந்த முறை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும். ஜெய் காங்கிரஸ் என குறிப்பிட்டுள்ளார்.
- இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
- 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மற்ற மாநில முதல்-மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து குமாரசாமி மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் 90 வயதான தேவகவுடா பிரசாரம் செய்ய உள்ளார்.
அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 11 நாட்கள் மாநிலத்தில் 42 இடங்களில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 90 வயதான தேவகவுடா வாரத்திற்கு ஒருமுறை மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதனால் உடல் நிலையை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒருமுறை அவர் ஓய்வெடுப்பது வகையிலும் அவரது பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேவகவுடா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
- கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அத்துடன் கட்சி தாவல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரை நட்சத்திரங்களும் தங்களுக்கு விருப்பமான கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்துள்ளனர். நடிகர் சுதீப் ஆளும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் கன்னட திரையுலகின் முதன்மை குடும்பமாக கருதப்படும் நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகளான அவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் எடியூரப்பாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதன்பிறகு அவர் கட்சியில் தீவிரமாக செயல்படவில்லை. கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவரது சகோதரர் மது பங்காரப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அவர் தற்போது சொரப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் கீதா சிவராஜ்குமார் ஜனதாதளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரசில் சேருகிறார். இதன் மூலம் கன்னட திரைத்துறையின் முதன்மை குடும்பத்தின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.
- பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
பெங்களூரு :
பிரதமர் மோடி நேற்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே காணொலி மூலம் பேசினார். இதில் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று சாடினார். இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் ஆகியோருக்கு அடுத்ததாக பிரதமர் மோடி தற்போது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். வருகிற 10-ந் தேதி 40 சதவீத கமிஷன் பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கர்நாடக மக்கள் உத்தரவாதம் அளிப்பார்கள். ராஜஸ்தான், இமாசல பிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களை போல் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த சில நாட்களில் காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவோம்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பா.ஜனதா ஆபரேஷன் தாமரை மூலம் கவிழ்ப்பதற்கு முன் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது நாங்கள் மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம். நிலையான ஆட்சியை நடத்தினோம்.
261 வாரங்களில் 261 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதனால் காங்கிரஸ் அளித்துள்ள உத்தரவாத திட்டங்கள் நிச்சயம் செயல்படுத்துவோம். ராஜஸ்தானில் நாங்கள் அளித்த வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்திரா காந்தி நகர வேலை உறுதி திட்டம், சுகாதார உரிமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சத்தீஷ்காரில் ரூ.9 ஆயிரத்து 270 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. ராஜீவ்காந்தி கிசான் நியாய் திட்டத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
- கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது.
ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பா.ஜ.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்துகள் யாரையாவது புண்படுத்தி இருந்தாலோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தாலோ அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
- முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.
மங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது என பாஜக தலைவர் தெரிவித்தார்.
- பாஜகவின் சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்று கார்கே கூறினார்.
கடாக்:
கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
கார்கே பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
'காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடியை 'விஷப் பாம்பு' என்று அழைக்கிறார். இப்படி பேசியது எப்படி முடிந்தது என்பது நமக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புதிய ஆழத்துக்கு சரிந்து கொண்டிருக்கிறது. இந்த விரக்தியானது, கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைவதை காட்டுகிறது' என அமித் மால்வியா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பாஜக பாம்பு போன்றது என்றும், அந்த கட்சியின் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் தெரிவித்தார். அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றும் அவர் கூறினார். நான் அவருக்கு (மோடி) எதிராக பேசவில்லை என்றும் கார்கே கூறினார்.
- காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரியங்கா காந்தி சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று பிரியங்கா காந்தி சிக்கமகளூரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று(வியாழக்கிழமை) அவர் சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அப்போது ராகுல்காந்தியும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வந்து பிரியங்கா காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தொண்டர்கள் உள்பட யாரும் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.






