என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர்.
- ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மதுரை:
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த முழு அமர்வு, இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதிக்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த உத்தரவின்பேரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக வெற்றிக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கட்சியின் சித்தாந்தம். அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
குறிப்பாக எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.
- ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.
சென்னை:
தூத்துக்குடியில் தயாராகி உள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற் சாலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.
உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.
- தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
- பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை புன்செய் பாசனத்துக்குட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, மசினகுடி, மாயாறு போன்ற பகுதிகளிலும், வட கேரள மாநிலத்தில் உள்ள முக்காலி, அகளி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் மேல் பவானி அருகே உற்பத்தியாகும் பவானி ஆற்று நீர் கேரளா வழியாக பாய்ந்து தமிழக- கேரள எல்லையில் உள்ள அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு பவானி ஆற்று நீர் வந்து சேருகிறது. தற்போது பில்லூர் அணையும் நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணையை வந்தடைகிறது.
இதேபோல நீலகிரி மாவட்டத்தின் பைகாரா, கிளன்மார்க்கன், கூடலூர், சிங்காரா, மசினகுடி வழியாக பாயும் மாயாறு ஆற்று நீர் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. பவானி, மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது.
எனவே பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.04 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தற்போது 28.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு சராசரியாக 4509 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 3600 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, நாளை 31ம் தேதி மாலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
- தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது.
- கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
சென்னை:
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது.
இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டு பிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ரையாடினார்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு புதிய தொழில் நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
இன்று அது வளர்ச்சி அடைந்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 'நான் முதல்வன்' திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னித், ஐடிஎன்டி மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஓய்வு) கமாண்டர் அமித்ரஸ்தோகி, ஜெட் வெர்க்கின் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜோஷ் போல்கர், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
- வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை:
சென்னை பள்ளிக்கரணையில், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பில், காமாட்சி மருத்துவமனை அருகே சில மாதங்களுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அந்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை - விநாயகபுரம் மெயின்ரோடு ஆகிய 2 சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை செய்தனர்.
மேலும் ரேடியல் சாலையில் 'யு' வளைவில் திரும்புவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர். இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல முடிகிறது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் சிக்னல் சந்திப்புகளில் வாகன நெரிசலை குறைத்திருந்தாலும், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான திசையில் வாகனம் ஓட்டி செல்வது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் வாகன நெரிசலை குறைத்துள்ளன. ஆனால் அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அவர்கள் யு வளைவின் வழியாக தவறான திசையில் வாகனங்களில் செல்கிறார்கள்.
வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
- சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம்:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு (ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பஸ்களும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1-ந்தேதி 55 பஸ்களும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பஸ்களும், 2-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
- சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மகள் ஹரினி, கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஹரினி சூட்டிங்பால் விளையாட்டு வீரர். கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடை பெற்ற ஆசிய சூட்டிங்பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங்பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் விளையாட்டு பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சர்வதேச போட்டிகளில் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சூட்டிங்பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் குழு விளையாட்டு ஆகும். இதற்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார்.
விசாரணை முடிவில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
- மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்.
மதுரை:
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40-வது இடத்தை பிடித்தது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகரின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. இது ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தி வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்களின் பட்டியல் கடந்த 2024-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மதுரை மாநகரில் தூய்மை பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் 1,152லிருந்து 749 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குப்பைகள் பெறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கட்டுமான பகுதிகளில் தூசியை குறைக்கும் பொருட்டு பச்சை நிற துணியை பயன்படுத்தாத கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கட்டுமான பகுதிகளில் பச்சை நிற துணியை பயன்படுத்துவதை மாநகராட்சி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல், மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகள் நிரம்பி வழியும்போது, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்ற ஏதுவாகிறது. இதே போல் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க நகரம் முழுவதும் 200 கியூ.ஆர். கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகம் போடப்படும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இந்த கோலங்கள் போடப்படும் என்றார்.
மாநகராட்சியின் இந்த முயற்சிகள் குறித்து நேதாஜி ரோட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு பயன் அளித்தாலும், முழுமையாக பயன் தரவில்லை என்பதே உண்மை. ரங்கோலி கோலங்கள் போடப்படும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது. எனினும் சிலர் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து குப்பைகள் போடப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும் என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இந்த முயற்சி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தட்டது. அதே போன்ற முறை இங்கு முயற்சிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி. எனினும் குப்பைகள் அகற்றப்படுவதை முறைப்படுத்தாமல் இது போன்ற முயற்சிகள் வீணாகவே முடியும். ஏனெனில் மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில்லை. ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் அனுப்பப்பட்டால் அவர்களில் 2 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றார்.
- தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம்.
- நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.
இதன்பின் பேசிய விஜய் கூறியதாவது:-
* 1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது.
* 1967, 1977-ல் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர்.
* மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்று கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம்.
* அண்ணா சொன்னதை கடை பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
* தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றனர்.
* நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றார்.
- விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.
- கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.
சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.
மதிய வேளையில் தனியான இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைவமைப்பு.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந் நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய்.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது.
- ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






