என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளை வேகப்படுத்தினார்.

    அதுமட்டுமின்றி சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொளத்தூர் வீனஸ் நகர் 200 அடி சாலை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெட்டேரியில் நிரம்பிய தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு அவருக்கு அதிகாரிகள் தண்ணீர் வரத்து மற்றும் கரைகளை பலப்படுத்தியது பற்றியும் விளக்கி கூறினார்கள்.

    இதன் பிறகு பாலாஜி நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் தணிகாசலம் நகர் கால்வாயை பார்வையிட்டார். அதன் பிறகு கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அங்கிருந்து ஜி.கே.எம்.காலனி ஜம்புலிங்கம் ரோட்டில் உள்ள கனரா வங்கி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

    மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட பிறகு கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே: சென்னையில் மழைநீர் முழுமையாக வடிந்து விட்டதா?

    ப: எங்களுக்கு தெரிந்த வரை ஆல் மோஸ்ட் எல்லாம் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் இருந்தால் கூட அதையும் உரிய கவனம் செலுத்தி வடிய வைக்க முயற்சி செய்வோம்.

    கே: மழையின்போது பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பணி எவ்வாறு இருந்தது?

    ப: ரொம்ப சிறப்பாக மிகவும் பெருமைப்படக் கூடிய அளவுக்கு மக்கள் பாராட்டும் அளவுக்கு பணிகள் இருந்தது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளை மட்டுமல்ல ஊழியர்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கு எல்லோருக்கும் நான் நன்றி தெரிவித்து உள்ளேன். வாழ்த்து கூறி உள்ளேன்.

    கே: சமூக வலைதளங்களில் நிறைய பாராட்டுகள் வருவது பற்றி உங்கள் கருத்து?

    ப: பாராட்டுகளும் வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க. அரசை பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சிலர் விமர்சனமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அந்தப் பணியைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

    கே: அரசின் முழு திறமையையை பயன்படுத்துகிற அளவுக்கு மழை இருந்ததா?

    ப: நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்த பிரச்சனையும் கிடையாது. ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்கிறார்களே தவிர எவ்வளவு வேலை நடந்துள்ளது, என்ன பணிகள் நடந்திருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். அவங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    ஏனென்றால் இதை அரசியலாக்கி அதை ஒரு வியாபார பொருளாக்க சிலர் நினைக்கிறார்கள். நான் அதை விரும்பவில்லை.

    கே: வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 2 மாதம் இருக்கிறதே? இந்த மழைக்கே...?

    ப: எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

    கே: மழை அளவு குறைவாக இருந்ததால்தான் பாதிப்பு குறைவாக இருந்ததாக சொல்கிறார்கள்.

    ப: அது வந்து மக்களுக்கு தெரியும். அவங்களுக்கு தெரிகிறேதா இல்லையோ மக்களுக்கு தெரியும் விடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    • அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது.
    • ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் என்னை சந்தித்ததாக கூறுவது பச்சைப்பொய்.

    * அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எல்லோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.

    * ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.

    * அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.

    * நீக்கப்பட்டவர்களை சேர்க்குமாறு மூத்த தலைவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை.

    * அதிமுக இரண்டாகி விட்டது அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம்.

    * பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள்.

    * ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம் என்று அவர் கூறினார்.

    • சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை.
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு முதன்மை வாக்குறுதியாக அளித்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு செம்பம்பர் மாதம் 10 நாட்களுக்கு பின் சம்பளம் வழங்கியது. கல்வி, சுகாதாரத்தை செயல்படுத்த நிதி ஒரு தடையில்லை. மொத்த உற்பத்தியில் கல்வி, சுகாதாரத்திற்கு 3 மடங்கு நிதி ஒதுக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது. 2030 ஆண்டு பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 4,15 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு 1.61 லட்சம் கோடியாகவும் இருக்கும். தற்போது 1.56 லட்சம் கோடியாகவும், சுகாதாரத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது கல்வித்துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடியாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.20,198 கோடியாகவும் உள்ளது. பள்ளிகல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சீரழிய போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். எனவே ஆசிரியர்களை நியமிக்கவில்லை. முதன்மை மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 50 ஆயிரம் கோடியாக வரும் ஆண்டில் உயர்த்தவேண்டும்.

    சென்னையின் பல இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. வெள்ளதடுப்பு பணிகளை முடிக்காததால் மழையினால் மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 195 டாஸ்மாக் கடைகள் உள்ளது. விழுப்புரத்தில் 109, கள்ளகுறிச்சியில் 86 கடைகள் உள்ளது. தற்போது கொந்தமூர், நல்லாவூர், வெள்ளிமலை ஆகிய இடங்களில் 3 மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது கண்டிக்கதக்கது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறும் அரசு புதிய கடைகளை திறக்கப்பட உள்ளதை ஏற்க முடியாது. இது அரசின் தோல்வியை காட்டுகிறது. வெள்ளிமலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக கூறுவது அரசின் தோல்வியை காட்டுகிறது. அப்படியும் இக்கடைகள் திறந்தால் நானே அக்கடைகளுக்கு பூட்டு போடுவேன்.

    முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்தி 152 அடியாக உயர்த்தலாம் என்று 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் இன்னமும் உயர்த்தப்படாமல் இருக்க கேரள அரசு ஒத்துழைக்காததுதான் காரணமாகும்.

    மத்திய அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் 3 விழுக்காடு அகவிலைப்படி வழங்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.
    • திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை பார்க்க முடிகிறது.

    * சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது.

    * 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர்.

    * 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது.

    * எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.

    * வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.

    * திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

    * திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    * மக்கள் புரிந்து கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

    * அதிமுக ஆட்சியில் அந்தந்த துறை அமைச்சர்கள் பணிகளை கவனித்து கொண்டார்கள்.

    * தற்போது அனைத்து துறை பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார் என்று கூறினார்.

    • பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது.
    • உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.

    மழை காரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று காலையில் இட்லி, பொங்கல் உணவும் பிற்பகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன. காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயன் அடைந்தனர்.

    அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.

    மழை காரணமாக வேலையும் வருமானமும் இல்லாமல் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவு பிறப்பித்து எங்களுக்கு உதவிபுரிந்த முதலமைச்சருக்கு மனதார எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கட்டணமில்லா உணவு சாப்பிட்ட மக்கள் கூறினர்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். குறிப்பாக முதலமைச்சர் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மழைநிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    பெய்த பெருமழையால் சென்னை மாநகரில் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. அந்தப் பகுதிகளில் எல்லாம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி மழைநீர் தேங்க விடாமல் செய்த மாநகராட்சி பணியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

    தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாத்திட 300 நிவாரண மையங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

    சென்னை மாநகரம் முழு வதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. திடீரென பெய்த பெருமழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
    • விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பாகுமதி என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12578) இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3,040 கிலோ மீட்டர் பயணிக்கும் இந்த ரெயில் 53½ மணி நேரத்தில் 35 ரெயில் நிலையங்களில் நின்று சென்று தர்பங்காவை அடைகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலான இது கடந்த 11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பெரம்பூர் வந்தடைந்த இந்த ரெயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வியாசர்பாடி ஜீவா, கொருக்குப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் கூடூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த ரெயிலில் முன்பதிவு ஏ.சி. பெட்டிகள் 10, சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் 6, முன்பதிவில்லா பெட்டி 3, 2 சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் 1,300 பயணிகளும், முன்பதிவு இல்லாத 3 பெட்டிகளில் 400 பேரும் என மொத்தம் சுமார் 1,700 பேர் பயணித்தனர்.

    இரவு 8.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை கடந்து மெயின் லைனில் சென்ற இந்த ரெயில், கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, லூப் லைனுக்கு மாறியது. இதனால், சந்தேகம் அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

    சரியாக, இரவு 8.26 மணியளவில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் காலிப்பெட்டிகள் மீது 'டமார்' என்ற பயங்கர சத்தத்துடன் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

    ரெயில் என்ஜின் மோதியதில், சரக்கு ரெயிலில் கடைசியாக இருந்த கார்டு பெட்டி தூக்கி வீசப்பட்டது. அடுத்ததாக இருந்த சரக்கு பெட்டியும் நிலைகுலைந்தது. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் ரெயிலில், என்ஜின் மற்றும் தொடர்ந்து இருந்த ஜெனரேட்டர் மற்றும் லக்கேஜ் பெட்டி, தொடர்ந்து இருந்த முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1 (எச்.1), இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2 (ஏ.2, ஏ.1), 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 6 (பி 6, பி 5, பி 4, பி 3, பி 2, பி 1), 3-ம் வகுப்பு எக்கனாமி ஏ.சி. பெட்டி 1 (எம்.1), சமையல் அறை பெட்டி (பேண்டரி) ஆகியவை ஒன்றுடன் ஒன்று பலத்த சத்தத்துடன் மோதி இருபுறமும் சரிந்து விழுந்தன.

    ரெயில் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்றது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் போல்டு, நட்டு ஆகியவை கழன்று கிடந்ததால் நாசவேலை காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு முறை சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ரெயில் விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், ரெயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரெயில்வே ஊழியர்களிடம் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    தற்போது கிடைத்த தகவலின் படி, விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றபட்டதாலேயே விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை போடும் கடைகள் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரெயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

    • வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
    • பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இது தவிர அமாவாசை தினங்களிலும், புயல் சின்னங்கள் ஏற்படும் போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

    வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம், தேங்காய்பட்டினம், பிள்ளைத்தோப்பு, பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின. குறிப்பாக அழிக்கால், பிள்ளைதோப்பு பகுதியில் எழும்பிய ராட்சத அலைகள் குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது. சுமார் 150-க்கு மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    வெள்ளம் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்பொழுது 235 பேர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை சூழ்ந்த தண்ணீர் நேற்று மாலை முதலே வடிய தொடங்கியது. ஒரு சில பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்துள்ளது.

    பிள்ளைதோப்பு, அழிக்கால் பகுதியில் ஒரு சில பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோட்டார் மூலமாக தண்ணீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


    இதுமட்டுமின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ரோடுகள் சீரமைப்பு மற்றும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்கள் அங்குள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடிந்தாலும் அழிக்காமல், பிள்ளைத்தோப்பு பகுதியில் வீடுகளுக்குள் மணல் அதிகளவு காணப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து வீடுகளுக்குள் கிடக்கும் மணல் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கியுள்ளது. பிள்ளை தோப்பு பகுதியில் 34 வீடுகளும் அழிக்கால் பகுதியில் 41 வீடுகளிலும் மணல் குவியல்கள் உள்ளன. அந்த மணல் குவியல்களை பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். பிள்ளைத்தோப்பு, அழிக்கால் பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அழிக்கால் பகுதியில் இன்றும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    லெமூர் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது .போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். சுற்றுலா பயணிகள் யாரையும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்க வில்லை. இதேபோல் கன்னியாகுமரி, குளச்சல், தேங்காய்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    • அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் இன்று அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கிருந்த பிரமாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது வருங்கால முதல்வரே, எங்கள் பொதுச் செயலாளரே வாழ்க என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.
    • திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும்.

    பழனி:

    பழனி அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்றாகும். இந்த வருடத்திற்கான கந்தசஷ்டி விழா நவ.2-ம் தேதி மலைக்கோவிலில் உச்சி காலத்தில் காப்புக் கட்டுதலுடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் 7ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில்நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 3.10 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரர் அசுரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் சன்னதி அடைக்கப்படும்.

    அன்று மாலை 6 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும். தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடைபெறும்.

    அதனை தொடர்ந்து மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நவ.8-ம் தேதி நடைபெறும். அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்னத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை, சண்முக திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரம் காரணமாக நவ.7-ம் தேதி தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக தாமதமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

    • பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
    • எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ×