என் மலர்tooltip icon

    இந்தியா

    • அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
    • டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    டிட்வா புயல் நெருங்குவதால் அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • தூத்துக்குடியில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி:

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அமராவதி வெங்கடபாலத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், 3 கோபுரங்கள் ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேய சாமி சிலை மற்றும் புஷ்கரணி ரூ.260 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஏழுமலையான் முன்னிலையில் மக்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோவில் விரிவாக்க பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் நான் சிறு வயதிலிருந்து ஏழுமலையானை வணங்கி வருகிறேன்.

    ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன். அங்கு சாதாரண மனிதனாக இருப்பதுதான் என்னுடைய உணர்வு. தவறு செய்தவர்கள் அடுத்த பிறவில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

    தவறு செய்தவர்களுக்கு இந்த பிறவிலேயே அவர்களை ஏழுமலையான் தண்டிப்பார். சாமியை தரிசிக்க செல்லும் அனைவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழுமலையானை யாரும் அவதூறு செய்ய விடமாட்டேன். கடந்த 2003-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இருந்து எனது உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும். மும்பையில் ரூ.100 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோவிலை கட்ட ரேமன்ட் நிறுவனம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்தது.

    கடந்த 25-ந்தேதி ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. 26-ந்தேதி கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.94 ஆயிரத்தை தாண்டியது.

    நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 183 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,160

    26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400

    25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760

    24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160

    23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-11-2025- ஒரு கிராம் ரூ.180

    26-11-2025- ஒரு கிராம் ரூ.176

    25-11-2025- ஒரு கிராம் ரூ.174

    24-11-2025- ஒரு கிராம் ரூ.171

    23-11-2025- ஒரு கிராம் ரூ.172

    • டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலவும் டிட்வா புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. தொலைவில் நகர்ந்த நிலையில் தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் சென்னையில் இருந்து தெற்கே 540 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி டிட்வா புயல் நாளை மறுதினம் காலை வரும்.

    டிட்வாக புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் புதுச்சேரிக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒரு அணிக்கு 30 பேர் என 8 குழுக்களாக டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

    • கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
    • ராமேஸ்வரத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயல் சென்னைக்கு 560 கி.மீ. தூரத்திலும் புதுச்சேரிக்கு 460 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. வரும் 30-ந்தேதி அதிகாலை வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியாக செல்ல இருந்த அனைத்து ரெயில்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.

    தொடர்மழை காரணமாக ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
    • உரிமை கோரல் காலம் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சென்னை:

    வருகிற 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வரும் 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

    * 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் 4-ந்தேதிக்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் 9-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். ஆனால் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

    * மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

    * வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோருதல் காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    * உரிமை கோரல் காலம் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க மனு கொடுக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

    * அறிவிப்புக் காலம் வருகிற 9-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அந்த வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விசாரணை நடத்தப்படும்.

    * வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரை பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
    • பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.

    பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

    இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தில் லண்டன் இடம்பிடித்துள்ளது.
    • கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    புதுடெல்லி:

    கனடாவை தலைமையிடமாக கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது.

    தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    • மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
    • சிலை திறக்கும் நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பனாஜி:

    கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பிற்பகலில் 77 அடி உயர ஸ்ரீராமர் சிலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், மடத்தின் 550-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

    குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் ஸ்ரீராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அசாமில் பலதார மணத்தை தடைசெய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    சண்டிகர்:

    வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா இனி ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, இஸ்லாம் பலதார மணத்தை ஊக்குவிக்க முடியாது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிமாக இருக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த மசோதா இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல. உண்மையான இஸ்லாமிய மக்கள் இந்தச் சட்டத்தை வரவேற்பார்கள். துருக்கி போன்ற நாடுகளும் பலதார மணத்தை தடை செய்துள்ளன. பாகிஸ்தானில் ஒரு நடுவர் மன்றம் உள்ளது என தெரிவித்தார்.

    இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    ×