என் மலர்
பொது மருத்துவம்
- ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும்.
- சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன.
பால், பழம் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்கிறது மருத்துவ உலகம். அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். செரிமானம் மந்தமாக நடக்கும், இந்த கலவை உருவாக்கும் ஒருவித நச்சுத்தன்மை மன நல செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.
பாலையும், வாழைப்பழத்தையும் தனித்தனியாக உட்கொள்வதே சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவிடும் என்கிறார்கள். பால், பழத்தை போலவே சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் சில உங்கள் கவனத்துக்கு...
உணவு-பழங்கள்
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருந்தாலும், பழங்களை உணவோடு சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார், மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராகுல் குரானா.
பழங்கள் விரைவாக செரிமானமாகிவிடும். ஆனால் தானியங்கள், இறைச்சிகள் மெதுவாக ஜீரணமாகக்கூடியவை. இரண்டும் இணையும்போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாடு ஏற்படும்.
தன் காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற அசவுகரியங்கள் உண்டாகும். இதனை தடுக்க பழங்களை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு உட்கொள்வது நல்லது.

தானியங்கள் - ஜூஸ்
தானியங்களுடன் ஜூஸ் பருகுவதும் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்காது. ஏனெனில் இவை ஒன்று சேரும்போது நீடித்த உடல் ஆற்றலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்காது.
இந்த கலவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கும், சோர்வுக்கும் வழிவகுக்கும். ஜூஸுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவதும், புரதம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்வதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

பர்கர் - பொரித்த பொருட்கள்
இந்த துரித உணவுகள் ருசியான கலவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிக நேரம் சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அதிக கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட பொருட்களுடன் இணைத்து சாப்பிடுவது செல்களை சேதப்படுத்தும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும்.
கார்போஹைட்ரேட்டுகள் - தக்காளி
தக்காளி அமிலத்தன்மை கொண்டது. அதனை அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளுடன் உட்கொள்ளும்போது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த கலவை அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இதனை தவிர்க்க தக்காளியை குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.

பழம் - யோகர்ட்
யோகர்ட்டில் இருக்கும் புரோபயாடிக் ஏராளமான நன்மைகளை கொண்டது. அதை பழங்களுடன் இணைப்பது ஒவ்வாமையையும், நெஞ்செரிச்சலையும் அதிகப்படுத்தக்கூடும். சைனஸ், சளி அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் பால் பொருட்களுடன் பழங்களை இணைந்து உட்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.
வெறுமனே யோகர்ட் உட்கொள்வது அல்லது பால் பொருட்களுக்கு மாற்று உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது இந்த சிக்கல்களை குறைக்க உதவும்.

தானியங்கள் - பால்
அரிசி, கோதுமை, கம்பு, ஓட்ஸ், பார்லி, தினை போன்ற தானியங்களுடன் பால் சேர்த்து உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடக்கூடும். உடல் சோர்வுக்கும் வழிவகுக்கும். தானியங்கள் மற்றும் பால் இரண்டிலும் வேகமாக ஜீரணிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
அவை உடலிலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இவற்றை குறைவாக உட்கொள்வது அல்லது மாற்று பொருட்களை தேர்ந்தெடுப்பது நலம் சேர்க்கும்.

பீட்சா - சோடா
இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து செரிமானத்துக்கு அசவுகரியத்தை உண்டாக்கிவிடும். இரண்டிலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். தண்ணீர் அல்லது ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவிடும்.
- கரிசலாங்கண்ணியை கொண்டு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது.
- வயல் வரப்புகளில் அதிகமாக வளரும்.
கரிசலாங்கண்ணி கீரை ஈரமான நிலத்தில் வளரும் இயல்புடையது. வயல் வரப்புகளில் அதிகமாக வளரும். இதில் இரு வகை உண்டு. ஒன்று மஞ்சள் நிறத்திலும், இன்னொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இந்த கீரையில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் இது பொற்றிலை என்றும் பொற்கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மூலிகை.

மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி
இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யும். சுரப்பிகளை செயல்பட தூண்டும். உடலை உறுதிப்படுத்தும். இரும்புச்சத்தும், ஏராளமான தாதுசத்துகளும் இந்த கீரையில் உள்ளன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.
மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும், பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி
கண், முகம் வெளுத்து, கை, கால், மற்றும் பாதங்கள் வீங்கி சிறுநீர் தடையுடன் சிலருக்கு கடுமையான ரத்தசோகை ஏற்படும். அதற்கு ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி, நல்லெண்ணெய் 100 மி.லி, அதிமதுரம் 10 கிராம் போன்ற வைகளை சேர்த்து காய்ச்சி, 5 மி.லி வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும்..
இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும். இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிற மடையும்.
ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.
இவ்வாறு செய்யும்போது உடலில் பித்தம் அதிகமாக இருந் தால் வாந்தியாக வெறியேறி விடும். இதனால் ஜீரண உறுப்புகள் தூய்மை அடைந்து கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும்.
சுவாசப்பை கழிவுகள் மற்றும் சிறுநீர கத்தில் உள்ள யூரியா போன்ற கழிவுகளையும் கரிசலாங்கண்ணி நீக்கும். ஒற்றை தலைவலியால் துன்பப்படுகிறவர்கள் இந்த கீரையை மென்று உள்நாக்கில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் பித்தம் நீங்கி தலைவலி அகலும்.
மேற்கண்டவாறு தினமும் கீரையை மென்று பல்துலக்குவது தந்த சுத்தி என்றழைக்கப்படுகிறது. பச்சையாக கீரை கிடைக்காத வர்கள் ஒருதேக்கரண்டி கீரை பொடியை கொண்டும் தந்த சுத்தி செய்யலாம்.
கரிசலாங்கண்ணியை கொண்டு பல்வேறு மருந்துகள் தயார் செய்யப்படுகிறது. கூந்தல் தைலங்களிலும் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்தால் என்றும் இளமையுடன் திகழலாம்.
- பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும்.
- மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும்.
பொதுவாக தலைவலி சர்க்கரை நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும் அதை உதாசீனப்படுத்த கூடாது. பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும். தலைவலியே முதன்மை நோயாக வருவது பிரைமரி தலைவலி (மைக்ரேன், கிளஸ்டர் தலைவலி) ஆகும்.

வேறொரு நோயின் வெளிப்பாடாக ஏற்படுவதை செகண்டரி தலைவலி என்று கூறுகிறோம். செகண்டரி தலைவலி ஏற்பட முக்கிய காரணங்களாக கீழ்க்கண்டவை கருதப்படுகின்றன.
நீரிழிவு நோய், ரத்த நாளங்கள் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்சினை, நோய் தொற்று, மன அழுத்தம், போதை பழக்கம், கண் ஒளி விலகல் பிழை, செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ் (கழுத்து எலும்பு தேய்மானம்).
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் எபிநெப்ரின் மற்றும் நார்எபிநெப்ரின் போன்ற ஹார்மோன் அளவுகளின் மாற்றங்கள், தலைவலியை உண்டாக்குகிறது.
ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீர் அதிகம் வெளியேறி, நீரிழப்பு ஏற்பட்டுவதாலும், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் தலையின் பின்பகுதியில் வலியை ஏற்படுத்தும்.

ரத்த சர்க்கரை அளவு குறையும்போது மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும். இது தலையின் வலது அல்லது இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் சில பொதுவான காரணங்களாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தலைவலி வரலாம்.
சிலருக்கு தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கத்தால் தூங்கி எழுந்தவுடன் தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மது, குளிர்பானங்கள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி தலைவலியை தூண்டலாம்.

இதற்கு தீர்வாக கீழ்க்கண்ட வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
1) சரியான நேரத்தில் தூங்குதல்
2) சரியான நேரத்தில் உணவு அருந்துதல்
3) புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்
4) அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தல்
5) ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்
6) காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுதல்
7) தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்தல்
8) நீரிழப்பை தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை உடனே கலந்தாலோசித்து தகுந்த பரிசோதனைகளை செய்து என்ன காரணத்தினால் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
- 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர்.
- போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரக நோய் அறிகுறிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.

காரணங்கள்
கட்டுப்பாடில்லாத நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் நாட்பட சாப்பிடுவது, தொடர் சிறுநீரக தொற்றுக்கள், சிறுநீரக நீர்க்கட்டி நோய், தொடர் சிறுநீரக கற்கள் போன்றவை.
அறிகுறிகள்
1) சிறுநீரக நோயின் முதல் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக ஆழ்ந்த சோர்வு, பலகீனம், புத்திக் கூர்மை குறைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் அவற்றின் அன்றாட வேலை செய்யும் திறனை நிறுத்தும் போது, உடலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் உருவாகும். இந்த அசுத்தங்கள் எளிதில் உடலை சோர்வடையச் செய்யும்.
2) தூங்குவதில் சிரமம் ஏற்படும். நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழும் நோயாளிகள் பல்வேறு தூக்கக் கோளாறுகளை அனுபவிக்கின்றனர்.
3) சிறுநீரகத்தின் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) சேதமடைவதால், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
4) சிறுநீருடன் ரத்தம் கலந்து காணப்படும்.
5) வீங்கிய பாதங்கள் மற்றும் கணுக்கால்.
6) பசியின்மை, குமட்டல், வாந்தி உணர்வுகள்,
7) தோல் வறட்சி மற்றும் அரிப்பு,
8) சிறுநீரில் நுரை, குமிழிகள் காணப்படுதல்,
9) தசை சோர்வு, தசைப்பிடிப்பு,
10) கண்களின் கீழ் வீக்கம்.
11) முதுகுவலி.

நோய் கண்டறிய உதவும் பரிசோதனைகள்
ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் பை கார்பனேட், சோடியம், குளோரைடு, இ.ஜி.எப்.ஆர் மற்றும் சிஸ்டேட்டின் சி, சிறுநீரில் மைக்ரோஆல்புமின் அளவுகளை பரிசோதித்து நோயின் தன்மையை அறியலாம்.
மருத்துவ ஆலோசனை மற்றும் சித்த மருத்துவம்
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். உணவில் உப்பு குறைந்த அளவில் எடுக்க வேண்டும்.
உப்பில் ஊறவைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு எடுப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைபடி அளவுடன் சாப்பிட வேண்டும், அல்லது தவிர்க்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் மூக்கிரட்டை, பூனைமீசையிலை, நெருஞ்சில் இவைகளை பொடித்து வைத்ததில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வர வேண்டும். இதனால் யூரியா, கிரியாட்டினின் அளவு குறையும்.
மேலும், வறுத்த சீரகம் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். இது சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும்.
- அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.
ரத்த தானம், நோய்வாய்ப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், ரத்த தானம் செய்தவரின் உடலுக்கும் பலவிதங்களில் நன்மையைத் தருகிறது.
'ஒருவர் தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்தால், அவருக்கு ரத்தக்கொதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 'மாரடைப்பு' வரும் வாய்ப்பையும் குறைக்கும்' என்று இதய நோய் சிகிச்சை நிபுணர்களின் ஆய்வு கூறுகிறது.

ஒரு வருடத்தில் நான்கைந்து தடவை ரத்த தானம் செய்த நூற்றுக்கணக்கான பேரின் ரத்த அழுத்த அளவை பரிசோதித்து பார்த்தபோது சுமார் 40 சதவீதம் பேருக்கு சற்று அதிகமாகவும், மீதி 60 சதவீதம் பேருக்கு சரியாகவும், சற்று குறைவாகவும் இருந்தது. ஆக மொத்தத்தில் ரத்த தானத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லதைத் தான் செய்திருக்கிறது.
உங்களுடைய ரத்தத்திலுள்ள 'ஹீமோகுளோபின்' என்று அழைக்கக்கூடிய இரும்புச்சத்து பொருள் மிக அதிகமாக இருந்தால், நீங்கள் ரத்த தானம் செய்தால் உங்களுடைய ரத்தத்தின் அடர்த்தி குறைந்து ரத்தம் சீராகவும் சுலபமாகவும் உடலெங்கும் ஓடி இதயத்தை சீக்கிரம் சென்றடையும்.

ரத்த அடைப்புக் கட்டி, மாரடைப்பு, ரத்த ஓட்ட குறைபாட்டினால் கால், கைகள் மரத்துப் போதல் போன்றவை ஏற்படாமலிருக்க இது உதவி செய்யும்.
தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு, புது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகும். இதய நோய்களினால் வரும் பெரும் பிரச்சினைகளும், பேராபத்துகளும் குறையும்.
முதலில், உயிருக்குப் போராடும் ஒருவருக்கு ரத்த தானம் செய்கிறோம், அவருடைய உயிர் பிழைக்க உதவி செய்கிறோம் என்பதே உங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும், பேரானந்தத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். இதுவே நீங்கள் உற்சாகமாகவும் எவ்வித மன இறுக்கமும் இல்லாமல் நிம்மதியுடன் வாழ வழிவகுக்கும்.

அதிக ரத்த அழுத்தம் இல்லாமல் இருக்க தொடர்ந்து ரத்த தானம் செய்தால் மட்டும் போதாது. மற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
ஊற்றில் நீரை எடுக்க எடுக்க புதுநீர் ஊறி வந்துகொண்டே இருப்பதுபோல ரத்த தானம் செய்யச்செய்ய ரத்தத்தில் புதிய செல்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும். தகுதியுள்ள அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும்.
- அவகேடோ பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன.
- கீரை, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன.
இளமை தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். 40 வயதை கடந்த பின்னும் வயதான தோற்றத்திற்குரிய அறிகுறிகள் எட்டிப்பார்க்காமல் இளமை பொலிவோடு ஜொலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப அழகு சாதன பொருட்களை உபயோகிக்கிறார்கள்.
இளமை தோற்றத்திற்கான அடித்தளம் உடலுக்கு எந்த அளவுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது என்பதை பொறுத்து அமைகிறது. ஊட்டச்சத்து நிறைந்த அத்தகைய உணவுகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறிகளை தடுத்துவிடலாம். சில ஆண்டுகள் கூடுதலாக இளமை தோற்றத்தை பராமரிக்கலாம். அப்படிப்பட்ட உணவுகள் எவை தெரியுமா?
அவகேடோ:
அவகேடோ பழத்தில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கும், புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறந்தவை. கூடுதலாக கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கும் பண்புகளையும், தோல் நெகிழ்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையையும் அவகேடோ கொண்டிருக்கிறது.
புளூபெர்ரி:
ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்ட புளூபெர்ரி வயதான தோற்றத்தை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்தது. இதில் இருக்கும் வைட்டமின்கள் சி மற்றும் கே, நார்ச்சத்து, மாங்கனீசு போன்றவை செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்த உதவும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கீரைகள்-பழங்கள்:
கீரை, முட்டைக்கோஸ் ஆகியவற்றில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த தோல் செல்களை சரி செய்யவும், உடல் வீக்கத்தை குறைக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. இதனால் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தாமதப்படுத்தவும் செய்கின்றன.
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள், புரோக்கோலி, இஞ்சி, லவங்கப்பட்டை உள்ளிட்டவையும் விரைவில் வயதாகும் அறிகுறிகளை விரட்ட உதவிடுகின்றன.
கிரீன் டீ:
பாலிபினால்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த கிரீன் டீ சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கிரீன் டீயை தவறாமல் பருகுவது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்கள் மற்றும் புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கவும் உதவிடும்.
பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பிற பெர்ரி வகை பழங்களிலும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளன.
இந்த பழங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
பீட்டா-கரோட்டின் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்ளும்போது அது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. செல்களை மாற்றுவதற்கும், பழுதுபார்ப்பதற்கும் இது அவசியமானது. இளமைப் பொலிவைப் பராமரிக்கவும், வறண்ட, மந்தமான சரும நிலையை மாற்றவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு துணைபுரியும்.
நட்ஸ்கள்:
பாதாம், வால்நட்ஸ், ஆளி மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைவாக உள்ளன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இளமை சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தக்காளி:
தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சுருக்கங்களின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யும். உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்வது இளமை பொலிவை பராமரிக்க உதவும். புற ஊதா கதிர்வீச்சினால் முன்கூட்டியே வயதாகும் நிலை ஏற்படுவதையும் தடுக்கும் தன்மையும் கொண்டது.
யோகர்ட்:
புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் கொண்ட யோகர்ட் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தோல் ஆரோக்கியத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்த புரோபயாடிக்குகள் இளமை சருமத்தை தக்கவைக்கவும் ஊக்குவிக்கும்.
கொழுப்பு நிறைந்த மீன்:
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தோல் நெகிழ்ச்சி தன்மையையும், நீரேற்றத்தையும் பராமரிக்க அவசியமானவை. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகின்றன.
- வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகள்.
- வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும்.
நாம் வாழுகிற வாழ்க்கை இயற்கையின் கொடை. இந்த வாழ்க்கையை நேசிப்பவர்கள் மிக குறைவு. கோபமும், வெறுப்பும், மன அழுத்தமும் அதிகமாகிக் கொண்டு இருப்பதற்கு வாழ்க்கையை நேசிக்காததே அடிப்படை காரணமாகும். வாழ்க்கையை எப்படி நேசிப்பது என்பதற்கான சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்!

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வாழ வேண்டும். ஒவ்வொன்றையும் நேசிக்க வேண்டும். காலையில் எழுந்து வெளியே வந்ததும் சூரிய ஒளி உடலில் படும்போது ஏற்படுகிற வெப்பத்தை உணர வேண்டும். மெல்லியக்காற்று நம்மீது படும் போது ஏற்படுகிற அந்த இதமான இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்தது தான். வெற்றியும் தோல்வியும் நிறைந்ததுதான். அதை நடுநிலையோடு எதிர்கொள்கிற போது சுமைகள் மாறி, சுகமாக தெரியும். அதற்கு நாம் நம்மை எப்போதும் இயங்கி கொண்டு இருப்பவர்களாக மாற்ற வேண்டும். இயங்குதல் என்றால் வழக்கமாய் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலைகள் செய்வது மட்டுமல்ல. அந்த வட்டத்தை கடந்து கிடைக்கும் நேரத்தில் நமக்கு பிடித்த ஒரு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
உதாரணமாக இலக்கியம் மீது ஆர்வம் என்றால் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இலக்கிய கூட்டங்களில் பங்கு பெறலாம். திரைப்பட ஆர்வலர் என்றால் திரைப்படங்களை பார்க்கலாம். திரைப்படங்கள்குறித்து கலந்துரையாடுகிற நிகழ்வுகளில் பங்கு பெறலாம்.

எது உங்களுக்கு பிடிக்கிறதோ எந்த இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என நினைக்கிறீர்களோ அந்த இடத்தோடு, அந்த நபர்களோடு உங்கள் ஓய்வு நேரத்தை செலவிடுங்கள். அது உங்களுக்குள் உள்ளார்ந்த மாற்றத்தை கொடுக்கும்.
ஏதோ ஒன்றை திரும்ப, திரும்ப யோசித்து உங்களையே குழப்பிக் கொள்ளாமல் உங்கள் மனநிலையை சீராக வைக்க உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைக்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அது உங்களை மாற்றும்.
ஏதாவது ஒரு செயலை அன்றாடம் செய்வேன் என முடிவு எடுங்கள். அது காலையில் சிறிது நேரம் நடப்பதாக இருக்கலாம். செடிக்கு தண்ணீர் ஊற்றுவதாக இருக்கலாம். எதுவானாலும் சரி, அதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

குடும்பத்திற்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஓடிக்கொண்டே இருக்கும் பலர் தங்களுக்கென ஓடுவதில்லை. ஒரு நாளின் பத்து நிமிடத்தையாவது உங்களுக்கென செலவிடுங்கள். அமைதியாக அமருங்கள்.
எல்லாம் கடந்து போகும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துங்கள். என்ன நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். நாம் செய்கிற ஒவ்வொரு வேலைகளையும் ரசித்து, கவனத்தோடு, நிகழ்கால உணர்வோடு இணைந்து செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்களுக்கு அர்த்தமானதாகவும், அழகானதாகவும் தெரியும்.
- வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம்.
- பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு.
அக்னி மூலையில் சமையலறை அமைப்பது மட்டுமல்லாமல் அதை மாடுலர் கிச்சன் என்று நவீனமாக அமைப்பதை இல்லத்தரசிகள் விரும்புகிறார்கள். நீரும், நெருப்பும், உணவுப்பொருளும் புழங்கும் இடம் என்பதால் அங்கு சுத்தத்திலும், சுகாதாரத்திலும் கவனம் கொள்வது அவசியம்.
காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் அனைத்தும் ரசாயனங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதோடு, சில இடங்களில் செயற்கை முறையில் பதப்படுத்தபட்ட பின்பு விற்பனைக்கு வருவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
வீடாக இருந்தாலும் சமைக்கும்போது முன்புற பாதுகாப்பு ஆடை (ஏப்ரன்) கட்டிக்கொள்ளலாம். தலைமுடியை கவர் செய்து கட்டிக்கொள்வது சிறந்தது. சமைக்கும்போது கை நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக இருப்பதுடன் அதிக ஆபரணங்கள் இல்லாதிருப்பதும் நல்லது. சமையலறையில் இ-கோலை, சால்மொனெல்லா, காம்பைலோபாக்டர் போன்று பல வித கிருமிகள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கைகள், துணிகள், உணவுப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று புழங்குவதாலும், சமையலறைக்குள் வரும் வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் பரவுகின்றன.
அதனால் வாரம் ஒருமுறை சமையலறை முழுமையாக சுத்தம் செய்யப்படவேண்டும். குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் சிங்க் ஆகியவற்றில் கிருமிகள் இருக்கலாம். சமையலறை டஸ்ட் பின் வெளிப்புறமாக வைக்கப்படுவது முக்கியம். பாத்திரங்கள் அல்லது உணவுப்பொருட்களில் பூஞ்சை படர்ந்திருந்தால் அவற்றை உபயோகப்படுத்துவதை உடனடியாக தவிர்க்க வேண்டும்.
கைகளில் வெட்டுக்காயங்கள் இருந்தால், சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதனால் பாக்டீரியாக்கள் உணவில் பரவுவதை தடுக்கலாம். அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தம் செய்வதோடு துணியால் துடைக்கலாம். அடுப்பில் இருக்கும் பாத்திரத்தின் மீது எப்போதுமே கவனம் இருப்பது முக்கியம். துடைக்கும் துணிகள், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை எரியும் அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம்.

பிரிட்ஜில் அதிக காய்கறிகள், இறைச்சி வகைகளை நாட்கணக்கில் சேர்த்து வைப்பது தவறு. காய்கறிகளை சுத்தப்படுத்தும் சமையலறை சிங்க்-ல் இறைச்சியை கழுவாமல் கிச்சனுக்கு வெளியே கழுவ வேண்டும். இறைச்சி, காய்கறிகளை நறுக்குவதற்காக தனித்தனியாக கத்திகள் மற்றும் கட்டிங் போர்டு பயன்படுத்துவது சுகாதாரம்.
மார்க்கெட்டிலிருந்து வாங்கப்படும் பழ வகைகள் அல்லது சில ஆர்கானிக் பொருட்கள் மீது புரூட் பிளை என்ற பழ ஈக்கள் உட்காரும் காரணத்தால் அசுத்தமாக ஏற்படும். அதனால் பழங்களை நன்றாக கழுவிய பின்பு உண்ணலாம் அல்லது பிரிட்ஜில் வைக்கலாம். சமைக்கப்பட்ட பொருட்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அறை வெப்பத்தில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைக்கும்போது சமைக்காத உணவையும், சமைத்த உணவையும் ஒன்றாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும்.
- சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.
கல்லூரிக்கு பிறகான வாழ்வில் பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.
ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சனைகளை எளிதாகப் புரிந்துகொள்வார். பிரச்சனையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சனை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம்.
`ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்' நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.
எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு ஆறுதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.
அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!
நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
- உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன.
- இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது.
கால்களின் ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போல இயங்குகின்றன. கால்களின் ஆடுதசைகளை உடற்பயிற்சி மூலம் பலப்படுத்தும் போது இதயம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தோராயமாக 28 சதவீதம் இதய நோய்களால் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், புகைத்தல், நீரிழிவு நோய், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இதய நோய்களுக்கு காரணமாக உள்ளன.
உடலின் உயிரணுக்களுக்கு தேவையான பிராண வாயுவை வழங்க இதயத்தின் உந்து சக்தி நுரையீரலில் இருந்து பிராணவாயு கலக்கப்பட்ட ரத்தத்தை தமனிகள் மற்றும் சிரைகள் வழியாக உந்தித் தள்ள செய்கிறது.

இவ்வாறு செல்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரத்தமானது, சிரை அமைப்பு மூலம் இதயத்திற்கு திரும்புகிறது. பின்னர் நுரையீரலுக்கு மீண்டும் சென்று பிராணவாயு கலக்கப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. 2,250 கேலன் ரத்தத்தை உந்தி தள்ளுகிறது.
இதயத்தின் இவ்வளவு கடினமான பணிச்சுமையை குறைக்க கால்களின் பின்புறம் உள்ள ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போலவே இயங்கி உடலின் கீழ்ப்பகுதிக்கு வரும் பிராண வாயு கலக்கப்பட்ட ரத்தத்தை மீண்டும் இதயம் மற்றும் நுரையீரலுக்கு தள்ள ஒன்றாக வேலை செய்கின்றன.

இதயம் நன்றாக இயங்க கால்களின் ஆடுதசைகளை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். இதற்கு உடற்பயிற்சி அவசியம் அல்லது உட்கார்ந்த நிலையில் கூட கால் பாதங்களை முன்பின் மடித்து நீட்டுவதால் கன்று தசைகள் நன்கு இயங்கி ரத்தத்தை சரியான விசையுடன் இதயத்தை நோக்கி உந்தி தள்ள வழிசெய்யும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
- மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது.
- கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் உழைப்பு மற்றும் உடற்பயிர்சி இல்லா வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுவது போன்றவர்களுக்கு மூட்டுத்தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூட்டு தேய்மானம் என்பது இன்று பொதுவாக பலரையும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். நடக்க, அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம், கால் வலி, மூட்டு இறுக்கமாகுதல், காலை இயல்பாக நீட்டி மடக்க முடியாதது, கால் வீக்கம், கால் வளைந்து இருப்பது பொதுவான அறிகுறிகளாகும்.
உடல் பருமனாக இருப்பவர்கள், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்தே இருப்பவர்கள், அதிகமான உடலுழைப்பை செலுத்தி வேலைகள் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், தேய்மானத்தின் பாதிப்புக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிசியோதெரபி பயிற்சி, பணிகளை மாற்றி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிமுறைகள் வாயிலாக பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கலாம்.
உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். ஏனென்றால் துரித உணவுகளை சாப்பிடும் போது உடல் பருமன் ஏற்பட்டு மூட்டுவலி ஏற்படும். இதனால் டயட் ஃபாளோ செய்ய வேண்டும்.
மேலும் மூட்டு தேய்மானத்திற்கான ப்ரப் சிகிச்சை பற்றி விரிவான விளக்கம் அளிக்கிறார் டாக்டர் லட்சுமிநாதன்.
- மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் அருமையான வழிமுறையாகும்.
- மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு தீர்வு காண்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், அந்த செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீரிழிவு நோயானது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சில புற்றுநோய்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு அருமையான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சையானது புற்றுநோய் பாதித்த செல்களை பழுதடையச் செய்து புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
மேலும் புதிய நல்ல செல்களையும் உருவாக்குகிறது. இதன் மூலம் சில புற்று நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம். சில நேரங்களில் மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு மார்பக வளர்ச்சி தேவைப்படலாம். எனவே மார்பக சிகிச்சைக்கும் ஸ்டெம் செல் என்பது மிக அருமையான வழிமுறையாகும்.
இதன் மூலம் புற்றுநோய் பாதித்த பெண்கள் தங்களுடைய மார்பகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் மார்பகத்தை அழகாக மாற்றுவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல வழிமுறையாகும்.
புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு எந்த திசுவில் புற்றுநோய் இருந்தாலும் அதையும் ஸ்டெம் செல் சிகிச்சை சரி செய்கிறது. இது தொடர்பாக பல ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் குறைந்து விடும் அல்லது இறந்து விடும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.
ஒருவருக்கு இதய செல்கள் குறையும் போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இதய செல்களை உருவாக்க முடியும். இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சீராக்கி மாரடைப்பை தடுக்க முடியும்.
மேலும் மூட்டு பகுதிகளில் உள்ள தேய்மானங்களுக்கும் ஸ்டெம் செல் என்பது நன்மை பயக்கும் சிகிச்சையாகும். மூட்டு தேய்மானம், முதுகெலும்புகளில் ஏற்படக்கூடிய தேய்மானங்கள் இவை அனைத்தையுமே சீராக்கு வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியமான வழிமுறையாக உள்ளது.

ஆட்டோ இம்யூன், பக்கவாதம், உடல் பருமனுக்கு தீர்வு:
நமது உடலில், நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பானது சிலநேரங்களில் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிக்கிறது. இந்த பாதிப்புக்கு ஆட்டோ இம்யூன் என்று பெயர். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மிகச் சிறந்த பலனை தருகிறது.
இந்த பாதிப்பானது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மரபணு பிரச்சினைகள் உருவாகி அதன் மூலமாக ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்படுகிறது.
ஸ்டெம் செல் சிகிச்சையானது ஆட்டோ இம்யூன் பாதிப்பு கொண்டவர்களின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை சீரமைப்பதன் மூலம் அவர்களின் நோயையும் குணப்படுத்துகிறது.
ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரலாம். அதுபோன்ற பக்கவாதத்துக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தரும்.
ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படுகிற சேதம் மற்றும் மீளுருவாக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் மிகவும் அற்புதமான வழிமுறை என ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.
பெண்களை பொருத்தவரைக்கும் வயதாகும் போது அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.
பெண்களின் உடல் உறுப்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சீராக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு எளிய வழிமுறை ஆகும்.
அந்த வகையில் ஒவ்வொரு திசுவின் உருவாக்கம், பழுதுபார்த்தல், மீளுருவாக்கம் ஆகியவைகளுக்கான அடிப்படையே அந்த திசுக்களில் உள்ள ஸ்டெம் செல் தான். இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது.
ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி நிறைய ஆய்வுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் சக்சஸ் ரேட் இன்னும் கொஞ்ச காலத்தில் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.






