search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரேண்டர்ஃப் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    • கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

    ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து, அணியை தயார் படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேண்டர்ஃப் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வுட்-ஐ மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துள்ளது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான வுட் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 லட்சம் ரூபாய் விலைில் வுட்டை அணியில் இணைத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்து சீசனில் சிறப்பாக செயல்பட்டார். ஆர்ச்சர், பும்ரா இல்லாத நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    வருகிற 22-ந்தேதி ஐபிஎல் 17-வது சீசன் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மார்ச் 24-ந்தேதி மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

    • ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை ஹரங்கா தவறவிடுவார் என தெரிகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • அவர் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
    • நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 40.2 ஓவரில் 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தபிசுர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    • அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கான் அடித்த சிக்சர் வைரலாகி வருகிறது.
    • அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20-யில் ஆப்கானிஸ்தான் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 59 ரன்களையும், ரஷித் கான் 25 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஆண்ட்ரு பால்பிர்னி 45 ரன்களையும், கரேத் டெலானி 39 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது ரஷித் கான் அடித்த சிக்சர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆட்டத்தின் 18-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் நோ லுக்கிங் ஷாட் மூலம் பந்தை சிக்சருக்கு விளாசினார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

    • ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
    • அந்த வகையில் ரோகித் மற்றும் கோலி அவரவர் அணியுடன் இணைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதே போல இந்திய அணியின் கேப்டன் ரோகித், மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இவருக்கு இசையுடன் ஒரு வீடியோவை மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    • டி20 தொடரை கைப்பற்றிய போது இலங்கை அணி டைம் அவுட் Celebration செய்தனர்.
    • தற்போது ஒருநாள் தொடரை வங்காளதேசம் கைப்பற்றி ஹெல்மெட் Celebration கொடுத்துள்ளனர்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அனாமுல் ஹக் -தன்சித் ஹசன் ஜோடி 50 ரன்களை எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. அனாமுல் 12 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 1, டவ்ஹித் ஹ்ரிடோய் 22, மஹ்முதுல்லாஹ் 1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம்- ரிஷாத் ஹொசைன் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இதனால் வங்காளதேசம் 40.2 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய பிறகு கோப்பையுடன் டைம் அவுட் Celebration கொடுத்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வங்காளதேசம் அணி ஹெல்மெட் Celebration கொடுத்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ரோகித் சர்மா குறித்த கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தார்.
    • ஆனால் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்ற கேள்விக்கு பாண்ட்யா - பவுச்சர் பதிலளிக்காமல் இருந்தனர்.

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் இன்று ஹர்திக் மற்றும் பவுச்சர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்று பத்திரைக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பவுச்சர் மெளனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது ரோகித் சர்மா குறித்து கேள்வி கேட்க்கப்பட்ட போது பதிலளித்த பாண்ட்யா, கேப்டன்சி பற்றிய குறிப்புகள் ஆவணங்களில் இருந்ததாக தகவல் வெளியானது என்ற கேள்விக்கும் (இந்த கேள்விக்கு மும்பை அணி தரப்பில் இருந்து இந்த கேள்வி வேண்டாம். அதற்கு பாண்ட்யா பதிலளிக்க முடியாது என ஒருவர் தெரிவித்தார்) மும்பை கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டது மற்றும் ஹர்திக் நியமிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கும் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர்.

    • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
    • டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

    இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

    • ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது.
    • மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    பாண்ட்யாவிடம் ரோகித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாண்ட்யா பேசியது பின்வறுமாறு:-

    முதலில் ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    நான் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவரது தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறேன். களத்தில் அவரது கைகள் என் தோள் மீது இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
    • வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

    இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது. 

    சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.

    அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:

    தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.

    அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.




     

    சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.

    அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது

    அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    • வருகிற 22-ந் தேதி சென்னையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த போட்டியின் டிக்கெட்டுகள் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. அடுத்த சிறிது நேரத்தில் டிக்கெட் அனைத்து விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கே நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள சிஎஸ்கே ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கு நம்ப முடியாத அளவுக்கு டிக்கெட்டுக்கு டிமெண்ட் இருக்கிறது. தொடக்க விழாவையும், ஆட்டத்தையும் காண என்னுடைய குழந்தைகள் விரும்புகின்றனர். உதவி செய்யுங்கள் சிஎஸ்கே நிர்வாகம்.

    என அஸ்வின் கூறியிருந்தார்.

    • இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம்.
    • வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று மந்தனா கூறி உள்ளார்.

    புதுடெல்லி:

    2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. இதனால் பெங்களூரு அணிக்கு 114 ரன் இலக்காக இருந்தது.

    ஷபாலி வர்மா அதிகபட்சமாக 27 பந்தில் 44 ரன் எடுத்தார். ஸ்ரேயங்கா பட் டேல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    எலிஸ்பெரி 35 ரன்னும் (அவுட் இல்லை), கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும், சோபி டேவின் 32 ரன்னும் எடுத்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் கிடைத்தன.

    பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

    ஐ.பி.எஸ். போட்டியில் விராட் கோலியை கொண்ட ஆர்.சி.பி. அணி இதுவரை கோப்பையை வென்றது இல்லை. 16 ஆண்டுகளில் 3 தடவை இறுதிப் போட்டியில் தோற்றது.

    ஆனால் பெண்கள் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றியது.

    கோப்பையை வென்றதால் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

    இந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டெல்லியில் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவினோம். அது சரியான நேரத்தில் நாங்கள் மீண்டு வர உதவியது. இது மாதிரியான தொடர்களில் அதுதான் மிகவும் முக்கியம். கடந்த ஆண்டு நாங்கள் நிறைய பாடம் கற்றோம்.

    அணியை நாங்கள்தான் கட்டமைக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது. இந்த கோப்பையை அணியாக சேர்ந்து நாங்கள் வென்றுள்ளோம். இந்த நேரத்தில் அணியின் அன்பான ரசிகர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 'ஈ சாலா கப் நம்தே' என சொல்வது உண்டு. இப்போது கோப்பை நமது வசம் (ஈ சாலா கப் நம்து)

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு விராட் கோலி வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

    ×