search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தாக்கி பலி"

    • ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அன்னியாலம், தாசரிப்பள்ளி பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.

    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா தோட்டம் வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி பலியானார்.

    தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.

    இதையடுத்து, அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜாகடை கிராமத்தை சாம்பசிவம் (வயது 55). விவசாயியான இவர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்கு இன்று அதிகாலை 4மணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை திடீரென்று வந்து சாம்பசிவத்தை தாக்கி கொன்றுள்ளது. பின்னர் காலையில் தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு சாமபசிவத்தின் உடல் சிதைந்து உயிரிழந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மகாராஜா கடை போலீசாருக்கும் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது யானை தாக்கி உயிரிழந்த சாம்பசிவத்தின் உடலை உறவினர்கள் மீட்டு சாலையில் வைத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஒற்றை யானையை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி காட்டுப் பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறி, கடந்த 25-ந் தேதி காவேரிப்பட்டிணம் பகுதிக்கு வந்தன. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்த யானைகளை, வனத்துறையினர் காரியமங்கலம் அருகே உள்ள சஞ்சீவராயன் மலைப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணை அருகேயுள்ள போலுகுட்டை பகுதியில் முகாமிட்டிருந்த இரு யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதனிடையே நெக்குந்தி வழியாக நேற்று அதிகாலையில் கிருஷ்ணகிரி நகரின் அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எதிரே உள்ள தேவசமுத்திரம் ஏரிக்கு இரு யானைகள் வந்தது.

    இந்த யானைகள் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்ற உற்சாக குளியல்போட்டு விளையாடின. மேலும், ஏரியின் நடுவே மின்கம்பம் உள்ளதால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும், வனத்துறையினர் ஏரியில் இருந்து யானைகள் தேசிய நெடுஞ்சாலைக்குள் வராமல் தடுக்க தேவையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு அந்த 2 காட்டுயானைகள் ஏரியில் இருந்து வெளியேறி கிருஷ்ணகிரி நகரில் லைன்கொள்ளை பகுதிக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயி பெரியாசாமியை யானைகள் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார்.
    • வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    தெப்பக்காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த யானைகளை அங்கு வசித்து வரக்கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது54). என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார்.

    இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார். பின்னர் அந்த உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார்.

    பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பாலனை தூக்கி கொண்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.
    • முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி ஒன்றியம் செல்லக்குட்டப்பட்டி ஊராட்சி புகம்பட்டியில் ராம்குமார் என்பவர் நேற்று யானை தாக்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ.நேற்று நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிதியுதவியில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை மாவட்ட வனத்துறை மூலமாக பெற்று ராம்குமாரின் குடும்பத்திற்கு வழங்கினார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×