search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை மழை"

    • கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது.
    • வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள்.

    கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது.

    பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தினமும் வெயில் அடிக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

    இதனால் கோடைகால தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பகலில் இருக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. மின்விசிறிகளை இயக்கினாலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் இரவில் மக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை அங்கு உள்ளது.

    கேரளாவில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒருவருடைய வீட்டில் மட்டும் தினமும் மழை பெய்கிறது. செயற்கை மழை பெய்வதற்கான அமைப்பை தனது வீட்டில் ஏற்படுத்தி தினமும் மழை பெய்ய செய்வதே அதற்கு காரணமாகும்.

    எச்.பி.மோட்டார், பி.வி.சி.பைப், விவசாயத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க பயன்படுத்தும் ஸ்ப்ரிங்ளர்கள் உள்ளிட்டவைகளின் மூலம் செயற்கை மழை பெய்வதற்கான ஏற்பாடுகளை தனது வீட்டில் செய்திருக்கிறார்.

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாணியம்பலம் பகுதியை சேர்ந்தவர் மன்சூர். ஏ.சி. மெக்கானிக்கான இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு யாஸ்மி என்ற மனைவியும், ஷமிலா, சாடியா, ஷனிஹா என்ற 3 மகள்களும் உள்ளனர்.

    மன்சூர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள்கள் வாணியம்பலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் மன்சூர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவரது வீடு மிகவும் சூடாக இருந்தது.

    கோடைகாலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் காணப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த மன்சூருக்கு, மோட்டார் மற்றும் பைப்புகளை பயன்படுத்தி தனது வீட்டில் செயற்கை மழை பெய்யச்செய்து குளிர்விக்கும் யோசனை வந்தது.

    அதன்படி 300 வாட் அரை எச்.பி. மோட்டார், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் ஐந்து ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்டவைகளை வாங்கினார். தனது வீட்டின் மேற்கூரை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகளை அமைத்து அதில் ஸ்பிரிங்ளர்களை பொருத்தினார்.

    பின்பு வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ள குழாய்களுக்கு எச்.பி. மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளை கொடுத்தார். மோட்டார் ஆன் செய்யப்பட்டதும் ஸ்பிரிங்லர்கள் வீட்டின் மேல் பரப்பில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றன.

    ஸ்பிரிங்ளர்கள் சுற்றிக்கொண்டே தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால், வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் ஈரமாகிறது. வீட்டில் உள்ள மரங்களின் கிளைகளில் பட்டு கீழே விழும் போது மழை பெய்ததை போன்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் மன்சூரின் வீடு உள்ள பகுதி முழுவதுமாக ஈரமாகி விடுகிறது.

    அதன் காரணமாக அவரது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியாகி விடுகிறது. கோடைகாலத்திலும் அவரது வீடு மழைக்காலம் போன்று குளிர்ச்சியாக இருக்கிறது. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். அவருடைய வீடு எப்போதும் குளுமையாக இருப்பதால், அவரது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடிக்கடி வந்து இளைப்பாறி விட்டு செல்கிறார்கள். இது பற்றி மன்சூர் கூறியிருப்பதாவது:-

    எனது வீட்டில் செயற்கை மழை பெய்யும் அமைப்பை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தேன். மோட்டார், ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவைகளை வாங்க 3000 ரூபாயே செலவு ஏற்பட்டது. அவற்றை எனது வீட்டில் நானே நிறுவியதால், அதற்காக எனக்கு தனியாக செலவு ஆகவில்லை. தினமும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பத்து நிமிடங்கள் மோட்டார் இயக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும்.

    ஸ்பிரிங்ளர்களில் இருந்து விழும் தண்ணீர் மரங்களின் இலைகளில் பட்டு கீழே விழும் போது மழையின் உணர்வை நமக்கு தருகிறது. நமது விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் மழையை உருவாக்கலாம். இவ்வாறு தெளிக்கப்படும் தண்ணீர் வீட்டில் வளர்க்கப்படும் சப்போட்டா, கொய்யா, மா, பலா போன்ற மரங்களுக்கும், செடிகளுக்கும் செல்கிறது.

    இதனால் அவையும் செழித்து வளர்கின்றன. செயற்கை மழை பெய்யச் செய்ய தினமும் காலையும், மாலையும் சராசரியாக 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும். தண்ணீரை தெளிக்க மோட்டார் பயன்படுத்துவதால் மின்சார கட்டணமும் அதிகமாக வருவது இல்லை. மின்சார கட்டணம் 2000 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.

    ஆனால் முன்பு ஏ.சி-க்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் வந்தது. இந்த செயற்கை மழை அமைப்பை எனது வீட்டில் அமைத்த பிறகு ஏ.சி. பயன்படுத்துவதில்லை. இதனால் மின் கட்டணம் குறைந்துவிட்டது. செடிகளுக்கு என்று தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை.

    செயற்கை மழை எளிமையானது மற்றும் சக்தி வாய்ந்தது. அதற்கான கட்டமைப்பை அமைப்பதற்கான செலவும் மிகமிக குறைவு. சுற்றுலா தளங்களிலும், அணைகளுக்கு அருகிலும் இதனை அரசு திட்டமாக செயல்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
    • அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்

    உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

    நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.

    தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.

    காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.

    குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.

    2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.

    இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

    காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது.
    • செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடுமையாக இருந்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 480-க்கு மேல் சென்றது. இன்று காலை டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 421-ஆக இருந்தது.

    இது கடுமையான பிரிவில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். காற்று மாசை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய், நிதி மந்திரி அதிஷி ஆகியோர் ஐ.ஐ.டி. கான்பூர் குழுவுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    தற்போது ஐ.ஐ.டி. குழுவிடம் விரிவான திட்டத்தை டெல்லி அரசு கேட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த திட்டம் பற்றி டெல்லி அரசு சமர்பிக்க உள்ளது. கோர்ட்டு அனுமதி அளித்தால் டெல்லி, மத்திய அரசும் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்தும். செயற்கை மழையை உருவாக்க குறைந்த பட்சம் 40 சதவீத மேக மூட்டம் அவசியம் என்று ஐ.ஐ.டி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேக மூட்டம் வருகிற 20, 21-ந் தேதிகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்று செயற்கை மழையை பெய்ய வைக்கலாம் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

    ×