search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாலய ஓட்டம்"

    • கன்னியாகுமரியில் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும்.
    • 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியை யொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். காவி துண்டு, காவி வேஷ்டி, கையில் விபூதி, பனையோலை விசிறி உடன் பக்தர்கள் ஓடத் தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்தி ரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல் குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகா தேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றியோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணர் கோவில், பன்றிபாகம் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

     நேற்று காலை முதல் விடிய விடிய பக்தர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் காலையிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து அனைத்து சிவன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

    குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இருசக்கர வாகனங்களிலும், வேன்களிலும் சென்று தரிசனம் செய்தனர். சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக சென்றும், ஓடி சென்றும் தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு வழிநெடுகிலும் குளிர்பானங்கள், உணவு வகைகள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான பக்தர்கள் இன்றிரவு சிவாலயங்களில் தங்கி கண்விழித்து வழிபாடு செய்வார்கள்.

    அனைத்து சிவாலயங்களிலும் இன்று இரவு விடிய விடிய பூஜைகளும் நடை பெறும். சிவராத்திரியை யொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    சிவாலய ஓட்ட பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலை மையில் 12 சிவாலயங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிவராத்திரியை யொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும் விழாகோலம் பூண்டிருந்தது. நாகர்கோவில் கோதை கிராமத்தில் உள்ள சிவன் கோவில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. இன்று பிரதோஷம் என்பதாலும், மாலை 5 மணிக்கு கொன்றையடி நாதருக்கு அபிஷேகம் தொடர்ந்து மூலவராகிய தாணுமாலயன் சாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிவன், விஷ்ணு சாமிகள் திருவீதி உலா நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு தாணுமாலயன் சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், விபூதி, பஞ்சாமிர் தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2-வது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. சிவராத்திரியை யொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருக்கும்.

    • பக்தர்கள் இன்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.
    • வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாட்டில் வேறொங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

    விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (7-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (8-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.

    அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிவராத்திரியை யொட்டி நாளை (8-ந்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8ஆண்டுகளாக சிவாலய ஓட்டம் நடத்தி வருகிறோம்.
    • காசி விஸ்வநாதர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும்.

    பல்லடம் :

    பல்லடத்தை சேர்ந்த சிவ பக்தர்கள் கடந்த 8 ஆண்டுகளாக வருடம் தோறும் சிவராத்திரியை முன்னிட்டு, பல்லடம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வரும் வகையில் சிவாலய ஓட்டம் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:- மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8ஆண்டுகளாக சிவாலய ஓட்டம் நடத்தி வருகிறோம்.

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் இருந்து நடராஜர் சிலை உடன் புறப்பட்டு, கவுண்டம்பாளையம் பரமசிவன் கோவில், பரமசிவம் பாளையம் ஈஸ்வரன் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில்,கரடிவாவி சிவன் கோவில், அய்யம்பாளையம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகியவற்றுக்கு சென்று பின்னர் பல்லடம் பொன் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும்.

    ஒவ்வொரு கோவிலிலும் பாராயணம் படித்து சாமி தரிசனம் செய்து புறப்படுவோம். இரவு 9 மணி அளவில் தொடங்கும் சிவாலய ஓட்டம் மறுநாள் காலை 7மணிக்கு நிறைவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.
    • ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடந்தது.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர். கையில் பனை ஓலை விசிறி விபூதி பொட்டலத்துடன் பக்தர்கள் ஓட தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீல கண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகா தேவர் கோவில், திருப்பன்றி கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்தனர். நேற்று இரவு விடிய விடிய பக்தர்கள் சிவாலயங்களில் தரிசனம் மேற்கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களிலும் வேன்களில் சென்று தரிசனம் செய்தனர்.

    சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாக சென்றும் ஒடி சென்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வழி நெடுகிலும் உணவு வகைகள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பக்தர்கள் இன்று இரவு சிவாலயங்களில் தங்கி கண் விழித்து வழிபாடு செய்வார்கள். அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.

    சிவராத்திரியையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. * * * மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் இன்று காலை திருவிடைமருதூர் மகாதேவர் கோவிலில் தரிசனம் முடித்து செல்வதை படத்தில் காணலாம்.

    • இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
    • 12 சிவாலயங்களில் பக்தர்கள் ஓடி தரிசனம்

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் உள்ளது. சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் ஓடி சென்று தரிசனம் செய்வது வழக்கம். பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

    சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினம் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள். விரத நாள்களில் தீயி னால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருந்து வருகிறார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிட்டு காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி ஈரத்துணியுடன் சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

    சிவராத்திரி விழா நாளை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிவால யங்களுக்கு ஓடி சென்று தரிசனம் செய்வார்கள். திருமலை மகாதேவர் கோவி லில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் 12-வது சிவாலயமான நட்டாலம் மகாதேவர் கோவிலில் தங்களது ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். 112 கிலோமீட்டர் தூரம் ஒடியே சென்று பக்தர் கள் தரிசனம் செய்வார்கள்.

    முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை இன்று 17-ந்தேதி காலை தொடங்கினார்கள்.காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை திப்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நாளை மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவி லில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

    மகா சிவராத்திரியை யொட்டி நாளை 18-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.
    • சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

    குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 12 சிவாலயங்களுக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதனை இப்பகுதியில் காண்போம்.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:-

    மார்த்தாண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது மதுரை திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் எனவாய்மெழி கதையாக கூறப்படுகிறது. முன்சிறை கிராமத்துடன் ராமாயணத்தை இணைக்கும் வாய்மொழிச் செய்திகளும் உள்ளது. அதாவது ராவணன், சீதையை சிறைவைத்த முதல் இடம் (முன்சிறை) என்று சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலின் மூலவரை சூலபாணி என்று கூறுவார்கள். பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை, முருகன் சிறைபிடித்து வைத்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில்:-

    நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் அமைக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த கோவிலில் நந்தி இல்லை. திக்குறிச்சி ஊருக்கு ஒருமுறை வந்த காளை ஒன்று ஊர் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லால் எறிந்து அதை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மிரண்டு விரட்டியவர்களை எதிர்த்தது. இதையறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்த காளையை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது கோவிலில் இருந்த நந்தியும் மாயமாகி விட்டது என்றும், அதன்பிறகு இந்த கோவிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    திற்பரப்பு மகாதேவர் கோவில்:-

    பன்னிரு சிவாலயங்களில் 3-வது கோவில் குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவரான சிவன், வீரபத்திரர், ஜடாதரர் என அழைக்கப்படுகிறார். வீரபத்திரரும் காளியும் சேர்ந்து தட்சனை வதம் செய்தபிறகு தியானம் செய்வதற்கு திற்பரப்பு ஊரில் அமர்ந்தனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தலத்தில் வழிபடுவது வழக்கம். திற்பரப்பு அருவி பாயும் பகுதியில் ஒரு குகை உள்ளது. இங்கு காளி புடைப்பு சிற்பமாக இருக்கிறாள்.

    திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில்:-

    இந்த கோவில் வெயில் அறியாத ஊரில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. நந்தி ஓடையில் (முன்பு நந்தியாறு) கரையில் சோலையாக அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவே உள்ளது. இந்த ஊர்த் தலைவர் உளுத்துப் பாறை அடிவார ஏரியின் நடுவில் குடைவரைக் கோவில் சிவலிங்கம் மிதப்பதுபோல் கனவு கண்டார். அடுத்தநாள் ஏரியின் நடுவில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் முளைத்திருப்பதையும், ஊர்மக்கள் கண்டனர். பின்னர் மன்னர் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்படடது.

    நந்தி கருவறைக்கு எதிரே சிறு குழியில் உள்ளது. இது தொடர்பாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இந்த கோவில் உருவான காலத்தில் எல்லா லட்சணமும் பொருந்திய ரிஷபம் ஒன்று இந்த ஊருக்கு வந்தது. அது ஊர் மக்களைப் பயமுறுத்தியது. மக்கள் இறைவனிடம் முறையிட்டனர். சிவன் அந்த நந்தியை தன் எதிரே சிறிய குழியில் அமர்த்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. கோவில் கருவறையில் உள்ள 27 கட்டங்கள் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.

    பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்:-

    இந்த பகுதி காடாக இருந்தபோது காணிக்காரர் சமூகத்தைச் சேர்ந்த தீம்பிலான் என்பவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது சுயம்புவாக முளைத்திருந்த சிவலிங்கத்தைக் கண்டார். இது ஊர் மக்களுக்குத் தெரிந்து அங்கே ஒரு கோவில் கட்டினர். அதனால்தான் தீம்பிலான்குடி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.

    திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில் :-

    இந்த கோவில் தலப்புராணம் மகாபாரதத்துடன் தொடர்புடையதாகும். பாசுபதாஸ்திரம் வேண்டி சிவனை நோக்கிதவம் செய்த அர்ஜுனன் கிராதனாக (வேடன்) இருந்த சிவனுடன் மோதி தோற்ற நிகழ்வுடன் தொடர்புடையதாகும். குமரி மாவட்ட கோவில்களில் பூஜையின்போது புல்லாங்குழல் இசைக்கும் ஒரே கோவில் இதுதான்.

    பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் :-

    இந்த கோவிலில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. ஆகும். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தைக் கண்டான். அந்த இடத்தில் இந்த கோவிலைக் கட்டினான் என்று தலப்புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தை மதுரைைய ஆண்ட திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழிச் செய்தியாகும். இங்குள்ள அம்மன் கோவில் வாசலின் எதிரே உள்ள தூண்களில் திருமலை நாயக்கரும், அவரது தம்பியின் சிற்பமும் உள்ளது.

    மேலாங்கோடு காலகாலர் கோவில் :-

    இந்த கோவிலின் சிவன், மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. சிவனைநோக்கி தவம் இருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, புத்தியுள்ள ஒரு ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோவிலுக்குள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனைக் குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்படுகிறார்.

    திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில் :-

    ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக நடந்து வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். இந்த அதிசயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தைப் பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் என அழைக்கப்பட்டார். கி.பி. 16-ம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் சடையப்பர் கோவில் என அழைக்கப்பட்டிருக்கிறது.

    திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் மூலவர் லிங்க வடிவம் கொண்டவர். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது. இந்த கோவிலின் கல்வெட்டு ஒன்று மூலவரை ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருப்பவர் என்றும், நம்பூதிரிகள் மூலவரை பரிதிபாணி என்றும் கூறுகின்றனர்.

    திருவிதாங்கோடு சிவன் கோவிலைப் பிற 11 சிவாலயங்களிலிருந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில் இருந்தும் பிரித்துக் காட்டும் அம்சம் இங்குள்ள சிற்பங்கள்தான். சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்களிலும் நடக்கிறது.

    திருப்பன்னிபாகம் மகாதேவர் கோவில் :-

    இந்த கோவில் தொடர்பான கதை மகாபாரதம் அர்ஜூனன் தபசுடன் தொடர்புடையது. அர்ஜுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ஜுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றான வராக அவதாரக் கதையுடனும் இந்த கோவில் புராணத்தை இணைத்துக் கூறுகிறார்கள்.

    நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:-

    இந்த கோவில் கருவறை மூலவரை அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றனர். கி.பி. 16, 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கருதலாம்.

    சிவாலய ஓட்டம் தொடர்பான மகாதேவர் கோவிலின் முன்பு இருக்கும் குளத்தின் முன் சங்கரநாராயணர் கோவில் உள்ளது. இதன் கருவறையில் லிங்க வடிவ சங்கரநாராயணர் இருக்கிறார். இந்த கோவில் மண்டபத் தூண்களிலும், நமஸ்கார மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. இவை அரச குடும்பத்தினரின் சிற்பங்கள். இந்த சிற்பங்களின் அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது.

    • பக்தர்கள் 12 ஆலயங்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"

    என்று சிவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர். தமிழகத்தில் புகழ்பெற்ற பல்வேறு சிவாலயங்கள் உள்ளன. அதில் குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

    முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில் ஆகியவை வழியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவு பெறும். முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.

    சிவாலய ஓட்டம் ஒருபுறம் நடந்தாலும், ஓடமுடியாத பக்தர்கள் இருசக்கர வாகனங்கள், கார், வேன் போன்றவற்றில் சென்று சிவத்தலங்களை தரிசிக்கின்றனர். சிவாலய ஓட்டக்காரர்களுக்கு வழிப்பாதையில் மோர், பானகம், சுண்டல் மற்றும் கஞ்சி போன்றவற்றை ஆங்காங்கே மக்கள் வழங்குவார்கள். பொன்மனை கோவிலில் பலாக்காய் எரிசேரி கறியும், தினை அரிசிக் கஞ்சியும், நல்லமிளகு நீரும் கொடுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. தற்போதும் கல்குளம் கோவிலில் பக்தர்களுக்கு சுவையான குழம்புகளுடன் வயிறு நிரம்ப சாப்பாடும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான மகாசிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகும். இதையொட்டி சிவாலய ஓட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் தொடங்குகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அங்கிருந்து மற்ற 11 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவார்கள்.

    பன்னிரு சிவாலயங்களில் நட்டாலம் கோவிலில் ஓட்டத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்குச் செல்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. சிவாலய ஓட்டக்காரர்கள் கையில் விசிறியும், கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையும் வைத்திருப்பார்கள். இந்த ஓட்டத்தின்போது பக்தர்கள் காவி அல்லது மஞ்சள் வேட்டி கட்டுவது வழக்கம். கருவறை சிவனைப் பார்த்து விசிறியால் வீசுவது இப்போதும் நடைமுறையில் உள்ளது.

    • சாலைகளை சீரமைக்க கோரிக்கை
    • மகா சிவராத்திரி நாளில் 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமுமாக சென்று சிவனை வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து முதலில் முன்சிறை பகுதியில் உள்ள திருமலை மஹாதேவர் கோவிலில் குளித்து புத்தாடை கள் அணிந்து விபூதி நெற்றியில் பூசி சாமியை வணங்கி சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். அதன் பிறகு திக்குறிச்சி மஹாதேவர் கோவிலில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான் குடிமஹாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மஹாதேவர் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு மஹாதேவர் கோவில், திருவிடைக்கோடு மஹாதேவர் கோவில், திருவிதாங்கோடு மஹாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் திருக்கோ வில் ஆகிய 12 சிவாலயங்களில் நடந்தும், ஓட்டமாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் கையில் விசிறியுடன் கோவிந்தா... கோபாலா... என்று கோஷம் போட்டு செல்வார்கள்.

    இந்த வருடம் சிவாலய ஓட்டம் 18-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி காலையில் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை முடிப்பார்கள். 17-ந் தேதி பிற்பகலில் விரதத்துடன் நடந்தும் ஓட்டமுமாக பக்தர்கள் செல்வார்கள். பக்தர்கள் செல்லும் வழியில் பக்தர்களுக்கு டீ, காப்பி, சுக்கு காப்பி, சுண்டல், கஞ்சி சாப்பாடு போன்றவைகள் ஆங்காங்கே பக்தர்களுக்கு வைத்திருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் குறைந்த அளவில் பக்தர்கள் வந்தனர். ஆனால் தற்போது கொரோனா கட்டுபாடுகள் முழுவதுமாக விலக்கப்பட்டதால் இந்த ஆண்டு பக்தர்கள் நடந்தும் ஓட்டமாகவும், கார், பைக், ஆட்டோ, பஸ்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    12 சிவாலயங்களுக்கும் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகளை சரி செய்து கொடுக்க வேண்டும். முக்கியமாக சில கோவில்களுக்கு செல்லும் சாலைகள் பழுதடைந்து மிக மோசமான சாலைகளாக இருக்கிறது. அவற்றை போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சீர்செய்ய வேண்டும் மற்றும் தடையற்ற மின்சாரம், தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள்.
    • இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் நடையும், ஓட்டமு மாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது.

    இதற்காக பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர், திருப்பன்னிப்பாகம் மகாதேவர், கல்குளம் நீலகண்டசுவாமி, மேலாங்கோடு மகாதேவர், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு மகாதேவர், திருப்பன்றிகோடு மகாதேவர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்வார்கள். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டாக நடைபெறும் இந்த ஓட்டம் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது இவர்கள் காலை, மாலை வேளைகளில் குளித்து சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். பின்னர் சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து விபூதி பூசி, கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் தொடங்கி ஒவ்வொரு கோவிலாக ஓடியவாறு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 110 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நீண்ட ஓட்டத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பழங்காலத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நடந்தும், ஓடியும் சென்றுள்ளனர். அண்மை வருடங்களாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே நடந்தும், ஓடியும் செல்கின்றனர். பெரும்பாலானோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த ஓட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிலில் உள்ள குளத்தில் குளித்து விட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டுமென்பதும் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பது ஐதீகம்.

    சிவாலய ஓட்டத்திற்கான கதை

    சிவாலய ஓட்டம் தொடர்பாக பக்தர்கள் மத்தியில் 2 விதமான கதைகள் கூறப்படுகிறது. இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய, தருமரின் யாகம் ஒன்றிற்கு புருஷா மிருகத்தின் பால் பெற பீமன் சென்ற கதை மற்றும் சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவ பெருமானிடம் வரம் பெற்ற பின்னர் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் கோபாலா.. கோவிந்தா என்று கூறியவாறு ஓடியதும், இறுதியில் மோகினி அவதாரமெடுத்து வந்த விஷ்ணு சூண்டோதரனை அழிக்கும் கதை சொல்லப்படுகிறது.

    இதில் மகாபாரதத்துடன் தொடர்புடைய கதையில், புருஷா மிருகத்தின் பால் பெற சென்ற பீமன், கிருஷ்ணனின் உபதேசப் படி உத்திராட்ச கொட்டைகளை போட்ட இடங்களே சிவத் தலங்களாயிற்று என்றும், சூண்டோதரன் கதையில் சிவபெருமான் பதுங்கி மறைவாக இருந்த இடங்களே சிவத்தலங்களாயிற்று என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முன்சிறை மகாதேவர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது.

    திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கர நாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

    இந்த வருடம் சிவராத்திரி தினம் வருகிற 18-ந் தேதியாக உள்ள நிலையில் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும், ஓட்டமுமாகவும் செல்லும் பக்தர்கள் 17-ந் தேதி பிற்பகலில் ஓட்டத்தை தொடங்குகின்றனர். 19-ந் தேதி காலையில் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்றும் அச்சமும் மக்கள் மத்தியில் இருந்த நிலையில் சிவாலய ஓட்ட பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே சமயத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சாலை வசதி, தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×