search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்க்கரை ஆலை"

    • ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.
    • கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே அரசுக்கு சொந்தமான கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கரும்பு அரவைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆலையின் அரவை சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆலை அரவை தொடங்கிய நாள் முதலாக கரும்பு லோடு ஏற்றி வரும் வாகனங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டுமென லாரி உரிமையாளர், பாரம் ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலை நிர்வாகத்திடம் வாடகை உயர்த்தி தர கோரிக்கை வைத்து வந்தனர்.

    ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று இரவு ஆலைக்குள் லோடு ஏற்றி வந்த 150 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், அரவைக்கு இறக்கி வைக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் போலீசார் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குவிக்கப்பட்டனர்.

    உடனடியாக அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    ஆலையில் மேலாண்மை இயக்குனர் பிரியா போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், தங்களது கோரிக்கையை சில தினங்களில் பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கரும்பு அரவை லோடு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்பு வழக்கம்போல ஆலைகள் செயல்பட தொடங்கியது.

    இந்த திடீர் போராட்டத்தால் ஆலை வளாகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
    • நடைபயணத்தில் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

    சோழவந்தான்

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு வரு கிறார். நேற்று மாலை மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் அண்ணாமலை நடை பயணத்தை தொடங்கினார். சோழவந்தானில் எம். வி. எம். மருது மஹால் அருகே பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளிமயில் சிவகாமி, தொழிலாளர் அணி ராஜா ராம் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். நடை பய ணத்தின் போது அண்ணா மலை பேசியதாவது:-

    தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொருள் சிறப்பு. அந்த வகையில் சேலத்தை பொருத்தவரை மாம்பழம், மதுரையை பொருத்தவரை மல்லி, காஞ்சியைப் பொறுத்தவரை பட்டு. அதன்படி சோழ வந்தான் ஊருக்கு சிறப்பு வெற்றிலையாகும்.

    அந்த வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி.உலகம் முழுவதுமே நீங்கள் வெற்றிலையை ஏற்றுமதி செய்ய இந்த புவிசார் குறியீடு பயன் படும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி முழுவதுமாக நீக்க நடவடிக்கை எடுத்தவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாங்க ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மட்டுமே 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இதுவரையிலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள்? என தெரிய வில்லை. அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலை கொரோனா காலத்தில் மூடப்பட்டது. இன்னும் திறக்கவில்லை. தி.மு.க. அரசு அதனை திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் சார்ந்துள்ள பத்திர பதிவு துறையில் ஊழல் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.

    நடைபயணத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ சிம்மன், மாநில ஊடகத்துறை தலைவர் ரங்காஜி, ஓ.பி.சி. அணிமுன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி, மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட பொரு ளாளர் முத்துராமன், வாடிப்பட்டி கண்ணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது.
    • சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    உடுமலை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருணசாமி உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்

    பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது,

    தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர் . ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு உள்ளனர் சர்க்கரை அலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    • சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

    உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும்.

    முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரவைக்கு 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு நடப்பா ண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை துவக்கு வதற்காக, ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் பணி கடந்த 10ந் தேதி துவக்கப்ப ட்டு நேற்று முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமராவதி சர்க்கரை ஆலையிலுள்ள பழமையான எந்திரங்களை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மாநில அரசு நிதி ஒது க்கவில்லை. நடப்பாண்டு, 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது. குறிப்பாக ஆலை அரவைக்கு, வாகனங்களி லிருந்து கரும்பு எடுத்து கன்வேயருக்கு வழங்கும் ரோப் வகை நவீன எந்திரங்கள் நிறுவும் பணி ரூ.2 கோடி மதிப்பில் துவங்கியது. நிதி வழங்குவதில் தாமதம் காரணமாக பணி முடியவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்த தேதியில் அரவை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. குறிப்பி ட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி அரவை துவக்கி யும், எந்திரங்கள் பழுது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்க ளினால் மகசூல், சர்க்கரை கட்டுமானம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டும், அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக கரும்பு அரவை துவங்காமல் கரும்பு காய்ந்து நஷ்டமடைந்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், எந்திரம் பொருத்தும் பணி வரும் 24-ல் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். வரும் மே 1-ந் தேதிக்குள் அரவை துவங்கும் என்றார்.

    • சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

    இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

    இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆலையில் எந்திரம் பழுது என்று லாரி வரவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜார்ஜ். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கரும்பு நடவு செய்திருந்தார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கரும்புகளை வெட்டி திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு அனுப்பிவந்தார். இந்நிலையில் வெட்டிவைத்த கரும்புகளை ஏற்றுவதற்கு கடந்த 4 நாட்களாக வண்டி வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பீல்டுமேனிடம் கேட்டபோது, ஆலை ரிப்பேரில் உள்ளது. சரியானதும் ஏற்றிக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

    இதனால் மன வேதனை அடைந்த விவசாயி கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து தண்ணீர் இரைத்து மருந்து வைத்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது.

    இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே வரு கிறது. இதைவைத்துக்கொண்டு ஒன்று செய்யமுடியவில்லை என்றாலும் நெல் பயிர் வைத்தால் கைக்கு எட்டும்போது இயற்கை சீற்றங்களால் அழிந்துபோகிறது என்பதால் கரும்பை நடவு செய்தேன். ஆனால் 4 நாட்களாக ஆலை ரிப்பேர் என்று லாரியை அனுப்பவில்லை.

    இதனால் வெட்டி வைத்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது. மேலும் ஆலை ரிப்பேர் என்றால் பீல்டுமேன்கள் கரும்பு வெட்டுவதை நிறுத்த சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துவருகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது.

    தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது.

    இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.

    இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.

    • பேரணாம்பாட்டு, மேல்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தல்
    • குடியாத்தத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது

    குடியாத்தம்:

    குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட குடியாத்தம், கே.வி. குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் குடியாத்தம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் எம்.வெங்க டராமன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வருவாய்த்துறை மின்வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைதுறை, நீர்வளத்துறை, வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, உழவர் சந்தை அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.

    விவசாயிகள் பேசுகையில்:-

    பேர்ணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை திருப்பத்தூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும், பேர்ணாம்பட்டு பகுதியில் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது யானைகள் மீண்டும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது வனத்துறை உரிய நடவடிக்கை எடுப்பதில்லை விவசாயிகள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் இதுவரை வழக்கு ரத்து செய்யப்படவில்லை வனவிலங்குகள் விளைநிலங்களுக்கு புகுவது தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை தொடர்ந்து இதே போல் இருந்தால் விரைவில் முதல்வர் அலுவலகம் முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.கவுரப்பேட்டை ஏரிக்கரையை உயர்த்த வேண்டும் தண்ணீர் செல்லும் பகுதியே உடைப்பு ஏற்படுத்தி விட்டனர் இதனால் தண்ணீர் நிற்பதில்லை அதை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்

    மேல்ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி தண்ணீர் தேங்கி பள்ளங்களாக உள்ளன உடனடியாக சீர் செய்ய வேண்டும் கூட நகரம் ரயில்வே மேம்பால பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

    இதற்கு பதில் அளித்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இக்கூட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    • தடையை மீறி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் நுழைய முயன்றனர்.
    • போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு கரும்பு விவசாய சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சின்னத்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு நுழைய முயன்றனர். இதனை அடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் சில விவசாயிகள் நுழைய முயன்ற போது அவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

    தொடர்ந்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது
    • அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்குவதற்கு எந்திரங்களை தயார்படுத்துவதற்கான இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி ஆலையின் தலைமை நிர்வாகி தலைமையில் நடைபெற்றது. நடப்பு பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3,60,000 டன் கரும்பை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரைப்பதற்கு திடடமிடப்பட்டுள்ளது. கரும்பு அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டார் எந்திரம் உள்ளிட்ட சில எந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில எந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன.

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில்
    • கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்களுடனான கூட்டம் நடந்தது. இதற்கு ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் 5-ந் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    130 நாட்கள் அரைப்பது எனவும், 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பை அரைப்பது என்றும், 9.75 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பூஞ்சாண நோயால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் வரை கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பதிவு செய்யப்படாத கரும்பையும் அரவைக்கு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற 21-ந்தேதி ஆலையில் கரும்பு அரவைக்கான சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு வெட்டும் கரும்புக்கு கொடுக்கும் வெட்டுக்கூலியாக முன்பணம் தொகை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இணைமின் திட்டத்திற்கு பிடித்தம் செய்த பங்கு தொகைக்கான பங்கு பத்திரத்தை வழங்காததால், வரும் பேரவை கூட்டத்திற்குள் பங்குத்தொகையையும் அதற்கான வட்டியையும் வழங்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் கரும்பு ஏற்றும் டிராக்டர்களுக்கு டீசல் போடுவதற்கு தொகையை உயர்த்தி தரவேண்டும். வருவாய் பங்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் முகப்பில் இருந்து எடை மேடை வரை உள்ள மோசமான சாலையை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். கூடுதல் எடை மேடை அமைக்க வேண்டும்.

    சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். இந்த ஆண்டுக்கு 450 டிராக்டர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆலை அரவை கடைசி நேரத்தில் கரும்புகள் தேக்கமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான தொகையை தாமதமடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    • ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது.
    • கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    2021-2022-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1,200 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது.

    ஆனால் ஆலையில் உள்ள எந்திரங்கள் பழமையானதால் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைந்து விடுகிறது. அதனால் தினசரி முழு அரவைத்திறனுக்கு ஆலை இயங்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் அரவைத்திறனுக்கு குறைவாகவே கரும்பு அரவை செய்யப்படுகிறது.

    கரும்பு அரவை அடிக்கடி நிறுத்தப்படுவதால் குறுப்பிட்ட காலத்திற்குள் கரும்பு வெட்டப்படாமல், கரும்பு வெட்டுவதற்கு 13 மாதங்களாவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆலை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×