search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொர்க்கவாசல்"

    • சாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது.
    • சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

    தருமபுரி:

    பென்னாகரம் அருகே உள்ள ஆளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் காத்திருந்தனர். அப்போது சாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது.

    அப்போது சாமி சிலையை சொர்க்க வாசல் வழியாக கொண்டு வந்தபோது பக்தர்கள் சிலையை தோளில் வைத்து ஊஞ்சலில் ஆடுவதுபோல் அசைத்தனர்.

    அப்போது முறையாக வாகனத்தில் சாமி சிலையை கட்டவில்லை என்பதால், பாதி தூரத்திலேயே, சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது. இதனால் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

    பின்பு மீண்டும் முறைப்படி சாமி சிலை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு சாமி சிலை உரிய முறையில் ஊர்வலம் செல்லும் நிலையில் வைக்கப்பட்டது.

    சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளை தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியது.



    • இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
    • ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

    சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.

    மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

    முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை `பாரணை' என்கிறார்கள்.

    உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    • விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.
    • இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவிகிடைக்கும்.

    இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்றுதான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், `வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது. பகல் பத்து, ராபத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது?

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப்பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
    • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

    அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

    அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

    அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

    • வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.
    • வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று.

    வைகுண்டத்தில் தான் விஷ்ணு வசிக்கிறார். 'ஏகம்' என்பது 'ஒன்றை' குறிக்கின் றது. 'தசம்' என்பது பத்தை குறிக்கின்றது. ஒன்றையும் பத்தையும் கூட்டினால் 11. அமாவாசை வளர்பிறையில் பதினோராவது நாளில் ஒரு ஏகாதசியும், பவுர்ணமி தேய் பிறையில் பதினோராவது நாளில் மற்றொரு ஏகாதசி வருகிறது. மொத்தம் வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும்.

    இதில் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடி வருகிறோம். மற்ற ஏகாதசியில் நம்மால் விரதத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றாலும் இந்த மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்லது என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஏகாதசி விரதமானது முதலில் தொடங்கப்பட்ட மாதமும் மார்கழி தான்.

    பெருமாள் கோவில்களில் இருக்கும் சொர்க்க வாசல் என்று கூறப்படும் அந்த கதவினை குறிப்பாக ஏன் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்னும் இருந்துதான் வருகிறது. அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த பதிவு.

    நம்முடைய இந்து புராண கதைகள் என்றாலே அது ஒருவருடைய கர்வத்தை அடக்குவதற்காகவோ அல்லது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவதற்காகவோ அல்லது அதர்மத்தை அழிப்பதற்காகவோ தான் இருக்கும். நம் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நம் முன்னோர்கள் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ள வழிபாடுகளும் விரதங்களும் நமக்கு நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நல்ல புராணக்கதையைத்தான் நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

    ஒரு நாள் இந்த பூலோகத்தில் உயிர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவிற்கு வந்தது. உயிர்களைப் படைக்கும் வேலையை செய்வதற்கு ஒரு வரை நியமிக்க வேண்டும் அல்லவா? அதற்காக பிரம்மனை படைத்தார். உயிர்களையெல்லாம் இந்த பூலோகத்தில், பிரம்மாவான நான் தான் படைக்கப் போகிறேன், என்ற கர்வமானது பிரம்மனுக்கும் வந்துவிட்டது. தலைக் கணம் ஏறிவிட்டது. இந்த பிரம்மனின் தலைக்கணத்தை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்த விஷ்ணு தன் காதுகளில் இருந்து இரு அசுரர்களை வெளிக்கொண்டு வந்தார். அந்த இரண்டு அரக்கர்களின் பெயர் லோகன், கண்டன்.

    இந்த இரண்டு அசுரர்களின் கோரதாண்டவத்தை கண்ட பிரம்மாவின் கர்வமானது அடங்கி விட்டது. ஏனென்றால் இந்த இரண்டு அரக்கர்களும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு சக்தி அதிகம். அதாவது ஒரு நல்ல செயலுக்காக உருவாக்கப்பட்ட அரக்கர்கள் இவர்கள்.

    'பிரம்மனின் தலைக் கணத்தை நீக்கிய உங்களுக்கு என்ன வரம் வேண்டும்' என்று விஷ்ணு அந்த இரண்டு அரக்கர்களையும் நோக்கி கேட்டார். அந்த இரண்டு அரக்கர்களும் வித்தியாசமான ஒரு வரத்தை விஷ்ணுவிடம் கேட்டனர். விஷ்ணு பகவானால் படைக்கப்பட்ட அரக்கர்கள் அல்லவா, இவர்களுக்கும் தலைக்கணம் வந்து விட்டது.

    அப்போது விஷ்ணு பகவானான நீங்கள் அரக்கர்களான எங்கள் இருவரிடமும் போர்புரிய வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர். விஷ்ணுவும் இதை ஏற்றுக் கொண்டார். விஷ்ணு பகவான் வடக்கு வாசலின் வழியாக வந்து இந்த இரண்டு அரக்கர்களிடமும் போரினை தொடங்கினார். விஷ்ணுவிடம் பரமபதத்தில் போரிட்ட அந்த இரண்டு அரக்கர்களும் தோல்வி அடைந்து விஷ்ணுவின் பாதங்களில் சரண் அடைந்தனர்.

    பகவானே! 'தங்களின் சக்தியால் உருவாக்கப்பட்ட நாங்கள் வைகுண்டத்தில் உன்னிடமே இருக்க வேண்டும்' என்று வேண்டி வரத்தை கேட்டனர். தோல்வியுற்ற இந்த இரண்டு அரக்கர்களும் வடக்கு வாசலின் வழியாக பெருமாளை சென்றடைந்தனர். இரண்டு அரக்கர்களும், பெருமாளை சென்றடைந்த இந்த நாளைத்தான் வைகுண்ட ஏகாதேசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். இரண்டு அரக்கர்களும் இன்றுவரை பெருமாளின் இருபுறங்களிலும் சங்கு சக்கரமாக மாறி காட்சி தருகின்றனர். இந்த வடக்குவாசல் தான் சொர்க்க வாசலாக கூறப்படுகிறது.

    இதன்மூலம் 'வைகுண்ட ஏகாதசிஅன்று சொர்க்க வாசல் வழியாக வெளியில் தரிசனத்திற்காக வரும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கும், பெருமாளை சொர்க்கவாசல் வழியாக பின் தொடருபவர்களுக்கும் பாவங்கள் நீங்கி முக்தி அளிக்க வேண்டும்' என்று அந்த அசுரர்கள் பெருமாளிடம் வரத்தை வாங்கிக்கொண்டனர். இதன் மூலமாகத்தான் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் நமக்கு காட்சி தருகிறார்.

    அந்த விஷ்ணுவால் படைக்கப்பட்ட அசுரர்கள், தெரியாமல் செய்த தவறினை மன்னித்து அவர்களுக்கு மோட்சம் தந்து தன்னுடனே வைத்துக் கொண்ட அந்தப் பெருமாள், மனித பிறப்பு எடுத்து தெரியாமல் தவறு செய்யும் நம்மையும் மன்னித்து மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார். ஆகவே நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளில் இருந்து விமோசனம் பெற வேண்டுமென்றால் பெருமாளை இந்த ஏகாதசி அன்று சொர்க்க வாசலில் தரிசனம் செய்யுங்கள்.

    ×