என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசளிப்பு விழா"

    • பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதிலும் கட்டாயப்படுத்தாதீர்கள்.
    • பறவையை போல் நம்பிக்கையுடனும், தைரியமுடனும் பறக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாணவ- மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர் மாணவராக இருந்தால் வைர மோதிரமும், மாணவியாக இருந்தால் வைர கம்மலும் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

    விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ- மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர்.

    10-ம் வகுப்பு, பிளஸ்- 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சாதனை படைத்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்றனர். விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 7 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்து உள்ளே அனுப்பினார்கள். ஒவ்வொரு மாணவ-மாணவிகளுடனும் அவர்களின் பெற்றோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    உள்ளே சென்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நொறுக்குதீனி மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கி உள்ளே அனுப்பி வைத்தார்.

    காலை 9 மணிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக விஜய் காலை 8.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு அவர் விழா நடைபெறும் ஓட்டலை வந்தடைந்தார்.

    காலை 10 மணிக்கு விஜய் விழா நடைபெறும் அரங்கத்துக்குள் வந்தார். அப்போது அரங்கத்தின் இருபுறமும் இருந்த மாணவ-மாணவிகளை பார்த்து அவர் உற்சாகமாக கை அசைத்தபடியே வந்தார்.

    பின்னர் அரங்கத்தின் முன்பகுதிக்கு வந்த விஜய் சிறிது நேரம் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்திருந்தார். பின்னர் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தொடங்கியது. பின்னர் மேடைக்கு வந்த விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    பின்னர் விழாவில் விஜய் பேசியதாவது:-

    உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. நீங்கள் சிறந்த சாதனை படைத்ததற்காக வாழ்த்துக்கள். படிப்பில் சாதிக்க வேண்டும்தான். படிப்பும் சாதனைதான். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது.

    ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசித்து அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிய விஷயம் ஒன்றுமே கிடையாது.

    இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கிறது.

    அதனால் இப்போதே உங்கள் மனதை ரொம்ப வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால்தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்தில் உள்ள எல்லா துறையும் சரி சுதந்திரமாக இருக்க முடியும்.

    அது மட்டுமல்ல ஒரு முறையான ஜனநாயகம் இருந்தாலே மேலும் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும். அதனுடைய முதல்படியாக உங்கள் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லுங்கள். அவர்களின் ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள்.

    ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அது சாதாரணமான விஷயம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யார் என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அவ்வளவுதான். இது மிகவும் எளிது. இதுதான் அந்த கடமை.

    நான் 2 வருடத்துக்கு முன்பே இதே மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் சொல்லி இருந்தேன். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் இல்லையா? அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்கப்படுத்தாதீர்கள். யாரும் காசு வாங்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும் எடுத்து சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்கள்.

    ஆனால் நீங்கள் வேண்டுமானால் அடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள். வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள். அது அத்தனையும் உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். என்ன பண்ண போகிறீர்கள்? என்ன பண்ணனும் என்று உங்களுக்கு சரியாக தெரியும். அதை நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    பெற்றோர்களே... உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்... உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வழி நடத்துங்கள். நான் கண்டிப்பாக சொல்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களில், அவரவர்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் கண்டிப்பாக சாதித்து காட்டுவார்கள்.

    இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், சாதி மதத்தை வைத்து, இந்த பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கமே போய் விடாதீர்கள். அந்த சிந்தனை உங்களையோ அல்லது உங்கள் மனதையோ தொந்தரவு கொடுக்கிற அளவுக்கு எதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

    விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள்? தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்? இவ்வளவு ஏன்... இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கிறதா, மதம் இருக்கிறதா? போதைப் பொருட்களை நாம் எப்படி அறவே ஒதுக்கி வைக்கிறோமோ அதே போல் இந்த சாதி மதத்தையும் கட்டுப்பாட்டுடன் ரொம்ப தூரமா? எவ்வளவு தூரமா ஒதுக்கி வைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதை தூரமா ஒதுக்கி வைத்து விடுங்கள். அதுதான் எல்லோருக்குமே நல்லது.

    சமீப காலமாக பார்த்தால் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போல ஒரு கேள்வி கேட்டுள்ளார்கள். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த விசயத்தில் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து பார்த்தாலே போதும் ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கையை வாழலாம்.

    எதற்கும் ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள். அவ்வளவு மதிப்பு எல்லாம் இல்லை. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாகவே சிந்தியுங்கள். ஏனென்றால் ஏற்கனவே வந்து விட்ட செயற்கை நுண்ணறிவு உலகத்தை எதிர்கொள்ள அதுதான் ஒரே வழி.

    வானம் பரந்ததாகவும், அகலமாகவும் இருக்கிறது. உங்களுக்கும் வலுவான இறக்கைகள் உள்ளன. எனவே நண்பர்களே நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பறவையை போல் நம்பிக்கையுடனும், தைரியமுடனும் பறக்க வேண்டும்.

    எவ்வளவோ பண்ணி விட்டோம். இதை பண்ண மாட்டோமா? எவ்வளவோ பார்த்து விட்டோம். இதை பார்க்க மாட்டோமா? என்கிற நேர்மறை சிந்தனையுடன் பயணியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

     

    10-ம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்ட மாணவி சோபியா மற்றும் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் பரிசாக வழங்கினார்.

    பின்னர் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

     

    மேலும் மாற்றுத்திறனாளிகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கும் ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை விஜய் வழங்கினார்.

    பரிசுகளை பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    600 மாணவ-மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். விருது பெற்ற மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக பேசிய விஜய், இதேபோல் நன்றாக படித்து தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

    விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.

    மீதமுள்ள தொகுதிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கான 2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற உள்ளது.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.

    முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.

    மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது. போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும் என்று மாணவர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரிசளித்தார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

    • முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.
    • விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்ட பரிசளிப்பு விழா இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட பரிசளிப்பு அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற இருக்கிறது.

    மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் 3 கட்டங்களாக பரிசளிப்பு விழாவை நடத்த கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் தகுந்த பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு அனைத்து வசதிகளும் த.வெ.க. சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களது கல்வி ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் மத்தியில் விஜய் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிவில் அனைவருக்கும் 20 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவுபடி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமையில், சென்னை கிளை ஜமாத் தலைவர் நஜீம் அகம்மது முன்னிலையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அகமது பசீர் சேட் ஆலிம் கிராஅத் ஓதினார்.

    பள்ளியின் தாளாளரும், பேரூராட்சி சேர்மனுமான ஷாஜஹான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காதர் ஷா, லியாகத் அலி, காதர்முகைதீன், வரிசைமுகம்மது, மாவட்ட கல்வி அலுவலர் ரவி முன்னாள் ஜமாத் தலைவர் இக்பால், பாசில்அமீன், கல்வி குழு தலைவர்காதர் முகைதீன், முகமது மீரா, சீனிமுகம் மது உள்பட பலர் பங்கேற்றனர்.

    • குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட குலாலர் சங்கம் ஆகியவை சார்பில், கல்வியில் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா குமாரபாளையம் லஷ்மி மகாலில் மாவட்ட தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் நாராயணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி , முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், குலாலர் சமுதாயத்தினர் பொங்கல் பானை, கார்த்திகை தீப விளக்குகள் உள்ளிட்டவை தயாரிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை திருவிழா காலங்களுடன் பிணைந்து உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் நலன் காக்க கரும்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்றார். 

    • இறகுபந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மேலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் தாலுகா அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

    முதல் பரிசை அருண், பிரேம் நசீர் அணியும், 2-ம் பரிசை அசோக், அயூப்கான் அணியும், 3-ம் பரிசை ரபிக், பாண்டி அணியும், 4-ம் பரிசை துரை, முத்து நாச்சியப்பன் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலாளர் மணி, பொருளாளர் நீதிபதி, கூடுதல் பொருளாளர் செல்வம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சேவுகமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக செமினார் அரங்கில் நடந்தது. 31 அணிகள் 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் லீக் முறையில் போட்டிகள் நடந்தன.இதில் ஏ-பிரிவில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் புராடக்ட் கோவிலூர் அணி முதலிடத்தையும், லத்தீப் மெமோரியல் அணி 2-ம் இடத்தையும் வென்றது. பி-பிரிவில் தேவகோட்டை ஜூனியர்ஸ் அணி முதலிடத்தையும், சச்சின் பிரதர்ஸ் அணி 2-ம் இடத்தையும் வென்றது. சி-பிரிவில் சென்சையர் அணி மற்றும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை வென்றன.

    பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். புரவலர் வெங்கடாசலம் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ரவி, மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவக்குமரன், அழகப்பா உடற்கல்வி கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். சதமடித்த 18, 5 விக்கெட் வீழ்த்திய 31 வீரர்களுக்கும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழக வீல்சேர் அணியில் விளையாடிய சிவகங்கை மாவட்ட வீரர்கள் சுரேஷ்குமார், ராமசந்திரன், மகளிர் வீராங்கனை பிரியதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.

    வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.

    • சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.

    • மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.
    • முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார்.

     திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் 33வது ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். 2021-22ம் கல்வி ஆண்டில் பாடவாரியாக 100 / 100மதிப்பெண்கள் பெற்ற 78 மாணவர்களுக்கு பாரத் டையிங் முருகநாதன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக கேடயமும் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 2022 -23 நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களில் வகுப்புவாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விடுமுறை எடுக்காமல் 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு காமராசரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள், தந்தையர் தினம், நிறுவனர் தினம், குழந்தைகள் தினம், ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த தினம், தீரன் சின்னமலை பிறந்த தினம் போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெல்வின் கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பாபு அந்தோணி, ஆதவன் காட்டன்ஸ் நிர்வாக இயக்குனர் ரோட்டேரியன் பூபதி சான்றிதழும், கேடயமும் வழங்கி பாராட்டினர். ஆண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர் தலைவர் ரவீந்திரன் காமாட்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பிரதாப், நட்ராஜ் சான்றிதழும், பதக்கமும் வழங்கி பாராட்டினர். விழாவில் 1060 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். 

    • 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒரு தனியார் நிறுவனம் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டியை நடத்தின.

    இதில், 6, 7, மற்றும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் 3 வகுப்புகளிலும், முதலாம் இடம், 2-வது இடம் மற்றும் 3-வது இடத்தை மொத்தம் 9 பேர், சிறந்த ஓவியம் வரைந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் சுனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் பொன். நாகேஷ் வரவேற்றார். தனியார் நிறுவன மேலாளர் அனில்குமார் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் பங்கேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் 25-ம் ஆண்டு பரிசளிப்பு விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எஸ்.முகம்மது இக்பால் தலைமையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.அகம்மது பசீர் சேட் ஆலிம், துணைத் தலைவர்கள் இக்பால், அ.காதர் முகைதீன், முன்னாள் பேரூராட்சி உதவி சேர்மன் பாசில்அமீன், வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிவாசல் மழலையர் பள்ளி தாளாளர் எம்.செய்யது அபுதாஹீர் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பேருராட்சி சேர்மனுமான ஏ.ஷாஜஹான் பரிசு வழங்கி பாராட்டினார்.

    விழாவில் முன்னாள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.லியாகத் அலி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் முகைதீன், ஆசிரியை பொன்னா மீனாள் பேகம், தொடக்கப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம் சீனி முகம்மது மற்றும் கல்வி குழுவினர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் பட்டிமன்றமும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    ×