என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவுரை"

    • வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாக தகவல் வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ''டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, ''அதிக சம்பளம்'' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வருகிறது.

    இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும், அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்ப்டடால் 96000 23645, 87602 48625, 044-28515288 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.
    • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.

    மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்.
    • தேவகோட்டை பஸ் நிலையத்தில் போலீஸ் டி.எஸ்.பி. இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தேவகோட்டையை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    சமீப காலமாக கூட்டநெரிசல் காரணமாக பஸ் படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இன்று திடீர் ஆய்வு செய்தார்.

    தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கி விடப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை எச்சரித்துடன் அவர்களை மாற்று பஸ்களில் அனுப்பி வைத்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தினமும் காலை, மாலை நேரங்களில் ஆய்வு செய்வேன் என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார். அப்போது காவலர் சிலம்பரசன் உடன் இருந்தார்.

    • நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது,
    • மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொதுமக்கள், கடைஉரிமையாளருக்கு அறிவுரை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாடு அதிகமாக இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு வந்த புகாரின்பேரில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவுறுத்தலின்படி, நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமையில் பிடாரி வடக்கு வீதி, தெற்கு வீதி மற்றும் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெகிழியால் ஆன 50 கிலோ பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை மற்றும் விரைவில் மக்கக்கூடிய பொருள்களை பயன்படுத்த பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கினார்.

    • தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழாநடந்தது.
    • விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் சோமனஅள்ளி கிராமத்தில் தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழாநடந்தது.

    வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். கோயமுத்தூர் வேளாண் விரிவாக்க கல்வி இயக்கக தலைவர் பேராசிரியர் ஆனந்தராஜா வயல் தின விழாவில் விளக்க உரையாற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் ஜீவஜோதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் மா, தக்காளி, குளிர் பிரதேச காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. ஏற்றுமதியும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் கோவை, பெரியகுளம், திருச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டுமே தோட்டக்கலை கல்லூரி இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை கல்லூரி தொடங்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

    அந்த அடிப்படையில் தற்போது ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் அனைத்து ஆய்வக வசதிகளுடனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற்றால் தான் விவசாயம் சிறப்படையும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது விவசாயிகளுக்கு சவாலானதாக உள்ளது.

    ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் படித்த விஞ்ஞானிகள் தரும் தகவல்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிர்களை தாக்கும் பூச்சிகள் விவசாயிகளின் கண்ணுக்கு தெரிந்த எதிரிகள்.

    அது மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் மண்ணுக்குள் மறைந்திருக்கும் புழுக்கள் பயிர்களை தாக்கி அழிக்கின்றன. இவற்றை மேலாண்மை செய்ய விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வேளாண் விஞ்ஞானி ஜீவஜோதி பேசினார்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முன்னோடியாக திகழ வேண்டும் என அரசு சிறப்பு செயலர் அறிவுறுத்தினார்.
    • அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற விளையும் மாவட்ட திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அரசு சிறப்பு செயலர் ஹர் சகாய் மீனா தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீரின் தரம் குறித்து நாள்தோறும் பரிசோதனை செய்து விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத்துவமனைகளை மேம்படுத்த மற்றும் தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் முறையை பற்றிய கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேவையான விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கி அனைத்து அரசு திட்டங்களையும் பெறும் வகையில் அலுவலர்கள் ஈடுபாட்டுடன் பணி செய்ய வேண்டும்.

    அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளை கவரும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சோப்பு பயன்படுத்தி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக வைத்துகொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை செய்ய வேண்டும். அடல் டிங்கர் ஆய்வகத்தில் மாண வர்களை அழைத்துச்சென்று உரிய முறையில் செய்முறை விளக்கம் காண்பிக்க வேண்டும்.இடைநிற்றலை தடுப்பதற்கு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடம் கல்வியோடு விளையாட்டின் முக்கியத்துவத்தை அறிவுறுத்த வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் அரசு புறம்போக்கு நிலங்க ளில் மரம் வளர்க்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னேற விளையும் திட்டங்களை தயார் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் திட்டங்களை செயல் படுத்துவதில் முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை 91,466 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.
    • தோ்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, காலத்தை முறையாக பயன்படுத்துங்கள்.

    தஞ்சாவூா்:

    பொதுத் தோ்வுகளை 91,466 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா். இவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம். சிவக்குமாா் கடிதம் எழுதி அனுப்பினாா்.

    அதில், தோ்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, காலத்தை முறையாக பயன்படுத்துங்கள். உங்கள் வெற்றிகளைக் கொண்டாட காத்திருக்கும், தஞ்சை மாவட்ட கலெக்டர், கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், இவா்களுடன் நான் என அனைவரும் உங்களின் நலனுக்காக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

    நீங்களும் சோ்ந்து ஓடத்தொடங்குவதோடு, எங்களையும் தாண்டிச் செல்லுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும், ஏற்றாற்போல் முறையான அட்டவணை போட்டு படிக்க தொடங்குங்கள். எனவே இலக்கை தீா்மானித்து படித்து வெற்றியை வசமாக்குங்கள்.

    கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 16-வது இடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 13-வது இடமும், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 21-வது இடமும் பிடித்தோம். மாணவ -மாணவிகள் அனைவரும் முறையாக வகுப்புகளுக்கு வந்து ஆசிரியர்கள் சொல்வதை படித்தாலே 100 சதவீதம் தேர்ச்சி அடையலாம். எனவே அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இக்கடிதங்களை தஞ்சாவூா் தென்கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமார் நேரில் கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பழனிவேலு, நாகேந்திரன், பள்ளி தலைமையாசிரியா் வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • விளையாட்டில் சாதிக்க சுய ஒழுக்கம் வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அறிவுரை வழங்கினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி ராஜ வித்ய விகாஸ். சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் 5-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அய்யப்பன் தலைமை தாங்கி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவர் பேசுகையில், இந்த பள்ளியில் விளை யாட்டுத்துறைக்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

    மாணவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இங்கு திரளாக கலந்து கொண்டுள்ள பெற்றோ ருக்கு நான் சொல்வ தெல்லாம் உங்கள் குழந்தை களை விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும். மாநில அளவில் சிறந்த பள்ளியாக உருவெடுக்க விளையாட்டு மிக முக்கியம் என்றார்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடை பெற்றது. மாற்றுத்திறனாளி களுக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இந்த கிரிக்கெட் அணியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் கிரிக்கெட் என்பது மிகப் பெரிய பொழுது போக்கு என்பது மட்டுமல்லாமல் வீரர்களுக்கு பெயர், புகழ் மற்றும் பணம் பெற்றுத் தருகிறது. ஒரு துறையில் சாதிக்க ஒரு வருடம் 2 வருடம் போதாது. எனது 14 ஆண்டு கால கடின உழைப்பிற்கு பிறகு தான் நான் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடிந்தது.

    உடல் குறைபாடு உள்ள நாங்கள் சாதிக்கும்போது மாணவர்களாகிய நீங்கள் எளிதில் சாதிக்க முடியும். ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை விளையாட்டின் மூலம் கிடைக்கபெற செய்ய முடியும். சுய ஒழுக்கம் விளையாட்டில் சாதிப்ப தற்கு முக்கிய காரணி என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் டாக்டர் ஐஸ்வர்யா தேவி வரவேற்றார். ஓட்ட பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டு பயிற்சி கலை நிகழ்ச்சிகளுடன் சிலம்பம், டேக்வாண்டோ உள்ளிட்ட வீர விளையாட்டுகளின் செயல் வடிவமும் இடம் பெற்றது. ஒட்டு மொத்த சாம்பிய னாக சிகப்பு இல்ல அணி தேர்வு செய்யப்பட்டது. நீல இல்ல அணி இரண்டாம் இடம் பிடித்தது. டிரஸ்டி பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயராஜா, அகாடமிக் இயக்குநர் டாக்டர் நிக்சன் அசரியா கல்லூரி முதல்வர் டாக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பழனியப்பன், மனோஜ் மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர். 

    • நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதற்காக மாவட்டத்திலுள்ள 15 வட்டாரங்களிலும், தினமும் 195 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் ப்ளு (இன்புளுயென்சா) போன்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், உடல்சோர்வு மற்றும் தொண்டை வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது.

    இந்த காய்ச்சல் 4-7 நாட்கள் முதல் 2-3 வாரங்கள் வரை தொடரும். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்திலுள்ள 15 வட்டாரங்களிலும், தினமும் 195 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சுகாதாரத்துறையினர் மூலமாக காய்ச்சல் பாதித்த கிராமங்களை கண்டறிந்து வட்டாரத்திற்கு 3 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் என 45 முகாம்கள் நடைபெற உள்ளது.

    மேலும் பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும், 2 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காய்ச்சல் பாதித்த நபர்கள், உடனடியாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகடை களில் மருந்து வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சல் பாதித்த நபர்கள் தனிமையில் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை கடைபிடித்ததால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை வழங்கினார்.
    • தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ சேகரன் தலைமை தாங்கி கூறியதாவது:-

    குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வருமே நுகர்வோர்தான். இத்தகைய நுகர்வோர் எந்த வகையிலும் அவர்கள் வாங்கும் பொருள்களினால் எவ்வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது. அத னடிப்படையில் ஒவ்வொரு வரும் தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங் கும்போது பொருட்களின் தரம் குறித்த விவரம், அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.தவறுகளை சுட்டிக்காட்டா மல் இருந்தால் மேலும் மேலும் தவறுகள் செய்வார் கள். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை கேட்டறிந்து உரிய நியாயம் கிடைக்கும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

    அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறிய கடையானாலும் சரி பெரிய நிறுவனமானாலும் சரி, நுகர்வோருக்கு தவறுகள் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக புகார் தெரிவிக்கும் பட்சத் தல் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட வரு வாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை.
    • தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    மேலும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர்கள்.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.

    இதையடுத்து தஞ்சை அண்ணாநகர் பகுதியில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைகவசம் உயிர்கவசம் என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அவ்வாறு ஓட்டினால் உயிரிழப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது, தலைகவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
    • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

    நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

    ×