search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "playback singer"

    • பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு.
    • தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

    இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி இலங்கையில் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை காலமானார்.

    இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணி அவர்களின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார்.

    கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது.

    பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணி அவர்களின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

    தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானி அவர்களுக்கும், பவதாரணி அவர்களின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
    • இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    பின்னணி பாடகி பவதாரிணி, தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர். இவரது மென்மையான குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

    இவர் திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி.

    பவதாரிணி அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய 'மயில்போல பொண்ணு ஒண்ணு..' பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

    முதன்முதலாக 'ராசய்யா அப்படீங்கற' படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

    இவர் நடிகை ரேவதி இயக்கிய 'மித்ர் மை பிரண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய 'பிர் மிலேங்கே' படத்திற்கும் இசையமைத்தார். இதுபோன்று சுமார் 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    மேலும், இவர் 'வெள்ளிச்சி' என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார். 

    அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டானது. மேலும், இவர் பாடிய கல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் 'முத்தே முத்தம்மா', தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய ஹிட்டான பாடல் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா..' என்பதாகும்.

    இதைத்தவிர, அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, டைம், பிரண்ட்ஸ், தாமிரபரணி, கோவா, மங்காத்தா உள்பட 23 படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளத்திலும் பவதாரிணி சில பாடல்களை பாடியுள்ளார்.

    இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

    • ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன் காலமாகி இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் அவர் காலமாகியுள்ளார். அவருக்கு வயது சுமார் 47.

    கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு மரணம் அடைந்தார்.

    இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. பவதாரிணியின் கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். தம்பதிக்கு குழந்தை இல்லை.

    ×