search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District collectors"

    • ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
    • சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் ஒழிப்பு, அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் உள்ள சுணக்கத்தை போக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் அடங்கிய கூட்டமும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டமும் நேற்று நடத்தப்பட்டது.

    இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

    இன்று மாலை வரை இந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

    • நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ், கடலூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை இணை செயலாளர் ஆனி மேரி சொர்ணா, அரியலூர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    * கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் கலெக்டராக பதவியேற்பார்.

    * வணிக வரித்துறை (உளவுப்பிரிவு) இணை கமிஷனர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, நாமக்கல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நில அளவை மற்றும் நில ஆவணத்துறை கூடுதல் இயக்குனர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், செங்கல்பட்டு கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * வணிக வரித்துறை இணை கமிஷனர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை கலெக்டராக மாற்றப்படுகிறார்.

    * தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷா அஜித், சிவகங்கை கலெக்டராக பதவியேற்பார்.

    * தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை இணை கமிஷனர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சேலம் ஜவ்வரிசி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் கலெக்டராக பொறுப்பேற்பார்.

    * ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

    தமிழகத்தில் 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள துறைகள் பற்றிய விவரம் வருமாறு:-

    * சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனர் டி.ஜி. வினய், தொழில்நுட்ப இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

    * தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண்மை ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் விவேகானந்தன், கைத்தறி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

    * ஆசியர்கள் தேர்வு வாரிய தலைவராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டார்.

    * நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டார்.

    * எழுதுபொருள் அச்சுத்துறை முன்னாள் கமிஷனராக இருந்த சுகந்தி அருங்காட்சிய ஆணையராக மாற்றப்பட்டார்.

    * ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, நிதித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    * நில நிர்வாக கூடுதல் ஆணையர் சுப்புலட்சுமி, வணிக வரிகள் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சர்வசிக்ஷ் அபியான் திட்ட இயக்குனர் ஆனார்.

    * தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, உள், மதுவிலக்கும் மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * நாமக்கல் மாவட்ட கலெக்டர் சிரேயாசிங், வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்கிறார்.

    * தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா, நகராட்சி நிர்வாக கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

    * ராஷ்மி சித்தார்த் ஜகாடே, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டார்.

    * பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கலின் சிறப்பு பணி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் நந்தகோபால், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    * நிதித்துறை துணை செயலாளர் லட்சுமி பாவ்யா தன்னீரு, வணிக வரிகள் மற்றும் இணை ஆணையராக (ஈரோடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

    * மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

    * திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    * மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

    * இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அதிகாரி இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனார்.

    * புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.

    * வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துறை தமிழ்நாடு சாலைகள் பிரிவு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டார். அவர், சென்னை கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
    • பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மேற்கொள்ளவும் பேரிடர் தடுப்பு பணிகளை தயார்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இது தமிழக கடற்கரை நோக்கி வருவதால் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

    வானிலை மையத்தின் முன் அறிவிப்பு எச்சரிக்கையின்படி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் முன் எச்சரிக்கைக்கான தடுப்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்க செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஓர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்.
    • போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

    போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஆட்சி பொறுப்பேற்றது முதற்கொண்டு போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை சில பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    இதனால் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனியாக மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டத்தை நடத்தி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிவு செய்தார்.

    இதையொட்டி அனைத்து மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகள் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக போதை பொருட்கள் உள்ளது. போதை பாதை அழிவுப் பாதை என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிவார்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனை பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி மொத்தமாக அதனுள் மூழ்கி விடுகிறார்கள்.

    இது அவர்களது சிந்தனையை அழித்து விடுகிறது. வளர்ச்சியை தடுத்து விடுகிறது. எதிர்காலத்தை பாழாக்கி அவர்களது குடும்பத்தையும் அழித்து விடுகிறது. இது சமுதாயத்தின்-நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது.

    போதை பொருளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் பேதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சம்பந்தமாக இதுவரை கூட்டம் கூட்டி உள்ளோம். இப்போது முதன் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கூட்டம் கூட்டி உள்ளோம்.

    போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்தாக வேண்டும்.

    போதை பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும். அதை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

    போதை பொருள் பயன்படுத்துபவர்களை போதையின் பாதையில் செல்லாமல் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை விட மகாராஷ்ராவை விட தமிழ்நாட்டில் குறைவுதான் என்று சொல்வதில் நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.

    உடலுக்கு கெடுதியானது போதைப்பொருள். அதனால் கெடுதல் என்ற பொருளில் நான் சொல்கிறேன். போதை என்பது தனிமனித பிரச்சினை அல்ல. சமூக பிரச்சினை. இதை தடுத்தாக வேண்டும். போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும்.

    போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒருசேர சமூகம் இயங்கினால்தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும்.

    எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

    ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள்.

    போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதி போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் நாளை (11-ந்தேதி) பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் திரையிடப்பட உள்ளது.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைய சமுதாயத்தினரிடம் முழுமையாக கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் கருத்துக்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    தமிழகம் முழுவதும் செயல்படும் அரசு மற்றும் தனியார் முதியோர் காப்பகங்களை கலெக்டர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 18-க்கும் மேற்பட்ட தனியார் முதியோர் காப்பகங்கள் உள்ளன. அதில் தபோவன் என்ற முதியோர் காப்பகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமூக நலத்துறையின் விதிமுறைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. மாறாக, பணம் பறிக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர்.

    இதனால், தங்களின் பணத்தை 5 ஆண்டுகளுக்கு பின்னர் யாரிடம் பெறுவது என தெரியவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் சம்மந்தப்பட்ட முதியோர் காப்பகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் நேரில் ஆஜராகி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதில் திருப்தி அடையாத நீதிபதிகள் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு காப்பகங்களை சமூகநலத்துறை முதன்மைச் செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதேபோல மற்ற மாவட்டங்களிலும் கலெக்டர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். #MadrasHC
    ரேசன் கடைகளில் வரும் 7-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. #PongalGift #TNGovt
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது.

    இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு 1.98 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை பொது மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது பற்றி உணவு பொருள் வழங்கல் ஆணையாளர் சோ.மதுமதி மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இருப்பதால் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

    இப்பணி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கி பொங்கலுக்கு முன்னர் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். ரே‌சன் கடைகளில் 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைத்தாரர்கள் அதிக எண்ணிக்கையில் ரே‌சன் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும்.

    1000 குடும்ப அட்டைத்தாரர்கள் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக குறிப்பிட்டு குடும்ப அட்டை எண்ணிக்கை அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பிரித்து வழங்க வேண்டும்.

    பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வங்கி வழியாக செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினமும் ரொக்கமாக பெற்று ரே‌சன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.

    சென்னை உள்பட 10 மாநகராட்சிகளில் பொங்கல் பரிசை விரைவாக வழங்கிட கூடுதல் பணியாளர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஒரே இடத்தில் பல ரே‌சன் கடைகள் இருந்தால் கூடுதல் மேஜை நாற்காலிகளை அமைத்து கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.

    கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அந்தந்த பகுதி காவல் துறை ஒத்துழைப்பையும் பெற வேண்டும்.

    பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த தேதியில் ரே‌சன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரு வாரியாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்கான தகவல்கள் தெளிவாக ரேசன் கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

    இறுதியான ஓரிரு நாட்களில் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்க தொகையான 1000 ரூபாயும் ஒரே நேரத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

    அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கப் பணத்தை முடிந்தவரை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1000 ரூபாய் ரொக்கப்பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) பதிவு செய்த பின்புதான் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களது குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம்.

    அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவு சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிட வேண்டும்.

    குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்புதல் பெற வேண்டும்.

    குடும்ப அட்டைத்தாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தவறாமல் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கப்பணம் அனைவருக்கும் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் ரே‌சன் கடைகளில் நெரிசல் ஏற்படும் வகையில் கூட வேண்டாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு தினமும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரே‌சன் கடைகளில் வழங்கப்படும். 5.30 மணி அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.

    அந்த டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வரிசையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 5.30 மணி அளவில் வரிசையில் வந்து நின்ற அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைத்தாரர்கள் யாரையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வருகின்ற வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்கக் கூடாது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.

    பரிசுத் தொகுப்பு வாங்க வரும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பெற்று செல்ல வேண்டும். தேவையில்லாமல் வரிசையை விட்டு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் காவல் துறை பாது காப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1000 ரூபாய் ரொக்க விநியோகம் குறித்தும் புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். ஏதாவது புகார்கள் வந்தால் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்க உரிய வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த அலுவலரிடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை அவர்களது தொலைபேசி எண்ணுடன் குறிப்பிட வேண்டும். கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும்.

    அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முறையாக சென்று அடைவதை உறுதி செய்ய வட்ட அளவில் துணை கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 சரியாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு தகவலை 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை நடமாடும் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 1000 ஆகியவை சரியானபடி வழங்கப்பட்டுள்ளதா? என்பது சரிபார்க்கப்பட வேண்டும். தவறுகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

    தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 விநியோகிக்கப்பட்ட நபர்களிடம் பரவலாக ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் பொது விநியோக திட்டத்தின் கீழ் செய்யப்படும் அன்றாட பணிகளுக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு ஆணையாளர் மதுமதி அந்த சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.  #PongalGift
    நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த அருள்நிதி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை திருப்பரங்குன்றம், அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    எனவே நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

    எனவே இந்த வழக்கில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்களை அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

    இந்த குழுவானது மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைக்க உத்தரவிடப்படுகிறது.

    குழுவினர் நீர்நிலைகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்க 5 மாவட்ட கலெக்டர்கள் வருகிற 11-ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  #MaduraiHC
    மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே வி ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பெண் பயனாளிகளுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,


    மறைந்த ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பாலித்தீன் பயன்படுத்தாத ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் கல்வித்துறையை பொறுத்தமட்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடையை நேற்று முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

    வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் நான்கு வகையான இலவச சீருடைகள் வழங்கப்படும். 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் இலவச சைக்கிள் வழங்கப்படும். 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வு கூடமான அடல் லேப் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினிமயப்படுத்தவும் ‘யூ டியூப்’ மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த தேசிய தூய்மை பள்ளிகள் தமிழகத்தில் 6 பள்ளிகளும் பாண்டிச்சேரியில் இருந்து பள்ளிகள் மற்றும் குஜராத்தில் ஐந்து புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழகத்திலுள்ள 54 ஆயிரம் பள்ளிகளும் தூய்மையாக தான் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலத்தில் எவ்வாறு பள்ளிக்கு வந்து செல்வது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். #TNElectionsCEO #SatyabrataSahoo
    சென்னை:

    சென்னையில் 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் தங்களது பெயர்களை சேர்க்க மனு செய்துள்ளனர்.

    முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.


    சிறப்பு முகாம்கள் மட்டுமின்றி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 8 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

    மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கமி‌ஷனர் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள், உதவி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பெயர் சேர்ப்பு எந்த அளவுக்கு உள்ளது? சிறப்பு முகாம்களில் அரசியல் கட்சியினர் எவ்வளவு மனு கொடுத்துள்ளனர். இதில் தகுதியான மனுக்கள் எவ்வளவு போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #TNElectionsCEO #SatyabrataSahoo
    ×