search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alignment"

    • புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கால்வாய் அமைத்து 65 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இரு புறமும் உள்ள கான்கிரீட் சிலாப்புகள், மடைகள் உடைந்தும், நீர் வீணாவது அதிகரித்துள்ளது. அதே போல் கால்வாய் செல்லும் வழியின் குறுக்கே, ஓடைகளில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைத்துள்ள சுரங்க வழித்தடங்கள் மற்றும் மேல் நீர் போக்கிகள் சிதிலமடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

    எனவே பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரதான கால்வாயில், பெருமாள்புதுார் முதல் சாளரப்பட்டி வரை 13.50 கி.மீ., நீளத்துக்கு புதுப்பிக்க 4.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில் அதிகம் சேதமடைந்துள்ள 13.50 கி.மீ., நீளம் உள்ள பகுதிகளில் 20 மதகுகள், 7 சுரங்க நீர் வழிப்பாதைகள், 2 மேல் நீர் போக்கி அமைப்புகள் மற்றும் கான்கிரீட் கரைகள் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர். அமராவதி அணையில் துவங்கி 64 கி.மீ., தூரம் அமைந்துள்ள பிரதான கால்வாயில் பெரும்பாலான பகுதிகளில், கான்கிரீட் கரைகள் மண் கால்வாயாக மாறி, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சுரங்க நீர் வழித்தடங்கள் அமைந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து ஒவ்வொன்றாக உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கால்வாயிலுள்ள பெரும்பாலான மடைகள், உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் படிகளுடன் காணப்படும் கரைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் பாதித்து வருகின்றனர். எனவே முழுமையாக கால்வாயை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலை மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இணைப்பு சாலை

    இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும்.

    ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விஷ சந்துக்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    போர்க்கால அடிப்படையில்....

    இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக மாலைமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அதனை சீரமைத்து கொடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு அங்கமாக அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் 1309 ரெயில் நிலையங்களை உலக தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற பெயரில் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு. சேலம், தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளா மாநிலத்தில் 5, கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு என 25 ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    மேற்கூறிய ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணியை இன்று காலை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் மெகா திரையில் அடிக்கல் நாட்டு விழா நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டன.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது ரெயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மெகா திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த திட்டத்திற்கான கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கல்யாண சுந்தரம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், பொன்மலை ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மாநகராட்சி கவுன்சிலர் மேத்தா, மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவகுமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மட்டும் மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை ரெயில் நிலையம் முற்றிலும் சீரமைக்கப்படுகின்றன.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆவின்பாலகத்திற்கு அருகே நவீன வசதிகளுடன் கழிவறை வசதி செய்யப்பட உள்ளது. தற்போது இருக்கக்கூடிய பார்சல் அலுவலகம் ரெயில் நிலையத்தின் பின்புற பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் இருந்த இடத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக உயர்நிலை நடைபாலம்,

    நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன. தஞ்சை ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின்கம்பத்தின் அடி பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து காணப்படுகிறது.
    • இதனால் அப்பகுதியில் பெரும் காற்று வீசுகையில் மின்கம்பம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கடை வீதியில் வணிக கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் விநியோக்கும் பொருட்டு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மேல் பகுதி நல்ல நிலையில் உள்ளது. அதன் அடி பகுதியில் கட்டி வைக்கப் பட்டிருந்த சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் காற்று வீசுகையில் மின்கம்பம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மின் கம்பம் சரிந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்ப த்தின் அடி பகுதியில் சிமெண்ட் பூச்சு மூலம் கட்டி வலுவான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • குளத்தை சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோயில்பத்து 9 -வது வார்டில் தாடளான் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள குளத்தை கலைஞர் நகர்புற

    மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூர்வாரி சீரமைக்க ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

    குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குளத்தை சீரமைக்கும் பணி தாமதம் அடைந்து வருகிறது.

    குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் சிப்பாய் தெருவில் வடிகால் வாய்க்கால் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதன் கார ணமாக கால்வாயில் சரியான முறையில் கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாந கராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவுநீர் கால்வாய் உடனடி யாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் அப்பகுதியில் சாலையோரமாக வசித்து வரும் மக்கள் துணை மேயர் தாமரைச்செ ல்வனிடம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட ர்பாக அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது வி.சி.க நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் சம்பத், பிரேம், துரை, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் என்ற கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூர் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்றெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கி றது.

    இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டன.

    ஆனால் அந்த பணிகள் முடியவில்லை. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    இதனால் பழைமை மாறாமல் இந்த கோவிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களால் அதற்காக திட்ட மிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன.

    கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவிகளை வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும். எனவே பழையை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.
    • ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.

    அவினாசி:

    சமூக ஆா்வலரும், வக்கீலுமான திருமூா்த்தி முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: -

    அவிநாசி வட்டம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராமியம்பாளையம்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ராமியம்பாளையம், சாலைப்பாளையம், ஓடத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து 2 முதல் 5 வயது வரையிலான 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனா்.

    50 ஆண்டுகளுக்கு முன் கருங்கல்லாலும், ஓடுகளால் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மிகவும் பழுதடைந்து, மின் இணைப்பு கூட இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளது.மேலும் தற்போது ஓடுகள் உடைந்தும், சுவா்கள், தரைகள் தளம் இடிந்தும் உள்ளதால் மழை நீா் மையத்துக்குள் வழிகிறது.தரை ஓதத்தினால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

    இதனால் குழந்தைகள் உட்காா்ந்து பயிலவோ, ஓய்வெடுக்கவோ, விளையாடவோ கூட இடமின்றி உள்ளதால், பெற்றோா் மிகவும் அச்சமடைந்துள்ளனா்.ஆகவே சிதிலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.
    • பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மேலபனையூர் தெற்கு தெரு கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சுடுகாடு அமைந்துள்ளது.

    இந்த சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மூன்று பாசனவாய்க்கால் செல்கிறது.

    இந்த மூன்று வாய்க்காலிலும் பாலம் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.

    இதனால் தெற்கு தெருவில் இறந்தவரின் உடலை சேறு- சகதியும் நிறைந்த வயல் வழியாக சுடுகாட்டிற்கு தகனம் செய்ய எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே சுடுகாட்டிற்கு செல்லும்.வழியில் உள்ள பாசன வாய்க்கால்களில் பாலம் அமைத்து சாலையை தார் சாலையாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டில் தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
    • போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும்.

    திருப்பூர்:

    சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டத்தை கையிலெடுக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பா.ஜ.க. ஆண்டிபாளையம் மண்டல் தலைவர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல உதவி கமிஷனர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    இடுவம்பாளையத்திலிருந்து வித்யாலயம் மற்றும் பாரப்பாளையத்திலிருந்து முருகம்பாளையம் செல்லும் சாலைகளில், பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஓராண்டுக்குமுன் குழி தோண்டப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ரோட்டை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • கலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது.
    • மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு நத்தம் ஏரியிலுள்ள 10 அடி கலங்கில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்த தண்ணீர் வரும் வழியில் தற்போது 2 அடி உயரத்திற்கு தார்சாலை அமைத்தும் கலங்கல் பகுதியில் செங்கல்சூளை கற்கள் பெருமளவுக்கு குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்தகலங்கல் வழியாக மணப்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டது. மணப்பாக்கம் ஏரி நிரம்பினால் தண்ணீர்வரும் வழியில் உள்ள நத்தம், மேல்அருங்குணம், மனம் தவழ்ந்தபுத்தூர், ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    மேலும் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக தண்ணீர் சென்று சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பண்ருட்டி நகரம், திருவதிகை வரையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

    எனவே தற்போது வரையில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரால் ஏரியை நிரப்பி மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும் என்று மணப்பாக்கம் விவசாயி ஜானகிராமன் கடலூர் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தார்

    இந்த செய்தி மாலைமலரில் வெளி வந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர்அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.மணப்பாக்கம் ஏரிக்குதண்ணீர் செல்லும்கலங்கல் வாய்க்காலை தற்காலிகமாக சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து தற்போது மணப்பாக்கம் ஏரிக்குநீர்வரத்து துவங்கியுள்ளது.இதனால்விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிரந்தர ஏற்பாடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×