என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது.
- இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைக்கு தமிழக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடை தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தில் பாரபட்சத்துடன் திட்டங்களை ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் ஆனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடிய கட்சிக்காரர்களுக்கு மட்டும் வரிப்பணத்தை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டங்களில் பாரபட்சம் இல்லாமல் வரிப்பணத்தை செலவு செய்வதுதான் அரசின் ஜனநாயக இலக்கணம்.
மக்கள் வரிப்பணத்தை கட்சிக்காரர்களுக்கும், தங்களுக்கு வாக்களிப்பவர்களுக்கும் மட்டும்தான் தேடி பார்த்து விதிகளை திருத்தி உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயை தி.மு.க. அரசு கொடுப்பதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இந்த திட்டத்தில் பாரபட்சமாக செயல்படுவதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்துடன் மக்களைப் பற்றி சிந்திக்காமல் தேர்தலுக்காக திட்டங்களை விரிவுபடுத்தி ஸ்டாலின் அறிவிக்கிறார்.
இன்றைக்கு தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகமே போராட்டக் களத்தில் உள்ளது. ஆனால் அவர்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. கடைக்கோடியில் திட்டங்களை சேர்க்க ஆர்வம் காட்டாமல், தி.மு.க.வின் மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, இளைஞர் மாநாடு என மாநாட்டு பந்தலுக்கு அக்கறை காட்டுகிறார்.
இன்றைக்கு ஊர் தோறும் கருணாநிதி சிலையை திறந்து கருணாநிதிக்கு விளம்பரம் செய்கிறார்கள். அதே போல் அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டி ஸ்டாலின் அழகு பார்க்கிறார். இன்றைக்கு கருணாநிதிக்கு விளம்பரம் தேடும் அரசாக உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம் என்ற நிலையை உருவாக்குவார்கள் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
- இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
- அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரெயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு முக ஸ்டாலின்-ன் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.
அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் முக ஸ்டாலின் அவர்களே?
கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
- நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.
நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.
நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.
அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.
அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன.
- குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட எத்தனை சீட்டுகள் எண்ணிக்கை என்பது முக்கியமில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் வளா்ந்து விடக்கூடாது, சாதி-மத மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருறோம்.
ம.தி.மு.க. எத்தனை சீட்டுகளில் போட்டியிட வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும். உரிய எண்ணிக்கைக்கான சீட்டு எங்களுக்கு தி.மு.க. வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
ம.தி.மு.க. எப்போதும் தி.மு.க. கூட்டணியுடன் நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வேறு எந்த கூட்டணியில் இருந்தும் அழைப்பு வந்ததா? என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. மதவாத சக்திகள் தமிழகத்தில் கால் பதிக்கும் சூழ்நிலையில், எங்களது கூட்டணி உறுதியாக உள்ளன.
கடந்த 7 ஆண்டுகளில் மதவாத சக்திகள் வளர்ந்து விட்டன. அதனை வளர விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜனநாயக சக்திகள் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளாம். அவர் மதவாத சக்திகளை எதிர்க்கிறார். விஜய் அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விடக்கூடாது. மதவாத சக்திக்கு எதிரான தி.மு.க. கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும்.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் இணைய மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே மதவாத சக்திக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டை எடுத்துள்ளார். மேற்கு வங்காளம், தமிழகத்தையும் கைப்பற்றுவோம் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார்.
எஸ்.ஐ.ஆர். மூலம் தமிழகம், உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு இடங்களில் தகுதியான வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கான காலக்கெடு தான் குறைவு. அதில் உள்ள குறைபாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.
இப்படி குறுக்குவழியில் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தலாம் என அமித்ஷா நினைக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது தகுதியான வாக்காளர்களை நீக்கி விடக்கூடாது என்பது தான் எங்களது அச்சம். ஏனெனில் இத்தகைய தவறுகள் ஒருசில மாநிலங்களில் நடந்துள்ளது. அது தமிழகத்தில் நடந்து விடக்கூடாது என்றார்.
இறுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு குறைந்த தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறதே என்று கேள்விக்கு, "எங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும். அதுகுறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது கூட்டணி தலைமையிடம் எங்கள் கட்சி தலைமை பேசும்.
தொகுதி எண்ணிக்கை குறைந்தால் யாருக்கும் சந்தோஷமாக இருக்காது. எண்ணிக்கை கூடினால் சந்தோஷப்படுவோம். தொகுதி எண்ணிக்கை குறைப்பு தொடர்பாக தி.மு.க. எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.
- தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய்.
- ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொண்டு 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து எழுச்சிப்பயணம் மேற்கொண்டார்.
ஆறாவது கட்டமாக இன்று திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், ராஜீவ்காந்தி ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் அமைந்திருக்கும் இஜ்திமா திடலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இபிஎஸ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக-வை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்னார், அந்த திமுகவை அகற்றவே அதிமுகவை தோற்றுவித்தார். அந்த லட்சியத்தைக் கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களின் லட்சியமும் திமுகவை அகற்றுவதுதான்.
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால் விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடியப்போகிறது. திமுக ஆட்சியை அகற்றுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள் தான் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் 5% பணிகள்தான் நிறைவேற்றப்பட்டதாம்.
ஸ்டாலின் பேசிய கள்ளக்குறிச்சியே அதிமுக ஆட்சியில்தான் உதயமானது. காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டுத்தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம், அதிமுக ஆட்சியில் 5% அல்ல, 95% வாக்குறுதிகள் நிறைவேற்றியிருக்கிறோம். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததில் 5% மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்கள் கோரிக்கையை ஏற்று மாவட்டம் தொடங்கி புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தோம். செங்கல்பட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டினோம். விவசாயிகளுக்கு ஏராளமான திட்டம் கொடுத்தோம்.
தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவேன் என்றார் ஸ்டாலின். அப்படி உயர்த்தினாரா? பொய். இன்று மத்திய அரசு அதிமுக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 125 நாளாக உயர்த்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார், அதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலையும் கொடுக்காத அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 125 நாள் என்பது 150 நாளாக உயர்த்தியும், சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும், தடையில்லாமல் வேலை வழங்கப்படும். இதுதான் அதிமுகவின் லட்சியம்.
100 நாள் வேலைத்திட்டம் குறித்து ஸ்டாலின் தவறான அவதூறைப் பரப்புகிறார், திட்டம் ரத்து செய்யப்படுவதாக பச்சைப்பொய் சொல்கிறார்.
125 நாளாக உயர்த்தியதை 150 நாளாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றுவோம். அதிமுக ஆட்சி அமைந்ததும். ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக செயல்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
- 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வரும் 31-ந்தேதி காலை 10 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் இன்று முதல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பல்பாக்கி சி. கிருஷ்ணன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும்,
- "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.
அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதிலடி, பொம்மை முதல்வரை கதற விட்டிருக்கிறது போலும். வழக்கம்போல தனது ஆஸ்தான கொத்தடிமை ரகுபதியை ஏவிவிட்டு, பதில் தருகிறேன் என்ற பெயரில் புலம்பித் தள்ளியுள்ளார்.
ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அஇஅதிமுக-விடம் எத்தனை அடி வாங்கினாலும், "இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்" என்று Wanted-ஆக வண்டியில் ஏறுவதே இந்த ஒட்டுண்ணியின் வேலையாக மாறிவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெயர் மட்டும்தான் வைத்தோமாம். எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத்தான் தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாத மக்கு மந்திரிதான் ரகுபதி.
எடப்பாடி பழனிசாமியின் பதிவில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியைப் பற்றி பேசியதை Convenient-ஆக மறந்துவிட்டீர்களே ஒட்டுண்ணி ரகுபதி?
உங்கள் ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பரிதாபமாக உயிரிழந்த போது நீங்களோ, உங்கள் பொம்மை முதல்வரோ கள்ளக்குறிச்சி பக்கம் கால் வைத்தீர்களா? அந்த தைரியம் உங்களுக்கு இருந்ததா? அப்போதெல்லாம் பங்கருக்குள் ஓடி ஒளிந்துகொண்டு, இப்போது தேர்தல் ஜூரத்தில் மேடை போட்டு காலரைத் தூக்க உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
அஇஅதிமுக ஆட்சியால் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல், சேலம் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் வரை கருணாநிதி பெயரைக் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிய கொத்தடிமைக் கூட்டமெல்லாம், எங்களைப் பற்றி பேசுவதா?
இன்றைய தினம் இடைநிலை ஆசிரியர்கள் போராடுவது யாரால்?
தேர்தல் வாக்குறுதி எண்- 311-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?
செவிலியர்கள் போராடுவது யாரால்?
தேர்தல் வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றாத உங்களால் தானே?
தூய்மைப் பணியாளர்கள் போராடுவது யாரால்?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக-வால் தானே?
அரசு ஊழியர்கள் போராட்டம் யாரால்?
"பழைய ஓய்வூதிய திட்டம்" (வாக்குறுதி எண்: 309) என்று வாய்கிழிய பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாற்றிப் பேசும் உங்களால்தானே?
அது சரி, வேட்டியை மாற்றியதும் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, கொத்தடிமையாக மாறிய மங்குனி அமைச்சர் ரகுபதி போன்றோர் இருக்கும் கட்சிதானே திமுக? இவர்கள் நடத்தும் விடியா ஆட்சி வேறெந்த லட்சணத்தில் இருக்கும்?
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட முடியாத, மாஸ்க் அணிந்துகொண்டு வாழ்ந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லேப்டாப் கொடுக்கவில்லை என்று ரகுபதி கேட்பதெல்லாம், திமுக என்ற மங்குனிகளின் கூடாரம் எவ்வளவு பெரிய முட்டாள்களை வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
"வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டுமா?" என்கிறார் அமைச்சர் மா.சு. "5 ஆண்டுகள் ஆகும் போதுதான் நிறைவேற்றுவோம்" என்கிறார் ரகுபதி. நாங்கள் கேட்கிறோம்- உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே இல்லையா?
2025 கடைசியில் வந்து, கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்கிறீர்களே... 2021-22, 2022-23, 2023-24, 2024-25 என இத்தனை கல்வியாண்டுகள் லேப்டாப் கிடைக்காமல் போன அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாவம் இல்லையா? லேப்டாப் கிடைக்காத தற்போதைய கல்வியாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன கிள்ளுக்கீரையா?
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி பேசும் பேச்சா இதெல்லாம்? இவருக்கெல்லாம் சட்ட அமைச்சர் என்ற பொறுப்பு வேறு- வெட்கக்கேடு!
சீனியர் கொத்தடிமை ரகுபதி அவர்களே- உங்கள் தலைவருக்கு, அதான்.. அந்த ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வருக்கு.. தெம்பு, திராணி, வக்கு, வகையிருந்தால் சட்டப்பேரவையை முழுமையாக நேரலையில் காட்டச் சொல்லுங்கள். நேருக்கு நேர் நின்று பேசுவது யார், சபாநாயகருக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் தொடைநடுங்கி பொம்மை யார் என்பதை தமிழக மக்களும் பார்த்து ரசிப்பார்கள்! சிரிப்பார்கள்!
இவர்தான் இப்படி என்றால், ஸ்டாலினின் தங்கையான கனிமொழியோ, "எடப்பாடியாருடன் விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு நேரம் இல்லை" என்று ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.
வாக்கிங் போக, போட்டோஷூட் எடுக்க, சினிமா பார்க்க, அதற்கு ரிவ்யூ எழுத, இன்பச் சுற்றுலா போக என இதற்கெல்லாம் நேரம் இருக்கும் பொம்மை முதல்வருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு நேருக்கு நேர் நின்று பதில் சொல்ல மட்டும் நேரம் இல்லையோ?
அப்படியே நேரம் இல்லாதவர்தான் என்றால், அப்புறம் எதுக்கு OPEN CHALLENGE என்று வாய் சவடால் விட்டுக்கொண்டு இருக்கிறார் உங்கள் அண்ணன்?
அவ்ளோ பயம் இருக்குல்ல...
அதை அப்படியே Maintain பண்ணுங்க!
இவ்வாறு அதிமுக கடுமையாக சாடியுள்ளது.
- திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
- எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இதுவரை பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது சுற்றுப்பணத்தை அவர் முடித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்த பிறகு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி தனது பலத்தை அங்கும் காட்டினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
இதுவரை 175 சட்டமன்ற தொகுதிகளில் தனது பிரசாரத்தை முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மாலையில் 176-வது தொகுதியாக திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக திருப்போரூர் அருகில் உள்ள தையூர் பகுதியில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மேடையில் எடப்பாடி வருவதற்கு முன்பு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட சுற்றுப்பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வரும் பஸ்சில் இருந்தபடியே பேசுகிறார்.
திருப்போரூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சோழிங்கநல்லூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். பிரதான சாலையில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி. கந்தன் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்து உள்ளார். 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் காலி இடம் ஒன்று தயார் செய்யபபட்டு உள்ளது.
எடப்பாடி பழனசாமி வேனில் நின்று பேசுவதற்கான இடமும், பொதுமக்கள் திரண்டு நிற்பதற்கான இடமும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாலை நேரத்தில் வருவதால் அந்த பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளன.
பெருங்குடியில் இருந்து பிரசாரம் நடைபெறும் எம்.ஜி.ஆர். சாலை வரை வரவேற்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நாளை மறுநாள் திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
திருத்தணி அருகே உள்ள வீரகநல்லூர் பகுதியில் (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வதற்காக மைதானம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் இருந்தபடியே அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர் அருகில் உள்ள திடலில் மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இதன் பிறகு சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி மாலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரப்பேட்டையில் திறந்தவெளி மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொகுதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளும் 180-வது சட்டமன்ற தொகுதியாகும்.
இதுவரை 6 கட்டங்களாக தனது பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ள எடப்பாடி பழனிசாமி 7-வது கட்டமாக சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் நாளை முதல் சுற்று பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமர வேல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, சிறுணியம் பலராமன், திருத்தணி கோ. அரி, ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நாளைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
- பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது.
திருச்சி:
பெரம்பலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளளாரே?
பதில்: தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் ஒரு கூட்டணியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என கூறுவது நகைப்புக்குரியது.
கேள்வி: கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு. தற்போது உங்கள் நிலைப்பாடு?
பதில்: இதற்கு ஏற்கனவே பலமுறை பதில் தெரிவித்து விட்டேன். ஒரு கட்சி முன்கூட்டியே வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல. உரிய நேரத்தில், முறைப்படி முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். சில நிலைப்பாடுகளை காலம், நேரத்தை கருத்தில் கொண்டுதான் எடுக்க முடியும்.
கேள்வி: பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கு வரும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
கேள்வி: தொடர்ந்து செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்களே?
பதில்: செவிலியர்களுக்கான போராட்டம் முடிந்து விட்டது. அதற்கு அமைச்சர் பணி நிரந்தரமும் குறித்தும் தெரிவித்துவிட்டார். தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். தொடர்ந்து அதே கோரிக்கை இப்போதும் முன் வைக்கிறேன். அதனை முதலமைச்சர் பரிசிலீக்க வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவு அளித்துள்ளோம்.
கேள்வி: தி.மு.க.வில் தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்பது போல தாங்கள் பேசியிருப்பது குறித்து?
பதில்: தி.மு.க.வுக்கு சிலர் பரிந்து பேசுகிறோம் என்றும், முட்டுக் கொடுக்கிறோம் என்றும் விமர்சனங்கள் வெளிப்படையாக வருவதால், நாங்கள் அதற்காக பேசவில்லை. கருத்தியலுக்காக பேசுகிறோம். நாங்கள் உள்வாங்கிக் கொண்ட சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியல். அதுதான் எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண் டாம் பட்சம்தான் என்பதை சொல்வதற்காக அதனை அழுத்திக் கூறினேன்.
கேள்வி: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர் மீது தேவாலயத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது?
பதில்: இதற்காகத்தான் பா.ஜ.க. வளரக்கூடாது என்று சொல்கிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்துவ மக்கள் மீதும், கிறிஸ்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதுதான் பாசிசம் என்பதற்கு சான்று. இப்படி நடக்கும் என்று பிரதமருக்கு தெரியும். இதை திசை திருப்பவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
ஒருபுறம் சனாதான சக்திகள் தாக்குதல் என்ற ஒரு அவலம் நடக்கிறது. மறுபுறம் மதவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புக்கள் துணை போகிறது. அவர்கள் மத வெறியர்களை காலூன்று வைக்க போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே, அ.தி.மு.க. தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும், பெரியார் அரசியலும் காணாமல் போய் விடும். நான் பெரியாரின் பிள்ளை, அம்பேத்கரின் பிள்ளை. சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுகிறார்கள் என்பதை கூறுகிறேன். அவர்கள் அரசியல் போக்கும், செயல்பாடும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதாக இருக்கிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ மக்களின் மீதான தாக்குதல் பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா? கொள்கை எதிரி என்றால் கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறதா, இல்லையா. அவர்களை கண்டிக்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருக்கிறது.
பிராமண கடப்பாரையைக் கொண்டு பெரியார் இடத்தை தகர்ப்பேன் என்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இது சாதாரண அரசியல் அல்ல, பெரியார் அரசியல் என்பது எளிய மக்களின் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல். அதனை தகர்ப் பேன் என்பது எப்படிப்பட் டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் அரசியல். அவர்கள் பிராமணர்களின் கடப்பாரையை எடுத்து செயல்பட போகிறாரார்களா, அல்லது அவர்கள் பிராமணர்களுக்கு கடப்பாரையாக மாறப்போகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பேசுவது சனாதான அரசியல் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இது தி.மு.க. அரசியலுக்கு எதிரான கருத்தல்ல, எல்லோரும் பேசுகிற கருத்திற்கு எதிரானது. தி.மு.க.விற்காக நான் பேச வில்லை, நாங்கள் பேசுகிற அரசியலுக்கு எதிரான கருத்தாகும்.
கேள்வி: தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தார்?
ப: பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் என்ஜினீயரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா?
- பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே...
நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!
அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே-
நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.
இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!)
அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...
என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?
அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?
OPEN CHALLENGE IS STILL ON! என்று கூறியுள்ளார்.
- கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
- வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்திற்கு களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் லண்டன் வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி முன்னாள் செயலாளர் விசு (எ) விசுவாசி துறைமுகம் கிழக்கு பகுதி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஏ.ஏ.கலையரசு ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழகத்தினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
எழும்பூர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ.சம்பத் குமார், பகுதி மகளிர் அணி செயலாளர் எம்.இளவரசி, பகுதி மாணவர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் புரசை கிருஷ்ணன் ஆகியோர் இன்று முதல் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் எழும்பூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் புரசை எம்.கிருஷ்ணன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






