என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை.
    • எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள்.

    சிவாயநம என்று சொல்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பது ஆன்மிக சித்தாந்தம். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள்தான் சித்தர்கள். அவர்களின் வழி வந்தவர்தான் கடுவெளி சித்தர். அவர் தங்கியிருந்த இரும்பை என்ற ஊரில் உள்ளது மாகாளீஸ்வரர் திருக்கோவில்.

     தல வரலாறு

    சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். சோழ மன்னர்கள் காலத்தில் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தல இறைவனான சிவபெருமான், சிவலிங்க வடிவத்தில் மாகாளீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மகாகாளர் என்கிற முனிவர் இக்கோவிலின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். எனவே அவரின் பெயராலேயே 'மகாகாளேஸ்வரர்' என்றும், '`மாகாளீஸ்வரர்' என்றும் பெயர் பெற்று விளங்குகிறார். இவரது உற்சவர் திருநாமம், சந்திரசேகரன் என்பதாகும்.

    இவ்வாலய நாயகி, குயில் மொழி நாயகி என்று அழைக்கப்படுகிறார். சுந்தர நாயகி என்ற பெயரும் உண்டு. மதுரை புராண காலத்தில் இந்த ஊர், 'திரு இரும்பை மாகாளம்' என அழைக்கப்பட்டது. இரும்பன், இரும்பாறை ஆகிய இரண்டு அசுரர்களை காளி அவதாரம் எடுத்து, பார்வதி தேவி வதம் செய்தாள். இதனால் அன்னைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் விலக அன்னை இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். இதையடுத்து அன்னையின் தோஷம் நீங்கியதாக சொல்லப்படுகிறது.

    முற்காலத்தில் இவ்வூரில் கடுவெளி சித்தர் தங்கியிருந்தார். அந்த காலத்தில் அவ்வூரில் மழையே பெய்ய வில்லை. முனிவரின் கடுமையான தவத்தின் காரணமாகத்தான் மழை பெய்யவில்லை என்று எண்ணிய அப்பகுதி மக்கள், ஒரு நடன மங்கையை அழைத்து வந்து, முனிவரின் தவத்தைக் கலைத்தனர். சலங்கை ஒலியும், இசை சப்தமும் முனிவரின் தவத்தைக் கலைத்தது. தன் தவம் கலைந்ததால் கடுவெளி சித்தர் பெரும் கோபத்துடன் மக்களைப் பார்த்தார்.

    இதனால் பயந்துபோன மக்கள், உங்களின் தவத்தால் தான் ஊரில் மழைப்பொழிவு இல்லை என்று எண்ணியதாலும், ஊரில் மழை பெய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும்தான் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இதனால் மனம் இரங்கிய கடுவெளி சித்தர், அந்த ஊரில் சிவ தொண்டு செய்தார். அதன் பயனாக அந்த ஊரில் நல்ல மழை பெய்து, பஞ்சம் நீங்கியது.

    ஒரு முறை உரில் சிவன் பெருவிழா நடந்தது. இறைவனை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அந்த ஊர்வலத்தின் முன்பாக நாட்டியப் பெண் ஒருவர், நடன மாடியபடி சென்றார். அப்போது அவளது ஒரு கால் சிலம்பு ஒன்று கழன்று விழுந்தது. கடுவெளி சித்தர் அந்த சிலம்பை எடுத்து அந்தப் பெண்ணின் காலில் மாட்டிவிட்டார். இதைக்கண்ட மக்கள், முனிவரை தவறாக பேசினர்.

    இதனால் கடும் கோபமும், வேதனையும் அடைந்த கடுவெளி சித்தர், சிவபெருமானின் மீது ஒரு பதிகம் பாடினார். அப்போது இந்த ஆலயத்தின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது. இதைக்கண்டு மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். பின்னர் மன்னரும், மக்களும் கடுவெளி சித்தரை வேண்டிக்கொள்ள, அவர் சினம் நீங்கி மீண்டும் ஒரு பதிகம் பாடினார். இதையடுத்து மீண்டும் சிவலிங்கம் ஒன்றிணைந்தது.

    கோவிலின் சிறப்புகள்

    இங்கு அரசமரத்திற்கு இடையில் அமர்ந்து கடுவெளி சித்தர் செய்த தவத்தை, அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கவனித்து வந்ததாகவும், அந்த தவம் பற்றி அவர் சிவபெருமானிடம் கூறியதால் அன்னைக்கு குயில்மொழி நாயகி' என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சன்னிதியில் மகாலட்சுமி கோலத்தில் காட்சி தருகிறார்.

    கோவிலின் மேற்கு பிரகாரத்தில் மேற்கு திசை பார்த்தபடி சந்திரன் காட்சி தருகிறார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள், கல்வி கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து 'உஷா, பிரதியுஷா' ஆகிய இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோவில் காணப்படுகிறது.

    பேச்சு குறைபாடு உள்ளவர்கள், இசைக் கலையை பயில்பவர்கள், இசைக் கலைஞர்கள், அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசைத்திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.

    ஆயுள் விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும் விருப் பங்களும் நிறைவேறும்.

    அமைவிடம்

    தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரும்பை என்கிற ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம். இவ்வூருக்கு விழுப்புரத்தில் இருந்தும் புதுவை மாநிலத்தில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் அதிகம் உள்ளன.

    • புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்’
    • வெற்றி-தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்து.

    புனித ரமலானில் 17-ம் நாள் நடந்த `பத்ர் போர்'

    புனித ரமலான் மாத நோன்பு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில் தான் போர் செய்வதும் கடமையாக்கப்பட்டது.

    நோன்பு என்பது உண்ணாமலும், பருகாமலும் இருந்து உடல் சோர்வுடன், உடல் நலிந்து, மெலிந்து இருப்பது. போர் புரிவது என்பது அழகிய முறையில் ஊட்டச்சத்துக்களை உண்டு, புத்துணர்ச்சி தரும் பானங்களை பருகி உடல் நலத்துடனும், உடல் பலத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது. உடல் தகுதியை நிரூபிப்பது.

    பத்ர் போரின் பின்னணி'

    அபூசுப்யான் தலைமையில் வியாபாரக் கூட்டம் சிரியா தேசத்தில் இருந்து மக்காவை நோக்கி குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது. இவர்களிடம் 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1000 ஒட்டகங்களில் 40 வீரர்களின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்தது.

    மக்கா வாசிகளுக்கு பொருளாதார ரீதியாக சேதத்தை ஏற்படுத்துவதற்கு இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. எனவே, நபி (ஸல்) அவர்கள் போர்புரியும் எண்ணமின்றி இக்கூட்டத்தை நோக்கி புறப்படும்படி தமது தோழர்களிடம் வேண்டினார்கள். ஆனால், அல்லாஹ்வின் எண்ணம் போர் புரிவதாக இருந்தது. அதுவே நடந்தது.

    'போர் தொடுக்கப்பட்டோருக்கு அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறை மறுப்பாளர்களை எதிர்த்துப் போரிட) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. (திருக்குர்ஆன் 22:39)

    குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாக்க அபூஹஜ்ல் தலைமையில் 1000 வீரர்கள், 100 குதிரைகள், 700 ஒட்டகங்கள், 600 கவச ஆடைகளுடன் ஒரு பெரும் படையே வருகிறது.

    இதையறிந்த வியாபாரக் கூட்டத்தின் தலைவர் அபூசுப்யான், 'தாங்கள் பாதுகாப்பாக மக்கா திரும்புகிறோம். இனி எங்களை காக்க ஆள் தேவையில்லை. நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று அபூஜஹ்லிடம் தூது அனுப்புகிறார்.

    ஆணவம் பிடித்த அபூஜஹ்ல் கேட்க வில்லை. முன்னே எடுத்து வைத்த காலை பின் வாங்கப்போவதில்லை என திமிர்பிடித்து முஸ்லிம்களை நோக்கி முன்னேறினான். இதுவே பத்ர் போருக்கு வழிகோலியது. கி.பி. 624-ம் ஆண்டு ஹிஜ்ரி 2-ம் ஆண்டு ரமலான் பிறை 17-ம் நாள் வெள்ளிக்கிழமை போர் நடந்தது. எனவே, அதற்கு பத்ர் போர் என்று பெயர் வந்தது.

    இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பத்ர் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.' (திருக்குர் 3:123)

    முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 நபர்கள். அவர்களிடம் 2 குதிரைகள், 70 ஒட்டகங்கள், 8 வாள்கள், 9 உருக்குச் சட்டைகள், 60 கேடயங்கள் மட்டுமே இருந்தன. இவ்வாறு இருந்தும் இஸ்லாமிய படைக்கு இறையருளால் வெற்றி சாத்தியமானது. வெற்றி - தோல்வி என்பது எண்ணிக்கை வைத்து அல்ல. எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    பத்ர் போர் நடப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக இறைவன் கூறுகின்றான். 'அதி சீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஒடுவர். (திருக்குர் 54:45)

    • ராஜகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்ற வைணவக் கோயில் ஆகும்.
    • இந்த கோயிலை தட்சிண துவாரகை என்று கூறுகின்றனர்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்ற வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராஜகோபாலசுவாமிக்கு ஸ்ரீ வித்யா ராஜாகோபாலன் என்று திருநாமம். இந்த கோயிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) எனக்கூறுகின்றனர். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால், செண்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால், குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவடையும். பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் உற்சவம் இன்று தொடங்குகிறது.

    • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 14 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை மாலை 4.38 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 3.47 மணி வரை. பிறகு சுவாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி உற்சவம் ஆரம்பம். திருப்பங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் பட்டாபிஷேகம். திருவெள்ளரை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் உற்சவம் ஆரம்பம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள் விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். சோளிங்கர் நரசிம்மருக்கு திருமஞ்சனம், பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பயிற்சி

    கன்னி-இன்பம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- பணிவு

    மகரம்-பதவி

    கும்பம்-சுகம்

    மீனம்-புகழ்

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர குண்டம் இறங்கினர்.

     மேலும் சிலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர். மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுக்கின்றனர். இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது.

    • 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.
    • பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவின் 9-ம்நாளான நேற்று நம் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாதித்தருளினர்.

    தற்போது கோடை காலம் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சேர்த்தி சேவைக்கு செல்லும் வரிசையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு மின்விசிறிகள் மற்றும் ஏர் கூலர் வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தது. தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேத்தி மண்டபம் வரை 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 12 இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர்கூலரும் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின்விசிறிகளும் பொருத்தப் பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், நீர் மோர், லட்டு ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக கம்பர் மண்டபம் அருகில் பிரம்மாண்ட எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (27-ந்தேதி) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

    • ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
    • 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.

    அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

    பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே.
    • கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    மோட்சம் அல்லது பரலோகமென்று குறிக்கப்படும் கடவுளிருக்கும் இடத்தைப் பற்றி வேதத்தில் அநேக குறிப்புகள் இருந்தாலும், பரலோகத்தையோ கடவுளையோ நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. அதில் குறிப்பிடும்படியான ஒருவர் - ஏசாயா என்னும் இறைவாக்கினர்.

    உசியா என்னும் யூதாவின் அரசன் மரித்த ஆண்டில் நடைபெற்றதாக ஏசாயா - 6-ம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் இச்சம்பவம், பரலோகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் சிறப்புகளை, குணாதிசயங்களை மிக அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம்.

    தன்னுடைய பதினாறாம் வயதில் யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அரசாண்ட உசியா மன்னன் - யூதாவின் சிறந்த மன்னர்களில் ஒருவர். தன்னுடைய இளவயதில் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்த உசியா மன்னன், கடவுளின் துணையுடன் எதிரிகளை வீழ்த்தினார்.

    யூதாவின் தலைநகரமாகிய எருசலேமை சுற்றியிருந்த மதில்களை பலப்படுத்தி, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். மக்களுக்காக குளங்களை வெட்டினார். இப்படி சிறப்புடன் வாழ்ந்த உசியா மன்னன் வலிமை மிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான்.

    கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆசாரியர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பரிசுத்த தலத்திற்குள் சென்று தூபம் காட்ட முற்பட்டான். ஆசாரியர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் உசியாவோ, அவர்கள் மேல் கோபங்கொண்டார். அப்படி அவர் ஆசாரியர்களிடம் கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியர்களுக்கு முன்பாகவே குஷ்டரோகியானார். கடவுளின் தண்டனையாக குஷ்டரோகியாகவே மரித்தார் உசியா.

    இனி இந்த நாட்டை ஆளப்போவது யார்? மன்னரையே குஷ்டரோகியாக்கும் வல்லமை படைத்த கடவுள் யார்? என்னும் கேள்விகளோடு இறைவாக்கினர் ஏசாயா ஆலயத்திற்கு வந்தபோது `ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதையும், அவரது வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருக்கிறதையும், சேராபீன்கள் என்னும் தூதர்கள் பறந்த வண்ணம் `சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது' என்று ஒருவரையொருவர் கூப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருக்கிறதையும். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து ஆலயம் புகையினால் நிறைந்திருக்கிறதையும் (ஏசாயா 6: 1-4) காண்கிறார்'.

    இங்கே கடவுளின் குணாதிசயங்களாக நாம் காண்பது, கடவுளின் மாட்சிமை, கடவுளின் பரிசுத்தம், கடவுளின் மகிமை. இதைப் பார்த்த அடுத்த கணமே, தன் உள்ளத்தில் குத்தப்பட்டவராய், இத்தகைய கடவுள் முன் நிற்பதற்கு கூட தனக்கு தகுதியில்லை என்றுணர்ந்து 'ஐயோ, நான் அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே' என்றார்.

    உடனே சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாய விடத்தில் பறந்து வந்து, அதினால் அவர் வாயைத் தொட்டு: `இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது' என்றான்.

    இப்படியாக தன்னுடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற ஏசாயா தான், இந்த உலகத்திலுள்ள மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக இம்மானுவேல் பிறப்பார் என்றும் (ஏசாயா 7:14), அவர் பாடனுபவிப்பவராய், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவராய், அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, மரிப்பாரென்றும் முன்னறிவித்தார் (ஏசாயா 53).

    அந்தபடியே, கடவுளுக்கு சமமாயிருந்த இறைமகன் இயேசு (பிலிப்பியர் 2:6), உலகத்தாரின் பாவங்களை மன்னிப்பதற்காக மனிதனாய், இம்மானுவேலாய் (மத்தேயு 1:22,23) இந்த உலகில் பிறந்தார். ஒடுக்கப்பட்டோர், கை விடப்பட்டோர் மற்றும் பாவி களின் நண்பனாய் இந்த உலகில் சுற்றித்திரிந்தார். கடவுளின் சித்தப்படியே சிலுவையில் மரிக்கவும் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

    இன்று இறைமகனார் இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததை நினைவுகூரும் புனித வெள்ளி சிலுவைக் காட்சியை நம் மனக்கண்முன் கொண்டுவருவோம்.

    உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் கடவுளின் அருகிலிருந்த இயேசு, இப்பொழுது உயரமான மலையில், சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிரம்பிற்று என்றிருந்தவர், இப்பொழுது, வஸ்திரமில்லாமல், அவருடைய அங்கியையும் போர்வீரர்கள் சீட்டுப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணமிருக்கிறார்.

    தூதர்களால் சூழப்பட்டிருந்தவர், இப்பொழுது கள்வர்கள் நடுவில் அறையப்பட்டிருக்கிறார். பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றப்பெற்றவர், சுற்றி நின்ற மக்களின் கேலிப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆம், 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று சொல்லியிருக்கிறபடி, பாவிகளான நம்மேல் கடவுள் கொண்ட அன்பைக் காட்டும்படியாக, தன்னுடைய மாட்சிமை, தன்னுடைய பரிசுத்தம், தன்னுடைய மகிமை அனைத்தையும் துறந்தார்.

    இந்த சிலுவைக் காட்சியை பார்க்கும் நாம், அன்று ஏசாயா தன்னுடைய பிழைகளை உணர்ந்து, அதை அறிக்கை செய்து, சுத்தமானது போல், நம்முடைய பாவங்களை உணருவோம், அவர் தரும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம், அவரின் அன்பை இந்த உலகிற்கு பறைசாற்றுவோம்.

    • தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
    • ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

    இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.

    ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)

    ஜகாத் கடமை?

    தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

    தங்கம்-வெள்ளி

    நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

    விளைபொருட்கள்

    சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.

    கால்நடைகள்

    கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

    ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்

    இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

    இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

    ஜகாத் பெற தகுதியானவர்கள்

    இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு

    6) கடனாளிகள்

    7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள்

    ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

    எச்சரிக்கை

    கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)

    மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

    பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

    ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.

    • கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
    • ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகிறார்.

    தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில்.

    தலவரலாறு

    திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.

    இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரை பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார்.

    பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை `அம்மச்சிபிலா' என்று அழைத்தனர்.

    யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார்.

    ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.

    தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது `ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஶ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலாமரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

     ஆலய அமைப்பு

    தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. `ஶ்ரீகோவில்' எனப்படும்

    கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் அருள் காட்சி வழங்குகின்றார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.

    தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.

    அமைவிடம்

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.

    • பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு.
    • பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா’ புகழ்பெற்றது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது, பண்ணாரி அம்மன் கோவில். ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு பண்ணாரி அம்மன், சுயம்புவாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

    தல வரலாறு

    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக, இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரணப்பள்ளம் என்ற அந்தக் காட்டாறு, இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

    அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேய விட்டு விட்டு, மாலையில் பட்டியில் அடைத்து, தாங்களும் அங்கேயே தங்கிக்கொள்வார்கள். அதோடு காலையிலும், மாலையிலும் பசுக்களிடம் இருந்து பாலைக் கறந்து, அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துவிடுவர். அப்போது ஒரு பட்டியில் இருந்த காராம்பசு ஒன்று, பால் கறப்பதற்குச் சென்றால், பால் சுரக்காமலும், தன்னுடைய கன்றுக்கும் கொடுக்காமலும் இருப்பதை அந்தப் பட்டியை பராமரிப்பவன் அறிந்தான்.

    அவன் மறுநாள் அந்த காராம் பசுவை பின் தொடர்ந்தான். அந்தப் பசுவானது, ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாகப் பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான். இந்நிகழ்வைக் கண்ட அவன் மறுநாள் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததைப் பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள், பசுவை பின் தொடர்ந்து

    குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர். இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது, அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும், அதன் அருகில் சுயம்பு லிங்க திருவுருவமும் இருப்பதைக் கண்டனர்.

    அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து, தெய்வ வாக்கை கூறினார். "நான் கேரளா மாநிலம் வண்ணார்க்காடு (மண்ணார்க்காடு) என்ற ஊரில் இருந்து பொதி மாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் லயித்து, இங்கேயே தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள்" என்றார்.

     பின்னர் அன்னையின் அருள்வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களைக் கொண்டு ஒரு குடில் அமைத்து, கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர். பின்பு ஊர் மக்களும், பண வசதி படைத்தவர்களும் கூடிப் பேசி, அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர். அந்த ஆலயத்தில் பத்ம பீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்யத் தொடங்கினர்.

    தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடன் அழகிய சிற்பங்களைக் கொண்டு கண்கவர் ஆலயமாக பொழிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் `குண்டம் பெருவிழா' புகழ்பெற்றது. இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதம் கிடையாது. அதற்கு பதிலாக புற்று மண்தான், விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம், வேலைவாய்ப்பு வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக இந்த பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கிச் சென்று, அம்மை நோய் பாதித்தவர்களின் மீது வைத்தால், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள். திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை- கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், விவசாயம் செழிக்க வேண்டுவோர், இவ்வாலய அம்மனை வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடும்.

    இவ்வாலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள், உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி, அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். மேலும் அக்னி குண்டம் இறங்குதல், வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல் ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக, ஆராதனைகள் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

     அக்னி குண்டம் இறங்கும் விழா

    இவ்வாலயத்தில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் விழா, மிகவும் பிரசித்திப்பெற்றது. அக்னி குண்டம் ஏற்படுத்துவதற்காக பக்தர்கள் காட்டிற்குச் சென்று மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்பார்கள்) எடுத்து வந்து, மலைபோல் குவித்து, அதனை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக தயார் செய்வார்கள். அந்த குண்டத்தில் முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார்.

    பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில், நடை சாற்றும் வரை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்ததும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

    அமைவிடம்

    சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோமீட்டர், கோவையில் இருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர், சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.

    ×