என் மலர்
வழிபாடு
- ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
- எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.
சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.

எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.
அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.
மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.
அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.
இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.
இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.
- சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும்.
- குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.
சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு குரு சாமி துணை வேண்டும். சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள், 'குருசாமி' என்ற தகுதியை பெறுகிறார்கள்.

18-ம் வருடம் சபரிமலை யாத்திரை என்பது நாம் செய்த கோடி புண்ணியத்திற்கு சமமாகும். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.
18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு இருமுடி கட்டு கட்டி, 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி என்ற நிலையை அடைய முடியும்.

18-ம் வருடம் சபரிமலை யாத்திரையின்போது, சிறிய தென்னங்கன்று ஒன்றை எடுத்து செல்வார்கள். இதை கண்டதும் குருசாமி என்று மற்ற ஐயப்ப பக்தர்கள் புரிந்துகொண்டு, அவரிடம் ஆசி வாங்குவார்கள்.
இதனால் தான் 18-ம் வருடம் சபரிமலை யாத்திரையை புனித யாத்திரை என்று அழைக்கின்றனர். இந்த குருசாமி, அடுத்த முறை கார்த்திகை மாதத்தில் மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு, தன் கையால் மாலை அணிவிக்கலாம்.
- இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
- 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
- இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம்.
- திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-29 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: பரணி இரவு 10.45 மணி வரை. பிறகு கார்த்திகை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பவுர்ணமி. ஸ்ரீமகா அன்னாபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால்அபிஷேகம். திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் தேரோட்டம். மாயவரம் ஸ்ரீகவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி, விருஷப சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. நெடுமாற நாயனார் குருபூஜை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நலம்
மிதுனம்-அமைதி
கடகம்-தனம்
சிம்மம்-சிறப்பு
கன்னி-பணிவு
துலாம்- பண்பு
விருச்சிகம்-பாசம்
தனுசு- ஆசை
மகரம்-நிறைவு
கும்பம்-வெற்றி
மீனம்-பயணம்
- டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
- ஜனவரி 10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி:
பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 31-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
ஜனவரி 9-ந்தேதி மோகினி அலங்காரமும், 10-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 16-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.
இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது.
அதுசமயம் முகூர்த்த பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.
இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அன்னபூரணி, சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி பவுர்ணமி திதி.
- சந்திரன் சாபம் நீங்கி பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று உதித்து வருவார்.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" ன்னு ஒரு பழமொழி உண்டு.
சோற்றை கண்டதும் சொர்க்கம் கிடைக்குமா... சோறு பரிமாறப்படும் இடம் சொர்க்கம் போன்றதா என நிறைய கேள்விகள் மனதில்.
சோறு கண்டதும் சொர்க்கம் என சொல்லும் சொலவடையின் அர்த்தத்தைத் தேடும் போது தான் உலகிற்கே படியளக்கும் பரமசிவனாரின் மகிமை புரிய ஆரம்பித்தது.

நம்மில் நிறைய பேர் ஆலயத்திற்கு செல்லும் போது சுவாமிக்கு நடைபெறும் பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தைல அபிஷேகம் மற்றும் சந்தனம், விபூதி, மஞ்சள், போன்ற பிற வாசனை பொருட்களால் நடைபெறும் அபிஷேகத்தை பார்த்திருப்போம்.
சோற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதை நம்மில் வெகு சிலரே பார்த்திருப்போம். ஐப்பசி மாத பவுர்ணமி திதியின் போது சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
மும்மூர்த்திகளில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கும் முன்பு ஐந்து தலை இருந்தது. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவர் என பிரம்மன் நினைத்தார்.
பிரம்மனின் அகந்தையை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஓர் தலையை சிவபெருமான் கொய்து பிரம்மனை நான்முகன் ஆக ஆக்கினார்.
சிவபெருமானால் துண்டிக்கப்பட்ட பிரம்ம தேவரின் தலையானது சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டு சிவனாருக்கு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது.
சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மனின் கபாலம் ஆனது எப்போதும் பசியால் அனத்திக் கொண்டிருந்தது.
பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்டார் சிவபெருமான்.
தனக்கு போதும் என்ற அளவுக்கு உணவு கிடைக்கும் போது சிவபெருமானை விட்டு நீங்கி விடுவதாக பிரம்ம தேவரின் கபாலம் சிவனாரிடம் கூறியது.
சிவபெருமான் கபாலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு பிச்சாடனார் ஆக உருமாறி பூலோகம் வந்தார்.
அன்னமிட்டு நிறையும் போது மட்டுமே அந்த கபாலம் சிவபெருமானின் கையை விட்டு பிரியும் என்பது சிவனாருக்கு பிரம்மனால் கொடுக்கப்பட்ட சாபம் ஆகும்.
சிவ பெருமான் காசிக்கு செல்லும் போது அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அகிலம் காக்கும் அன்ன பூரணியின் அன்பினால் கபாலம் நிறைந்தது.
இதை அடுத்து சிவபெருமான் கையில் ஒட்டி கொண்டு அவரை படாத பாடுபடுத்திய பிரம்மனின் கபாலம் கீழே விழுந்தது. சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
அன்னபூரணி அன்னை சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள் ஐப்பசி மாதம் பவுர்ணமி திதி. இதனால் சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவாலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது .

ஐப்பசி பவுர்ணமி அன்று சந்திரன் தனது சாபம் நீங்கி முழு பொலிவுடன் பதினாறு கலைகளும் நிரம்ப பெற்று முழு பொலிவுடன் உதித்து வருவார்..
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் சந்திர பகவானின் மனைவியர். இதில் ரோஹிணி நட்சத்திரத்தின் மேல் அதிக நாட்டமில்லாமல் சந்திரன் நடந்து கொண்டார்.
இதை தனது தந்தையிடம் ரோஹிணி புகார் செய்கிறாள். ரோஹிணியின் தந்தை உன் உடல் தேயட்டும்' என சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்றதும் சந்திரனின் ஒவ்வொரு கலையாகக் குறையத் தொடங்கி, சந்திர பகவான் பொலிவிழந்தார். சந்திரன் தனது தவறை உணர்ந்து தமது சாபம் தீருவதற்காக திங்களூர் கைலாசநாதரை வணங்கினார்.
சிவபெருமான் அருளால் சாபம் நீங்க பெற்று சந்திரன் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று முழுமையாக பிரகாசித்தார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும்.
சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானுக்கு அந்த சந்திரன் முழு பொலிவுடன் இருக்கும் நாளான ஐப்பசி பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடு ஆக பிறை சூடிய பெருமான் ஆன சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அன்னாபிஷேகத்தை தரிசித்தவருக்கு அந்த ஆண்டு முழுவதும் அன்னத்திற்கு குறைவு ஏற்படாது. நெல், அரிசி ஆகிறது. அரிசி, சோறாகிறது. சோறு தேகத்துக்குள் சென்று கலந்து வலிமையை அளிக்கிறது.
இது போலவே ஆத்மா எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் பரமாத்மாவோடு கலந்தால் ஒன்றாகிவிடும் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என்றும் சொல்லலாம். அரிசி என்ற வார்த்தையிலேயே அரியும் சிவனும் அடங்கியுள்ளனர்.
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்பதன் பொருள் சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்திற்கு சமம்.
நன்றாக சோற்றுப் பருக்கையை உற்று நோக்கினால் சோற்றுப் பருக்கையானது சிவலிங்க வடிவில் இருப்பதை காணலாம் .
ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின் போது சிவபெருமானுக்கு சாற்றியிருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் நம்மால் சிவலிங்கத்தைக் காண முடியும்.
ஒரே சமயத்தில் கோடி சிவலிங்க தரிசனம் பல ஜென்ம பாவத்தை போக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும் அன்று ஒவ்வொரு சோற்றிலும் ஒரு சிவலிங்கத்தை காணலாம் என ஈஸ்வரன் வரம் கொடுத்து இருப்பதால் அந்த வரத்தின் பயனாக நாம் அன்று கோடி கோடி லிங்கத்தை பார்த்த பலனைப் பெறலாம்.
சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட அபிஷேக சோற்றை யார் கண்ணார காண்கின்றார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் விளைவாகவே சோறு கண்ட இடமே சொர்க்கம் என கூறப்பட்டது.
- விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
- உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
உலகியல் மயக்கங்களை கடந்து கடவுளிடம் சரணடைந்தால் மட்டுமே மெய்ஞானம் அடைய முடியும். பொன்னால் பதியப்பட்ட சத்தியம் நிறைந்த பதினெட்டு படிகளைக் கடந்து சென்று ஐயப்பனை தரிசித்தால் மெய்ஞானம் நமக்கு கிட்டும். பதினெட்டு படிகளுக்கும் காரணமும், தத்துவமும் உண்டு.

காமம்:
பற்று உண்டானால் பாசம், கோபம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசம் அடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்:
கோபம் குடியை கெடுத்து, கோபம் கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் அழித்து விடும்.
லோபம்:
பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய் விடும். பேராசை பெரு நஷ்டம். ஆண்டவனை அடைய முடியாது.
மதம்:
யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்து விடுவான். மாத்ஸர்யம், மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்து விடும்.
டம்பம் (வீண் பெருமை):
அசுர குணமானது நமக்குள் இருக்கக் கூடாது
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோக சுமை
சாத்வீகம்:
விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்:
அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது
தாமஸம்:
அற்ப புத்தியை பற்றி நிற்பது மதி மயக்கத்தால் வினை செய்வது
ஞானம்:
எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு
அஞ்ஞானம்:
உண்மைப்பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்
கண்:
ஆண்டவனை தரிசித்து ஆனந்தம் அடைய வேண்டும்.
காது:
ஆண்டவனின் மேலான குணங்களைக்கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்கவேண்டும்.
முக்கு:
ஆண்டவனின் சன்னிதியில் இருந்து வரும் நறுமணத்தை நுகர வேண்டும்.
நாக்கு:
புலால் உணவை தவிர்க்க வேண்டும்.
வாய்:
கடுஞ்ச்சொற்கள் பேசக் கூடாது.
மெய்:
இரு கரங்களால் இறைவனை கைகூப்பித்தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னிதிக்கு நடந்து செல்லவேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்த பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் தான் இறைவன் அருள் நமக்கு கிடைக்கும். இதையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டு படிகளும் உணர்த்துகின்றன.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-28 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி காலை 8.07 மணி வரை பிறகு சதுர்த்தசி பின்னிரவு 3.52 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பரணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் வெண்ணைத் தாழி சேவை. திருமூல நாயனார் குருபூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விவேகம்
ரிஷபம்-விருத்தி
மிதுனம்-விருப்பம்
கடகம்-லாபம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-ஆதரவு
துலாம்- உதவி
விருச்சிகம்-வரவு
தனுசு- லாபம்
மகரம்-உறுதி
கும்பம்-நற்செய்தி
மீனம்-கண்ணியம்
- இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை 4 நாட்கள் அனுமதி.
- அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் காலை 6 மணிக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நின்றனர்.
பின்னர் கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட் டது.
மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் பக்தர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவான எண்ணிக்கையில் இருந்தது.
இன்று ஐப்பசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் ஐப்பசி மாத பவுர்ணமியில், சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதிகளவில் பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 16-ந்தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது.
- 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம்.
சென்னை:
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம்.
41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
கார்த்திகை பிறக்க இருப்பதால் இனி 60 நாட்கள் தமிழகத்தில் சரண கோஷம் ஒலிக்க உள்ளது.
வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதையொட்டி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தயாராகி வருகின்றனர்.
பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொள்வார்கள்.
இந்த முறை கார்த்திகை முதல் தேதியில் கரிநாள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் இடையே அன்று மாலை அணிவதா? வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஆன்மீக பெரியவர்கள், குருசாமிகள் அன்று மாலை அணிவதில் தவறு இல்லை என்று கூறியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய தயாராகி வருகிறார்கள்.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்தால் நல்ல நேரம் பார்க்க தேவையில்லை. பிற நாட்களில் மாலை அணிவிக்கும் போது நல்ல நேரம் பார்த்து மாலை அணிவிக்க வேண்டும்.
இதுபோல பல விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இரவு உறங்கும் போது தரையில் தான் படுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு பாய் வாங்கி அதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாலை அணிந்த காலத்தில் அனைவரிடமும் மரியாதையாக, சாந்தமாக பேச வேண்டும் என்ற மற்றொரு நியதி உண்டு.
பார்க்கும் அனைவரையும் ஐயப்பனின் ரூபமாக பார்க்க வேண்டும் என்பதால் தான் மனைவியை கூட "சாமி" என்று அழைக்க வேண்டும்.
மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் இருப்பது அவசியம். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம்.
பக்தர்கள் தங்களுடைய தாய், தந்தை, குருசாமி யார் ஒருவர் மூலமும் மாலையை அணிந்து கொள்ளலாம். குருசாமி இல்லாதோர் கோவிலில் சுவாமி சன்னதியில் மாலையை வைத்து பூஜித்து அர்ச்சகர் மூலமாக மாலையை அணியலாம்.
மாலை அணிவதற்கு பக்தர்கள் ருத்திராட்ச மணி மாலை, துளசி மாலைகளை பயன்படுத்துவது சிறந்தது. மாலை அணிந்த பக்தர்கள் செருப்பு அணிதல் கூடாது. கருப்பு, நீலம், பச்சை அல்லது காவி நிறத்தில் வேட்டிகள் அணிதல் வேண்டும்.
மாலை அணியும் பக்தர்கள் முக்கியமாக கோப தாபங்களையும், விரோத மனப்போக்கையும் தவிர்ப்பது அவசியம். அக்கம்பக்கத்தினருடன் விரோதம் கூடாது. மாலையை எக்காரணம் கொண்டு கழற்றுதல் கூடாது.
விரத நாட்களில் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் மாலையை கழற்றி வைத்து விட்டு மது அருந்திவிட்டு குளித்து விட்டு மீண்டும் மாலை அணிந்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம்.
காலையில் சூரிய உதயத்துக்கு முன்பாகவும், மாலையில் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகும் நீராடி கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ ஐயப்பனை மனதார வேண்டி சரணங்கள் கூறி வணங்குதல் வேண்டும்.
பிரம்மச்சரிய விரதத்தை முறையாக முழுமையாக கடைபிடித்தல் வேண்டும். அசைவம் உண்ண கூடாது. சபரிமலை யாத்திரை செல்லும் முன் பக்தர்கள் வீடுகளில் பூஜைகள் நடத்தி எளியோருக்கு அன்னதானம் செய்தல் சிறப்பை தரும்.
முதன் முறையாக மாலை அணியும் கன்னி சாமிகள் மாலை அணியவும் , சபரிமலை செல்லவும் காத்திருகின்றனர். கன்னிசாமிகள் குருசாமி இன்றி மாலை அணியக்கூடாது. ஏனென்றால் அப்போதுதான் அவர் ஐயப்பனுக்கு என்னென்ன விரத முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்து கூறுவார்.
- சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.
- கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் தான் கேட்கும்.
கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் பல இடங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிடும். அந்த ஐயப்பனின் புகலிடமான, சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. அதில் சில உங்களுக்காக...

ஐயப்பன் ஆட்சி செய்யும் சபரிமலையோடு சேர்த்து, அதை சுற்றிலும் 18 மலைகள் இருக்கின்றன. அவற்றில் சபரிமலை பீடம் தான் உயர்ந்தது.
ராமாயணத்துடன் தொடர்புடைய மலை இது. இந்த பகுதியில் வாழ்ந்த சபரி என்ற மூதாட்டி, ராமபிரானின் தீவிர பக்தை. அந்த மூதாட்டி, ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டி நாளும் இறைவனைத் தொழுது வந்தார்.
ராமபிரான் நிச்சயமாக தன்னை சந்திக்க வருவார் என்று அவர் நம்பினார். அப்படி வரும் நேரத்தில் அவருக்கு கொடுப்பதற்காக, வனத்தில் இருந்து கிடைக்கும் பழங்களில் சிறந்தவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
மேலும் அந்த பழம் இனிப்பாக இருக்கிறதா? என்பதை கடித்து ருசிபார்த்து வைப்பார். இந்த நிலையில் சீதையைத் தேடி செல்லும் வழியில் ராமனும், லட்சுமணனும் சபரியை சந்தித்தனர்.
அவர்களுக்கு தான் சேகரித்து வைத்திருந்த பழங்களைக் கொடுத்தார். எச்சில் கனியாக இருந்தாலும், தன் மீதுள்ள பக்தியால் அந்த மூதாட்டி அவ்வாறு செய்தது, ராமரை நெகிழச் செய்தது. ராமரின் தரிசனத்திற்குப் பிறகே அந்த மூதாட்டிக்கு முக்தி கிடைத்தது.
அந்த மூதாட்டியின் பெயரால் வழங்கப்படும் மலையே 'சபரிமலை'. இதில்தான் தற்போது சுவாமி ஐயப்பன் அருளாட்சி செய்து வருகிறார்.
இந்த அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவமிருந்து வழிபட்டனர்.
அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று மும்மூர்த்திகளும் வேண்டினர்.
அதன்படியே அவர்களுக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர்.
அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று, ஒரே சமயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.
அவர்கள் நினைத்தது நிறைவேற அம்பிகை ஆசி கூறினார். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.

புராண காலம் தொட்டு, சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை நதிக்கரையில், முனிவர்கள் பலர் குடில் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பம்பையில் யாகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த தலம் யாக பூமி என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றும் கூட இங்கு யாக பூஜை நடைபெறுவதைக் காணலாம். அப்படிப்பட்ட பம்பை நதி, ஒரு பெண்ணாக இருந்தவள். ராமனும், லட்சமணனும் சீதையைத் தேடி பல வனங்களில் சுற்றித் திரிந்தனர்.
அப்போது மதங்க முனிவர் வாழ்ந்த ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த குடிலில் நீலி என்ற பெண்ணும் இருந்தாள். அவள், முனிவருக்கு பணிவிடை செய்து வருபவள். தாழ்த்தப்பட்ட பெண்ணான தனக்கு இறைவனின் தரிசனம் கிடைக்குமா? என்று ஏங்கித் தவித்த அந்த பெண்ணை, தன் அருகே அழைத்து ஆசீர்வதித்தார்.
அதோடு "பிறப்பால் எவரும் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் இல்லை. வாழும் வாழ்க்கையில்தான் அவர்கள் உயர்வும், தாழ்வும் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தனை காலம் சேவையில் கழித்த உன்னைப் போற்றி புகழும் நிலை உனக்கு ஏற்படட்டும்" என்று வாழ்த்தினார்.
அந்த பெண்ணே, அழகான அருவியாக மாறி, புனித நதியாக பாய்ந்தாள். அதுவே தற்போதைய பம்பை நதி. இதனை 'தட்சிண கங்கை' என்றும் அழைப்பார்கள்.
சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு முன்பு, பம்பை நதிக்கரையில் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர்.
- கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
- கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.
சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.
அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.

உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.
எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.






