என் மலர்
வழிபாடு
- மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
- சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், பச்சைக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்பத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷே கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து தெப்ப மிதவையை இழுத்தனர். மூன்று முறை தெப்பத்தை சுற்றி வந்து சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதே போல இன்று இரவில் மின்னொளியிலும் சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்று வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வன், பொம்மதேவன் ராமையா மற்றும் கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் பணி யாளர்கள் செய்துள்ளனர்.
- சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
- புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.
போடி:
தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.
அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.
தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
- வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
நத்தம்:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனி அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனூர் பகுதிகளை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் குழு வருடம் தோறும் காவடிகள் எடுத்து வருவது வழக்கம்.
10 நாட்கள் இவர்கள் பாதயாத்திரையாக தங்கள் பயணத்தை தொடங்கி வைர வேலை காணிக்கையாக முருகனுக்கு செலுத்துவதுடன் தங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடந்தே தங்கள் ஊருக்கு திரும்புவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் கடந்த 2-ந்-தேதியன்று தேவக்கோட்டை நகரப் பள்ளியில் இருந்து காவடிகளுக்கு பூஜை செய்து இக்குழுவினர் புறப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களை கடந்து இவர்கள் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வந்தடைந்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை அடைந்ததும் அங்கு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் பெரியகடை வீதி, மூன்றுலாந்தர், பஸ் நிலையம் வழியாக ஏராளமான மயில்காவடியினர் பழனியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
அப்போது முருகனுக்கு செலுத்தி பூஜை செய்யும் வைர வேல் முன்னே கொண்டு செல்லப்பட்டது. இதை பக்தர்கள் வணங்கி அதற்கு பன்னீர், எலுமிச்சம் பழம், மலர்கள் போன்றவைகளை செலுத்தி வழிபட்டனர்.
அதைதொடர்ந்து முருகன் புகழ்போற்றும் பாடல்களை பாடி பக்தர்கள் காவடியை சுமந்து சென்றனர். வழிநெடுகிலும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை வரவேற்று வணங்கி வழியனுப்பினர்.
- பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன.
- காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.
1. முகாரம்ப தீர்த்தம் - இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தை பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம் - இந்த தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
7. காயத்ரீ தீர்த்தம் - இந்த தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளை செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
8. சாவித்ரி தீர்த்தம் - இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகல ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
11. வயிரவ தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்க்கை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13. ஞான தீர்த்தம் - இந்த தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம் - இந்த தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித் தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் - இந்த தீர்த்தமானது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
16. முனிவர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம் - இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம் - இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.
22. கந்தமாதன தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென் புலத்தார் தீர்த்தம் - இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழிக்கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடுகின்றனர்.
- வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.
- திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர்.
திருச்செந்தூர் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் வடபுறம் கடலை நோக்கி இறங்கினால் வள்ளி ஒளிந்த குகைக்கு செல்லும் வழி உள்ளது. வள்ளி குகைக்குள் ஒளிந்ததற்கு சில கதைகள் கூறப்படுகின்றன.
வள்ளியை முருகன் சிறையெடுத்து வரும்போது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினார். அவரிடம் இருந்து பாதுகாப்பதற்காக வள்ளியை இந்த குகையில் முருகன் ஒளித்து வைத்ததாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

மற்றொரு கதை என்ன தெரியுமா? தெய்வயானை பரதர் குலத்தில் பிறந்தவள். அவள் கன்னியாகுமரியை ஆண்ட மச்சேந்திரனின் மகள். அவள் அழகைக்கண்ட முருகன் தெய்வயானையை இரவில் கடத்தி வந்து விடுவார். ஓரிடத்தில் வந்து கொண்டிருந்த போது பொழுது விடிந்துவிட்டது. அந்த இடம் விடிந்தகரை என்றானது தற்போது அந்த ஊரை இடிந்தகரை என்கிறார்கள்.
தெய்வயானையை முருகன் திருமணம் முடிந்து அழைத்து வருவதை அறிந்த வள்ளி, கோபம் கொண்டு இந்த குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு பரதகுலப்பாண்டிய வம்ச சரித்திரம் சான்றாக கூறப்படுகிறது.
இதனால் திருச்செந்தூர் முருகனை மீனவர்கள் மச்சான்சாமி என்று உறவு கொண்டாடுகின்றனர். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் போது கோவிலுக்கு நேராக படகு கடக்கும் போது தேங்காய் உடைப்பதையும் ஒரு மரபாக வைத்துள்ளனர்.
- பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும், ஆடியும் நடந்து செல்வார்கள்.
- இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள்.
போக்குவரத்து வளர்ச்சியடையாத 18-ம் நூற்றாண்டிலேயே மிகவும் தைரியமாக பல்வேறு வாணிபங்கள் மேற்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் எனும் நகரத்தார் சமூகத்தினர். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் உப்பு வியாபாரம் செய்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அவரது வாணிபம் நலிவடைந்தது. இதனால் பழனி முருகனிடம் தன் வாணிபம் பெருக செட்டியார் மனம் உருகி முறையிட்டார். வாணிபம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை முருகனுக்கே அர்ப்பணிப்பதாக மனதிலே பிரார்த்தனை செய்து கொண்டார். பழனி முருகன் அவருக்கு அருள் புரிந்தார். உப்பு வாணிபம் மேன்மேலும் வளரத் தொடங்கியது.

செட்டியாரும் தான் வேண்டிக் கொண்டபடி முருகனுக்காக ஒதுக்கிய வருமான பங்கு பணத்தை ஆண்டுதோறும் தன் ஊரில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாகவே சென்று கொடுத்தார்.
முருகனின் கருணை வெள்ளத்தில், அவர் அடுத்து வந்த ஆண்டுகளில் நோன்பிருந்து ஒரு குழுவாக நடைப்பயணம் வந்து ஆண்டுதோறும் வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார்.
இதை அறிந்த மற்ற நகரத்தார்களும் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் முருகனை தரிசிப்பதற்காக பல குழுக்களாகப் பாதயாத்திரை மேற்கொண்டு பழனி நோக்கி வந்தனர். இப்படித்தான் பழனி பாதயாத்திரை பிரபலமாகியது.
ஒரு குழு, பல குழுக்களாகி பல குழுக்கள் நூறாகி, நூறு ஆயிரங்களாகி இன்று லட்சக்கணக்கான மக்கள் தைப்பூசத் திருநாள் விழாவிற்கு செட்டிநாட்டுப் பகுதிகளில் இருந்து பழனி வருகின்றனர்.

இச்சமூகத்தினர் அனைவரும் தங்கள் ஊர்களில் இருந்து நடந்து குன்றக்குடி வந்தடைந்து அங்கு ஒன்று கூடி குன்றக்குடி முருகப்பெருமான் ரத்தினவேல் துணைக்கு வர காவடிகளுடன் தங்கள் குருவான சாமியாடிச் செட்டியாரின் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
இதேபோன்று பல்வேறு பிரிவினர்களும் காவடி எடுத்து பழனிக்கு நடந்து வருவர். வழியில் நாட்டார் காவடிகள் என்றும், நகரத்தார் காவடிகள் என்றும், நடைப்பயணத்தில் வரும் அனைத்துக் காவடிகளும் ஒன்று சேர்ந்து பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் செல்லும் காட்சிகள் மிகவும் அற்புதமானவை.
நாள் தோறும் அன்றாடப் பயண முடிவில் ஓரிடத்தில் ஒன்றாகக் காவடிகளை இறக்கி பூஜைகள் செய்து நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பசி, தாகம் தீர்த்து விட்டு மறுபடியும் பயணம் மேற்கொள்வர்.

இவ்வாறு ஒரு வார காலம், பசி, தாகம், தூக்கம், உடல் வலி, கால்கள் வலி, ஊர், உறவு, வீடு, வாசல் எல்லாவற்றையும் மறந்து ஒரே சிந்தனையுடன் பழனி ஆண்டவனையே நெஞ்சில் வைத்து பாடியும், ஆடியும் நடந்து செல்வார்கள்.
பழனியை அடைந்ததும் காவடிகளையும் தங்கள் மனபாரங்களையும் ஒன்றாக முருகனிடம் இறக்கி வைத்துப் பூஜைகளும், நேர்த்திக் கடன்களும் செய்து முடிப்பார்கள். அங்கேயே ஓரிரு நாட்கள் தங்கி இறைவனிடம் மனம் உருகி வேண்டுதல்கள் செய்து தைப்பூசத் தேரோட்டம் காண்பார்கள். பிறகு மகிழ்ச்சியுடனும் புத்துணர்ச்சியுடனும் காவடிகளை எடுத்துக் கொண்டு நடந்து ஊர் திரும்புவார்கள்.
இன்று உலகம் முழுவதிலும் இருந்து வரும் பாத யாத்திரையாளர்கள் பெருகிப் பெருகி ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் பழனியில் வந்து கூடும் பக்தர்கள் கூட்டம் அளவிட முடியாததாகி விட்டது.
தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே பழனி நோக்கி பக்தர்கள் நடக்கத் தொடங்கி விடுவர். தமிழகத்தின் எந்த கோவிலிலும் பாதயாத்திரை பக்தர்கள் இந்த அளவுக்கு கூடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- குன்றக்குடி ஸ்ரீமுருகப் பெருமான் தங்க ரதத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-25 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: தசமி இரவு 11.26 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.41 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.
யோகம்: மரண, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் பவனி. குன்றக்குடி ஸ்ரீமுருகப் பெருமான் தங்க ரதத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம். காஞ்சி உலகளந்த பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை ஆலயங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-உயர்வு
கடகம்-சுகம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-லாபம்
துலாம்-புகழ்
விருச்சிகம்-நலம்
தனுசு- கீர்த்தி
மகரம்-அமைதி
கும்பம்-அன்பு
மீனம்-கண்ணியம்
- வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டியவர் அருணகிரிநாதர்.
- வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ.
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.
எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று, ஆழ்ந்த முருகபக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.
தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.
- முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
- முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.
இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.
சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.
அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.
முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.
- இன்று கார்த்திகை விரதம்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-24 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி நள்ளிரவு 1.17 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.53 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம். குறுக்குத்துறை முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆசை
ரிஷபம்-நலம்
மிதுனம்-பரிவு
கடகம்-நட்பு
சிம்மம்-அமைதி
கன்னி-புகழ்
துலாம்- வரவு
விருச்சிகம்-முயற்சி
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-செலவு
கும்பம்-விவேகம்
மீனம்-ஊக்கம்
- தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
- தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது.
வடவள்ளி:
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை யொட்டி கோவிலுக்கு பக்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
- ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழா.
- ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ம் நூற்றாண்டில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.
சைவத்தையும் தமிழையும் தழைத்தோங்க செய்யும் இந்த ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பரவேச விழா ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு பட்டணப்பிரவேசவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சைவ சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியீடு, சமூக பணி, சைவப் பணி ஆகியவற்றில் சிறப்பான பணியாற்றி வருபவர்களுக்கு, பொற்கிழி மற்றும் விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான 10-ம் திருநாளான நேற்று இரவு ஆதீனகுருமுதல்வர் குருபூஜை விழா மற்றும் ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வாழைமரங்கள், கரும்புகள், அலங்கார தட்டிகள், மின்விளக்குகளால் திருவாவடுதுறை ஆதீனம் விழாக்கோலம் பூண்டது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஸ்ரீநமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் 1,00,008 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
தொடர்ந்து, பல்லக்கின் முன்னே யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க 30 நாதஸ்வரம், தவில் வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், சிவகைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.
வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை வந்தடைந்தார். அங்கு அவர் அதிகாலை சிவஞான கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






