என் மலர்
வழிபாடு

மருதமலை முருகன் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கொடியேற்றம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
- தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது.
வடவள்ளி:
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி இன்று அதிகாலை கோ பூஜை செய்யப்பட்டு கோவில் நடைதிறக்கப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் தைப்பூச திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியேற்றுவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜைகள் அனைத்தும் முடிந்ததும் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் தைப்பூச திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அதற்கான முகூர்த்தக்காலும் நடப்பட்டது.
கொடியேற்றத்தை யொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி அன்னவாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது.
கொடியேற்றத்தை யொட்டி கோவிலுக்கு பக்தர்களும் வந்திருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
10-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கண்ணாடி மஞ்சத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசம் தேர்த்திருவிழா 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்கின்றனர்.






