என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதலே சதுரகிரிக்கு பக்தர்கள் வர தொடங்கினர்.

    தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பஸ் கார், வேன் மூலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரமான தாணிப்பாறையில் தங்கி அதிகாலையில் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று சிவராத்திரி என்பதால் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிய தொடங்கினர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது. பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே மலையேற அனுமதித்தனர்.

    சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பக்தர்கள் ஏராளமானோர் உற்சாகமாக மலையேறினர். சங்கிலி பாறை, வழுக்குப்பாறை, பிளாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கூட்டம் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாரை சாரையாக சென்றனர். 4 முதல் 5 மணி நேரம் நடந்து சென்று பக்தர்கள் சுந்தர, சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு கோவில் பகுதி மற்றும் அடிவாரத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    பக்தர்கள் வருகையை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று சுந்தர, சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகள் நடைபெற்றன. இன்று இரவு முதல் நாளை காலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    • சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
    • மூன்றாம் கால பூஜையை லிங்கோத்பவ காலம் என்று அழைப்பர்.

    முதல் கால பூஜை - இரவு, 6:30- 9:30pm;

    இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm;

    மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am,

    நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..

    மகா சிவராத்திரி:

    மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    மகா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

    சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேஷமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூஜைகளின் போது எவற்றை எல்லாம் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.


    முதல் யாமம்:

    இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.


    இரண்டாம் யாமம்:

    இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.


    மூன்றாம் யாமம்:

    இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.

    இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

    நான்காம் யாமம்:

    இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

    குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு - பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம்.
    • சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    சிவ பெருமானுக்குரிய எட்டு முக்கியமான விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி விரதம் ஆகும். இது சிவ பெருமானுக்கு விருப்பமான இரவாக கருதப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் ஈசனை பூஜித்து, வழிபடும் காலமாகும். அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ பூஜை செய்வது சிறப்பு.

    மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் கண்விழித்து, சிவ பெருமானை வழிபடுவதால் மகா சிவராத்திரியில் விரதம் இருந்து, கண் விழித்த பலனும், சிவனின் அருளும், நினைத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.


    மகா சிவராத்திரி:

    சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாள் மகா சிவராத்திரி தினமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது. சிவ பெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன.

    இந்த நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம் மாலை துவங்கி, இரவு முழுவதும் சிவ பெருமானுக்கு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.

    மகா சிவராத்திரி விரத பலன்கள்:

    மகா சிவராத்திரி அன்று நாள் முழுவதும் சிவனை வேண்டி விரதம் இருந்து, வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். துன்பங்கள் நீங்கும். முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவ பெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக மகாசிவராத்திரி விழா கருதப்படுகிறது. அதுவும் மகா சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும் என்று சொல்லப்படுகிறது.


    சிவராத்திரி பூஜை:

    சிவ பெருமானை, காலத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுவது உண்டு. அதனால் சிவ வழிபாடு செய்வதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியது கிடையாது. ராகு காலம், எமகண்டம் உள்ளிட்ட எந்த கெட்ட நேரங்களின் பாதிப்பும் சிவ வழிபாட்டை பாதிக்க முடியாது.

    மகா சிவராத்திரி பூஜைகள் என்பது மாலை 6 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை 6.30 வரை நடைபெறும். மொத்தம் நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். ஒவ்வொரு கால பூஜையும் சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும்.

    சிவனை வழிபட ஏற்ற நேரம்:

    மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜைகளில் மிகவும் முக்கியமானது மூன்றாம் கால பூஜை தான். இது நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும்.

    இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இது தான் சிவ பெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும்.

    இந்த ஆண்டு பிப்ரவரி 26-ந் தேதி மகா சிவராத்திரி அமைந்துள்ளது. அன்றைய தினம் இரவு 12.09 முதல் 12.59 வரையிலான நேரத்தில் சிவனிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடைபெறும்.

    விரதத்தை நிறைவு செய்யும் நேரம்:

    மகா சிவராத்திரி பூஜையில் மூன்றாம் கால பூஜை என்பது பார்வதி தேவி, சிவ பெருமானை வழிபட்ட காலமாகும். அந்த சமயத்தில் நாமும் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பார்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகா சிவராத்திரி விரதம் பிப்ரவரி 27-ந் தேதி காலையில் தான் நிறைவடையும். அதனால் அன்று காலை 7 மணிக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்வதால் செல்வ வளமும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும்.

    • இன்று சுபமுகூர்த்த தினம். மகா சிவராத்திரி.
    • திருவண்ணாமலை ஸ்ரீ அரி ஸ்ரீ பிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-14 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 10.18 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.51 மணி வரை

    பிறகு அவிட்டம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். மகா சிவராத்திரி. திருவண்ணாமலை ஸ்ரீ அரி ஸ்ரீ பிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. மூங்கிலணை ஸ்ரீ காமாட்சியமமன் பெருந்திருவிழா. ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்தாசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் கோவில்களில் ஸ்ரீ சிவபெரு மான் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர் கோவிலில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சுகம்

    கன்னி-ஆர்வம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- அமைதி

    மகரம்-அன்பு

    கும்பம்-விவேகம்

    மீனம்-சிறப்பு

    • இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் மலை அடி வாரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு பனியையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.

    இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் மலையேறினர். 4 முதல் 5 மணிநேரம் நடந்து சென்று தரிசனம் செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்

    நாளை (26-ந் தேதி) இரவு சிவராத்திரி நாளை மறுநாள் மாசி மாத அமாவாசையை (28-ந் தேதி) முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள். இதை யொட்டி மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சிவராத்திரைய முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    • ‘சிவாய நம’ என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
    • சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள்.

    சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.

    அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள்.

    ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார். மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே, நாம் 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார்.

    'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது. இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டிய படி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர்.

    இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். இவர்கள்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

    வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.


    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும்.

    மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும்.

    ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது. வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும்.

    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்.

    ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

    கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம்.

    தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறுவது நிச்சயம்.


    சிவராத்திரி விரதத்தால் பலன் பெற்றவர்கள்:

    * தன்னை நோக்கி தவம் இயற்றியதன் பலனாக, பார்வதி தேவிக்கு தன்னுடைய உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வரராக இறைவன் வடிவெடுத்த தினம், மகா சிவராத்திரி.

    * அர்ச்சுனன் தன்னுடைய தவத்தால் சிவபெருமானை பூஜித்து, பாசுபதம் என்னும் அஸ்திரத்தைப் பெற்ற நாள் இதுவே.

    * சிவபெருமானுக்காக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், தன்னுடைய கண்களையே கொடுத்த கண்ணப்ப நாயனார், சிவ கதி அடைந்ததும் ஒரு சிவராத்திரி நாளில்தான்.

    * பகீரதன் என்னும் மன்னன், தன்னுடைய முன்னோர்களின் நற்கதிக்காக, ஆகாயத்தில் இருந்து கங்கையை, பூமிக்குக் கொண்டு வந்ததும், ஒரு சிவராத்திரி வழிபாட்டின் மூலமாகத்தான்.

    * 'என்றும் 16' என்று சிவபெருமானால் ஆசிபெற்ற மார்க்கண்டேயருக்காக, எமதர்மனின் பாசக் கயிற்றை ஈசன் பஸ்பமாக்கியதும் சிவராத்திரி நாளில்தான்.

    • முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.
    • இரண்டாம் கால பூஜை வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர்.

    மகாசிவராத்திரி வழிபாடு பல்வேறு பலன்களை வழங்குவதாக ஆன்மிக சான்றோர்கள் கூறுகின்றனர். புராணங்களிலும், இந்த சிவராத்திரி தினத்தில் நான்கு காலங்களிலும் பூஜிக்கும் முறை, அதனால் கிடைக்கும் பலன் சொல்லப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம்.

    முதல் கால பூஜை (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)

    ஜோதி வடிவாக நின்ற ஈசனின் முடியைத் தேடி, அன்னப்பறவையாக சென்ற பிரம்மதேவனால் ஈசனுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இதனை 'முதல் ஜாமம்' என்பார்கள். இந்த காலகட்டத்தில் இறைவனுக்கு பஞ்ச கவ்யம் கொண்டு அபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். மஞ்சள் நிற பொன்னாடை அணிவிப்பர். வில்வத்தால் அலங்காரம் செய்வர்.

    தாமரைப் பூவால் அர்ச்சிப்பார்கள். நைவேத்தியமாக பாசிப் பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதம், சிவபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்வார்கள். பின்னர் நெய் தீபத்துடன் வழிபடப்படும் இந்த முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.

    இரண்டாம் கால பூஜை (இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

    சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணுவால், ஈசனுக்கு செய்யப்படும் பூஜையாக இது கருதப்படுகிறது. அப்போது இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சாத்தப்படும். வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். வில்வம், தாமரைப் பூவால் அலங்காரம் செய்யப்படும். துளசி கொண்டு அர்ச்சிக்கப்படும்.

    நைவேத்தியமாக பாயசம் படைக்கப்படும். யஜூர் வேதம், 8-ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் ஆகியவை பாராயணம் செய்யப்படும்.

    நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால், செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருளும் கிடைக்கும்.

    மூன்றாம் கால பூஜை (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை)

    பார்வதி தேவியான அம்பாளால், சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இந்த காலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வர். பச்சைக்கற்பூரம் சாத்துவர். மல்லிகை, வில்வ இலை கொண்டு அலங்காரம் செய்வர். சிவப்பு வஸ்திரம் அணிவிப்பவர்.

    வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வர். எள் அன்னம் நைவேத்தியமாக படைத்து, சாமவேதம், 8-ம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்வர்.

    நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த மூன்றாம் ஜாம பூஜையை, 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வார்கள். இந்த காலத்தில்தான் சிவபெருமானின் அடி முடியை காண்பதற்காக பிரம்மனும், விஷ்ணுவும் சென்றனர். இந்நேரத்தில் சிவனை பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது. சக்தியின் அருளும் கிடைக்கும்.

    நான்காம் கால பூஜை (அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை)

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிக்கும் நேரமாக இதைக் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இறைவனுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்வர். பச்சை அல்லது நீல வண்ண ஆடை அணிவிப்பர்.

    நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்வர். அல்லி, நீலோற்பவம் மலர்களால் அர்ச்சிப்பர். நைவேத்தியமாக சுத்தன்னம் படைப்பர். அதர்வண வேதம், 8-ம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்வர். தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும். இந்த காலகட்டத்தில் சிவபெருமானை பூஜிப்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    • 26-ந்தேதி மகா சிவராத்திரி.
    • 27-ந்தேதி அமாவாசை.

    25-ந்தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.

    |* கோயம்புத்தூர் கோணியம்மன் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மகா சிவராத்திரி.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் தரிசனம்,

    * மேல்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வியாழன்)

    * அமாவாசை.

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகன சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (வெள்ளி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (சனி)

    * கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

    * வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் தலங் களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை கூடலழகர் விழா தொடக்கம்.

    * திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சதுர்த்தி விரதம்.

    * வென்னிமலை சுப்பிரமணியர் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    * மதுரை கூடலழகர் காலை தங்கச் சிவிகையில் மச்ச அவதாரம். இரவு சிம்ம வாகனத் தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    • இன்று திருவோண விரதம். பிரதோஷம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-13 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 11.09 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.11 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று திருவோண விரதம். பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் மாலையில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. கோவை கோனியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் பவனி. திருக்கோகர்ணம், ஸ்ரீ காளஹஸ்தி, திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் சேஷ வாகனத்தில் பவனி. ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு கண்டருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஓய்வு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-நலம்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-சுகம்

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- முயற்சி

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-பயிற்சி

    மீனம்-திடம்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
    • வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-10 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 10.46 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: கேட்டை பிற்பகல் 3.22 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ சைலம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் கோவில்களில் காலை சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-கட்டுப்பாடு

    கடகம்-உவகை

    சிம்மம்-உண்மை

    கன்னி-ஆதரவு

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-கீர்த்தி

    மீனம்-வெற்றி

    • திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.
    • சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரி யன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.


    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர மற்றும் நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப் பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா குளியல் செய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.

    கோவில் தோற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர் ஆலயம், மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு வாழ்ந்த கொங்குராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வூர் 'கொங்கராயகுறிச்சி' என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் பற்றி, புராணங்களிலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.


    தூத்துக்குடி மாவட்டத்தில் 'நவ லிங்க புரம்' என்பது மிகவும் விசேஷமானது. வல்லநாடு திருமூலர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், தெற்குகாரசேரி குலசேகரநாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென் நக்கர், ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர், புறையூர் அயனீஸ்வரர், காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆகிய ஆலயங்கள் நவ லிங்க புரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரே நாளில் ஒன்பது கோவிலையும் சுற்றி வரும் வாய்ப்பு கொண்டதாக 'நவ லிங்கபுரம்' உள்ளது.

    நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலம்தான் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயம் ஆகும். இவ்வாலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர். சீர்காழியைப் போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இது 'தென் சீர்காழி' என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் முக்கியமான அவதாரங்களில் ஒன்று பைரவர். உக்கிரம் நிறைந்த இந்த பைரவர், நம்முடைய பயத்தை போக்குபவராக போற்றப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு அளிக்க நினைப்பவர்களின் எண்ணங்களை முறியடிப்பார்.


    பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுபடச் செய்வார். 'பை' என்றால் 'படைப்பு'. 'ர' என்றால் 'வாழ்க்கை'. 'வா' என்றால் 'அழித்தல்'. இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் 'பைரவர்' என்று அழைக்கப்படுகிறார்.

    கொங்கராயகுறிச்சியில் அஷ்டமி தேய்பிறை அன்று, அஷ்ட பைரவருக்குப் பூஜை நடத்தி வருகிறார்கள். இதனால் தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.

    வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், திருமணத்தடை அகலும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

    இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி, ஆற்று மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த இந்த அற்புதக் கோவிலை தோண்டி வெளிக்கொண்டு வந்தனர்.


    அந்த சட்டநாதர் ஆலயத்தை, பக்தர்கள் பெரும் முயற்சியால் தற்போதும், மேலும் மேலும் தோண்டும் பணியைச் செய்து வருகிறார்கள்.

    நாம் நுழையும் போது சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கிதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிக்கட்டுகள் பக்தர்கள் வசதியாக இறங்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

    முதலில் கொடிமரம் மற்றும் நந்தியை தாண்டி, கோவிலுக்குள் நுழைகிறோம். வலதுபுறம் பைரவர், சட்டநாதராக தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். கோவிலைச் சுற்றி வருகிறோம்.

    கோவிலுக்கு இடதுபுறம் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி - தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

    கோவிலுக்குள் நுழைந்தால் தெற்குநோக்கி பொன்னுருதி அம்மாள், 'தேடி வருபவர்களுக்கு உறுதியாக பொன்னும் பொருளும் அள்ளித் தருவேன்' என கருணை முகத்தோடு காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கி வீரபாண்டீஸ்வரர் என்ற பெயருடன் சிவலிங்க வடிவில் ஈசன் காட்சி தருகிறார்.

    இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜையும், தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் பிரதோஷம், மகாசிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி திருமணம், திருவாதிரை பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, இந்த கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்வாலயம் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும். பில்லி சூனிய பிரச்சினை அகலும். தொழில் போட்டியில் வெற்றி பெறலாம்.

    நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். இழந்த பொருட்களை மீட்கலாம். மறைமுக எதிரிகள் விலகுவர். தொழில் போட்டி அகலும். வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும் என்கிறார்கள்.


    இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாலயத்தில் மாதந்தோறும் உழவாரப்பணி நடந்து வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.


    அமைவிடம்

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மெயின்ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கருங்குளம். இங்கு இறங்கி ஆற்றுப்பாலத்தைத் தாண்டினால், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொங்கராய குறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.

    ×