என் மலர்
அமெரிக்கா
- பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர்.
- வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பில் பான்-இந்தியா படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற சினிமா தேவரா. இதில் சுட்டமல்லே என்ற பாடலுக்கு கதாநாயகன், நாயகி இருவரும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தனர். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு 'ரீல்ஸ்' வீடியோ ஆடி கொண்டாடினர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது அங்கு பட்டம் படித்து வரும் இந்திய மாணவர்கள் சுட்டமல்லே பாடலுக்கு நடனமாடினர். அந்த பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர். சக மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி இதனை வெகுவாக ரசித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 1¼ கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார்.
- டுவிட்டர் பெயரை எக்ஸ் என்று எலான் மஸ்க் மாற்றம் செய்தார்.
டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
- 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
- உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
அமெரிக்கா:
பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் (வயது 73). ரத்த அழுத்த பிரச்சனையால் உடல் நிலை குறைவு ஏற்பட்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்ட்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜாகிர் உசேன் மரணம் அடைந்தார்.
மும்பையில் மார்ச் 9, 1951-ல் பிறந்த ஜாகிர் உசேன் இசை உலகில் பெரும் புகழ்பெற்றவர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
உஸ்தாத் ஜாகிர் உசேன் 1988-ல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றார். அவர் 2009-ல் தற்கால உலக இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதையும் வென்றார்.
மேலும், இவர் 5 கிராமி விருதுகளைப் பெற்று இருக்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த 66-வது கிராமி விருதுகள் விழாவில் கூட 3 விருதுகளைப் பெற்றார்.
தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஜாகிர் உசேன் ஒரு புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர், அவரது தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா கான் அவரது காலத்தில் பிரபலமான தபேலா கலைஞர் ஆவார். தந்தையிடம் தபேலா வாசிக்கும் கலையை கற்றுக்கொண்டார்.
உஸ்தாத் ஜாகிர் உசேன் 7 வயதில் கச்சேரிகளில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.
தனது ஆரம்பக் கல்வியை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் முடித்த ஜாகிர் உசேன், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஜாகிர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டம் பெற்றார்.
சிறு வயதில் இருந்தே தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய ஜாகிர் உசேன், வெறும் 11 வயதில் அமெரிக்காவில் தனது முதல் கச்சேரியை வெற்றிகரமாக நடத்தினார். தந்தையுடன் அவர் அந்த இசைக் கச்சேரியை நடத்தி இருந்தார்.
அதில் தனக்குச் சம்பளமாக 5 ரூபாய் வழங்கப்பட்டதாகப் பின்னர் ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்தார். வாழ்க்கையில் தான் பெற்ற அந்த 5 ரூபாய்தான் மிக மதிப்புமிக்க சம்பாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அவர் 1991-ல் பிளானட் டிரம்மிற்காக டிரம்மர் மிக்கி ஹார்ட்டுடன் இணைந்து பணியாற்றினார். இது கிராமி விருதை வென்றது.
பிந்தைய ஆண்டுகளில், ஜாகிர் உசேன் பல படங்களின் ஒலிப்பதிவுகளில் பங்களித்தார். ஜாகீர் உசேன் 1991-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். அட்லாண்டாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு இசையமைத்த குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
2016-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர உலகளாவிய கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.
ஆரம்ப நாட்களில் ஜாகிர் உசேனுக்கு கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தன. இதனால் வேறு வேலை செய்யச் சொல்லிக் கூட பலரும் அறிவுறுத்தினர். இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இசைத் துறைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
பொருளாதார சிக்கல் காரணமாக ஆரம்பக் காலத்தில் பல நாட்கள் அவர் ரயிலிலேயே பயணித்தார். அப்போது சில நேரம் அவருக்கு இருக்கை கூட கிடைக்காது. அப்போதெல்லாம் செய்தித்தாளை விரித்து தரையிலேயே கூட படுத்துத் தூங்குவாராம். ஆனால், அப்போதும் தனது தபேலாவின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் உறுதி செய்து கொள்வாராம்.
அவரது முதல் ஆல்பமான 'லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்ட்' 1973ம் ஆண்டு வெளியானது. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதில் இருந்து இசையை உருவாக்கும் வல்லமை கொண்டவர் ஜாகிர் உசேன். வீட்டின் சமையல் அறையில் உள்ள சாதாரண பொருட்களில் இருந்தும் கூட அட்டகாசமான இசையைக் கொண்டு வருவதில் கை தேர்ந்தவர்.
ஜாகிர் உசேன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"உஸ்தாத் ஜாகிர் உசேனின் அசாதாரணமான தபேலா தேர்ச்சி இசை உலகில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவரது கலைத்திறன் மூலம் அவரது வாழ்க்கையைத் தொட்ட அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தாளங்கள் என்றென்றும் நம் இதயங்களில் எதிரொலிக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- எலான் மஸ்க் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.
- எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமின் ன்லீடர்போர்டில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
உலக பணக்காரரான எலான் மஸ்க் டையப்லோ IV என்ற என்ற வீடியோ கேமை விளையாடி வந்தார். இந்த விளையாட்டின் லீடர்போர்டில் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறினார். இதன்பிறகு அவர் பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேமை விளையாடி வந்தார்.
இந்நிலையில், பாத் ஆஃப் எக்ஸைல் 2 வீடியோ கேம் விளையாடியதில் சீட்டிங் செய்ததாக கூறி உலக பணக்காரரான எலான் மஸ்க் அவ்விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
'மிக வேகமாக பல செயல்களைச் செய்ததற்காக நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள்"'என்ற அந்த வீடியோ கேமின் ஸ்க்ரீன்சாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஸ்க், "சிறிய அளவில் கூட அதை நான் செய்யவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் உசேனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து ஜாகிர் உசேனின் நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா இன்று தெரிவித்திருந்தார்.
இந்தியரான ஜாகிர் உசேன், அமெரிக்காவில் வசித்து வந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக ஜாகிர் ஹுசைனுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.
மேலும், கடந்த ஒரு வாரமாக ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
சாகிர் உடல்நிலை குறித்து அவரது நண்பர் ராகேஷ் கூறுகையில், "அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயரிழிந்தார்.
- கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- கோடைகாலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (Daylight Saving Time-DST) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க 'பகல் சேமிப்பு நேரம்' என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர்.
இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை கடிகாரத்தை 1 மணிநேரம் முன்னோக்கி நகர்த்தி வைப்பார்கள். பின்னர் நவம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கடிகாரத்தில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பார்கள்.
முதல் உலகப் போரின் போது இந்த நடைமுறை உருவானது, பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஆற்றலைச் சேமிப்பதற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1966 இல் சீரான நேரச் சட்டத்துடன் மேலும் தரப்படுத்தப்பட்டது. அதே சமயம், ஹவாய் மற்றும் அரிசோனாவின் பெரும் பகுதி 'பகல் சேமிப்பு நேரம்' என்ற நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த 'பகல் சேமிப்பு நேரம்' முறைக்கு அமெரிக்காவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பகல் சேமிப்பு நேர முறையை அகற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "குடியரசுக் கட்சி பகல் சேமிப்பு நேரத்தை அகற்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும். பகல் சேமிப்பு நேர முறை நமக்கு தேவையில்லை. அது சிரமமானது மற்றும் செலவு மிகுந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன்
- ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான RAW விற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
RAW வுடனும், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனும் தொடர்பில் உள்ள ரஷிய அமைப்புகள் இந்த முக்கிய தகவல்களைப் பரிமாறுவதாக சீக்கியர்களுக்கான நீதி [எஸ்.எப்.ஜே] அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் இணை நிறுவனர் குருபத்வந்த் சிங் பன்னுன், காலிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுவதாக ரஷியாவை எச்சரித்துள்ளார்.

ரஷிய ஊடகம் காலிஸ்தான் குறித்த தப்பெண்ணத்தை பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே நியூ யார்க்கில் உள்ள ரஷிய தூதரகம் முன் எஸ்எப்ஐ உறுப்பினர்கள் போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள ரஷிய தூதரகம் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்த எஸ்எப்ஐயினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக குருபத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்தியாவை தொடர்புப்படுத்தி சர்ச்சை எழுந்ததும், அவர் இந்திய விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார்
- மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் எச்சரித்தார்.
OpenAI நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும், அந்நிறுவனத்தின் தீய நடைமுறைகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவருமான 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.
நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் நிலவி வந்த நிலையில் தற்கொலை மூலமே அவரது உயிர் பிரிந்துள்ளதாக சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என சான் பிரான்சிஸ்கோ போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

யார் இந்த சுசீர் பாலாஜி?
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுசீர் பாலாஜி, ஏஐ தொல்நூட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கணினி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பாலாஜி 2022 பிற்பகுதியில் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சாட் ஜிபிடி' க்கு பயிற்சி அளித்தல், அதன் மேம்பாடு தொடர்பான பணிகளை செய்தவர் ஆவார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
இதைத்தொர்ந்த்து ஓபன் ஏஐ சாட் ஜிபிடி குறித்த பல குற்றசாட்டுகளை பாலாஜி பொதுவெளியில் முன்வைத்தார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த பாலாஜி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் வணிக கொள்கைகள் வணிகங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க பதிப்புரிமை பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தி அமெரிக்க பி[பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கம்பியூட்டர் புரோகிராமர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
பாலாஜியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஓபன் ஏஐ மீது பல வழக்குகளும் தொடரப்பட்டன. கடுமையான விதிமுறைகள் இல்லாமல் மனித குலத்துக்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்துகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் கவலை தெரிவித்தார்.காலப்போக்கில், இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பாலாஜியின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. கடைசியாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலும் ஓபன் ஏஐ மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஏஐ வளர்ச்சி குறித்த கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் சேவைகள் ஏஐ ஆல் சக்தியூட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு ஏஐ பெரு வணிகத் தேவையாக வளர்ந்துள்ள நிலையில் பாலாஜி மரணத்தை போலீஸ் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தாலும், இதில் இன்னும் மர்மம் உள்ளதாகவே பலர் சந்தேகிக்கின்றனர்.
- டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார்.
- டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறினார்
உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.
டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.

'டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்' என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.
டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.
இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.

இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும். அதேவேளை டெஸ்லாவில் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும்.
- ரஷியாவுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதோடு நான் உடன்படவில்லை.
- நாம் போரை அதிகரித்து மோசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும், தான் போரை விரும்பவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பேன் எனத் தெரிவித்தார். இதன்மூலம் உக்ரைன்- ரஷியா, இஸ்ரேல்- ஹமாஸ், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ரஷியாவை எதிர்த்து போரிய உக்ரைனுக்கும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை எதிர்த்து போரிட இஸ்ரேலுக்கும் அமெரிக்காதான் ராணுவ உதவி (ஆயுதம் வழங்குதல்) செய்து வருகிறது. போர் நிறுத்தம் ஏற்படடைவில்லை என்றால் டொனால்டு டிரம்ப் கட்டாயமாக ராணுவ உதவியை குறைப்பார்.
கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன அதிபர் ஜெலன்ஸ்கியை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். பின்னர் சமூக வலைத்தளத்தில் "உக்ரைன்- ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஏவுகணைகளை ரஷியா மீது உக்ரைன் செலுத்துவது பைத்தியக்காரத்தனம் என டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அங்கே என்ன நடக்கிறது (அமெரிக்க ஏவுகணைகளை ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்துவது) என்பது பைத்தியக்காரத்தனம். அது பைத்தியக்காரத்தனம்.
ரஷியாவுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதோடு நான் மிகவும் கடுமையாக உடன்படவில்லை. நாம் இதை ஏன் செய்து கொண்டிருக்கிறோம். நாம் போரை அதிகரித்து மோசமாக்கி கொண்டிருக்கிறோம். இதை அனுமதிக்கக் கூடாது.
நான் உக்ரைனை கைவிடமாட்டேன். நான் ஒரு ஒப்பந்தத்தை அடைய விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்கு நீங்கள் சென்று கொண்டிருப்பதுதான் கைவிடாமல் இருப்பதற்கு ஒரே வழி.
உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிகவும் சிறந்த திட்டம் உள்ளது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு உதவ ஒரு நல்ல திட்டம் இருப்பதாக நினைக்கிறேன், ஆனால் நான் அந்த திட்டத்தை அம்பலப்படுத்தத் தொடங்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு பயனற்ற திட்டமாக மாறிவிடும்" என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ -31 ரகத்தை சேர்ந்தது.
- இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் விமானம் நெடுஞ்சாலையில் மோதி இரண்டாக முறிந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தெற்கு டெக்சாஸின் விக்டோரியாவில் உள்ள ஸ்டேட் ஹைவே லூப் சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இரட்டை எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் ஒன்று கார்கள் மீது மோதியது.
சாலைக்கு மேல் தாழ்வாக பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென சாலையில் செல்லும் 3 கார்கள் மீது மோதி கீழே விழுந்து இரண்டாக முறிந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக விக்டோரியா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் பைபர் பிஏ -31 ரகத்தை சேர்ந்தது.
விபத்து நடந்தபோது விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார். விபத்தில் அவர் உயிர் தப்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழ் டைம்.
- அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் இதழில் வெளியிட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது.
இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச்சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து 'டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2016-ம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






