என் மலர்
உக்ரைன்
- சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல்
- ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
உக்ரைன் நாடு தனது பாதுகாப்புக்காக நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இது தனது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று ரஷியா கருதியது. இதனால் உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா அதிரடியாக போர் தொடுத்தது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கணிசமான நகரங்களை ரஷியா தன் வசப்படுத்திக் கொண்டது. என்றாலும் உக்ரைன் நாட்டு ராணுவம் ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. அடிக்கடி இரு நாடுகளும் மாறிமாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்துகின்றன.
உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் இதுவரை சமரச தீர்வு எட்டப்படவில்லை. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்தபடி உள்ளது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ரஷியா நாடு மீது உக்ரைன் தனது தாக்குதல் வியூகங்களை மாற்றி உள்ளது. அதன்படி ரஷியாவின் பல ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நாடு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. சில டிரோன்கள் ரஷியாவின் உயரமான கட்டிடங்களை பதம் பார்த்தன.
இதையடுத்து தனது பாதுகாப்பை உக்ரைன் பகுதியில் மேலும் பலப்படுத்திய ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தி வந்தது. இந்தநிலையில் நேற்று ரஷியா மீது உக்ரைன் நாடு திடீர் அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
ராணுவ தொழிற்சாலை
ரஷியாவில் உள்ள சரடோ, ஏஞ்சல்ஸ், பிரியன்ஸ்க், துலா, டார்ஸ்டன் ஆகிய நகரங்கள் மீது உக்ரைன் நாட்டின் ஏவுகணைகள் நூற்றுக்கணக்கில் சீறிப்பாய்ந்து தாக்கின. திடீரென உக்ரைன் ஏவுகணைகள் இத்தகைய பலமுனை தாக்குதலை நடத்தும் என்று ரஷியா எதிர்பார்க்கவில்லை.
என்றாலும் சுதாரித்துக் கொண்ட ரஷிய ராணுவம் பதிலடி தாக்குதலை நடத்தியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய இந்த தாக்குதல்கள் நடந்தன.

உக்ரைன் ஏவுகணைகள் ரஷியாவின் ராணுவ தொழிற்சாலையை தாக்கி அழித்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த ராணுவ தொழிற்சாலை பீரங்கி, வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஆகும்.
ஆனால் ராணுவ தொழிற்சாலைக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று ரஷியா கூறி உள்ளது.
எண்ணை கிடங்கு
அதுபோல ரஷியாவின் விமான எரிபொருள் சேமிப்பு நிலையமான எண்ணை கிடங்கு மீதும் உக்ரைன் குறி வைத்து ஏவுகணைகளை வீசியது. இதில் எண்ணை கிடங்கு தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த எண்ணை கிடங்கை நோக்கி வந்த ஏவுகணைகளை நடுவழியில் மறித்து அழித்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த எண்ணை கிடங்கு உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துக்கு முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.
ரஷியாவின் குண்டு வீசும் போர் விமானங்களுக்கு எரிபொருள் வினியோகம் முழுமையாக இந்த எண்ணை கிடங்கில் இருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய தாக்குதல்
கடந்த சில மாதங்களில் ரஷியா மீது உக்ரைன் நாடு நடத்தி இருக்கும் மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக ரஷியாவின் சில நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த தாக்குதல் தங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ரஷியா இன்று மீண்டும் அறிவித்தது.
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்த போவதாகவும் ரஷியா கூறி உள்ளது. இதனால் ரஷியா- உக்ரைன் போரில் மீண்டும் பதட்டம் எழுந்துள்ளது.
- குர்ஸ்க் பகுதியில் வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
- என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 2022 பிப்ரவரி முதல் தீவிரமான போர் நடந்துவருகிறது. மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் சேரும் உக்ரைன் உடைய முயற்சி, ரஷியாவுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் என்று கூறி ரஷியா போர் தொடுத்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி ரஷியாவுடன் மறைமுக போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய வீரர்கள் 12,000 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக உக்ரைன், தென் கொரியா, அமெரிக்க நாடுகள் எச்சரித்தன. இடையில் போரில் வட கொரிய வீரர்கள் பாஷை புரியாமல் ரஷிய வீரர்களையே சுட்டது என பலவாறான தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ரஷியாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் இரண்டு வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.

இதை முறியடித்து இரண்டு வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த இரண்டு வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.
பத்திரிகையாளர்கள் இந்தக் கைதிகளை அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
- ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர்.
உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியாவில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் கிட்டத்தட்ட 13 பேர் உயிரழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதல் மற்றும் உயிரிழப்பு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், இரத்த காயம் அடைந்த மக்கள் சாலையிலேயே அவசர படையினர் முதலுதவி சிகிச்சை அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தீயனைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கின்றன.
இத்துடன், "ரஷியர்கள் ஜபோரிஜியா மீது வான்வழி குண்டுகளை வீசி தாக்கினர். இது நகரத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல். இதுவரை டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, 13 பேர் கொல்லப்பட்டனர்."
"அவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கல்கள். துரதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தும், ஒரு நகரத்தின் மீது வான்வழி குண்டுகளை வீசுவதை விட கொடூரமானது எதுவும் இல்லை."
"ரஷியா அதன் பயங்கரவாதத்திற்காக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உக்ரைனில் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் ஆதரிக்கப்பட வேண்டும். வலிமையின் மூலம் மட்டுமே அத்தகைய போரை நீடித்த அமைதியுடன் முடிவுக்குக் கொண்டுவர முடியும்," என்று கூறினார்.
- நேற்றிரவு நடந்த தாக்குதலில் 103 ஷாகித் வகை டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.
- இந்த ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன என்றார்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும் உரிய பதிலடி கொடுத்து உக்ரைன் அவற்றை மீட்டது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. அந்த நாடுகளும் ராணுவம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் நேற்று ஒரே நாளில் 103 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது:
கடந்த வாரத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றுடன் வான்வழி வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் என உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு நாளும் ரஷியாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலில் இருந்து எங்களுடைய வான்வெளியை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.
நேற்றிரவு நடந்த தாக்குதலில் ஈடுபட்ட 103 ஷாகித் வகை ஆளில்லா விமானங்களில் 8,755 வெளிநாட்டு பொருட்கள் இருந்தன.
ரஷியா, அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களைத் தொடர்ந்து பெற்று வருகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை பெற்று, உக்ரைனில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவதற்கான ஆயுதங்களில் பயன்படுத்துகிறது.
ரஷியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைக்கான நெருக்கடி போதிய அளவில் இல்லை என தெரிவித்துள்ளார்.
- கடற்பகுதியில் ரஷியாவின் போர்க்கப்பல் போன்றவற்றை உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- தற்போது முதன்முதலாக கடல்சார் டிரோன் மூலம் ஹெலிகாப்டரை தாக்கி அழித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியா மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த வகையில் இன்று உக்ரைனின் கடல்சார் டிரோன் ரஷியாவின் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் டிரோன் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்தது இதுவே முதல்முறையாகும்.
2014-ம் ஆண்டு ரஷியா உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது. இங்கு ரஷியா போர் கப்பல் மற்றும் போருக்கு தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை சேமித்து வைத்துள்ளது.
உக்ரைன் கடல்சார் டிரோன்கள் இவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது முதன்முறையாக ஹெலிகாப்டரைதாக்கி அழைத்து வருகிறது.
ரஷிய ஹெலிகாப்டரின் உரையாடலை இடைமறித்து கேட்டபோது "வெடிச்சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விமானி தெரிவிக்கிறார்.
மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2-வது நடத்தப்பட்ட தாக்குதலை நான் பார்க்கவில்லை. ஆனால், முதல் தாக்குதல் நேரடியாக தாக்கியது. ஹெலிகாப்டரில் தாக்கப்பட்டதாக உண்கிறேன். சில சிஸ்டம்கள் தோல்வியடைந்துள்ளது. நான் (ஹெலிகாப்டர்) தாக்கப்பட்டேன். கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என அவர் பேசுவது பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷியாவுக்கு டிரோன் தாக்குதல் மூலம் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா போர்க்கப்பல், விமானம் உள்ளிட்டவைகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் Mi-8 ஹெலிகாப்டரை உக்ரைனின் மகுரா V5 கடல்சார் டிரோன் (Magura V5 naval drone) தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவத்தின் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
- தலைநகர் கீவில் உள்ள நகர் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்.
- வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள நகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் நீண்டு கொண்டே இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவம், அதற்கு உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் ரஷியாவை தாக்கியது. இதனால் வான் பாதுகாப்பு சிஸ்டம் மூலம் டிரோன் தாக்குதலை முறியடித்தது. அப்போதுதான் தவறுதலாக அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமான விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் காலை வரை தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷியா ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று அதிகாலை 3 மணிக்கு கீவ் நகரில் ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டு மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது என உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கிய் மாவட்டத்தில் காலை 8 மணிக்கு ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மற்றொரு ஏவுகணை தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் விழுந்ததை உக்ரைன வீரர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வடகிழக்கு பிராந்தியமான சுமியில் உள்ள ஷோஸ்ட்கா நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டங்கள், கல்வி வசதி பெறும் நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளன என சுமி மேயர் தெரிவித்துள்ளார்.
இதைத் தவிர மற்ற பல இடங்களிலும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.
- உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது.
- கிறிஸ்துமஸ் அன்று ரஷிய படையினர் டிரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தினர்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு ஆண்டுகளைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படையினர் நேற்று தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தியது.
அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷிய படை தாக்குதல் நடத்தியதால் ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளைக் குறிவைத்து 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் வாயிலாக தாக்குதலை ரஷியா தொடுத்துள்ளது. இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்க முடியுமா என பதிவிட்டுள்ளார்.
- அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் தாக்கப்பட்டது
உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா நேற்று [டிசம்பர் 20] பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் [கதீட்ரல்] சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்/கேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும், உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. கட்டிடங்களில் தீ பற்றி எரிந்ததில் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
தீப்பற்றிய கட்டடத்தில் அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இருப்பினும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உக்ரைன் தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் சேதமடைந்ததாக உக்ரைனின் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் மைகோலா டோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் ஏவுகணை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட உக்ரைனின் SBU பாதுகாப்புப் படையின் கட்டளை மையத்தை மூலம் வெற்றிகரமாகக் குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- பாஷை புரியாமல் ரஷிய வீரர்களை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்றனர்.
- குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டது.
உக்ரைன் - ரஷியா பிரச்சனை
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது.

மேற்கு நாடுகள் vs ரஷியா
இந்த போர் இரண்டு ஆண்டுகளை கடந்ததும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகள் பண பலம், ஆயுத பலம், ராணுவ பலத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை சேர்த்துக்கொள்வதே போருக்கு தீர்வு என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மறுபுறம் உக்ரைனுக்கு உதவுவது ரஷியாவை நேரடியாக மேற்கு நாடுகள் எதிர்ப்பதாகவே பொருள்படும் என ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்து வருகிறார்.

போர்
போர் தொடங்கியதிலிருந்து 43,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஜெலன்ஸ்கி இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும்6.5 லட்சம் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 வருடங்களில் போரில் ரஷியாவின் கைகளே ஓங்கி இருந்த நிலையில் இந்த வருடம் உக்ரைன் தற்காத்துக் கொள்வதோடு நிறுத்திவிடாமல் ரஷிய பகுதிகளின் மேல் தாக்குதல்களை நடத்தியது இந்த 2 வருட போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.

உக்ரைனின் மின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தளங்களைக் குறிவைக்க ரஷியா தலைப்பட்டது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்த சமயத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் -இல் நாட்டிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மாறிய காட்சி
இந்த தடுமாற்றங்களுக்கு இடையில் உக்ரைன் படைகள் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல்முறையாக ரஷியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின. இந்த எதிர்பாராத தாக்குதலில் ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தின் பெரும்பகுதி உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 200,000 ரஷிய மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ரஷிய மண்ணில் வெளிநாட்டுப் படைகள் முன்னெடுத்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் இறுதியில் ரஷியாவில் 100 குடியேற்றப் பகுதிகளைக் கைப்பற்றி 600 ரஷிய வீரர்களை கைது செய்ததாக உக்ரைன் கூறியது. எல்லையில் ரஷியா முன்னேறாமல் இருக்கவே அந்த பிராந்தியங்களைக் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்தது.

பதிலடியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி 2 கட்டங்களாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ரஷியாவின் சராதோவ் [Saratov] பகுதியில் உக்ரைன் டிரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச கவனம் பெற்றன. எனவே ரஷியாவுக்கு சவாலாக உக்ரைன் போர் மாறியது. அன்று முதலே இரு தரப்பும் ஒரே பலத்துடன் போரிட்டு வருகிறது.
வடகொரிய நட்பு
இந்த நிலையில் போரின் முக்கிய திருப்பமாக ரஷியாவுக்கு வட கொரியாவின் நட்புறவு கிடைத்தது. இரு நாட்டு தலைவர்களும் தத்தமது நாட்டுக்கு ஒருவரை ஒருவர் அழைத்து உபசரித்துப் பாதுகாப்பு உதவிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்பந்தம் இட்டனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த நிலையில் வட கொரியா, சீனா, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நட்பை புதின் அதிகம் நாடினார்.

கடந்த அக்டோபரில் போரில் ரஷியாவுடன் 12 வட கொரிய வீரர்களும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதாக ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.
சமீபத்தில் பாஷை புரியாமல் ரஷிய வீரர்கள் சிலரை வடகொரிய வீரர்கள் தவறாக சுட்டுக்கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது.
திடீர் அனுமதி முன்னதாக நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ஜோ பைடன் நிர்வாகம் அவசர அவசரமாக ஒரு விஷயத்தை செய்தது போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியது.
அமெரிக்கா தான் வழங்கியிருந்த ATACMS [பால்சிடிக் ஏவுகணைகளை] கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு முதல் முறையாக அனுமதி கொடுத்தது.

சற்றும் தாமதிக்காத உக்ரைன் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி அதாவது போர் தொடங்கி 1000 வது நாளில் ரஷியாவின் பிரையன்ஸ்க் பகுதி ராணுவ தளங்களை குறிவைத்து பால்சிடிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சேதங்கள் ஏற்படவில்லை என்றாலும் ரஷியாவை இது மேலும் சீண்டியது.

அதே நாளில் 120 ஏவுகணைகள், 90 டிரோன்கள் மூலம் உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது. மேலும் ரஷிய அணு ஆயுத கொள்கைகளில் புதின் மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளை தங்களின் நேரடி எதிரியாக அறிவித்து அவர்கள் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு புதின் எந்த நேரமும் உத்தரவிடக் கூடும் என்ற பதற்றமும் நிலவுகிறது.

இகோர் கிரில்லோவ் கொலை
இதற்கிடையே கடந்த செய்வ்வாய்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.
குடியிருப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதில் இகோரும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

இதற்கு பழிவாங்க ரஷியா சூளுரைத்துள்ள நிலையில் நிலைமையில் டிரம்ப் சொன்ன கருத்தால் திடீர் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பைத்தியக்காரத்தனம் என்று அடுத்த மாதம் அதிபர் பதவி ஏற்க உள்ள டொனால்டு டிரம்ப் கூறினார்.
இதன் எதிரொலியாக உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் உடன் பேச தயாராக உள்ளேன் என அதிபர் புதின் கூறியதாக ரஷிய அதிபர் மாளிகை வட்டாரங்களில் இருந்து நேற்று தகவல் வந்திருக்கிறது.
- உக்ரைன்- ரஷியா இடையே 2022-ல் இருந்து சண்டை நடைபெற்று வருகிறது.
- தற்போது ரஷியா ஒரு நகரை பிடிக்க கடுமையான சண்டையிட்டு வருகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா திடீரென படையெடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவிகளை உக்ரைன் பெறுவதற்குள், உக்ரைனின் பல நகரங்களை ரஷியா பிடித்துக்கொண்டது. அதன்பின் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள ரஷியா படைகளை குவித்துள்ளது. அதேவேளையில் உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்க அமெரிக்கா உதவியுடன் சண்டையிட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் குறிப்பிட்ட இடங்களை பிடித்து அதிர்ச்சி அளித்தது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் போக்ரோவ்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரஷியப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. தற்போது நகரத்தை நெருங்கியுள்ளது. இதனால் நகரத்தை சுற்றி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படைகள் மீது தாக்குதல் நடத்தும் ரஷியப்படைகளின் 40 முயற்சிகளை முறியடித்துள்ளோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
டொனட்ஸ்க் பிராந்தியத்தை சுற்றி உக்ரைன் பாதுகாப்பை அதிகப்படுத்திய நிலையில், ரஷியா டொனட்ஸ்க் பிராந்தியத்தின் அருகில்உ ள்ள டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்துள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் கடுமையான ஆயுதங்கள் மூலமாக உக்ரைன் போர் பாதுகாப்பை உடைத்து முன்னேற ரஷிய படைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா படையெடுப்பதற்கு முன் போக்ரோவ்ஸ்க் நகரில் 60 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். டொனட்ஸ்க் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான முக்கிய பாதுகாப்பு பகுதியாக இது இருந்து வருகிறது. இந்த பகுதியை ரஷியா பிடித்தால் டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷியாவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன பதிலடி கொடுப்பதால் ரஷிய ராணுவம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கும் நிதியுதவியை குறைக்க வாய்ப்புள்ளதால், இது உக்ரைனுக்கு கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.
- உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
- ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இதை தான் நாம் முதலில் செய்யவேண்டும். அதன்பின்பு உக்ரைன் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பேச்சுவார்த்தை நடத்த திரும்பப் பெற முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
- இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் தாக்குதல்களுக்கு பழிவாங்குவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சபதம் செய்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செய்தியில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ரஷியாவின் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. தங்குமிடங்களுக்கு விரைந்து செல்லும்படி பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது. இந்த ராணுவ எச்சரிக்கை உளவுத்துறை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என பதிவிட்டுள்ளது.
உக்ரைன் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்திய பின், தகுதியான பதிலடி என்ற ரஷியாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






