இங்கிலாந்து - உக்ரைன் இடையே கையெழுத்தான '100 ஆண்டு உடன்படிக்கை'.. ஜெலன்ஸ்கிக்கு ஸ்டார்மர் உதவிக்கரம்

பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். உக்ரைன் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - உக்ரைன் இடையே கையெழுத்தான '100 ஆண்டு உடன்படிக்கை'.. ஜெலன்ஸ்கிக்கு ஸ்டார்மர் உதவிக்கரம்
Published on

உக்ரைனுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இரு நாடுகளுக்கும் 100 ஆண்டு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022 முதல் ரஷியாவுடன் போர் செய்து வரும் உக்ரைனின் பிரதான கோரிக்கை, நேட்டோ நாடுகளுடன் இணைவதே. இந்நிலையில் உக்ரைனுடன் இங்கிலாந்து செய்துள்ள உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில் கெயர் ஸ்டார்மர் பிரதமர் பதவி ஏற்றார்.

பதவியேற்றபின் முதல் முறையாக ஸ்டார்மர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு வருகை தந்துள்ளார். நேற்று [வியாழக்கிழமை] கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இரு நாடு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்த 100 ஆண்டு உடன்படிக்கையை உறுதி செய்துள்ளார்.

இந்த 100 ஆண்டு ஒப்பந்தம் - பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஒப்பந்தத்தின் கீழ், லண்டனும் கீவ்-வும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று ஸ்டார்மர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோ நாடாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

100 ஆண்டு கால ஒப்பந்தத்தின் பல்வேறு கூறுகள் வரும் வாரங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் திங்கட்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டிரம்ப், உக்ரைனில் மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com