என் மலர்tooltip icon

    கத்தார்

    • முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி.
    • முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போடுவதற்கு அர்ஜென்டினா வீரர்கள் தீவிரம் காட்டினார்.

    34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் ஜூலியன் அல்வொரஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


    2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா 6வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 

    • குரோஷியா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.
    • அர்ஜென்டினா அணி அரை இறுதி ஆட்டங்களில் தோல்வி அடைந்ததில்லை.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதுகிறது.

    கடந்த உலகக் கோப்பையில் இறுதி சுற்றில் தோல்வியை தழுவிய குரோஷியா, இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணி எந்த போட்டியிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா, அரை இறுதி ஆட்டங்களில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை.

    அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி தமது நாட்டிற்கு உலகக் கோப்பையை பெற்று தர இதுவே கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • போர்ச்சுகல் அணிக்கான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை.
    • எனது அணியினரையோ, எனது நாட்டையோ ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

    போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது.

    போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு கணமும் மாறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எப்போதும் ஒரு (போர்த்துகீசியம்) இலக்கிற்காக போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக நான் விளையாடிய 5 உலகக் கோப்பை ஆட்டங்களில், எப்போதும் மில்லியன் கணக்கான போர்ச்சுகீசியர்களின் ஆதரவிலும், நான் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

    எப்போதும் அனைவரின் நோக்கத்திற்காக போராடும் ஒருவனாக இருக்கிறேன். இப்போதைக்கு அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டிய நேரம் இது. நன்றி போர்ச்சுகல், நன்றி, கத்தார். இவ்வாறு ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    போர்ச்சுக்கல் அணிக்காக 5 உலக கோப்பை தொடர்களில் ரொனால்டோ விளையாடி உள்ளார். இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. அப்போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகி விடும் என்பதால் அதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    • அரையிறுதிச் சுற்றுக்கு 4 நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
    • இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழைந்தன. நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், காலிறுதி சுற்றுகள் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தன. காலிறுதியில் வென்றதன் மூலம் அர்ஜென்டினா, குரோசியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை மறுதினம் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா, குரோசியா அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 2-வது அரையிறுதியில் பிரான்ஸ், மொராக்கோ மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகளுக்கு குரோசியா, மொராக்கோ அணிகள் அதிர்ச்சி அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

    • முதல் பாதியில் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்தது.
    • இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

    2வது பாதி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சம நிலையில் இருந்தது. பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் ஆட்ட நேர முடிவிலும் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • மொராக்கோ அணி இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.

    • கூடுதல் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
    • பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் 3-4 என்ற கணக்கில் நெதர்லாந்து தோல்வி.

    கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு லுசைல் கால்பந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

    2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

    கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

    • பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
    • உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

    இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • காலிறுதிச் சுற்றில் 8 நாடுகள் விளையாடுகின்றன.
    • இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும். நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நள்ளிரவுடன் முடிந்தது. நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொராக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோசியா, பிரேசில் அணிகள் மோதுகின்றன. டிசம்பர் 10-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது காலிறுதியில் மொராக்கோ, போர்ச்சுக்கல் அணியும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3-வது காலிறுதியில் நெதர்லாந்து, அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன. நான்காவது காலிறுதி டிசம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    • முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • இரண்டாம் பாதியிலும் போர்ச்சுக்கல் 4 ஒரு கோல் அடித்து அசத்தியது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் போர்ச்சுக்கலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர்.

    சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.

    இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

    இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    • முதல் பாதியில் பிரேசில் அணி 4 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • இரண்டாம் பாதியில் தென் கொரியா அணி ஒரு கோல் அடித்தது.

    தோகா:

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

    ×