என் மலர்tooltip icon

    உலகம்

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
    • மனிதர்களிடம் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    நரம்பியல் நிலைமைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க் 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

    இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரின் கர்சர் மற்றும் கீபோர்டு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த முடியும்.

    கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தை மனிதர்களிடம் சோதனை செய்வதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்.

    அதன்படி பக்கவாதம் பாதிக்கப்பட்டு, இந்த சோதனையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட முதல் நபரிடம் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிப் முதன்முதலாக வெற்றிகரமாக மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது.

    சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை கட்டுப்படுத்துகிறார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    • "8 பாசஞ்சர்ஸ்" எனும் ரூபியின் சேனலுக்கு 2 மில்லியன் பயனர்கள் தேர்ந்தனர்
    • உணவு, குடிநீர், படுக்கை மறுக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்

    மேற்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம், உடா (Utah). இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City).

    உடா மாநிலத்தில், 42 வயதான ரூபி ஃப்ராங்கி (Ruby Franke) எனும் பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த 2015ல் ரூபி, யூடியூப் வலைதளத்தில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ உருவாக்கத்தில் அவரது குழந்தைகளையும் அவர் பங்கெடுக்க செய்தார்.

    "8 பாசஞ்சர்ஸ்" (8 Passengers) எனும் அவரது யூடியூப் சேனலுக்கு குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பயனர்கள் சேர்ந்தனர்.

    2020 காலகட்டத்தில் அவரது மகன்களில் ஒருவர் தனக்கு நேரும் துன்புறுத்தலை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருப்பதை ஒரு பயனர் கண்டு, ரூபியின் முந்தைய வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்தார். அதில் ரூபி தனது குழந்தைகளை "கட்டுப்பாடு" எனும் பெயரில் துன்புறுத்தும் சான்று கிடைத்தது.

    இதனை தொடர்ந்து ரூபியை விசாரிக்க உடா மாநில குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

    குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபி, 2022ல் தனது யூடியூப் சேனலை நிறுத்தி விட்டார். ரூபியும், அவரது கணவரும் பிரிந்தனர். 


    தொடர்ந்து "ஜோடி ஹில்டெப்ராண்ட்" என்பவரின் "கனெக்ஷன்ஸ் க்ளாஸ்ரூம்" (ConneXions Classroom) எனும் சேனலில் ரூபி தனது வீடியோக்களை பதிவேற்றினார்.

    2022ல் அவரது 12-வயது மகன் ஒருவன் வீட்டை விட்டு தப்பி, அண்டை வீட்டாரிடம் உணவு கேட்கும் போது அவன் உடலெங்கும், பல காயங்கள் இருப்பதும், அவை அச்சிறுவனை பலமாக கயிற்றினால் கட்டி வைத்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து ரூபியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

    அங்கு அவர்களுக்கு ரூபி தனது குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்திரவதை செய்ததற்கான தடயங்கள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று, ரூபி ஃப்ராங்கி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஹில்டெப்ராண்ட்" (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    விசாரணையின் போது நீதிமன்றத்தில் உடா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "ஃப்ராங்கியின் குழந்தைகள் நாஜி படையினர் நடத்திய சித்திரவதை கூடங்களை போன்ற சூழலில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை, பொழுதுபோக்கு என அனைத்தும் மறுக்கப்பட்டு வந்தது" என தெரிவித்தார்.

    இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.
    • அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சியோல்:

    தென்கொரியாவில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் டாக்டர்கள் பணிபுரிகின்றனர். அங்குள்ள மக்கள்தொகையின்படி 10 ஆயிரம் பேருக்கு 25 டாக்டர்கள் என்ற நிலை உள்ளது.

    எனவே டாக்டர்களின் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி வருகிற கல்வியாண்டு முதல் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது.

    அரசின் இந்த அறிவிப்பால் டாக்டர்களின் பணிச்சுமை குறையும். அதேபோல் நோயாளிகளுக்கும் சிகிச்சை எளிதில் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் இந்த மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதாவது 2 ஆயிரம் பேரை கையாளக்கூடிய அளவுக்கு நம்மிடம் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மேலும் அளவுக்கு அதிகமான டாக்டர்களை பணியமர்த்தும்போது தேவையற்ற சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் நிலவும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    முக்கியமாக அதிகளவில் டாக்டர்கள் உருவாக்கினால் எதிர்காலத்தில் தங்களுக்கு சம்பளம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரே நாளில் 1,600-க்கும் அதிகமான பயிற்சி டாக்டர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஏராளமான ஆபரேசன்கள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே டாக்டர்கள் இந்த போராட்டத்தை உடனடியாக கைவிடும்படி தென்கொரிய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

    • ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.
    • இந்தியா உலகின் மற்ற நாடுகளை விட தனித்து நிற்கிறது.

    தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகம் முழுக்க ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.

    ஒரு சில கிலோமீட்டர் இடைவெளிக்குள் பல வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்டார வழக்கு மொழியை கற்பதில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இதுவே உலக பன்முகத்தன்மையின் அழகு. பல்வேறு கலாசாரங்களை கொண்ட நாடு என்ற வகையில், இந்தியா உலகின் மற்ற நாடுகளை விட தனித்து நிற்கிறது.

     


    இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. உலகளவில் அதிக மொழிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூகினியா உள்ளது. இந்த நாட்டில் மொத்தம் 840 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

    உலகில் ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தாய்மொழி வாயிலாகவே ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய துவங்குகிறார். மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழி சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

     


    1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1999-ம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்தை யுனெஸ்கோ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றது.

    அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்திற்கான தீம்- "பலமொழி கல்வி" ஆகும்.

    "பாரம்பரியம் பற்றிய அறிவு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான வழித்தடங்களாக செயல்படும் தங்களது மொழிகளை பாதுகாப்பதன் மூலம் பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் செழித்து வளர முடியும்."

    "பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. தற்போது, உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வசதிகளை பெற முடிவதில்லை. மேலும், இது குறிப்பிட்ட பகுதிகளில் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது," என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    • அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கம்.
    • இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

    காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தி உள்ளார். பொதுவாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில், 41 வயதான வேல்ஸ் இளவரசர் வில்லியம் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் மத்திய கிழக்கில் நடத்திய தாக்குதல் மற்றும் அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்களால் மனித குலம் எதிர்கொள்ளும் இழப்புகளை கண்டு பெரிதும் வருந்துகிறேன். இதில் பலர் கொல்லப்பட்டு விட்டனர்."

    "நான், மற்றவர்களை போன்றே, இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றே நினைக்கிறேன். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. உதவிகள் அதிவேகமாக சென்றடைய வேண்டியதும், பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ராபினெட் ராணுவத்தில் பணியாற்றிய ஒரு கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்
    • சுமார் 160 வருடங்களுக்கு பிறகு இந்த தொடர்பு வெளிவந்திருக்கிறது

    அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81).

    பைடனின் மூதாதையர்களில் ஒருவர் மோசஸ் ஜே. ராபினெட் (Moses J. Robinette). கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான அவர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார்.

    1864 மார்ச் 21 அன்று அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், ராபினெட்டுக்கு, ஜான் அலெக்சாண்டர் (John J. Alexander) எனும் சக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், ராபினெட் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள், சண்டையை நிறுத்தி, அலெக்சாண்டரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராணுவ கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    தற்காப்புக்காக அலெக்சாண்டரை தாக்கியதாகவும், தாக்காமல் இருந்திருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார் என்றும் ராபினெட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    ஆனால், ராபினெட்டின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 2-வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது.

    ராபினெட், தன்னை விட மிக அதிக எடை மற்றும் வலிமையுடைய பலசாலி ஒருவருடன் சண்டையிட நேர்ந்ததால் தற்காப்பிற்காக கத்தியால் தாக்க நேரிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மருத்துவரான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறும் 3 ராணுவ அதிகாரிகள் ராபினெட்டுக்கு ஆதரவாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் கருணை மனு அளித்தனர்.

    இதனை ஏற்று கொண்ட அதிபர் ஆபிரகாம் லிங்கன், ராபினெட்டுக்கு மன்னிப்பு வழங்கினார்.

    சுமார் 160 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த தகவல் அமெரிக்க தேசிய ஆவண காப்பகத்திலிருந்து கிடைத்துள்ளது.

    அமெரிக்காவின் 16-வது அதிபருக்கும், தற்போதைய 46-வது அதிபருக்கும் உள்ள இந்த இணைப்பை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • வல்லரசு நாடுகளான சீனாவும் வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன
    • ரோல்ஸ்-ராய்ஸ் காரை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆரஸ்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.

    உலகின் பல நாடுகள் ரஷியாவை எதிர்த்ததால், அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டது.

    ஆனால், வல்லரசு நாடுகளான சீனாவும், வட கொரியாவும் ரஷியாவை ஆதரிக்கின்றன.


    உக்ரைனுடனான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் பீரங்கிகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ராக்கெட்டுகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வட கொரியா வழங்கி உதவியது.

    கடந்த 2023 செப்டம்பர் மாதம் சிறப்பு விருந்தாளியாக ரஷியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை (Kim Jong-un), ரஷிய அதிபர் புதின், ரஷியாவின் கிழக்கே உள்ள வோஸ்டோச்னி காஸ்மோடிரோம் (Vostochny Cosmodrome) எனும் ஏவுதளத்தை பார்வையிட அழைத்து சென்றார்.

    அப்போது, புதினின் ஆரஸ் செனட் (Aurus Senat) லிமோசின் ரக காரை கிம், ஆர்வமுடன் பார்வையிட்டார்.

    சொகுசு கார் பிரியரான கிம் ஜான் உன், தனது வாகன நிறுத்துமிடத்தில் பல வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை ஆதரிக்கும் வட கொரிய அதிபருக்கு, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு உயர்ரக சொகுசு காரை பரிசளித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆரஸ் (Aurus) எனப்படும் முழு நீள அதிநவீன சொகுசு கார், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரத்யேக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஆரஸ், உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான ரோல்ஸ்-ராய்ஸ் பேண்டம் (Rolls-Royce Phantom) எனும் மாடலை அடிப்படையாக கொண்டு ரஷியாவில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரோல்ஸ்-ராய்ஸை விட ஆரஸ் சற்று நீளம் அதிகமான காராகும்.


    புதின் பரிசளித்திருக்கும் ஆரஸின் புகைப்படங்களோ, அந்த காரில் அவருக்காக செய்யப்பட்டுள்ள பிரத்யேக மாறுதல்கள் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

    வரவிருக்கும் மாதங்களில் ரஷிய அதிபர் புதின், வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இரு நாடுகளிலிருந்தும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், சொகுசு கார்கள் உட்பட விலையுயர்ந்த பரிசுகளை வட கொரியாவிற்கு எந்த நாடும் அளிக்க கூடாது எனும் ஐ.நா.வின் உத்தரவை புதின் மீறியுள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியது.

    • வகுப்பறையில் செல்போன்கள் எரிச்சலூட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
    • நல்ல கல்வியை குழந்தைகள் பெற நாம் சூழலை உருவாக்க வேண்டும் என்றார் சுனக்

    இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.

    பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர்.

    மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.

    எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.

    இங்கிலாந்தில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.

    கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார்.

    49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

    பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்' விருதை 'BTS'இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.


    தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். இந்த விருது கிடைத்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

    • ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராக திகழ்ந்தவர் அலெக்சி நவால்னி
    • விஷத்தின் சுவடுகளை அழிக்க முயல்வதாக நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்

    இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).

    புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.


    நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.

    சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

    ரசாயன பரிசோதனைக்காக நவால்னியின் உடல் பாதுகாக்கப்படுவதாகவும், 2 வாரங்களுக்கு பிறகுதான் உடலை வழங்க முடியும் என்றும் அவரது தாயாரிடம் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.


    நவால்னியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ரஷிய அரசு சொல்ல மறுத்து வருகிறது.

    இது குறித்து நவால்னியின் மனைவி, யூலியா நவால்னயா (Yulia Navalnaya), "எனது கணவரை ரஷிய அதிபர் புதின் கொன்று விட்டார். அலெக்சியின் உடலில் உள்ள "நோவிசாக்" எனும் நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயகரமான விஷத்தின் தடயம் அவரது உடலில் இருந்து முழுவதுமாக விலகும் வரை உடலை வெளியே வழங்காமல் இருக்க அரசு முயல்கிறது," என குற்றம் சாட்டினார்.

    அலெக்சியின் மரண செய்தி வெளியானதும் அவரது உடலை பெற சிறைச்சாலைக்கு சென்ற அவரது தாயாரையும், வழக்கறிஞரையும், உடலை பார்க்க விடாமல் சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

    அலெக்சி விட்டு சென்ற பணிகளை தொடர போவதாக அவரது மனைவி யூலியா நேற்று உறுதிபட தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×