நவால்னி மரணத்தில் தொடரும் மர்மம்: உடலை வழங்க மறுக்கும் அரசு

ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராக திகழ்ந்தவர் அலெக்சி நவால்னிவிஷத்தின் சுவடுகளை அழிக்க முயல்வதாக நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்
நவால்னி மரணத்தில் தொடரும் மர்மம்: உடலை வழங்க மறுக்கும் அரசு
Published on

இவ்வருடம் ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

ரஷிய அரசியலில் தனக்கு போட்டியாளர்கள் உருவாகாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).

புதினை தீவிரமாக விமர்சித்து வந்தவர், அலெக்சி நவால்னி (Alexei Navalny). ரஷிய அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் நவால்னி திகழ்ந்தார்.

நவால்னி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 19 வருடங்களுக்கும் அதிகமான சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், நவால்னி, சிறைச்சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் திடீரென உயிரிழந்தார்.

சிறை வளாகத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அவசர மருத்துவ உதவியாளர்கள் விரைந்து வந்து அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு நல்ல மாற்றாக நவால்னியை கருதி வந்த அந்நாட்டு மக்களில் பலரும், உலகின் பல அரசியல் தலைவர்களும், நவால்னியின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அலெக்சி நவால்னியின் உடல் தற்போது வரை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

ரசாயன பரிசோதனைக்காக நவால்னியின் உடல் பாதுகாக்கப்படுவதாகவும், 2 வாரங்களுக்கு பிறகுதான் உடலை வழங்க முடியும் என்றும் அவரது தாயாரிடம் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.

நவால்னியின் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ரஷிய அரசு சொல்ல மறுத்து வருகிறது.

இது குறித்து நவால்னியின் மனைவி, யூலியா நவால்னயா (Yulia Navalnaya), "எனது கணவரை ரஷிய அதிபர் புதின் கொன்று விட்டார். அலெக்சியின் உடலில் உள்ள "நோவிசாக்" எனும் நரம்பு மண்டலத்தை தாக்க கூடிய அபாயகரமான விஷத்தின் தடயம் அவரது உடலில் இருந்து முழுவதுமாக விலகும் வரை உடலை வெளியே வழங்காமல் இருக்க அரசு முயல்கிறது," என குற்றம் சாட்டினார்.

அலெக்சியின் மரண செய்தி வெளியானதும் அவரது உடலை பெற சிறைச்சாலைக்கு சென்ற அவரது தாயாரையும், வழக்கறிஞரையும், உடலை பார்க்க விடாமல் சிறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

அலெக்சி விட்டு சென்ற பணிகளை தொடர போவதாக அவரது மனைவி யூலியா நேற்று உறுதிபட தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com