என் மலர்
புதுச்சேரி
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுபான தொழிற்சாலை, மதுபார்கள், மொத்த, சில்லரை விற்பனை நிலையங்கள், குடோவுன்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஊரடங் கிற்கு முன்பாகவே சிலர் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை 4 மடங்கு அதிகவிலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மதுபான குற்றங்கள் புதுவையில் அதிகரித்துள்ளது. மது கடத்தல், கூடுதல் விலைக்கு விற்பது, மதுபான கடைகளை உடைத்து திருடுவது என குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெரிய மதுபான குடோவுன் உள்ளது. இந்த மதுபான குடோவுனை சிலர் உடைத்து பெட்டி, பெட்டியாக மதுபானங்களை கொள்ளையடித்துள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து குடோவுன் உரிமையாளர் ராமமூர்த்திக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மோப்பநாய் சகிதமாக வந்து தீவிர சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். அப்போது கிடங்கின் அருகில் உள்ள மரத்தடியில் ஆறு பெட்டிகளில் மது பானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கிடங்கிலிருந்து எவ்வளவு மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டன? என்ற விபரங்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுவால் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பேர் குடோவுனை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் செல்வது தெரியவந்தது.
அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போது அப்பகுதியை சேர்ந்த 2 மெக்கானிக்குகள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவரிடம் எவ்வளது மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது? எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகள் உதயா (வயது33). இவருக்கும் வீராம்பட்டினத்தை சேர்ந்த அரி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தற்போது அரி வெளிநாட்டில் கப்பலில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறி உதயா கடந்த 15-ந் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். மறுநாள் 16-ந் தேதி நோய் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டதாக உதயா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக உதயாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து உடல்நிலை பாதிப்பால் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி, ஏப்.17-
ஊரடங்கு உத்தரவால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் யாரும் வெளியில் வராத காரணத்தி னால் உணவு கிடைக்காமா லும், கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும் பிராணிகள் தவித்து வருகின்றன. இவைக ளுக்கும் சிலர் உணவு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கால்நடை டாக்டரான செல்வமுத்து தினமும் 200 நாய் மற்றும் பூனைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பொறுப்பு வகிக்கும் செல்வமுத்து கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் கால் நடைகள் மற்றும் தெருவோரப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளித்து அவற்றின் பசியை போக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் உணவு கிடைக்காமல் பிராணிகள் பட்டினியால் வாடுகின்றன.
மேலும் கோடை வெப் பம் உச்சத்தில் உள்ளதால் பிராணிகளின் குணாதிசயங் கள் சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இதனால் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதனால் ஏற்படும் காயத்தால் பல்வேறு கெட்ட கிருமிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆதலால் பொதுமக்களா கிய நீங்கள் உங்கள் பகுதி யில் வசிக்கும் பிராணிக ளுக்கு உணவு மற்றும் நீர் கொடுப்பதன் மூலம் அவற்றின் பசியை போக்குவ தோடு மனித நலத்தையும் பேணி காக்க முடியும்.
எங்கள் இயக்கத்தின் சார்பில் தினமும் பிராணிகளுக்கு உணவு அளித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் தற்போது ஊரடங்கு உத்தரவால் தெருவோர விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
ஆதலால் தங்கள் பகுதிகளில் ஏதேனும் விலங்குகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க எங்களின் இயக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நிவாரணமாக மஞ்சள்கார்டு தாரர்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினோம். போராட்டத்திற்கு பிறகு தற்போது இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து, கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
ஏற்கனவே சிகப்பு கார்டுதாரர்களுக்கே இலவச அரிசி சென்றடையவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அரிசி வழங்குவதே பலனளிக்கும். மஞ்சள்கார்டுதாரர்களுக்கு உடனடியாக அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், ரேஷன்கடை ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக அரிசியை வழங்க வேண்டும். கொடூர எண்ணத்துடன் புதுவை அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.
இந்நிலையில் தற்போது முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் தரமான முக கவசம் மக்களுக்கு கிடைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு நெருக்கடியை அரசு ஏற்படுத்தக்கூடாது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் முக கவசங்களை கொடுத்து பொதுமக்களுக்கு அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அதை விடுத்து அபராதம் விதிப்பதாக கூறுவது கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தவிர்த்து பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்பட்டு வந்தனர். தற்போது புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது போக்குவரத்து இல்லாதபோது மருத்துவ மனைக்கு எப்படி நோயாளிகளை அழைத்து வருவர்? ஒரே துறையில் கணவன், மனைவி பணியாற்றுபவர்கள் எப்படி பணிக்கு செல்வர்? வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனி வாகனத்தில் செல்ல முடியுமா? மலிவான விளம்பரம் தேடும் வகையில் தினமும் ஒரு அறிவிப்பை நாராயணசாமி வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் காரில் வலம் வருகின்றனர்.
காரில் டிரைவர் இருக்கைக்கும், அமைச்சர்கள் இருக்கைக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளி உள்ளதா? பின் சீட்டில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு மீட்டர் இடைவெளியில்தான் அமர்ந்துள்ளார்களா? நடைமுறைக்கு ஒத்துவரும் விஷயங்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பதை நாராயணசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சர்மிளா (வயது33). இவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டை சேர்ந்த மீனவர் வேலுமணி என்பவர் மனைவியிடம் தனக்கு சுனாமி வீடு கிடைக்க உனது கணவர் தடையாக உள்ளார் என்று கூறி வருத்தப்பட்டார்.
இதையடுத்து வேலுமணியிடம் அவரது மனைவி இதுபற்றி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுமணி தகாத வார்த்தைகளால் திட்டி சர்மிளாவை தாக்கி கீழே தள்ளினார். அப்போது அருகில் உள்ள இரும்பு கேட்டில் தலை மோதி சர்மிளா படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சர்மிளா இதுபற்றி தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுமணியை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று மாலை மேட்டுப்பாளையம்- குண்டு சாலை சந்திக்கும் பகுதியில் ரோந்து பணி சென்றனர்.
அப்போது அங்கு பூட்டி வைக்கப்பட்டு இருந்த தனியார் மதுக்கடை எதிரே உள்ள முள் புதரில் சந்தேகபடும்படி ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பியோட முயன்றார். ஆனாலும் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் வேல்ராம்பட்டை சேர்ந்த முரளி (வயது34) என்பதும், இவர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதை முள்புதரில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து முள்புதரில் மறைத்து வைத்திருந்த ரூ20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்து முரளியை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசின் ஊரடங்கால் பல துயரங்களை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். புதுவையில் ரூ. 2 ஆயிரம் ரேஷன் கார்டு கணக்கில் அரசு செலுத்தியுள்ளது.
தற்போது மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் மேலும் ரூ. 3 ஆயிரம் வங்கிக் கணக்கில் தர வேண்டும். சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தருவது போல் மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கும் அரிசி, பருப்பு தர அரசு முன்வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த இலவச அரிசி விநியோகம் முறையாக இல்லை என்று ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொடங்கி துணை சபாநாயகர் வரை புகார் தெரிவித்துள்ளதால் இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த வித பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் இலவச அரிசி, பருப்பு வழங்க வேண்டும். மே மாதத்துக்கும் புதுவையிலுள்ள 3.5 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இலவச அரிசி, பருப்பு, கோதுமை தர வேண்டும்.அத்துடன் 22 மாதங்களாக தரப்படாமல் உள்ள அரிசி பணத்தை இத்தருணத்தில் தந்தால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பணி இல்லாததால் கூடுதலாக அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வங்கிக்கணக்கில் தர வேண்டும்.
நாட்டின் கடைக்கோடியில் உள்ள சிறு மாநிலமான புதுவை நிதி பற்றாக்குறையால் தவிப்பதால் பிரதமர் தாயுள்ளத்தோடு நிதி உதவி தர வேண்டும்.
இவ்வாறு ரங்கசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
திருபுவனை பகுதியில் புதுவை உயர் போலீஸ் அதிகாரி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அவர் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீசுக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த தகவலும் சொல்ல மறுத்து விட்டனர்.
புதுவை பொய்யாகுளம் வினோபாநகரை சேர்ந்தவர் உமாராணி(வயது29). இவர் புதுவை சட்டக்கல்லூரி அருகே உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவரும் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.
இதற்கிடையே காதலன் வீட்டார் திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று உமாராணி தனது காதலனிடம் கேட்டு உடனடியாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
இதுதொடர்பாக அவர்களிடையே அப்போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த உமாராணி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின் விசிறி பைப்பில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் உமாபதி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






