என் மலர்
புதுச்சேரி
- திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார்.
சேதராப்பட்டு:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2014-ம் ஆண்டு ஏ.எப்.டி.மில் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் என்பவர் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருமாவளவன் அவதூறாக பேசியதாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் ஒருமுறை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வக்கீல் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த வழக்கு தொடர்பாக திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதி சேரலாதன் அளித்த உத்தரவில், பா.ம.க.வை சேர்ந்த மதியழகன் தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்களிப்பதாக உத்தரவிட்டார்.
- பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.
அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.
அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த 3 பேர் ராஜினாமா செய்தனர்.
- இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 3 பேரை நியமனம் செய்து அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்ட நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நியமன எம்.பி.க்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
- புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.
ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.
அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.
புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- கவர்னர் கைலாஷ்நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
- முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும் கவர்னர் கைலாஷ் நாதனுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது.
தற்போது சுகாதாரத் துறையில் இயக்குனர் நியமனத்தில் இது வெட்டவெளிச்சமானது. முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையை ஏற்காமல் கவர்னர் கைலாஷ்நாதன் தன்னிச்சையாக முடிவு செய்து சுகாதாரத்துறை இயக்குனராக டாக்டர் செவ்வேலை நியமித்தார். இதனால் கவர்னர் கைலாஷ் நாதன் மீது முதலமைச்சர் ரங்கசாமி கடும் அதிருப்தியடைந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி கவர்னரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு செல்ல மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று சத்துணவு பைகளை வழங்கினார்.
விழா முடிவில் கவர்னரிடம், முதலமைச்சருக்கும் தங்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறதா.? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. அப்படி ஒன்றும் இல்லை என அவர் பதில் அளித்தார்.
- பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது.
- மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.
மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா, தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் பிரபு என்கிற பிரித்திவிராஜ், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுத்து வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.
அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.
விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்.
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன், சந்திரபிரியங்கா ஆகியோர் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.
இதன்பின் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் வேண்டும். இதற்காக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். இதற்காக சிறப்பு சட்ட சபையை கூட்ட வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி சட்டசபையை கூட்ட முயற்சி எடுக்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மாநில அந்தஸ்து வேண்டி வலுவான கருத்துக்களை முன்வைக்க சிறப்பு சட்ட சபையை கூட்ட கோரியுள்ளனர். 16-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி எந்த பதிலும் வரவில்லை.
இதனால் சிறப்பு சட்டசபை கூட்ட கோரியுள்ளனர். நிர்வாகத்தில் சிறு,சிறு பிரச்சினைகள் வரும். கவர்னர், முதலமைச்சர் கலந்து பேசி சரி செய்வார்கள். சரியான பாதையில் அரசை கொண்டு செல்வார்கள். சிறப்பு சட்டசபையை கூட்ட கவர்னர் அனுமதி தேவையில்லை.
ஏற்கனவே தொடங்கிய கூட்டத்தொடர் முடிக்கப்படவில்லை. 6 மாதத்தில் எப்போது வேண்டுமானாலும், சபையை கூட்டலாம். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் கருத்து மோதல் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பிரச்சினை இல்லை. அரசு நிர்வாகம் முடங்கி விடவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டுகளை கூட்டணி அரசு நிறைவு செய்யும். அடுத்த முறையும் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். விரைவில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர், டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது.
- பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கைலாஷ் நாதனுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதமாகவே இலைமறை காய்மறையாக இருந்த இந்த மோதல் சுகாதாரத்துறை இயக்குனர் நியமனத்தில் வெடித்தது. தனது அதிகாரத்துக்கு உட்பட்ட துறையில் இயக்குனரை கூட நியமிக்க முடியாமல் முதலமைச்சராக பதவியில் தொடர்வது தேவையா? என ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. தரப்பில் முதலமைச்சரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை வழக்கம் போல கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் டென்னிஸ் விளையாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரோவில்லில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
அங்கு அவரை துணை சபாநாயகர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நமது விருப்பப்பட்டதை செய்ய முடியாத நிலை உள்ளது. சிறிய பிரச்சனைகளில் கூட கவர்னர் மாளிகையின் தலையீடு உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது, நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம், உறுதுணையாக இருப்போம் என்று எம்.எல்.ஏ.க்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து புறப்பட்டு, அமைச்சர் லட்சுமி நாராயணனை அவரின் வீட்டில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசினர்.
அமைச்சர் திருமுருகன், காரைக்கால் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா ஆகியோரும் புதுவைக்கு விரைந்துள்ளனர். அமைச்சர் தேனீஜெயக்குமார் உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். கட்சியில் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவதாக அவர் எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டசபைக்கு வரவில்லை.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
- பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில், புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
- அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
முழுஅடைப்பின்போது புதிய பஸ் நிலையம், அரியாங்குப்பம், கன்னியக்கோவில், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு, சேதராப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மறியல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பந்த் போராட்டத்தின்போது பஸ், ஆட்டோ, டெம்போ போன்றவற்றை இயக்கமாட்டோம் என்று ஏ.ஐ.சி.டி.யு., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. அதேநேரத்தில் அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது நியமன விதிகளுக்கு எதிரானது ஆகும்.
எனவே அரசுத்துறைகள், சார்பு நிறுவனங்கள், கழகங்கள், சங்கங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு அவசர தேவையின்றி விடுமுறை வழங்கக்கூடாது. உரிய அனுமதியின்றி பணிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், படிகள் வழங்கக்கூடாது. அத்தகையவர்கள் மீது விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பணியில் சட்டம் - ஒழுங்கு, இந்திய ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் என 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
புதுச்சேரி:
புதுவை எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம்,
புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு தெரிவித்துள்ளது.
- ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை செய்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங் உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தலைமையில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் அதிகாலை 4 மணி முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒரே நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் 100 பேரை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிகாலை வேளையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






