என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருச்சுழி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன.
    • நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பகவான் ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    450 பேர் படிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இட நெருக்கடி யால் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பின்தங்கிய பகுதியான திருச்சுழியில் கல்வி தொடர வந்துள்ள மாணவர்கள் மத்தியில் இட நெருக்கடியால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    பள்ளியில் 600 முதல் 700 பேர் வரை படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போதைய கல்வியாண்டில் மேலும் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது 60 முதல் 70 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பெரும்பாலான மாணவர்கள் இருக்கையிலும், இடம் பற்றாக்குறை காரணமாக தரையிலும் அமர்ந்து கல்வி கற்றுக்கொள்வதால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது.

    மேலும் போதிய இட வசதி இல்லாமல் இட நெருக்கடியால் பள்ளியின் வெளியே உள்ள சாலையின் நடுவே காலை பிரார்த்தனையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு மைதானம், ஆய்வக வசதியும் இல்லாமல் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் இங்கு அரசு பள்ளியில் போதிய இடம் வசதியில்லாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

    ஆகவே திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விருதுநகரில் காதல் ஜோடிகள் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரோசல் பட்டி முத்தால் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது43). இவரது மகன் விசால் (18). இவர் பாலவநத்ததில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முருகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் மாணவர் மற்றும் மாணவியை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் மாணவி ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது மாணவரும் அங்கு சென்றுள்ளார்.

    இது கல்லூரி முதல்வருக்கு தெரியவந்தது. அவர் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை வரவழைத்து மாணவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வ தாக கூறி சென்ற விசால் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சந்தேகமடைந்த முருகேஸ்வரி மாணவியின் ஊருக்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவியும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.எஸ்.காலனியை சேர்ந்தவர் நாகலட்சுமி (42). இவரது மகள் கார்த்திகா(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மாசிநாயக்கன்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் என்பவருடன் பழகி வந்தார். இதனை தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகாவின் 19-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர். பின்னர் கல்லூரிக்கு சென்ற கார்த்திகா வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்த எழிலரசன் வீட்டிற்கு சென்று உறவினர்கள் விசாரித்தனர். அப்போது எழிலரசனை காணவில்லை என்றும் தேடி கொண்டிருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார்.
    • குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரபாகரன் (26) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார். இதற்கு அவரது பெற்றோர் மாரிமுத்து-மாரியம்மாள், உறவினர்கள் கிருபாராணி, சுரேஷ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் 2020-ம் ஆண்டு புகார் செய்தேன். போலீசார் சமூக நலத்துறை மூலம் எங்களை சமரசம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த புகாரை நான் வாபஸ் பெற்றேன்.

    இதற்கிடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். மேலும் விவாகரத்து கேட்டு தேனி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இதுகுறித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தேன். அவர்கள் விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையிடம் கவுன்சிலிங் செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பிரபாகரன் தொடர்ந்து இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தியதாக பிரபாகரன் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • சாத்தூர் அருகே அட்டை கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான அட்டை கம்பெனி பெத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கழிவு பேப்பர்களை சேகரிக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவத்தொடங்கியது. அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டைஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு மதத்தைச் சார்ந்த பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டி ருக்கும் தொழிலை விரிவு படுத்தியும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக்கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2023- 2024-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் வருகிற 10-ந் தேதி அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11-ந்தேதி காரியாபட்டி வட்டாட் சியர் அலுவலகத்திலும், 12-ந்தேதி அருப்புக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகத்திலும், 13-ந்தேதி திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    இதேபோல் 17-ந்தேதி ராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்திலும், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்தி லும், 19-ந்தேதி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தி லும், 20-ந்தேதி வெம்பக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21-ந்தேதி அன்று வத்ராப் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,731 மாணவ, மாணவிகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாவை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பேனா ஆற்றிய பங்கை வலியுறுத்தும் நோக்கில் முகவூர் ஊராட்சி தி.மு.க. கிளை சார்பில் முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், ஆசிரியர்கள் உள்பட 1,731 பேருக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாக் களை எம்.எல்.ஏ தங்கப் பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞரின் வளர்ச்சிக்கும், முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்திற்கும் சமூக நீதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடைய பேனா. அத்தகைய பேனாவை வைத்து தான் நமது முதல்-அமைச்சர் முதல் 5 திட்டத்திற்கு கையெழுத்திட்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மையான மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஆதிநாராயணன், தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, கிளை செயலாளர் தொந்தி யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சுரேஷ், துணை அமைப்பாளர் மாரிமுத்து, கருப்பசாமி சோலையப்பன் மலைக்கனி ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகள் சூர்யபிரியா (வயது22). இவருக்கும், ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் முதற்கட்டமாக 12 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப் பட்டது. ஆனால் சக்திவேல் மீதம் 8 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்த பின்புதான் சேர்ந்து வாழ முடியும் என சூர்யபிரியாவிடம் கூறியுள்ளார்.

    நிலம் வாங்க ரூ.2 லட்சத்தை வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்ேறார் ஆசைதம்பி-தங்கலட்சுமி, சகோதரி அருள்தேவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து சூர்யபிரியா விருதுநகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேல் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
    • தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் பிச்சை (வயது 47). இவர் தனது மனைவி ஆனந்தி (38) மற்றும் மகன் ஷியாம் என்ற சந்தோசராஜாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பிச்சைக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு உருவானது.

    இதையடுத்து தம்பதியினர் இருவரும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தியின் மகன் ஷ்யாம் அவரது தந்தை பிச்சையுடன் திருச்சுழியில் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    மகன் ஷியாம் மட்டும் அவ்வப்போது அருப்புக்கோட்டைக்கு சென்று தாயை பார்த்து வருவார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஆனந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து ஒரு கட்டத்தில் தாயின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஷியாம் மற்றும் அவரது நண்பரான துரைப்பாண்டி (18) இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் ஆனந்தியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மீண்டும் அவரது நடத்தை தொடர்பாக ஷியாம் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஷியாம் மற்றும் துரைப்பாண்டி இருவரும் சேர்ந்த அரிவாள் மற்றும் கம்பால் ஆனந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆனந்தியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீசார் ஷியாம் மற்றும் துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீஸ்காரர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளனர்.
    • கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்குபட்ட தொப்பலாக்கரை கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பி னருக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதரப்பினர் ஒப்புதலின்படி கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    சம்பவத்தன்று தொப்ப லாக்கரை கிராமத்தில் உள்ள கோவிலில் பரளச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் கோவிலை சுற்றி முள்வேலி அமைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் டிராக்டரரை வைத்து போலீஸ் காரர்களை மோத முயன்றதாகவும், மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ்கா ரர் பாண்டித்துரை கொடுத்த புகாரின் பேரில்அந்த கிரா மத்தை சேர்ந்த கூடாண்டி, சரவணன், தர்மலிங்கம், வேல்முருகன், ராஜ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் அச்சங்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). இவரும் அதே ஊரை சேர்ந்த குணசுந்தரி என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    குணசுந்தரி அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே குணசுந்தரி வீட்டின் மாடி அறைக்கு சென்றுவிட்டார். அப்போது குடும்ப பி ரச்சினையால் விரக்தியில் இருந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த குணசுந்தரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    வத்திராயிருப்பு அருகே உள்ள கோபாலபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது65). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதில் விரக்தி யடைந்த சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திரா யிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரிக்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நரிக்குடி, முத்துராமலிங்க புரம், பரளச்சி, பொம்மக் கோட்டை, கே.கரிசல்குளம், எம்.ரெட்டியபட்டி, மண்டப சாலை, செட்டிக்குளம், தும்மு சின்னம்பட்டி, பூலாங்கால், இருஞ்சிறை, கட்டனூர், உலக்குடி, நாலூர், வீரசோழன், சேதுபுரம், நல்லுக்குறிச்சி, கல்லுமடம், கத்தாளம்பட்டி, ஆலடிப்பட்டி, வடக்கு நத்தம், இராஜகோபாலபுரம், மேலையூர்,ஆண்டியேந்தல், கல்லூரணி, தொப்ப லாக்கரை, நல்லாங்குளம், குள்ளம்பட்டி, சவ்வாசுபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின்வா ரிய செயற்பொறி யாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

    • ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுத்தறிவு வாசக சாலை தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45).

    இவர் கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தனமாரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தாயார் அருள் மணி ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் தனது இளைய மகன் கணேசன் (40) என்பவரது வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஈஸ்வரன் தனது தாயாரை பார்ப்பதற்காக தளவாய்புரத்தில் இருந்து வந்து செல்வார்.

    இதற்கிடையே ஈஸ்வரனுக்கும், அவரது தம்பியான கணேசனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பலமுறை அவரது தாய் மற்றும் உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் விரோதம் தீர்ந்தபாடில்லை.

    இந்நிலையில் நேற்று ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயூரநாத சுவாமி கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஈஸ்வரன் தனது மனைவி சந்தனமாரி மற்றும் குழந்தைகளுடன் ராஜபாளையம் வந்திருந்தார்.

    தேரோட்டத்திற்கு சென்றுவிட்டு இரவில் ஈஸ்வரன் தனது தாய் வீட்டிற்கும், அவரது மனைவி சந்தனமாரி ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியில் உள்ள சகோதரி கருப்பாயியின் வீட்டிற்கும் சென்று இருந்தனர். அப்போது தாயை பார்க்க சென்ற ஈஸ்வரனுக்கும், அவரது தம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், தனது அண்ணன் என்றும் பாராமல் ஈஸ்வரனை தொரட்டி என்று அழைக்கப்படும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கணவர் உடலை பார்த்து அவரது மனைவி சந்தனமாரி கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து அவர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணேசனை தீவிரமாக தேடி வருகிறார். குடும்பத்தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×