என் மலர்
விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் மூலிகை மருந்து கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமாதேவி (28). அந்தப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடை ஊழியர் முத்துப்பாண்டியுடன் அடிக்கடி பேசினாராம். இதனை செல்லத்துரை கண்டித்துள்ளார்.
தீபாவளியன்று உமா தேவி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இன்று திரும்பி வர நேரமாகும் என கூறிச் சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் உமாதேவி வீடு திரும்பாததால் கணவர் செல்லத்துரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை பயணத்திற்கு ஏற்றபடி இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம், கீழ்பக்கம் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், இரவில் கடைக்குச் சென்று உணவு அருந்தியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார்.
ராமகிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் அவர் வந்தபோது குண்டும், குழியுமான சாலையால் தவறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் அங்கு ராஜபாளையத்தில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் சந்திரசேகர் சிக்கிக் கொண்டார். சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நகமங்கலத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (15 ). இவர் வீட்டிலிருந்து அச்சங்குளம் சென்று கொண்டிருந்த போது கூனம்குளம் கண்மாய் கரையில் இருந்த இலுப்பை மரம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபால் (வயது 52).
இந்த பட்டாசு ஆலை ஊழியர் ஒருவர் வேலைக்கு வரவில்லை. இதனால் கோபால் அந்த ஊழியர் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார். அதன் பின்னரும் அவர் வேலைக்கு வரவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோபால் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது 17 வயது பிளஸ்-2 படிக்கும் மகள் தனியாக இருந்தார்.
அப்போது அவர் அந்த மாணவியிடம் ரூ.500 கொடுத்து தீபாவளிக்கு இனாமாக வைத்துக் கொள் எனக்கூறி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவியின் தாயார் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாநகரில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
குறிப்பாக பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதேபோல பச்சப்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம் நாராயண நகர் உள்பட பல பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
சுவர்ணபுரி அனெக்ஸ் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியில் ஊற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். சேலம் அருகே உள்ள புது ஏரி நிரம்பிய நிலையில் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள மூக்கனேரி நேற்றிரவு பெய்த மழையில் நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம் திருமணி முத்தாறில் ஏற்கனவே தண்ணீர் செல்லும் நிலையில் தற்போது மூக்கனேரியில் இருந்த திறந்து விடப்படும் உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதே போல புறநகர் பகுதிகளான ஆத்தூர், பெத்த நாயக்கன்பாளையம் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நிலத்தடி நீர், ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 66 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 63.2, பெத்த நாயக்கன்பாளையம் 24, எடப்பாடி 18.4, ஆனைமடுவு 16, வீரகனூர் 13, கரியகோவில் 11, தம்மம்பட்டி 10, ஏற்காடு 10, காடையாம்பட்டி 8, ஓமலூர 5, மேட்டூர் 3.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 248.40 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






