என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி கோப்பை கைப்பற்றியது.
    புதுடெல்லி:

    சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் இன்று மோதின. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதனையடுத்து கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. 

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த்-ஜெகதீஷன் களமிறங்கினர். முதல் ஓவரில் 9 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பாக ஆடி வந்த நிஷாந்த் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அவர் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும். 

    அடுத்து வந்த சுதர்சன் 9, சஞ்சய் யாதவ் 5, முகமது 5, என சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 15-வது ஓவரில் விஜய் சங்கர் 18, ஜெகதீஷன் 41 அடுத்தடுத்து வெளியேறினர். 

    அதிரடியாக விளையாடிய ஷாருக் கான் தமிழக அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாருக்கான் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 1 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.  

    வெற்றி கொண்டாட்டத்தில் தமிழக அணி வீரர்கள்

    சையது முஸ்தாக் அலி கோப்பையை தமிழ்நாடு அணி 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
    ராஜபாளையம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் அருளாச்சியை சேர்ந்த அரவிந்த்(வயது24),அவரது தம்பி ராஜதுரை(21), இவர்களது மாமா மகன் சசி(20), நண்பர் விஸ்வநாத பிரதீப் ஆகிய 4 பேரும் பக்கத்து கிராமமான டி.ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது காரை வாங்கி கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதியபேருந்துநிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் அண்ணாத்தே படத்தின் இரவு காட்சிக்கு சென்றனர். அங்கு படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒருமணி அளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதபிரதீப் ஓட்டினார்.

    தென்காசிரோட்டில் சோலைசேரி மண்ணோடி கண்மாய் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து 3 முறை உருண்டு தலைகுப்புற கவிழந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சசி சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல்நிலைய சகறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடன் பிரச்சினை மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராசாத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மனு கொடுப்பதற்காக திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் வந்தார். கையில் மண்எண்ணை கேனுடன் வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

    இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, கடன் பிரச்சினை மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.      
    சிவகாசி அருகே குளிக்க சென்ற போது தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள தடுப்பணைக்கு அப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் இரவு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் தடுப்பணை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து முத்துவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது முத்துவின் ஆடைகளும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவை தேடினர். சுமார் 4½ மணி நேர தேடுதலுக்கு பின்னர் முத்துவின் உடல் கிடைத்தது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தடுப்பணையில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதிய அளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சம்பா பருவத்தில் 6,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க உரங்கள் அத்தியாவசியமானது. மடத்துக்குளம் பகுதி கடைகளில் கணக்கெடுப்பு நடத்தி போதியஅளவு உரங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    யூரியா 100 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 40 மெட்ரிக் டன், எம்.ஓ.பி., 15 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 213 மெட்ரிக் டன், சூப்பர் உரம் 30 மெட்ரிக் டன் ஆகியவை மடத்துக்குளம் பகுதியிலுள்ள உரக்கடைகள் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளன. 

    தேவையான விவசாயிகள் அணுகி உரங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் கொடுத்து உரங்களை வாங்க வேண்டும். விற்பனை ரசீது கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். பயிருக்கு தேவையான பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    அருப்புக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 33). இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது அண்ணன் பெரியசாமி என்பவருடன் வசித்து வந்தார். பெற்றோரை இழந்ததால் மனவேதனையுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பழனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, டோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது  குடும்பமே டோனியின் ரசிகர்தான். எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே டோனியின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்.

    டோனி சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர்.  தங்களில் ஒருவராக டோனியை தமிழர்கள் கருதுகிறார்கள். எந்த நெருக்கடியிலும் ‘கூல்’ ஆக இருப்பவர்கள் கருணாநிதியும், டோனியும். டோனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஓட்டல் தொழிலாளியுடன் பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள மயிலி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (வயது 47). இவர் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று துணி தைக்க செல்வதாக வீட்டில் மகளிடம் கூறிவிட்டு லதா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது மகன் அருண்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில், தனது தாயாருடன் ஓட்டலில் வேலை பார்த்த ஜாகீர் உசேன் என்பவரும் மாயமாகி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வயிற்று வலி என பள்ளிக்கு செல்லாத மாணவி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் கருப்பசாமி நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து தையல் வகுப்புக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் திடீரென மாயமாகி விட்டார். அவரது 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வலங்கைமான் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மூழ்கிய பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. அதி கன மழை பெய்யவில்லை என்றாலும் குளம் குட்டைகள் அனைத்தும் நிரம்பின. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் வலங்கைமானில் பல இடங்களில் சாகுபடி நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் சாலைகள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டன. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சற்று மழை ஓய்ந்திருந்தது. இதனால் விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அனைத்தும் வடிந்த நிலையில் இருந்தது.

    இந்தநிலையில் நேற்று வலங்கைமானில் கனமழை பெய்ததால் தாழ்வான விளைநிலங்கள் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. புளிக்குடி ஊராட்சி அமிர்தவல்லி கிராமத்தில் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

    மேலும் மாணிக்கமங்கலம், கீழ விடையள், குப்பசமுத்திரம், அரித்துவாரமங்கலம், அவளிவநல்லூர், தென்குவளை வேலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி விளைநிலங்கள் தண்ணீரில் முற்றிலுமாக மூழ்கி உள்ளன. செம்மங்குடி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை சாகுபடி நெற்பயிர்கள், கனமழையால் வயலில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கூறினர்.
    அருப்புக்கோட்டையில் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக்கொள்வதற்காக சுவெட்டர் அணிந்தவாறு சென்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் பனி மூட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் பனி மூட்டம் ஏற்பட்டது. புறவழிச்சாலை, மதுரை சாலை, விருதுநகர் சாலை உள்ளிட்ட சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலைகளில் சென்றனர்.

    காலைநேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக சுவெட்டர் போன்றவற்றை அணிந்தவாறு சிரமத்துடன் நடைப்பயிற்சிக்கு சென்றனர். அதிகாலையில் ஏற்பட்ட பனி மூட்டத்தால் அருப்புக்கோட்டையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப் பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலில் திறமை மிக்க ஆசிரியர்களின் பணி அடிப்படையானது. அந்த வகையில் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர்கள் அரசுப்பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். அதாவது 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப் பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

    குறிப்பாக ஆசிரியர்கள் அரசுப்பணி வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    போராட்டம்

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.

    2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் பதிவு மூப்பு அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    எனவே தமிழக அரசு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள கூடாது - பிரியங்கா காந்தி

    ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.12.2007 அன்று அருப்புக்கோட்டை- தூத்துக்குடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 50 கிலோ எடை கொண்ட 240 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. இது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கர் ராஜ் என்பவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்டிரேட் மருதுபாண்டி குற்றம்சாட்டப்பட்ட சங்கர்ராஜுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    ×