என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் வட்டார கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கொரோனா தொற்று காரணமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைந்ததையடுத்து அரசு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்க உத்தரவிட்டிருந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 145 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.

    கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மலர்கொடி கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின் பற்றப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். 

    முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை மேலாண்மைக்குழு தலைவி முத்துச்செல்வி, வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, தலைமை ஆசிரியை மேரி ஆகியோர் வரவேற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார், சுப்புலட்சுமி, இடைநிலை ஆசிரியை ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம்  சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து  கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வெள்ளூர் கிராமத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டப்பட்டு வரும்  பணிகளையும், சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  ரூ. 1.40 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிகளையும், காளையார்குறிச்சி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ. 15.39 லட்சம் மதிப்பீட்டில் கலிங்கு ஓடை வரத்து கால்வாய் அமைக்கும் பணிகளையும்  கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ. 12.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கும் பணிகளையும், காளையார்குறிச்சியில்  சுமார் ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட  பணிகளையும்,  அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் குழந்தைகள் கல்வி கற்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் சாணார்பட்டி பகுதியில்  சுமார் ரூ. 35.57  லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள  60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும், சாணர்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுகாதார வளாகத்தையும்,  இதே பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.19.76 லட்சம் மதிப்பீட்டில்  சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், கட்டசின்னம்பட்டி பகுதியில் ரூ.7.44 லட்சம் மதிப்பீட்டில், 3 மீட்டர் தொலைவில் சிறுபாலம் அமைக்கப்பட்டு வருவதையும்  கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து ஆணையூர் ஊராட்சியில் கண் குறைபாடு  உள்ள மாற்றுத்திறனாளி ரேவதி யின் பயன்பாட்டிற்காக உதயம் திட்டத்தின் கீழ் ரூ.35ஆயிரம்  மதிப்பில் மாற்றுத்திறனாளி கழிப்பறை  அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    முன்னதாக சிவகாசி ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி தரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்விராஜ், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டாட்சியர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ராஜபாளையத்தில் புகையிலை-வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் வந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 74 கிலோ புகையிலை பொருட்கள் வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.48 ஆயிரம் ஆகும்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பீட்டர் பால்ராஜ் (வயது 48), மரிய அருள்ராஜ் (37), ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (48), கணேஷ்குமார் (44) என தெரியவந்தது.

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியில் வீடுகளில் வெடிபொருட்கள் அனுமதியின்றி வைத்திருப்பதாக போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வெம்பக் கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர்.

    இதில் கார்த்திக் (29), கிருபைதாஸ் (24) ஆகியோரது வீடுகளில் இருந்து 50 கிலோ சரவெடிகள் மற்றும் ஆயிரம் வாலா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் மாரிகாளை என்பவரது வீட்டில் இருந்து சரவெடி, 5 ஆயிரம் வாலா, உதிரி வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மாரிகாளை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் மாரியப்பன் (50), கனகலட்சுமி ஆகியோர் வீடுகளில் இருந்து அட்டை பெட்டிகளில் பதுக்கப் பட்டிருந்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாரியப்பன் கைது செய்யப் பட்டார். கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    காரியாபட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்


    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 32). இவர் சம்பவத்தன்று வங்கியில் வைத்திருந்த தனது நகைகளை திருப்பினார். பின்னர் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார்.
     
    கூட்டம் அதிகமாக இருந்ததால் ராசாத்தி நின்றுகொண்டே பயணித்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் ராசாத்தி பையில் இருந்த 2 பவுன் நகை, ரூ. 4,500 ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினார்.

    காரியாபட்டி அய்யப்பன் கோவில் அருகே பஸ் வந்தபோது பையை பார்த்த ராசாத்தி நகை, பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கைவரிசை காட்டிய நபரை தேடி வருகின்றனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாலையூரணிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டியின் மனைவி குடும்பத்தை நடத்த தனது நகைகளை அடகு வைக்க முடிவு செய்தார். ஆனால் பீரோவில் இருந்த நகை மாயமாகி இருந்தது. 

    இதுகுறித்து கேட்டபோது, பாண்டி ஏற்கனவே தனியார் நிதி நிறுவனத்திடம் அடகு வைத்து செலவழித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கணவரை கண்டித்துள்ளார். 

    இதனால் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற பாண்டி பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள கிடங்கில் பாண்டி பூச்சிமருந்தை குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    ராஜபாளையத்தில் இன்று அதிகாலை விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மெயின் ரோட்டில் பி.எஸ்.கே. பார்க் அருகே மரக்கடை உள்ளது. இங்கு தொழிலாளியாக வேலை பார்ப்பவர் மாரிமுத்து (வயது 37). அதே பகுதியை சேர்ந்த இவர் இரவில் மரக்கடை முன்பு உறங்குவது வழக்கம்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்ததும் மாரிமுத்து அங்கேயே படுத்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சாலையில் வேகமாக வந்த லாரி திடீரென நிலைதடுமாறி மரக்கடைக்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் புகுந்தது.

    இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தான் லாரியின் அடியில் மாரி முத்து நசுங்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதற்கிடையில் லாரி டிரைவர் காமராஜ் பலத்த காயங்களுடன் இருக்கையிலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பது தெரியவந்தது.

    தீயணைப்பு படையினர் வெல்டிங் கட்டர் வரவழைத்து லாரியின் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே அவரை மீட்க முடிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜ் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த காமராஜ் தென்காசியில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் ராஜபாளையம் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரக்கடைக்குள் புகுந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த விபத்தில் பலியான மாரிமுத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ஜோதீஸ்வரி என்பவ ருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.- இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    சில ஆண்டுகளாக சுரேஷ்குமார் ஆலமரத்துப்பட்டியில் தனது மாமியார் வீட்டு அருகே வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தினர் சமரசம் செய்தும் பலனில்லை.

    இந்த நிலையில் ஜோதீஸ் வரி விவாகரத்து கேட்டு சுரேஷ்குமாருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதனால்  வேதனை அடைந்த சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று மாலை விருதுநகர் அருகே உள்ள சோரம்பட்டிக்கு வந்த அவர்,   அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது கொல்லத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது ஏறியது. இதில் தலை நசுங்கி சுரேஷ்குமார் கொடூரமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மனைவி விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அருப்புக்கோட்டை அருகே தற்கொலை செய்த இளம்பெண் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக பெற்றோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களது மகள் பரமேஸ்வரி.  பிளஸ்-2 முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரமேஸ்வரி  விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பரமேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற் றோர் தற்கொலை குறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் நேற்று இரவே பரமேஸ்வரியின் உடலை சுடுகாட்டில்  எரித்ததாக தெரிகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த மலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீ சார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த இளம் பெண்ணின் உடலை சட்ட விரோதமாக எரித்ததாக பரமேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தட்டான்குளம்பட்டியை சேர்ந்தவர் மாயச்செல்வி. இவரது மகள் ஹரி வித்யா (வயது 13). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தனியார் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    ஹரி வித்யா டிவி, செல்போன் அடிக்கடி பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனை   தாயார் கண்டித்ததாராம். இதனால் மனம் உடைந்த ஹரி வித்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்   சுடிதார்  துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஹரி வித்யாவை மீட்டு ஆம்புலன்சு மூலம்  ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரி வித்யா இறந்து விட்டதாக  தெரிவித்தனர். 

    இதுகுறித்து தாயார் மாயச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் நகர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த வாகன சோதனையில் நெல் வியாபாரி 76 ஆயிரம் ரூபாயுடன் சிக்கினார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் இரவு-பகலாக  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    ஆவணம் இல்லாமல் நெல் வியாபாரி கொண்டு வந்த ரூ. 76 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய் துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  வத்திராயிருப்பு கான்சாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.  நெல் வியாபாரியான இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். 

    வ.புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது பாலகிருஷ்ணனை பறக்கும் படையினர் மறித்து சோதனையிட்டனர்.  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது பாலகிருஷ்ணனிடம் ரூ. 76 ஆயிரத்து 300 இருந்தது. 

    ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்¬ பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் பாலகிருஷ்ணனிடம் அறிவுறுத்தினர்.
    அருப்புக்கோட்டை அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
    பாலையம்பட்டி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து லோடு வேன் புறப்பட்டது. மதுரையில் சரக்குகளை இறக்கி விட்டு  இன்று அதிகாலை அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் சாயல்குடி நோக்கி கொண்டிருந்தது.

    அந்த வேனை சாயல்குடியைச் சேர்ந்த வேல்முருகன்   ஓட்டினார்.  அருப் புக்கோட்டை புறவழிச்சாலையில் இருந்து திரும்பி காந்திநகர் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த  லாரியின் பின்னால்  வேன் மோதியது. 

    இந்த விபத்தில்  வேன் டிரைவர் அருகில் அமர்ந்திருந்த  சாயல்குடி அருகே உள்ள சத்திரம் பகுதியை சேர்ந்த இளந்தடியான் (வயது 45) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் வேல்முருகன் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

    விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந் தவர்களை தீயணைப்பு  துறையினர் உதவியுடன் மீட்டனர். பின்னர் அவர் களை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    நவீன கருவிகள் மூலம்  வேனில் சிக்கி இருந்த இளந்தடியானின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜரானார்.
    விருதுநகர்:

    ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மன்னவன், கணேஷ்தாஸ் மற்றும் போலீசார் கடந்த 2 வாரங்களாக விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜரானார்.

    அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×