என் மலர்tooltip icon

    வேலூர்

    • வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
    • பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ஒடுகத்தூர்:

    ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (20). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

    குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்ததாகக்கூறி பச்சிளம் பெண் குழந்தை உடலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டுக்கு பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை சரவணன் பச்சிளம் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு தெரியாமல் பின்வாசல் வழியாக குழந்தையின் பெற்றோர் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா முன்னிலையில், பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததாகவும், அதே போல உடல் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. குறிப்பாக வீட்டிற்கு அருகில் இருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ்செடி உடைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், தலைமறைவான கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரான சேட்டு மற்றும் டயானாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும்.
    • காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

    பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை.

    ஆனால் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75-ம் ஆண்டில் திறக்கப்பட்டது.

    அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இந்தப் பாலம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலம் கட்டப்பட்டு இருப்பதால் வரும் 100 ஆண்டுகளுக்கு என் பெயரைச் சொல்லும்.

    நான் என்னுடைய தொகுதியை கோவிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோவில்.

    என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

    என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதி பெயர் காட்பாடி , காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் போகும். என்னை வளர்த்தவர்கள் நீங்கள் தான்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக கூறினார்.

    • ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.

    சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

    அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.

    மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.

    தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.

    சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.

    வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.

    பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.

    பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.

    எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது.
    • கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழியக்கம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. அவர் வாழ்நாள் மட்டுமின்றி, மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றியைக் கண்டார். அவரை, இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் எத்தனையோ முன்னோடி திட்டங்களைக் கொண்டுவந்தார். அவசர நிலை காலகட்டத்தில் கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததில்லை."

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழியக்கத்தின் நிறுவனர் தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்யவும் முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

    பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக்கொண்டவர்.

    மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசனகர்த்தாவாகத் திகழ்ந்தார்.

    மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்" என்றார்.


    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    "இந்த நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளர் நித்யாவை அழைத்திருக்க வேண்டும். இன்னொன்று காருணாநிதிக்கு வி.ஐ.டி.யில் சிலை வைக்க வேண்டும்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த கருணாநிதி, இன்று அகில இந்திய அளவில் போற்றக்கூடிய தலைவராக வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு கொள்கை பிடிப்புதான் காரணம்" என்றார்.

    'இங்கிருக்கும் இளைஞர்கள் நிகழ்கால பங்களிப்பு என்ன? எதிர்கால பயன்-என்ன என்று சிந்திக்க வேண்டும். அதற்கு கருணாநிதியை நீங்கள் பின்பற்றலாம். அவர் வயது தாண்டி சாதனை புரிந்தவர்.

    தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை தனது 16 வயதில் தொடங்கினார். 23-வது வயதில் சினிமாவுக்கு வசனம் எழுத சென்றார்.

    வாழ்வில் இளம் வயதிலேயே தங்களுடைய செயல்பாட்டை தொடங்க வேண்டும். பள்ளிக்கூட படிப்பை தாண்டாதவருக்கு இன்று பல்கலைக்கழகமே விழா எடுக்கிறது. கொள்கை தீரம் கொண்டவர் கருணாநிதி. சாகும் வரை பகுத்தறிவாளராக இருந்தவர்.

    1969-ல் அண்ணாதுரை இறந்த போது அவரது உடலை வாங்க குடும்பத்தினர் வந்தனர். சமய நெறிப்படி அவரை அடக்கம் செய் யப்போவதாக கூறினார்கள். ஆனால், அதற்கு உடன்பட மறுத்து அவர் மீது படுத்து 'அண்ணாதுரை குடும்ப சொத்தல்ல, அரசாங்கத்தின் சொத்து' என்று தடுத்து அவருக்கு இறுதி மரியாதை செய்ய வைத்தவர் கருணாநிதி. அதனால்தான் அண்ணா சமாதி இருக்கிறது. கருணாநிதி இல்லை என்றால் அது இருந்திருக்காது.

    பலர் இன்று கட்சி ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவர் வெற்றி பெற தொண்டர்கள், கட்டமைப்பு, பலம், பணம் என்று எதுவும் தேவையில்லை. சரியான எதிரி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

    திராவிடம் வெற்றி பெற காரணம் ஆரியம். எம்ஜிஆர் வெற்றி பெறுவதற்கு எதிராக கருணாநிதி இருந்தார். கருணாநிதியால் தான் எம்ஜிஆர் வளர்ந்தார். அவருக்கு நண்பராகவும், எதிரியாகவும் கருணாநிதி இருந்தார்.

    சிலருக்கு எதிரி தானாக வருவார்கள், கருணாநிதி எதிரிகளை உருவாக்கினார். அதில் வெற்றியும் பெற்றார். இக்கால இளைஞர்கள் அவரிடம் எதிரியை எப்படி கையாள்வது, நீண்டநாள் வாழ்வது, துணிச்சலுடன் வாழ்வது, உழைப்பது போன்ற பாடங்களை கற்க வேண்டும்' என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது. முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி உடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    • திமுக-வில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ரஜினி.
    • வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது- துரைமுருகன்.

    சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரைமுருகன் பதில் கூறியதாவது:-

    மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ரஜினிகாந்த் பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த் பேசும்போது கூறியதாவது:-

    முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி என்று கூறினால் சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.

    தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

    எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

    பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் தற்போது பேசிதான் ஆக வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.

    எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றி.

    ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம். திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஏதாவது விசயம் செய்து எப்படி இருக்கிறது என கேட்டால், சந்தோஷம் என்பார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் எனச் சொல்கிறாரா? என ஒன்னும் புரியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • வேலூர் சி.எம்‌.சி. சென்னை ஐஐடி இணைந்து உருவாக்கி உள்ளது.
    • 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வேலூர்:

    பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் அதிக செலவு மற்றும் நேரம் ஆகியவற்றை செலவிட வேண்டி உள்ளது. மேலும் பல்வேறு முறை ஆஸ்பத்திரி சென்று கை அசைவு செய்து சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் சி.எம்.சி. சென்னை ஐஐடி இணைந்து கை அசைவு சிகிச்சைக்கான புதுமையான, மலிவு விலையிலான கையடக்க ரோபோடிக் கருவியை உருவாக்கியுள்ளன.

    பிளக் அண்ட் டிரெய்ன் ரோபோ அல்லது ப்ளூடோ எனும் கை நரம்பு மறுவாழ்வுக்கான இந்த கருவி ஒரு மிக்சர் கிரைண்டரின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு வேலூர் சிஎம்சியில் உள்ள பயோ இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிவகுமார், பாலசுப்ரமணியன், ஐ.ஐ.டி. சென்னை மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர்.

    மேலும், இந்த கருவியானது வேலூர் சி.எம்.சி.யில் உள்ள உடல் மருத்துவம், மறுவாழ்வு, நரம்பியல் அறிவியல் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 30 மாதங்களில் இது 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 டாக்டர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர். சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் மற்றும் வீடுகளில் இருந்தே இதனை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்புக்கு இந்திய காப்புரிமை பெற்றுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா நாடுகளின் காப்புரிமைக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த அரிய கண்டுபிடிப்பு இந்தியா மட்டுமின்றி உலகளவில் நரம்பியல் மறுவாழ்வு பராமரிப்பை கணிசமாக மேம்படுத்தும் என தெரிவித்தனர்.

    • கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது.
    • பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்துகொண்டு 300 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைய வழங்கி பேசினார்.

    கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீடு கட்ட ரூ.3 1/2 லட்சத்தை அரசு ஒதுக்குகிறது. இதற்க்கு சிலர் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடு என கேட்பதாக தகவல் வருகிறது. எவனுக்கும் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம். அப்படி யாராவது கேட்டால் புகார் அளியுங்கள் அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேரம் பேசி வாங்குவதை விட பிச்சை எடுக்கலாம். எவனுக்கும் நீங்க ஒத்த பைசாவை தர கூடாது. ரூ.1000 உதவி தொகை வராதவர்கள் குறித்து பட்டியல் தயார் செய்து வருகிறோம். அவர்களுக்கெல்லாம் விரைவில் வரும். பொன்னை மேம்பாலம் வருகிற 30-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    சேர்காட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையும் அடுத்த மாதம் திறக்கப்படும். காட்பாடி தொகுதியில் இல்லாது என எதுவுமே கிடையாது.

    எனது தொகுதிக்கு நான் எதுவும் செய்யும் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு கீழே உள்ள தலைவர், கவுன்சிலர் போன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நான் மட்டும் யோகியனாக இருந்தால் போதாது.

    எதிரிகளே இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள். எனக்கு உண்ண உணவாக, மூச்சுக்காற்றாக, ரத்த ஓட்டமாக இருப்பது எனது கழக தொண்டர்கள் தான். அவர்களிடம் நான் சில நேரம் கோபித்துக்கொள்வேன் அது என் உரிமை.

    எல்லாம் துரைமுருகன் பார்த்துக்கொள்வார் என மகிழ்ச்சியோடு போங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அத்திக்கடவு அவிநாசி திட்டம் அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதற்கு தி.மு.க. லேபிள் ஒட்டியதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கருணாநிதி நாணயம் வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விவரம் இல்லாமல் பேசுகிறார்.

    இதே போலத்தான் அண்ணாவுக்கு வெளியிட்டார்கள், எம்.ஜி.ஆருக்கு வெளியிட்டார்கள் அப்போதெல்லாம் எடப்பாடிக்கு கண் தெரியவில்லையா?.

    கருணாநிதியை மாற்றுக் கட்சி எண்ணம் உடையவர்கள் கூட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்த தலைவர்கள் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் ஒரு சிலர் மறைந்துவிட்ட தலைவர்களை கூட தாறுமாறாக பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காழ்ப்புணர்ச்சி காட்டக்கூடாது. தென்பெண்ணை பாலாறு இணைப்பு என்பது என்னுடைய லட்சியம் அதற்காக எப்படியாவது முயற்சி எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் பா.ஜ.க சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரீன் சர்க்கிளில் இருந்து கோட்டை வரை பைக்கில் பேரணியாக வந்து கோட்டை கொத்தளத்திற்கு தேசிய கொடியுடன் செல்ல உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

    கோட்டைக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்க வில்லை. இதனால் பா.ஜ.க.வினர் கோட்டைக்குள் செல்வதை தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் திருநாவுக்கரசு, சரவணன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கோட்டை வாயில் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை முதல் பொதுமக்கள் யாரையும் கோட்டைக்குள் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் தேசிய கொடியுடன் பைக்கில் கோட்டை நுழைவு வாயிலுக்கு வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கோட்டைக்குச் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக நடந்து சென்று சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே ஊர்வலத்தை முடித்தனர்.

    பா.ஜ.க.வினரின் பைக் பேரணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கோட்டை நுழைவுவாயில் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. 

    • துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்றும் வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில், சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று 10-ந் தேதி வந்த ஒரு மின்னஞ்சலில் 'துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கிற்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று காலை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழு நேரமும் கவனத்தோடு செயல்பட போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-சி.எம்.சி. நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போ

    அந்த மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த விவரம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 போலீசார் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அங்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் நேற்று மாலையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள்.
    • மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக முடிக்க வேண்டும்.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு துயரசம்பவம் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து அழ வைத்த ஒரு நிகழ்வு. அதைக்கூட மத்தியஅரசு பேரிடராக அறிவிக்க மாட்டோம் என்றால் அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா? அல்லது கல்லா? என்று தெரியவில்லை.

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு கனிமவளத்தை எடுத்து விட்டார்கள். அதனால் தான் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை. பூகோளம் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி தவறாக பேசுவார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது.

    மேகதாது அணை பிரச்சனையில் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை விவரம் தெரியாமல் குற்றம் சாட்டி உள்ளார். அவர் விவரம் தெரிந்தவர் என்று நான் இதுவரை நினைத்திருந்தேன். தற்போதுதான் அண்ணாமலை விவரம் இல்லாதவர் என்று தெரிகிறது. வயநாடு நிலச்சரிவு பேரிடரை பிரதமர் மோடி பார்வையிடாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    • உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
    • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் 8,205 பேர் பட்டமும், 357 பேர் முனைவர் பட்டமும், சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

    விழாவுக்கு தலைமை தாங்கி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

    நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வி விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விச் சுமையை பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.


    கவுரவ விருந்தினராக பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி டி.ஆர்.பரசுராமன் பேசுகையில்:-

    உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது. மேலும், இளம் தலைமுறையினர் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் 29 முதல் 30 சதவீதமாக உயரும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.8 கோடியிலிருந்து 14 கோடியாக மாற வாய்ப்பு உள்ளது. சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், டிரோன்கள், 3-டி பிரிண்டிங், சாட் ஜி.பி.டி., ப்ளாக் செயின் உள்ளிட்ட 15 துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்றார்.


    தேசியக் கல்வித் தொழில்நுட்பமன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரியத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உயர் கல்வி விகிதத்தை அதிகரிக்க, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியுடன், தனித்திறன்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    உயர்கல்வி படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். சிவில், ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறை களிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

    நாட்டில் 2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. சுய தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதுடன், பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவ நாதன், துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள்.
    • கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமும் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக பட்டேலும், கருணாநிதியும், பிரதமராக இருந்த தேவேகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

    பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.

    தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

    கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள், செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

    வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொன்னார் என்பதை பினராயி விஜயன் படிக்கிறார். 'வரலாம் வெள்ளம் என சொல்லி உள்ளனர், அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை'. இதில் பினராயி விஜயன் சொல்வதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×