என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தூசி அருகே கிரேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    தூசி அருகே சோதியம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது 65), கூலி தொழிலாளி. இவர் மாமண்டூர் கிராமத்திற்கு சைக்கிளில் வந்து மீண்டும் வீட்டுக்கு சென்றார். நரசமங்கலம் கூட்ரோட்டில் பின்னால் வந்த கிரேன் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் பட்டாபிராமன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பட்டாபிராமனின் மனைவி பாலகுஞ்சம்மாள் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த மருத்துவ நிபுணர்களை பாராட்டும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் திருவண்ணாமலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    திருவண்ணாமலை:

    உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவு கட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தமிழகம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த மருத்துவ நிபுணர்களை பாராட்டும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் திருவண்ணாமலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    இதுகுறித்து நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் கூறியதாவது:-

    கொரோனா அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் சீர் குலைத்து விட்டது. அதற்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

    இது மனித குலத்திற்கு செய்யும் பேருதவி ஆகும். இப்பணியில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினோம் என்றனர்.

    2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் வருகிற 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

    கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-

    5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்தாலும், 17-ந் தேதி இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 7814 பணியாளர்களுடன், 2031 பகுதிகளில் முகாம்கள் செயல்பட உள்ளது. இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.

    இதில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ரெயில் நிலையம், பஸ் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, இணை இயக்குனர் (நலப் பணிகள்) கண்ணகி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாத்தனூர் அணைக்கு 3,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். அணையின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. இந்த அணையின் நீரை கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    செங்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் 11.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் சாத்தனூர் அணையின் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3,541 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது

    நீர்வரத்து காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே அளவு நீர் வரத்து இருந்தால் சாத்தனூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 45.90 அடியும், 22.97 அடி உயரமுள்ள மிருகண்டா அணையில் 4.59 அடியும், 62.32 அடி உயரமுள்ள செண்பகத்தோப்பு அணையில் 58.02 அடியும் தண்ணீர் உள்ளது.
    திருவண்ணாமலை அருகே அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலை கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலை கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கடந்த 5-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கார்த்திகை தீப விழாவுக்கு சாமி ஊர்வலம் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்றுவரும் உத்ராயணபுண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாடவீதிகளில் உற்சவ மூர்த்திகள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு 8 மணி அளவில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க மாட வீதிகளில் சந்திரசேகரர் சமேத சிவகாமி அம்மன், விநாயகர் உற்சவ மூர்த்திகள் உலா வந்தனர். இதை யொட்டி நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று வீதி உலா வந்த உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்தனர்.

    கோவிலை வலம் வந்த உற்சவ மூர்த்திகளைஆங்காங்கே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பல மாதங்கள் சாமி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனால் சாமிகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.
    ஆரணி:

    ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தை நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையர் உத்தரவின்படி கடந்த இரண்டு மாதங்களாக வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளிவர உள்ளது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆரணி அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் ஆய்வு செய்துள்ளோம். ஏற்கனவே இந்த கல்லூரி வளாகத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளது.

    தற்போது வாக்குச்சாவடி மையங்களை அதிகப்படுத்த வேண்டி உள்ளது. இதனால் தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கக்கூடிய இடத்தையும் அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, தாசில்தார் செந்தில்குமார், மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.அரி, ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலின் போது அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தையும் கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனர்.
    திருவண்ணாமலை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பைபாஸ் சாலை செல்வ விநாயகர் நகர் ஜங்சன் ரோடு அருகில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிளியாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரியங்கா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருடைய மகள் சூர்யா (வயது 17), தனியார் பேன்ஸி ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். சூர்யா, போனில் பேசுவது தொடர்பாக சத்தியசீலனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சூர்யா, கடந்த 1-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர் தானம் செய்த நிகழ்வு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர்களில் இளைய மகள் சுதா (19) கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்தார். பெற்றோருடன் வந்த இளைய மகள் சுதா குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த சுதா, நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    மகள் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என கருதிய அவர் அது குறித்து செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்றனர். இந்த நிகழ்வு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலையில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30), லாரி டிரைவர். இவருடன் அவருடைய தாய் மற்றும் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். சிலம்பரசன் நேற்று முன்தினம் வேலை தொடர்பாக வெளியே சென்று விட்டார்.

    அவரது தாய் மணலூர்பேட்டையில் தனது மகள் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் சிலம்பரசனின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சிலம்பரசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது.

    இதை பார்த்த பக்கத்து வீட்டினர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே சிலம்பரசனும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து சிலம்பரசன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்தகொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    நல்லவன்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே நல்லவன் பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
    ×