என் மலர்
திருவள்ளூர்
- கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார்.
- அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
திருத்தணி:
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராமேஸ்வரி. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை நிர்வகிக்க உரிமை கோரும் அதிகாரத்தை திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு வழங்க ராமேஸ்வரி முடிவு செய்தார்.
இதற்காக திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார். இதற்காக அனைத்து சான்றுகளும் பதிவேற்றப்பட்ட நிலையில், காயத்ரிக்கு வழங்கும் அதிகாரம் கோரும் பத்திரத்தை அதிகாரிகள் வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரி காஞ்சிபுரம் வந்தார். அதிகார பத்திரம் குறித்து கேட்டபோது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமேஸ்வரி திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பெட்ரோல் பாட்டிலுடன் வந்தார். அவர் அங்கிருந்த அதிகாரிகளுடன் அதிகார பத்திரம் தாமதம் குறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, சர்வர் பழுது காரணமாக அவருக்கு உரிய அதிகார பத்திரம் வழங்க முடியவில்லை என்றனர்.
- ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
- நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
திருவள்ளூர்:
சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல், கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் நகரும்படிக்கட்டுகளுடன் கூடிய புதிய 12 மீட்டர் நீளம் கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சி.சி.டி. கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் பாதைகளை சீரமைக்க தோண்டப்பட்டது.
இதனால் நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்காததால் முதலாவது நடைமேடையில் வந்து நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் சென்று ஏறவும், இறங்கவும மற்றும் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சென்னை-திருப்பதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து நிற்கும்போது பயணிகள் பெட்டிகளுடன் ஏறி, இறங்க கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் டிக்கெட் கவுண்டர் இடம் முதல் நடைமேடையில் உள்ளதால் கற்குவியலுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நடைமேடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
- சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.
திருவள்ளூர்:
திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.
நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.
இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.
- தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி நகரில் தாமரை ஏரி உள்ளது. இந்த ஏரி 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்ப டுகிறது. மேலும் இந்த ஏரி முழுவதும் தாமரை இலைகள் பரவி காணப்படுகிறது. நீர்வளத்துறையினர் இந்த ஏரியை பராமரித்து வருகிறார்கள். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீர் ஆதாரமான இந்த ஏரி மாசடைந்து வருகிறது. இந்த ஏரியில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்த குட்டையாக மாறி வருகிறது.
தாமரை ஏரியின் வடக்கு திசையில் பெத்தி குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட அருண் நகர் உள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஏரியின் அருகாமையில் ஈஸ்வரன், அய்யாசாமி ஆகிய கோவில்களும் உள்ளன. இங்கு வருபவர்கள் ஏரி தண்ணீரை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதி வாசிகள் தாமரை ஏரியில் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.
இதனால் ஏரி நீர் மாசடைந்து வருவதுடன், அதன் கீழே உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகி உள்ளது.
தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால் கழிவு நீர் மற்றும் கழிவுகளை ஏரியில் கொட்ட விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
- புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ளது கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பை கருதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. போதுமான தண்ணீர் பூண்டி ஏரியில் இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரி நீர்மட்டம் 34. 65 அடியாகவும் தண்ணீர் இருப்பு 3.028 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
கிருஷ்ணா தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பை குறைக்கும் வகையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் இணைப்பு கால்வாய் வழியாக பூண்டி ஏரியில் இருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் கால்வாயில் திறக்கப்பட்டு உள்ளது. இதில் புழல் ஏரிக்கு 200 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன அடியும் தண்ணீர் செல்கிறது. எனவே விரைவில் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி முருகன் கோயிலில் இன்று தை கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
தைகிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 2 மணி நேரம் வரை வரிசையில் சென்று தரிசனம் செய்தனர். திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது.
- உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டிஏரி. இந்த நீர் தேக்கம் 1944-ம் ஆண்டு கட்டப்பட்டது. ஏரி நிரம்பினால் அதில் இருந்து உபரி நீர்வெளியேறும் வகையில் 800 அடி நீளத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்கள் உள்ளன.
பூண்டி ஏரி கட்டப்பட்டதில் இருந்து இதுவரை ஷட்டர்கள் முழுமையாக சீரமைக்கப் படவில்லை என்று தெரிகிறது. அதில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியில் தற்போது 3085 மில்லியன் கன அடி(3 டி.எம்.சி) நீர் இருப்பு உள்ளது.
தற்போது மழை இல்லாதததால் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உபரி நீர் செல்லும் ஷட்டர்களில் உள்ள ரப்பர் பீடிங்குகள் சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஷட்டர்ககளில் இருந்து 30 கன அடி வரை வீணாக உபரி நீராக வெளியேறி வருகிறது.
எனவே பொதுப் பணித்துறையினர் பூண்டி ஏரியில் உள்ள ஷட்டர்களில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.
- பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.
திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது. திருவள்ளூர் சுற்றுவட்டாரா பகுதிகள், திருப்பதி நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளை போர்வை போற்றியது போல் பனிமூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், மூடு பனி காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர்.
இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.
குறிப்பாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பனி குறையாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.
- பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
- மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.
நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் சாலையே தெரியாத அளவுக்கு மறைத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
காலை 8 மணி வரை புகைமூட்டம் இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. பல இடங்களில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் பனிமூட்டத்துடன் புகையும் சேர்ந்து காணப்பட்டது.
திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில்கள், அதே போல் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் சென்ற புறநகர் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று காலை வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.
திருத்தணியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் திருத்தணிக்கு காய்கறி, கரும்புடன் சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. இதனை பாபு என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கடும் பனி மூட்டம் காரணமாக எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி பாபு மீது சரக்கு வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் பகுதிக்கு வெல்லம், வேர்க்கடலை, பருப்பு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்த சிங்காரவேலு என்பவரின் சரக்கு ஆட்டோமீது மோதியது. இதில் 2 சரக்கு வாகனத்திலும் இருந்த பாபு, சூர்யா, வள்ளியம்மா, ஜெயலா, மற்றும் எதிரில் சரக்கு ஆட்டோவில் வந்த சிங்காரவேலன் ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருத்தணி, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, செய்யூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் அதிக அளவிலான குளிர் இருந்தது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகில் உள்ள வாகனங்கள் வருவது கூட தெரியாததால் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை 9 மணிவரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. பழைய பக்கிங்காம் பாலத்தில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.
- விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர்.
- விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
பூந்தமல்லியில் இருந்து பூக்கள் ஏற்றிய மினி வேன் ஒன்று கோயம்பேடு மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
காலை 6 மணி அளவில் மதுரவாயல் பைபாஸ் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது போகிப்பண்டிகையை முன்னிட்டு எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் கடும் புகை மூட்டம் மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கிடந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இதில் மினி வேனில் இருந்த பூக்கள் அனைத்தும் சாலையில் கொட்டி சிதறியது.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் மினி வேனை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேன் மோதாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
- பொங்கல் பரிசு பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மகனும் மாரடைப்பில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் 2 வருட காலமாக ரேசன் கடைகளில் எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வரை இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேசன் கடைக்குச் சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மனவேதனையில் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.
பொங்கல் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்த செய்தி நேற்று மாலை மலரில் வெளிவந்தது. இதை பார்த்து உடனடியாக உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் அம்பத்தூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை கள்ளிக்குப்பம் கங்கை நகரில் உள்ள நியாய விலை கடைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை கடைக்கு அழைத்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலை, மற்றும் ரூ.1000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் மழை நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் பெறுவதற்கு வழிவகை செய்வதாகவும் அதற்கு முதல் கட்டமாக அதற்குண்டான படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.






