என் மலர்tooltip icon

    சேலம்

    • முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
    • எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.

    அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.

    இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.

    ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.

    2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

    தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.

    எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.
    • கோ பேக் மோடி இல்லை நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, " GET OUT MODI" என பதிவிட்டது தொடர்பாக திமுக ஐடி விங்கிற்கு நாளை காலை 6 மணி வரை கெடு" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை மேலும் கூறுகையில், " நீங்க GET OUT MODI என ட்வீட் போடுங்கள்.. நாளை காலை 6 மணிக்கு நான் GET OUT STALIN என எனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிடுகிறேன். மக்கள் எதை வரவேற்கிறார்கள் என பார்ப்போம்.

    நீங்கள் நாளை காலை 6 மணிக்கு பதிவிடும் ட்வீட்டை விட எனது ட்வீட் அதிக வரவேற்பை பெறுகிறதா இல்லையா என பார்ப்போம். நாளை பாஜகவின் காலம்" என்றார்.

    முன்னதாக, கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசினார்.

    அப்போது அவர், " பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம். நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. நீ சரியான ஆளாக இருந்தீன்னா.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு.. எங்கப்பா முதலமைச்சர்.. தாத்தா ஐந்து முறை முதலமைச்சர்ன்னு நீ சொல்லிப்பாரு பார்க்கலாம்.

    வாயில் இருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர்.. எங்கப்பா சிட்டிங் முதல்வர். நான் துணை முதல்வர் என்று சொல்லிப்பாரு பார்க்கலாம்." என்றார்.

    • திமுகவின் மொத்தப் படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.
    • உதயநிதி தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    சேலத்தில் பாஜக மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் இல்லத்திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

    பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, " தனியாளாக அண்ணாசாலைக்கு வருகிறேன்.. முடிந்தால் தடுத்து நிறுத்திப் பாருங்கள்" என்று அண்ணாமலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    அண்ணாசாலைக்கு தனியாளாக வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்.

    உதயநிதி கடந்த காலங்களில் தரமில்லாமல் பேசியிருக்கிறார். தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும்.

    காலை உணவுத் திட்டம் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச பொருட்கள் உங்கள் அப்பன் வீட்டு பணத்திலா வழங்கப்படுகிறது ?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
    • தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

    அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.

    அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.

    4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.

    அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம்.
    • ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். தாவரவியல் பூங்காவில் டேலியா, பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு ஆகிய மலர் விதைகள் நூற்றுக்கு மேற்பட்ட தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் மட்டும் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதனால் தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன.

    எனவே கோடை விழா தொடங்கும்போது, நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். இதில் பூக்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
    • பெண்கள் சிறையில் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்ட கைதிகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்பட பல்வேறு கைதிகளும் அடங்குவர். சேலம் சிறையில் அவ்வப்போது சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா கிடைப்பதாகவும், கைதிகள் செல்போனில் அடிக்கடி பேசி வருவதாகவும், சிறையில் இருந்தபடியே கைதிகள், நண்பர்கள் உதவியுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதற்கு அவர்களை பார்க்க வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி வருவதாகவும் சிலர் புகார் கூறி வந்தனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டனர்.

    அதன்படி அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் அஸ்வினி தலைமையில் 90-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சிறை வார்டன்கள், சிறை காவலர்கள் 50 பேர் என மொத்தம் 140 பேர் இன்று காலை 6 மணிக்கு சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள 19 பிளாக்குகளிலும் உள்ள கைதிகள் அறைகள், கைதிகளுக்கான ஆஸ்பத்திரி, உணவு தயாரிக்கும் கூடம், விவசாய நிலங்கள், காலியிடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அங்குள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன், சார்ஜர்கள், சிம்கார்டுகள் , கஞ்சா உள்பட ஏதாவது பொருட்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டது.

    இது தவிர அருகில் உள்ள பெண்கள் சிறையிலும் 8 போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த சோதனைகளில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை அடிக்கடி நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஏற்கனவே சோதனை நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் இன்று காலை ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
    • சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சேலம் மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிப்பொழிவு மிக அதிக அளவில் இருந்தது. சாரல் மழை போல பனி கொட்டியதால் அருகில் நிற்பவர்கள் கூட தெரியாத நிலை நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் குளிரில் நடுங்கினர்.

    இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் வாகனங்களை இயக்க முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் தவிர மற்றவர்கள் வீடுகளில் முடங்கினர்.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் இன்று அதிகாலை முதல் பனி கொட்டியது. இதனால் செடி, கொடிகள் அனைத்தும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.

    ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் இன்றும் அதிக அளவில் பனி கொட்டியதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்வோர் குளிர் தாங்கும் உடைகளை அணிந்த படி சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

    மாவட்டத்தில் நிலவி வரும் தொடர் பனி மற்றும் குளிரின் தாக்கத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேநேரம் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசிவருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

    • பேருந்து சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது.
    • பேருந்தில் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர்கல் நேற்று பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சீட் பிடிப்பதில் 2 மாணவர்களுக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதனால் மாணவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

    இந்த தாக்குதலின் போது மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காவடி பூஜை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எடப்பாடி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில், எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் சன்னதி, க.புதூர் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி குமர வடிவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. 

    • வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.
    • பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்காடு:

    ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில், கடந்த சில வாரங்களாக இரவில் கடும் குளிரும், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும் காணப் படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலங்களில் வேலைக்கு செல்பவர்கள், எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பனி மூட்டத்தால் சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஏற்காடு மலைப்பாதை, அண்ணாசாலை மற்றும் மாற்றுப் பாதையான குப்பனூர் வழியாக செல்லும் மலைப்பாதையில் கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது. காலை 8.30 மணி வரை பனி மூட்டத்தால் சாலைகள் சரியாக தெரிவதில்லை.

    இதனால் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். புயல் மழைக்கு பிறகு ஏற்காட்டில் கடும் குளிர், பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது.
    • குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.

    மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடும் குளிர் நிலவுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அதே போல ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் நடுங்கும் நிலையே நீடிக்கிறது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்திவிட்டு போர்வைகளை போர்த்தியபடியே பொதுமக்கள் தூங்கும் நிலையே ஏற்பட்டது. இந்த குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது. மேலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

    மேலும் வானிலை மையமும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறி உள்ளதால் நேற்று 86 டிகிரி வெயில் பதிவான நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரவில் பனி குளிரும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் என வித்தியாசமான காலநிலை நிலவுவதால் இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

    • தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார்.
    • உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் அய்யந்துரை (30). இவர் சொந்தமாக தறி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சினேகா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று . அர்ஜுன் (3) ஜாஸ்மிகா (4)ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். தறித்தொழிலில் நலிவடைந்த காரணத்தால் இளம்பிள்ளை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் தொழில் நடத்த 4 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

    73 மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையை மாதம் தவறாமல் கட்டி வந்த நிலையில் 19-வது தவணைத் தொகை கட்டுவதற்கு காலதாமதம் ஆனதால் தனியார் நிதி நிறுவன மேலாளர் 3 நாட்களாக வீட்டிற்கு வந்து கடன் தொகை கட்டச் சொல்லி கேட்டுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பணம் கட்ட சொல்லி கேட்டதால் மனம் உடைந்த அய்யந்துரை நேற்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது மனைவி சினேகா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கடன் தொகை கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்த மேலாளர் மீது வழக்கு பதிவு வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உறவினர் அய்யனார் என்பவர் கூறுகையில், அய்யந்துரை தனது சொந்த தொழிலுக்காக தனியார் வங்கியில் 4 லட்ச ரூபாய் பணம் பெற்று தொடர்ந்து கட்டி வந்த நிலையில் 19-வது தவணை பணம் கட்டுவதற்கான காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கி மேலாளர் அய்யந்துரையை பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வங்கி மேலாளரின் தொந்தரவு காரணமாகவே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

    எனவே மன உளைச்சலை ஏற்படுத்திய மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    ×