என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வருகிற ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு: கூடுதல் தலைமை செயலாளர் பேட்டி
    X

    மேட்டூர் அணையில் தமிழக நீர்வள துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆய்வு செய்த காட்சி.

    வருகிற ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு: கூடுதல் தலைமை செயலாளர் பேட்டி

    • மேட்டூர் அணை பராமரிப்பு சிறப்பாக உள்ளது.
    • மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் தமிழக நீர்வள துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை என்ஜினீயர் தயாள குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் மங்கத்ராம்சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டூர் அணை பராமரிப்பு சிறப்பாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே ஆய்வுப் பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது. தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். மீண்டும் பாசன காலம் முடித்த பிறகு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.79 அடியாகவும், நீர் இருப்பு 75.30 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×