என் மலர்
சேலம்
- சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்
- நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நடக்காமல் இருக்க ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
சங்ககிரி:
சங்ககிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சங்ககிரி கோட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார். அப்போது அவர், நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரவேண்டும். மேலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நடக்காமல் இருக்க ரோந்து பணியை அதிகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
அதிக விபத்துகள் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு மேலும் விபத்து நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின்போது, டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தேவி(சங்ககிரி), சந்திரலேகா (எடப்பாடி), குமரவேல்பாண்டியன்(கொங்கணாபுரம்), வெங்கடேஷ்பிரபு (மகுடஞ்சாவடி), வளர்மதி(மகளிர் போலீஸ்), ஹேமலதா (போக்குவரத்து போலீஸ்), மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள் மற்றும் பட்டாசுக்கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று பட்டாசு கிடங்குகளில் நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டி ருந்தால் பட்டாசுக் கிடங்குகள் உடனடியாக சீல் வைத்து மூடவும் உத்தரவி டப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்ப வர்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திறந்தவெளி மைதானங்களில் பட்டாசுக் கடைகளை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசுக் கிடங்குகள், பட்டாசு விற்பனைக்குரிய இடங்களை வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாதுகாப்புத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அலுவலர்களைக் கொண்ட குழு உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடை பிடிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் ெரயில், பஸ்கள், வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களில் எக்காரணம் கொண்டும் எடுத்துச் செல்லக்கூடாது. இதனை மீறினால் கடுமை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் பொருட்டு சிறப்பு தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு ரெயில், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் ஆங்காங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பட்டாசுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பா ளர்கள், விற்பனை யாளர்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி சாந்தி (54).
இவர் மேச்சேரி வீரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
- ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.
இந்த நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து முத்துவின் கம்ப்ரசர் வாகனத்தின் ஆர்.சி. புக்கை வாங்கிய சுந்தரம் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்.சி. புக்கை திரும்ப தராததால் கண்ணம்மாள் புக்கை திரும்ப வாங்கி தரும்படி சுந்தரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார்.
பலமுறை கேட்டும் புக்கை திருப்பு தராததால் கோபமடைந்த கண்ணம்மாள் நேற்று நங்வள்ளி பகுதிக்கு வந்த சுந்தரத்திடம் ஆர்.சி. புக்கை திரும்ப தரவில்லை என்றால் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சுந்தரம் அங்கி ருந்து தப்பியோடிவிட்டார்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஒவ்வொரு மாவட்டமாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
- நாளை திருச்செங்கோடு பகுதியில் நடைபயண யாத்திரையை தொடங்குகிறார்.
சங்ககிரி:
தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
ஒவ்வொரு மாவட்டமாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து இன்று மாலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபயணம் மேற்கொள்கிறார். சங்ககிரி-சேலம் மெயின்ரோடு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா கட்டிடம் பகுதியில் இருந்து தனது நடைபயண யாத்திரையை தொடங்குகிறார். பொதுமக்கள் பெருமளவில் திரண்டு மாநில தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை, லட்சுமணன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகிறார்.
இந்த நடைபயணமானது வெள்ளிவிழா கட்டடத்தில் தொடங்கி அக்கம்மா பேட்டை, புதிய பஸ் நிலையம், வி.என் பாளையம் வழியாக பழைய பஸ் நிலையத்தில் முடிவடைகிறது. இதில் சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.
பின்னர் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, மத்திய மந்திரி எல். முருகன், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் சுதீர் முருகன், மாவட்ட துணை தலைவர் சி.பி.ரவி, சங்ககிரி சட்டமன்ற நடைபயண நிகழ்ச்சி பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் என். ரமேஷ் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். எடப்பாடி சாலை, காவிரி பாலம் பிரிவு பகுதியிலிருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இதில் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணராஜன், குமாரபாளையம் பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் நாளை திருச்செங்கோடு பகுதியில் நடைபயண யாத்திரையை தொடங்குகிறார்.
- கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
- கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள எருமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (37). விவசாயியான இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
முத்துராஜ் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் முத்துராஜை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் முத்துராஜை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் முத்துராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது குறித்து மல்லூர் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் முத்துராஜ் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார். அவரை அடித்துக் கொலை செய்தது யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமிரா இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.
- கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.50 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 855 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
- 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது.
- பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.
சேலம்:
மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.
தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
அதன்படி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.
தொடக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
- சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக வள்ளலார் 201- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஜோதிகண்ணன் தலைமையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியை ராஜகோபால் ஏற்றி வைத்தார்.
இதையடுத்து சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சேலம் சிட்டிபாபு தலைமை தாங்கினார். கலைமதியழகன் வரவேற்புரை ஆற்றினார். கணபதி, பழனியப்பன், மகாபாண்டியன், அங்கப்பன், முரளி, ஞானசேகரன் மற்றும் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். குமார், ஸ்ரீராமன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.
- ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நாளை (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
- இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நாளை (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று காலை விநாயகர் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு வேடியப்பன் கோவிலுக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதையடுத்து நாளை காலை 6 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து அழைத்து வருதல், 7 மணிக்கு மங்கள இசை, 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதையடுத்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
- சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-
சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரு வுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்தி டும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






