என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து வருவது பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. கடந்த மாதம் 29-ந்தேதி 8 மீனவர்களையும், கடந்த 1-ந் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்தனர்.

    அதேபோல் அவ்வப்போது மீனவர்கள் மீது கற்களை வீசியும், தாக்குதல் நடத்தியும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்துகொண்டு விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில்இருந்து நேற்று காலை 456 விசைப்படகுகள் மீன்துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றன.

    அதில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையில் அமைந்துள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சற்று தூரத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தன. இதனால் பதட்டம் அடைந்த மீனவர்கள் உடனடியாக வலைகளை படகுக்குள் இழுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகில் தாவிக்குதித்தனர். பின்னர் நீங்கள் மீன்பிடிப்பது எங்கள் நாட்டின் எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று திட்டினர்.

    பின்னர் அந்த படகில் இருந்த சண்முகம் (வயது 50), டுதர் (40), எடிசன் (51), சக்திவேல் (47), ஜெகதீஷ் (48), டல்வின்ராஜ் (46), அன்பழகன் ஆகிய 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு கொண்டு சென்றனர்.

    அங்கு முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் 7 பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    மீனவர்கள் கைதான தகவலை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இலங்கை அரசால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 1ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
    • 11ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 1ஆம் தேதி தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிமன்றம் அவர்களுக்கு 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ஆஜர்படுத்த ராமேஸ்வரம் மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
    • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் 15 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீனவர்களின் படகைஇலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
    • விசாரணைக்கு பின் மீனவர்கள் 8 பேரும் மன்னார் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு சென்றனர். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு போதிய மீன்கள் கிடைக்கவில்லை என்று கூறிவந்தனர். அதேபோல் அதிக அளவில் கிடைக்கும் என்று எதிர் பார்த்த இறால் வரத்தும் வெகுவாக குறைந்தது.

    இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கியதுடன், அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் லட்சக்கணக்கில் இழப்புடன் கரை சேர்ந்தனர். இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 235 விசைப்படகுகளில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே தலைமன்னார் கடல் பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது.

    இதனைப் பார்த்த மீனவர்கள் அச்சத்திலும், அவசர கதியிலும் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஜேசு என்பவரது படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்த ஜேசு (வயது 39), அண்ணாமலை (55), கல்யாணராமன், (45), சையது இப்ராகிம் (35), முனீஸ்வரன் (35), செல்வம் (28), கண்டிவேல் உள்பட 8 மீனவர்களை கைது செய்தனர்.

    அவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக் கொண்ட இலங்கை கடற்படையினர், விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்வேறு சிரமங்களுக்கு இடையே மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற 12 நாட்களில் 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனையில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் வழக்கமான ஒன்றாகிப்போன மீனவர்கள் கைது நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உடனடியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்து தமிழகத்திற்கு அழைத்து வரவேண்டும் என்று கைதான மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.

    • குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர்.
    • அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்தது. இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள் பலர் கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

    அவர்களிடம் கடலோர காவல் படை பிரிவு போலீசார் விசாரித்து அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் நிலைமை சீரான பிறகு கடந்த அகதிகள் வருகை முற்றிலும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி மணல் தீடையில் 3 மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று அவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இலங்கை பேச்சாளை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு தஞ்சமாக வந்தோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அகதிகளாக வந்த 3 பேர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதன் பின் அவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    • பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர்.
    • ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    விடுமுறையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கார், பஸ், வேன் மற்றும் ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி கொடுத்தனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று தனுஷ்கோடியிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டனர். ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்த சுற்றுலா பயணிகளை கண்காணித்த பாதுகாப்பு போலீசார் கடலில் இறங்க கூடாது என எச்சரித்தனர்.

    இதே போல் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

    • உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம்:

    உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

    ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி காலம் காலமாக இருந்து வருகிறது. இதன் மூலம் உள்ளூர் பக்தர்கள் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு உள்ளூர் மக்கள், அரசியல் கட்சியினர், கடும் எதிர்ப்பு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ராமேசுவரத்தில் உள்ளூர் பக்தர்கள் வழிபாட்டு உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் கட்டண தரிசனம் வழியில் உள்ளூர் மக்கள் வர வேண்டும் என பிடிவாதமாக கூறிவிட்டது.

    கோவில் நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இன்று கோவிலில் நுழைவு போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்காரணமாக கோவில் நுழைவுவாயிலில் இன்று காலை தடுப்புகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணியளவில் கோவில் முன்பு உள்ளூர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டவாறு தடுப்புகளை தாண்டி கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு போலீசார் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவில் நுழைவு போராட்டம் காரணமாக மேலவாசல் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 

    • கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
    • கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்து பணி பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கினர். அதன்படி விசைப்படகுகளில் வலைகளை ஏற்றுதல், கேன்களில் டீசல் நிரப்புதல், படகுகளை இயக்கி என்ஜின் செயல்பாடுகளை சரிபார்த்தல், மீன்களை பதப்படுத்த பெட்டிகளில் ஐஸ் நிரப்புதல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தொண்டி, உச்சிப்புளி, மூக்கையூர் ஆகிய இடங்களில் இருந்து கடலுக்கு செல்வதற்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் இருந்தன. அதே போல் வழக்கமாக குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமாகி இருந்தனர்.

     

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. அதிலும் நேற்று மாலை முதல் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக தென்கடல் பகுதியில் 5 அடி உயரத்திற்கும் மேலாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீனவளத்துறை தடை விதித்துள்ளது.

    ராட்சத அலை எழும்புவதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடல் சீற்றம் காரணமாக பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஒருசில படகுகள் பாதுகாப்பு கருதி கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் கடல் சீற்றம் காரமாக தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சீற்றம் குறைந்தவுடன் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே நாளை முதல் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

    • பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார்.
    • பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள்.

    தொண்டி:

    திருவாடானை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளது.

    இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில் கடந்த ஆண்டு 5-ம் வகுப்பில் ஒரு மாணவன், 2-ம் வகுப்பில் ஒரு மாணவி என இருவர் மட்டுமே படித்தனர்.

    இந்த ஆண்டு இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவன் இங்கிருந்து 6-ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு செல்கிறான். இதனால் 2-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்புக்கு செல்லும் ஒரே ஒரு மாணவி மட்டும் தற்போது படித்து வருகிறாள்.

    இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என 2 பேர் பணிபுரிந்த நிலையில் கடந்த மாதம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்றார். இதனால் தற்போது ஒரு உதவி ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். தற்போது வரை இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏதும் நடைபெறாத நிலையில் இன்று ஒரே ஒரு மாணவிக்காக மட்டுமே அரசு பள்ளி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தளிர்மருங்கூர் அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாவிட்டால் பள்ளியை மூடி விடுவார்கள் என்று தெரிந்ததால் தனியார் பள்ளியில் படித்து வந்த என் குழந்தையை இந்த பள்ளியில் சேர்த்தேன். இப்போது என் மகள் ஒருவர் மட்டுமே படிக்க உள்ளார். பேச்சுத் துணைக்கு, விளையாடுவதற்கு கூட யாரும் இல்லாததால் குழந்தை பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகிறாள். இப்பள்ளியில் குழந்தைகள் இல்லாத நிலையில் இப்பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து பேசி மாணவர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மிக பயணமாக திருச்சி, ராமேசுவரம், மதுரை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெற்ற விழாவில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மகாத்மியம் என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரவில் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு அனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் மதுரை சென்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ராமேசுவரம், மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
    • மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.

    இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது. இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

    மன்னார் வளைகுடா, கொமாரின் பகுதி, அதை ஒட்டிய தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயங்களில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×