என் மலர்
ராமநாதபுரம்
- கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மீனவர்களை கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
கற்பிட்டி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் சென்ற படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
- வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் இலங்கைக்கு ராமர் செல்லும்போது கடல் நடுவே பாலம் அமைத்து சென்றதாகவும், அதற்கு பயன்படுத்திய தண்ணீரில் மிதக்கும் கல்லை வைத்து வழிபாட்டு தலம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளை கூறி மிதக்கும் கல்லின் அதிசயத்தையும் எடுத்துரைத்து வரக்கூடிய பக்தர்களிடம் ரூ.20 பணம் வசூல் செய்து சுமார் 85 ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாத சாமி கோவில் இணை ஆணை யர் செல்லதுரை, கோதண்ட ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்ட வழிபாடு தலத்திற்கு வரக்கூடிய பக்தர்களிடம் ராம் சேது யாத்திரை பணியாளர்கள் பணம் வசூலிக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதனை எதிர்த்து ராம் சேது பணியாளர்கள் சுமார் 85 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கோதண்ட ராமர் கோவில் அருகே, தனுஷ்கோடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது.
- அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரோமன் கத்தோலிக தேவாலயம் அருகே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழி பிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் வரிகளை எல்லாம் உயர்த்திவிட்டனர். மின்கட்டணம் குறித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை, 67% உயர்த்திவிட்டனர். இப்படி மக்கள் மீது சுமை சுமத்துகின்ற அரசு தேவையா? அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனால் விலை உயர்கிறது. காரணம் என்னவென்றால் பொம்மை முதல்வர்.
அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை ஒப்பிட்டுப்பாருங்கள். வருமானம் குறைந்து விலை உயர்ந்துவிட்டது. திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மன், மற்றவர்கள் இயக்குனர்கள். ஸ்டாலினை அடுத்து உதயநிதியை கொண்டுவர முயல்கிறார்கள், அது நடக்காது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக நாடாகிவிட்டது. இங்கும் எல்லோருக்கும் ஆள்வதற்கு உரிமையுண்டு. இங்கே இங்கிருக்கிறவர்கள் கூட முதல்வராகலாம்.
அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம். திமுகவில் அந்த குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். எங்கள் குடும்பத்தை தவிர்த்து எவரேனும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று ஒரு வார்த்தை அவர்களைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த குடும்ப ஆட்சிக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.
எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதுக்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா?
அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ஊழல் என்றார்கள், அதில் மேலும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது. அதில் அதிக வருமானம். எனவே அதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 400 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஏழைகள் நிறைந்த பகுதியில் அற்புதமான சிகிச்சை கிடைப்பதற்கு கொண்டு வந்தோம். இது ஒரு வரலாற்று சாதனை. இப்படி மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.
இந்தப்பகுதி பின் தங்கிய பகுதி. அதிமுக ஆட்சியில் 75 கோடியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தோம். தேவையான கல்வியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் ஒரு திட்டமாவது கொண்டு வந்தார்களா? இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது அதிமுக அரசுதான். கல்வியில் புரட்சி செய்திருக்கிறோம். பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். 17 மருத்துவக்கல்லூரி, 67 கலைக்கல்லூரி, 7 சட்டக்கல்லூரி இப்படி ஏராளமான கல்லூரியைத் திறந்து ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.
இது வறட்சி மாவட்டம். இந்தப் பகுதியிலும் கண்மாய் நிரம்புவதற்காக காவிரி- குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். பசுமையாக செழிமையாக மாற்ற முயற்சித்தோம். 14,400 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தினோம். தமிழக வரலாற்றில் இவ்வளவு நிதி மாநில அரசால் ஒதுக்கப்பட்டது கிடையாது. இந்த திட்டத்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் விடியா திமுக அரசு இதனை கைவிட்டது. அடுத்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததும் மீண்டும் காவிரி- குண்டாறு திட்டம் தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கு இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க் காப்பீடு மூலம் அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 540 கோடி பெற்றுக்கொடுத்தோம். மீனவர்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம். விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல், மீன்பிடி தடைக்காலம் மானியம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் டீசல் மானியம் உயர்த்தப்படும்.
நான்காண்டுகளில் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களுக்கு 321 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளை கட்ட 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வர்தா புயல், ஒக்கி புயல் நிவாரணம் 5000 ரூபாய், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், படகுகள், வலைகள் சேதத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய், 167 மீனவர்கள் இலங்கையில் மீட்பு, 806 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்தும், 96 பேர் ஈரான், 11 பேர் அபுதாபி, 28 பேர் கத்தார் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தமிழகம் அழைத்துவந்தோம். 85 கோடியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுத்தோம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்கள் திமுகவினர். அது காங்கிரஸ் ஆட்சியில்தான் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை கொடுத்ததே அவர்கள்தான், இப்போது மீட்பு பற்றி பேசுவதும் அவர்கள்தான். அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்க தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக மத்திய அரசில் 16 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. அப்போதெல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். மீனவர்களின் வாக்குகளைப் பெற ஏமாற்றுகிறார். மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டு 17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக்கொண்டனர். நகராட்சியில் வீடு, கடை கட்டினால் 1000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாயாக 100% உயர்த்திவிட்டனர்.
இது, இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.
அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக எதிர்த்து ஓட்டுப்போட்டனர். இவர்களா உங்களை காப்பாற்றுவார்கள்? இதிலிருந்து யார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.
கொரோனா காலத்தில் மாணவர் நலனை காக்க ஆல் பாஸ் போட்டோம். இப்படி மாணவர், தொழிலாளி, விவசாயி, மீனவர், நெசவாளர், எல்லா தரப்பு மக்களுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. ஆகவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம். பை பை ஸ்டாலின்
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது.
ராமநாதபுரம்:
"மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கொள்கையுடன் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் முதலாவதாக சிவகங்கையில் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் பரமக்குடி, திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மகாலில் மீனவர்கள், நெசவாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதன்மூலம் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டனர். விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர் தங்களது வாழ்வில் வளம் பெற்றனர்.
அவ்வாறு நடைமுறையில் இருந்த மக்கள் நலத்திட்டங்களை தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது. தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் மீண்டும் கொண்டுவரப்படும். அதன்மூலம் தமிழகம் பசுமையாக மாறும். நெசவாளர்கள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அவர்களின் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படும். நலவாரியம் மூலம் சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. கச்சத்தீவு மீட்பு மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கச்சத்தீவு மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த தனிக்கவனம் செலுத்துவோம். மேலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு "சொல்வதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்" என்று பெயரளவுக்கு மட்டும் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்சனைகளை மறந்து விடுகிறது. ஆனால் அ.தி.மு.க. மக்கள் நலன் ஒன்றே அரசின் குறிக்கோள் என்ற அடிப்படையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்றார். அங்கு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியை நேரில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச் பகுதியில் இருந்து அரண்மனை வரை எடப்பாடி பழனிசாமி ரோடு-ஷோ நடத்துகிறார்.
குறிப்பிட்ட சில இடங்களில் வாகனத்தில் இருந்து இறங்கி பொது மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ள அவர் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொள்கிறார். மேலும் பிரசார வாகனத்தின் மீது நின்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு உரையாற்றுகிறார்.
- இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
- ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
ராமேசுவரம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன், வலை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 45 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதுடன் அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாக்ஜலசந்தி கடல் பகுதி கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டது. பாம்பனில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களே கடலுக்கு சென்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அனைத்து படகுகளும் சென்றுவிட்டபோதும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் (வயது 51) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அந்த படகில் தாவிக்குதித்த வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன் (39), மோபின் (24), சைமன் (55), சேகர் (55) ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமான விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் நாளுக்கு நாள் நசிந்துவரும் நிலையில் தொடர்ந்து மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் வேறு தொழிலுக்கு செல்ல எண்ணுவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக மீனவர்களின் நலன் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விசைப்படகுகளை குறிவைத்து மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் தற்போது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்ய தொடங்கியுள்ளனர்.
எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை 5 மீனவர்களை கைது செய்தது. மேலும், ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அப்துல் கலாம் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
- மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது.
அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், போலீஸ் டி.ஐ.ஜி., மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ், இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல்கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
- ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த கடற்காற்று வீசிவருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடலில் வழக்கத்தை விட காற்று அதிகளவில் வீசுகிறது. இதனால் 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இதையொட்டி மீனவர்களின் பாதுகாப்பை கருதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இன்று அதிகாலை கடலுக்கு செல்ல வந்த மீனவர்கள் தடை உத்தரவை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதன்காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஏர்வாடி, தொண்டி, தங்கச்சிமடம், பாம்பன், ராமேசுவரம், தனுஷ்கோடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இறங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டி ருந்தன.
இதேபோல் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என கடலோர போலீசார் எச்சரித்தனர்.
மீன்பிடி தடை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலையிழந்தனர். மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும்.
- கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்:
வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதையடுத்து இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதலே, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள்.
- விபத்து குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ளது கடலோர கிராமமான திருப்பாலைக்குடி. இவ்வழியாக சிதம்பரம், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், கேரள மாநிலம் களியாக்காவிளை போன்ற ஆன்மீக, சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் சுற்றுலா வாகனங்களும், தொண்டி கடல் பகுதியில் பிடிக்கும் கடல் உணவுப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் இவ்வழியாகச் செல்கின்றன.
அதேபோல் தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள்.
அந்த வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பாலைக்குடிக்கும் உப்பூருக்கும் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது அதிகாலை 4.30 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் கூட்டத்தில் புகுந்தது. இதில் முனியசாமி மனைவி சாந்தி (வயது 50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி (40) ஆகிய 2 பெண் பக்தர்களும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் என்ன நடந்தது என்று சக பக்தர்கள் எண்ணியபோது, விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனம் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. மேலும் இந்த விபத்தில் நாகஜோதி மற்றும் சிலர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாதயாத்திரையாக சென்ற 2 பெண் பக்தர்கள் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






