

ராமநாதபுரம்:
வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதையடுத்து இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம் வடக்கு ஒடிசா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம்-வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்கக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று காலை முதலே, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 45-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்குமாறு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.